Friday, December 18, 2009

மறக்க முடியாத கனவு

கமலா மதுரையில் இருந்து கிளம்பி இரண்டரை மணிநேரமாகிறது, இன்னும் ஊர் வந்த பாடில்லை. கரிசல் நிலங்கள் சன்னல் வழியே பின்னால் சென்று கொண்டிருந்தன. தூரத்தில் ஏதோ ஒரு ஊர் தெரிந்தது. மூன்று மணி நேரமாகும் என்று அவர் சொல்லியிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. “இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவள் வீட்டுக்கு ஏன் போகிறாய்? வேறு யார் வீட்டு விலாசமாவது வாங்கித்தருகிறேன். இல்லை என்றால் போய் வேலையில் ஜாயின் பண்ணிவிட்டு பிறகொருநாள் அவள் வீட்டுக்குப் போ. இது தேவையா இப்போது?” என்று கேட்டார். அவருக்கும் தெரியும். சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அவள் ஒரு முடிவெடுத்தால் அதுதான். ரிடையராகி வீட்டில் இருப்பவன் அவள் பின்னாலே ஓட முடியுமா?”.
ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டாள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் நிழலாடியிருக்கின்றன. அவளுக்குக் பாலாம்பாளைப் பற்றித் தோன்றியிருக்காது. சாம்புவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பக்கத்திலிருந்த கௌதமி ஒரு ஆர்வத்தில் யாரைப் பற்றிப் பேசினீர்கள் என்று கேட்டாள். பாலாம்பாளைப் பற்றிச் சொன்னதும் அவளது கேள்விகள் அதிகமாகி விட்டன. கமலாவால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். கல்லூரியில் பெண்கள் உரிமைகளைப் பற்றிப் பேசுவது அவள் ஒருத்திதான் என்று கௌதமிக்கு பாடம் எடுக்கும் ஆங்கில பேராசிரியை சொல்லியிருந்தாள். பாலாம்பாளை மறந்து ஐம்பது வருடம் கழித்து பிரச்சனை ஆக்கியவள் அவள். முகம் தெரியாத அவளுக்காக வருத்தப்பட்டாள். கமலாவும் அவளுடைய அப்பாவும் மற்றவர்களும் இழைத்தது பெரிய கொடுமை என்று கோபப்பட்டாள். கமலா தனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச விஷயத்தைச் சொன்னாள். கௌதமி திருப்தி அடையவில்லை. “எனக்கும் இருபது வயதாக வில்லை. ஆனாலும் எத்தனை கேள்வி கேட்கிறேன். அதெல்லாம் உங்களுக்கு அந்த வயதில் தோன்றவில்லையா?” என்று மடக்கினாள். “நாங்களெல்லாம் உங்களை மாதிரி இல்லடி வெறும் பேக்குகள்” என்று சமாளித்தாலும் விடவில்லை. இந்தக் காலத்துப் பெண்களிடம் பேச முடியாது. அவளை சமாதானம் செய்வதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது. அவள் கேட்ட கேள்விகள் கமலாவின் மனதில் பதில் தேடி குடைய ஆரம்பித்தன. பாதிவரை படித்து, பின் எங்கோ தொலந்து போன மர்மக்கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்பியது அவள் மனசு.
கிளம்பியது தவறோ என்று சில நேரம் தோன்றியது. கேட்பதற்கோ பார்ப்பதற்கோ சகிக்க முடியாத நிலையில், ரொம்ப ஏழ்மையில் அல்லது கொடிய வியாதியோடு பாலாம்பாள் இருந்தால், கமலாவின், கௌதமியின் நிம்மதி போய்விடும். வாழ்வில் மற்றவர்களைப் பாதிக்கும்படி எத்தனையோ பாவங்கள் செய்கிறோம். பின்விளைவுகளை பார்ப்பதில்லை. ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அந்தப் பாவங்களைச் செய்ய மாட்டோமோ என்னவோ?. எப்போதோ பாலாம்பாளுக்கு நேர்ந்த விபத்தின் விளைவைத் தங்களால் தாங்க முடியுமோ என்று கமலாவுக்கு எழுந்த சந்தேகம் குடைந்து கொண்டிருந்தது. இந்த வயதில் யாருக்கும் உதவி செய்யும் நிலையில் அவள் இல்லை. திடீரென்று வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டேனோ?. அவள் செய்தது எதுவுமிலலை என்றாலும், செய்யாமல் விட்டதைப் பற்றி கௌதமி பேசிக் கொண்டிருந்தாள். கண்முன் நடந்தது. அவளால் முனகுவதைத் தவிர ஒன்றும் செய்திருக்க முடியாது. நாற்பத்தி இரண்டில் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்ற அதுபோதாது. இத்தனை வருடங்கள் போராடியபின் அவளுக்குத் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு, பதினாறு வயதில் என்ன புரிந்திருக்கும்?
கமலா, பாலம்பாள் பாட்டியைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாது. உறவுக்குப் பாட்டி என்றாலும் பதினைந்து-இருபது வயதுதான் வித்தியாசம். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது கூட ஞாபகமில்லை. முத்தூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்துப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே போனாள். இந்த ஊருக்கு மாற்றலாகி விட்டது. நாளை காலையில் வேலையில் சேரவேண்டும். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்னையிலிருந்து இவ்வளவு தூரம் மாற்றி விட்டார்கள். முப்பத்தைந்து வருஷமாய் சென்னையில் இருக்கிறாளாம். கண்டிப்பாய் போகவேண்டும் என்று ஆகிவிட்டது. இந்த தெரியாத ஊரில் யாராவது தெரிந்தவர் இருந்தால் நல்லது. அதுவுமில்லாமல் தனியாக இருக்கவேண்டும். யாரோ சொந்தக்காரி பக்கத்தில் இருந்தால் நல்லதுதானே.
அங்கங்கே நிறுத்தி, யார் யாரிடமோ கேட்டுக்கொண்டு, ஒரு பழைய வீட்டின் முன்னால் ஆட்டோக்காரன் இறக்கிவிட்டான். வாசலின் இருபுறமும் மரங்கள். ஒரு வேப்பமரம். இன்னொன்று என்னவென்று தெரியவில்லை. இடுப்பளவு சுவருக்குள் இருந்த சின்ன வீடு மழையில் நனைந்து கருப்பும் வெண்மையும் வழிந்து போல் கறை படிந்திருந்தது. வெள்ளையடித்துச் சில வருடங்களாவது ஆகியிருக்கும். சின்ன இரும்பு கேட்டைத்திறந்து உள்ளே போய் வாசலில் நின்றாள். முன் அறையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த வயதான மாது நிமிர்ந்து, உரக்கக் கேட்டாள் “யாரு வேணும்?’
“பாலாம்பாள் இருக்காங்களா?”
சட்டென்று தன்னைத் தேடி வந்தது யாரென்று இனங்காண முடியாமல், குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “நீங்க யாருன்னு…தெரியலையே”….
“நான்..” கொஞ்சம் யோசித்துத் தடுமாறி பின்னர் மெல்லிய குரலில் “மணியண்ணாவோட பேத்தி” அதற்குமேல் என்ன சொல்வது ?. புரிந்திருக்குமா? “ஞாபகம் இருக்கா? கமலா?” என்று கேட்டாள். பாலாம்பாள் யோசித்தாள் “உள்ள வாங்க” நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரச் சொன்னாள். அவளுக்கு எண்பது வயதிருக்கும். முகச்சாடை கொஞ்சம் இருந்தது. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாள். முகத்திலும் கைகளிலும் சுருக்கங்கள். கன்னங்களில், நெற்றியில், கழுத்தில் சதைகள் சின்னச் சின்ன மடிப்புகளாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. மெல்ல ஞாபகப்படுத்தும் விதமாக “மெட்ராஸ்ல மணியண்ணா வீட்டுக்கு வந்தது..” பாலாம்பாளுக்கு நினைவு வந்திருக்க வேண்டும். கண்கள் அசையாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நினைவு எங்கோ இருந்தது. கொஞ்ச நேரமாகியும் ஒன்றும் பேசவில்லை. நடந்த நிகழ்ச்சிகளின் கனம் அவளை அழுத்திக் கொண்டிருக்கவேண்டும். கமலாவுக்கு ,வருத்தமாகவும், படபடப்பாகவும் இருந்தது. பாலாம்பாளின் சஞ்சலத்தை, மறந்து போன கவலைகளை மீண்டும் உசுப்ப்பிவிட்டேனோ? வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.
பாலாம்பாளுக்கு மணி என்ற சுப்பிரமணியன், ஞாபகம் வந்தது. நல்ல நெட்டை. அவர் நிமிர்ந்து நின்று அவள் பார்த்த்தில்லை. எப்போதும் படுக்கைதான். கிட்னியில் ஏதோ நோய். மணவறையில் மட்டும் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். முகத்தில் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெல்லிய முனகல். அவருடன் இருந்த சிலமாதங்களில் சிரித்துப் பார்த்ததில்லை. அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். இவ்வளவு நேரம் ஒன்றும் பேசவில்லை என்று நினைத்தோ என்னவோ, அமைதியான குரலில் “எப்ப வந்தீங்க,? என்று கேட்டாள். “நீங்க சென்னைல தான இருந்தீங்க..?” முகம் சிவந்திருந்தது. தலையை ஒருபுறம் சரித்துக் கொண்டு பேசினாள். மிகவும் கஷ்டப்பட்டு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டதில் பேச்சுத் தடுமாறியது.
“இப்ப முத்தூர் டிரான்ஸ்பர் ஆகிருச்சு. . ரெண்டு வருஷம் முந்தி. அங்க ஒரு பஜனையில நம்ப சாம்புவைப் பார்த்தேன். அவர்தான் அட்ரஸ் கொடுத்தார். இப்பத்தான் இங்க வர முடிஞ்சது”
பாலாம்பாளுக்கு ஒன்றும் புரியவில்லை. நாற்பது வருடம் கழிந்த பின் அந்த வீட்டிலிருந்து பார்க்க வந்திருக்கும் ஒருத்தி. என்ன நினைத்து வந்திருப்பாள்?. அப்பா என்னை அங்கே போக விடவில்லை என்றாலும் அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை, தகவல் இல்லை. பதினைந்து வயதுப் பெண்ணைப் பற்றி நினைத்ததில்லையா? ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழாக்கி விட்டோமே என்ற பரிதாபம் கூடவா கிடையாது. சென்னையிலேயே இருந்திருந்தால் பிராமண வீட்டு ஆச்சாரங்களோடு கௌரவமாக வாழ்ந்திருக்கலாம். வீடு தேடி வந்தவளிடம் என்ன பேசுவதென்று புரியாமல் தான் ஏதோ கேட்டாள்.
”எந்த டிபார்ட்மண்ட்ல வேலை பார்க்கிறீங்க?”
“போஸ்டாபீஸ்ல. பிரமோஷன்ல போட்டாங்க. ரிடையராக ஒரு வருஷந்தான் இருக்கு. வேற வழியில்ல ஒரு வருஷம் இந்த ஊர்ல இருந்து ஆகணும். வேற எங்கயாவது போறத விட உங்காத்துக்கு வர்றதுதான் எனக்கு விருப்பம். சின்ன வயசில இருந்தே அடிக்கடி உங்கள நினச்சுப்பேன். இருக்கீங்கனு கேள்விப்பட்டுத்தான் வந்தேன். இதுக்கு முன்னால பார்க்க முடியல. ஒரு தயக்கம் இருந்தது. சான்ஸ் கிடைச்சதும் ஏன் விடுவானேன்னு. என் மேல வருத்தம் இருந்தா மன்னிச்சுக்கோங்கோ” சில நேரங்களில் மரியாதைக்காகச் பொய் சொல்ல ஆரம்பித்து, அதை நம்பவும் செய்கிறோம்.
“இவ்வளவு பாந்தமா பேசறவ கிட்டே கோபம் எப்படிப் படறது?. ”நீங்களும் அப்போ சின்னப் பொண்ணுதான. எல்லாந் தலைவிதி. யாரையும் குத்தம் சொல்ல முடியாது. சரி அதெல்லாம் விடுங்கோ. எல்லாருமா சேந்து என் வாழ்க்கைய பாழாக்கிட்டா முதல் காரணம் எங்கப்பா. மத்தவாளப் பத்தி என்ன சொல்ல?” அவள் கண்ணில் இழந்து விட்ட ஒரு உன்னதவாழ்வின் காட்சிகள் தெரிந்தன.. கண்கள் எங்கோ பார்த்து நிலைகுத்தி நின்றன. அவள் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். கமலாவுக்கும் தொண்டை அடைத்தது.
மீண்டும் அமைதி நிலவியது. கொஞ்சங் கொஞ்சமாக பொது விஷயங்களைப் பேசினார்கள். சின்ன வயதில் ஏமாந்து விட்டோம் என்ற கசப்பு அவள் முகபாவத்தலும் வார்த்தைகளிலும் வெளிவந்தது. அதை மீறி இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறாள். தோற்கடிக்கப்பட்டவன் வெறியுடன் விளையாட்டைத் தொடர்வது போல.
பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அடுத்த வாரம் கொஞ்சம் சாமான்களை எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னாள். அதற்குள் பக்கத்திலிருந்த ஒருவீடு காலியாகிவிடுமென்றும் அதில் வாடகைக்கு கமலா இருந்து கொள்ளலாமென்றும் பாலாம்பாள் உறுதியாகச் சொன்னாள். தனது சொந்தக்காரி, பிராமணத்தி, அரசு அதிகாரி, பக்கத்தில் இருப்பது பாலாம்பாளுக்குப் பெருமையாக இருக்கும். அதே நேரத்தில் பழைய விஷயங்களைக் கிளறிவிட்டு, இந்த ஊரில் மரியாதையாக வாழ்வதை கெடுத்துவிடுவாளோ என்ற பயமும் கூடவே வந்தது.
மாலையில் கமலா மதுரைக்குக் கிளம்பிவிட்டாள்.
கமலா அடுத்தமுறை வரும்போது கணவனுடன் வந்தாள். பாலாம்பாள் சொன்னபடி எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி ஒரு காம்பவுண்டு வீட்டில் குடிவந்து விட்டாள். தினமும் காலையில் அலுவலகம் கிளம்பும் போது பாலாம்பாள் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பாள். கண்களில் ஒரு ஏக்கம் தென்படும். இப்படி நானும் இருந்திருக்கலாமே.
மாலையில் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வரும் போது, பாலாம்பாள் வீட்டில் அவளை விட வயதான பெரியவர் நின்று கொண்டிருபதை கமலா பார்த்தாள். புருஷனாக இருக்கவேண்டும். அடுத்தநாள், அலுவலகம் போகும் போது, பாலாம்பாள் தெருவில் வந்து மெல்லச் சொன்னாள் “நீங்க ‘எனக்குப் பேத்தி முறை வேணும்னு எங்க வீட்டுக் காரர்ட்ட சொல்ல வேண்டாம். தூரத்துச் சொந்தம்னு நான் சொல்லி வச்சிருக்கேன், வேற மாதிரின்னு தெரிஞ்சாக் கோபப்படுவார் என் சொந்தக் காரங்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது.” அதற்குப் பிறகு அவரில்லாத நேரங்களில்தான் கமலா பாலாம்பாள் வீட்டுக்குப் போனாள். போனபின் அவரிருப்பது தெரிந்தால், சட்டென்று கிளம்பி விடுவாள்.
உயர்ந்த ஜாதிப் பெண்ணை காதலிக்கும் போது அவள் ஜாதிக்காரனெல்லாம் நெருக்கமாகத் தெரிகிறது. அவர்கள் அவனை மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அவளே பொண்டாட்டி ஆனபின் அவள் ஜாதி ஆண்கள் ஏதோ இளக்காரமாகப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. பொண்டாட்டி மீது சந்தேகம் வருகிறது. சின்ன பயம். ஜாதி அபிமானத்தில் புருஷனை ஒதுக்கி விடுவாளோ? ஒரே ஜாதியில் திருமணம் முடித்தால் கூட பொண்டாட்டி வீட்டுக்காரன் யாராவது வந்துவிட்டால், கணவன் மனதில் ஒரு சலனமும் குறுகுறுப்பும், எதாவது அள்ளிக் கொடுத்துவிடுவாளோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. புருஷன் வீட்டுக்காரன் எவராவது வந்துவிட்டால் பொண்டாட்டிக்கும் இதே சந்தேகம். இப்படியெல்லாம் இல்லாவிட்டால் கூட சண்டை வரும். எதாவதொரு சாக்கு வேண்டும் சண்டையிட. குடும்பம் என்பதே ஆணுக்கும் பெண்ணுக்குக் உள்ள ஆதிக்கப் போட்டிதான். கமலாவும் அதை அனுபவித்தவள். கொஞ்சம் தூர ஒதுங்கியிருந்தாள்.
ஒருநாள் வீட்டில் நுழையும் போது பாலம் ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தாள். முடிந்து வரும் வரை கமலா அங்கே கிடந்த வாரப் பத்திரிக்கைகளை படித்துக் கொண்டிருந்தாள். “என்ன பூஜையெல்லாம் பலமாயிருக்கே?”
“ஆமா என் பக்திதான் என்னை இதுவரை காப்பாத்திண்டு இருக்கு. இல்லைன்னா எப்படி இவ்வளவையும் தாண்டி வரமுடியும்.இந்தாங்கோ, குங்குமம் இட்டுக்கோங்கோ?” அவள் குரலில் தன் பக்தியைப் பற்றிப் பெருமிதமும் பகவான் அருள்புரிந்தார் புரிவார் என்ற நம்பிக்கையும் தெரிந்தது. வாங்கி இட்டுக் கொண்டாள். “நான் பூஜ புனஸ்காரமெல்லாம் எப்பவாவது தான். அதுவும் மாமியார் இருந்த வரைக்கும் அவா சொன்னதுக்காக செய்வேன். இப்ப நேரமே கிடையாது ஆபிஸ் போய்ட்டு வர்றப்பவே அடுத்து என்ன வேலன்னு செய்ய ஆரம்பிச்சிருவேன்.”.
பிராமணத்தியாக வாழ்பவளுக்கு இந்தக் காலத்தில் பூஜை புனஸ்காரம் ஒரு சடங்குதான். சடங்குக்காகவே சடங்கு. அவைகளைச் செய்யாவிட்டாலும் சமூகத்தில் மரியாதை, ஜாதிப் பெருமை ஒன்றும் குறையப் போவதில்லை. சடங்குகள் முக்கியமில்லை என்று பகுத்தறிவு பேசலாம். எதுவும் குறைந்துவிடாது.
பாலாம்பாளுக்கு அப்படி அல்ல. பூஜை புனஸ்காரங்கள் பண்ணினால் அவளுக்கு எங்கிருந்து வந்தோம் என்பது ஞாபகம் இருக்கும். பெரிய குடும்பத்தில், பிராமண ஜாதியில் பிறந்தவள் என்பதை அடிக்கடி நினவூட்டிக் கொள்வாள். பூஜை புனஸ்காரங்களை விட்டுவிட்டால் தன்னை மற்றவர்கள் கீழ்ஜாதிக்காரி என்று தவறாக நினைத்துவிடக்கூடும். நான் கீழ்ஜாதிக்காரி இல்லையே. அவளுடைய சொந்தக்கார்ரகள் பெரிய இடங்களில் ஆச்சாரத்தோடு இருக்கிறார்கள். பழைய காலத்து பேச்சில் சொன்னால், அவள் ஜாதி கெட்டவள். பிறந்த ஜாதியும், பிறந்த வீடும் சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும் போது அதோடு இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும். தாழ்ந்த ஜாதியில் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் தான் தாழ்ந்து போய்விடவில்லை என்பது எல்லோருக்கும் புரியவேண்டும். அவள் மனம் முழுவதும் நிறைந்திருப்பது அதுதான். நான் மேலானவள். சாக்கடையில் விழுந்துவிட்டேன். ஆனாலும்……
பாலாம்பாளும் ரிடையரானபின் பூஜை புனஸ்காரங்களை அதிகரித்து விட்டாள். பிள்ளைகளும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூர்களுக்குப் போனபின், வீட்டில் சும்மா இருக்க முடியாமல் பூஜை செய்ய ஆரம்பித்தாள். அவள் வயதுப் பெண்களிடம் இயல்பாகவே அதற்கு பெருமிதம் இருந்தது. நான் உன்னைவிட பெரிய பக்தை என்று காட்டிக் கொள்வது ஒரு போட்டிதான். இன்னைக்கு வரலக்ஷ்மி, பூஜை, இன்னைக்கு அம்மாவாசை, என்று பெருமாள் கோயில்ல, பிள்ளையார் கோயில்ல அந்த பூஜை இந்த பூஜை என்றும் பலவேறு சாமி பெயர்களும், நாளின் பெயர்களும், பூஜையின் பெயர்களும் உதிர்த்துக் கொண்டிருப்பதில் திருப்தி. கமலாவுக்கு இதிலல்லாம் ஈடுபாடு இல்லாவிட்டாலும், ஏற்கனவே தீர்மானித்தபடி பாலாம்பாளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னைப் போல் ஒருத்தி, இந்தச் சமூகத்தில் வேறு வகையான வாழ்க்கை அமைத்துக்கொண்டிருந்தால், எப்படி இருப்பாள் என்பது கமலாவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
அவளையும் சின்ன வயசில் ஒருவன் காதலித்தான். அவளுக்காக எதுவேண்டுமானாலும் செய்திருப்பான். அந்த வயதில் அவளுக்கு அவன் இல்லாவிட்டால் உலகமே மறைந்துவிட்டது போலிருந்தது. ஜாதி வேறு என்று அம்மா அப்பா யாரும் நடக்கவிடவில்லை. இருபத்தி நாலு மணிநேரமும் காவலிருந்தார்கள். அவன் எங்கே எப்படி இருக்கிறானென்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்தபடி வாழ்வை மாற்றி எழுதிக் கொள்ளமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவ்வப் போது கதை எழுதுவது போல சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் மாற்றிக் கொண்டிருந்தால் . . . . வாழ்க்கை என்னவோ ஒருமுறைதான் எழுதப் படுகிறது. அது சரியில்லை என்றால் நடந்ததை திருத்தி எழுத முடியாது. வரப்போவதை வேண்டுமானால் யோசித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
பாலாம்பாளும் இதே போல தன்னைப் பற்றி இப்படி ஒரு கனவு கண்டு கொண்டிருந்தாள். கமலாவைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கனவின் திரி தூண்டப்பட்டு பெரிய ஜோதியாக எரிந்தது. கமலாவைப் போல் தானும் படித்து அதிகாரி ஆகியிருக்கலாம். அதில் அவள் முகத்தில் தெளிவும், உறுதியும் தெரியும். அன்றைக்கு அப்படித்தான் இருந்தாள். அப்பா மட்டும் கெட்டவனாக இல்லாமல்… எல்லாமே மாறிப் போயிருக்கும்.
பேச்சுவாக்கில் கமலா கேட்டாள் “என்ன, நீங்க ஜானகி மாமி வீட்ல சுமங்கலி பூஜைக்கு வரலயா? மாமியைக் கேட்டேன். கூப்பிட்டேன்னு சொன்னாங்களே.” பாலாம்பாளின் முகம் சுருங்கிவிட்டது. கோபத்தில் மூக்குச் சிவந்து, ஏதோ வேகமாகச் சொல்ல வந்தவள் எதுவும் சொல்லவில்லை. சுமங்கலி பூஜை செய்ய தகுதி இல்லை என்று ஜானகி முடிவு கட்டிவிட்டாள். அதுதான் கூப்பிடவில்லை. கமலாவுக்கும் பழையகதை தெரியும். “பிராமணத்தி அவ புத்தியைக் காட்டிட்டா”. அவள்மீது எவ்வளவு தவறுகள் இழைக்கப் பட்ட போதும், அவள் ஒருமுறை விதவையானவள் என்பது சடங்குகளின் புனிதங்களுக்கு முன்னால் மாறவில்லை. பாலாம்பாள் தன்னை ஒரு விதவையாக இப்போது கருதவில்லை. இரண்டாவது மணம் முடித்தவனுடன் பூவும் பொட்டுமாகத்தான் வலம் வந்தாள். அன்று பாலாம்பாள் சரியாக முகம் கொடுத்துப் பேசாதது கமலாவுக்கு வருத்தமாக இருந்தது. தவறு செய்துவிட்டாள். “அது ஒண்ணும் சரியா நடக்கல. பூஜாரி ஏதோ கடனுக்குச் செய்தான். எனக்கு இதுலல்லாம் ரொம்பவும் நம்பிக்கை கிடையாது. அதற்கப்புறம் அவள் ஒன்றும் பேசவில்லை. ஜானகி மாமி பயந்திருப்பாள். சுமங்கலி பூஜை செய்யும் போது பாலம்பாளைக் கூப்பிட்டு பகவத் காரியத்ல ஏதாவது தப்பாயிடுத்துன்னா? சுமங்கலி பூஜை செய்றது வீணாகி விடுமே. கமலா பழைய கதை கேட்க வந்தவள். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்
கமலா போனபின் பாலாம்பாள் யோசித்துப் பார்த்தாள். பூஜைகள் செய்தாலும், சைவச்சாப்பாடு சாப்பிட்டாலும், பிள்ளைகளை அப்படியே வளர்த்தாலும் அத்தனை பிராமண ஆச்சாரங்களையும் கடைப்பிடித்தாலும் யாரும் பிராமணத்தி என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜாதியின் விதிமுறைகளை மீறீனால், அதன் தண்டனை கடைசி வரை வந்தே தீருகிறது. யாரும் எழுதாத, ஆனால் எல்லாரும் பின்பற்றுகிற விதி. ஆனால் சிறுவயதிலிருந்து அவளுக்குக் கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளை, சடங்குகளை அவளால் மறக்க முடியவில்லை. மறக்க விரும்பவுமில்லை.



மூன்றாம் தெருவிலிருக்கும் “மாதவியும் பூஜைக்கு வந்தாளாம். அவள் புருஷன் இருக்கான். பலவட்ரயா அலையிறா. அவபூஜையில கலந்துக்கலாம். தேவடியாள் போகலாம் அவள் போகக்கூடாது. இதையெல்லாம் யார்ட்ட கேட்பது? பாரம்பரியம், கலாச்சாரம், அனுஷ்டானம் எதேதோ சொல்லி மனுஷங்கதான் கஷ்டப் படுத்தறா. பகவான் மீது இவ்வளவு பக்தியிருந்தும் இப்படியெல்லாம் அவமானப் பட வேண்டியிருக்கிறது. திருவோண, மூல நட்சத்திரமும் அவள் விதியும்… படுவதெல்லாம் படவேண்டியிருக்றது. இப்பல்லாம் மாறிடுத்துங்றா. ஆனா என்னப் போல கஷ்டம் பட்டத கடந்து போனத மாத்த முடியுமா? கடைசியில் எனக்கென்ன என் சாமி சத்யசாயி பாத்துக்குவார்.” என்று அவ்வப்போது எழும் மனக்குழப்பங்களுக்கு முப்பது வருடங்களாக அமைதி தந்து கொண்டிருக்கும் சாயிபாபாவை மீண்டும் ஒருமுறை நினைத்து வணங்கிக்கொண்டாள். அவள் மகன் சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. சாய்பாபா என்ன கடவுளா?
சங்கராச்சாரியார் மடத்தில பெண்களையும் விதவைகளையும் சரியா மதிக்கிறது கிடையாது. சனாதனப்படி புனிதங்களைக் கடைப்பிடிக்கிறதனால, வாழ்க்கையின் புதிய சிக்கல்ல மாட்டிக்கிறவங்களுக்கு அங்கே இடமில்ல. படித்த வசதியுள்ள, விஷயமறிந்த ஆனால் பக்தியையும் நம்பிக்கையையும் விடமுடியாத பாரம்பரியப்படி மடத்தில் சரியான பெருமித்ததுடன் சேர முடியாதவங்கள்லாம் சாய்பாபாட்டப் போய் சரணாகதியாகிர்றாங்க. அங்கயும் எடம் இல்லாதவங்க இன்னும், மேல்மருவத்தூர், யோகி, புது சாமியார் பெண்சாமியார் என்று கண்டுபிடித்து வைத்துக் கொண்டு மனசைச் சாந்தப்படுத்திக்கிறாங்க” அவன் சொல்வது சரியாகவும் அதே நேரத்தில் தவறாகவும் பட்டது. அவன் நாத்திகம் பேசறதனால பார்வையில கோளாறு வந்திருது. இப்படியெல்லாம் மனுஷங்களுக்கு அமைதி கிடைக்குதுன்னா கிடைக்கட்டுமே. ஒண்ணும் கேட்டுப் போகலையே? மனசு கஷ்டம் குறையறதாங்கிறதுதான் நமக்கு வேண்டியது.
*** * ***
கமலா வீட்டுக்குள் நுழையும்போது, பாலாம்பாள் டி.வியில் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தாள். “வாங்க.. வா.. நல்ல சங்கீதக் கச்சேரி போட்டுட்ருக்கான். …கேப்பயா? கேளு ரொம்ப சொகமாப் பாடறா” கமலாவுக்குக் சங்கீதம் கேட்கும் பழக்கம் உண்டு. உள்ளறையில் போய் உட்கார்ந்தாள். ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ பாடகி உருகிப்பாடிக் கொண்டிருந்தாள். போன் மணி அடித்தது. கமலாவுக்கு பாலாம்பாள் பேசுவது மட்டும் கேட்டது.
“நான் இருப்பேன். வா. அப்பா எப்படி இருக்கா. நல்லாப் பாத்துக்கோ”
“………………”
“நீ வர்றதானா ஒண்ணாந்தேதிக்கு அப்பறம் வா. லீவு எடுக்கணுமா? அப்ப ஞாயித்துக் கிழமை வா.. இருப்பேன்……சரி வா…வா…”
போனை வைத்துவிட்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என் தம்பி மக. மதுரையில இருக்கான். அவ தான் பேசுனா. வர்றாளாம்.” சற்று இடைவெளிவிட்டு…”உனக்குத் தெரியுமா? என் தம்பி.. ராமன்.”
“தெரியாது.. “ மன்னிப்புக் கோரும் குரலில் கமலா சொன்னாள்.
“எனக்கு ஒரே தம்பி. ஊமை. பிறந்ததிலிருந்தே பேச்சுவராது. எங்கப்பா அவனையும் வாழவிடாம கெடுத்து….அப்பன் சரியில்லைன்னா என்ன நல்லாயிருக்கும் சொல்லு?”
“சரி என்ன சொல்ல? எல்லாம் முடிஞ்சுபோச்சு. நானே இன்னைக்கோ நாளைக் கோன்னு இருக்கேன். அந்த சத்ய சாயி புண்ணியத்தில நல்லா இருக்கேன். நல்லா வச்சிருக்கார். பிள்ளைகள் செட்டில் ஆயிட்டாங்க” அவள் பேசிக் கொண்டே இருந்தாள். பிராமணத் தமிழும் சூத்திரத் தமிழும் கலந்துதான் பேசினாள். பழக்கம். மெனக்கட்டுப் பிராமணத் தமிழில் பேசுவது போலிருந்தது.
பாலாம்பாள் கேட்டாள் “நான் ஒண்ணு கேட்கிறேன் தப்பா நினச்சுக்காதே. என்ன பதில் சொன்னாலும் ஒண்ணும் ஆகப் போறதில்ல. நாப்பது வருஷத்துக்கப்புறம். எனக்கும் எழுவதாச்சு. ஒரு நாப்பது வயசானவருக்கு பதினைஞ்சு வயசு பொண்ணைக் கல்யாணம் பண்றமேன்னு உங்க வீட்ல யாருக்கும் அப்பத் தோணலையா? பொண்ணால என்ன செய்ய முடியும்? இறந்த்துக்கு அப்புறமாவது யாராவது வந்து பாத்தாளா?” அவள் கேட்டுக் கொண்டே போனாள். கமலா ஒன்றும் பேசவில்லை.
“அது தப்பு. அந்தக் காலத்துல நினச்சிருப்பா. சாகப் போறவனுக்கு ஒரு சாந்தி கல்யாணம் பண்ணுவமேன்னு. வீட்டுக்காரியா வர்றவ என்னபாடு படுவான்னும் தெரிஞ்சுதான் இருக்கும். ஆனா அதைப்பத்தி யோசிச்சிருந்தாலும் கவலைப் பட்டுருக்கமாட்டா. மகன் சொர்க்கம் போறது முக்கியமாச்சே. அதுனாலதான் வசதியில்லாத பொண்ணாப்பாத்து நகை நட்டு ஒண்ணும் வேண்டாம். பையன் ரொம்ப நல்ல பையன்னு ஏமாத்திக் கல்யாணம் ஏற்பாடு பண்ணாளாம். பொண்ணை வீட்ல வச்சு நம்மளே காப்பாத்துவோம் அப்படீன்னு நினச்சாளாம். உங்கப்பா மட்டும் உங்கள எங்காத்துல விட்டிருந்தா, நாங்க உங்கள நல்லாப் பாத்துண்டு இருந்திருப்போம். எல்லாம் சொல்லக் கேள்வி. யாரு கண்டா? நானோ சின்னப் பொண்ணு. இதெல்லாம் கூட கௌதமி கேட்டதனாலதான் எனக்கே தெரியவந்தது. அம்மாகூட அந்தப் பொண்ணு எங்கருக்கானு தெரிஞ்சா எதானும் பண்ணலாம்னு சொல்லுவா. செத்துப் போய் இருபத்தைந்து வருஷமாச்சு. நான் உங்களத் தேடி வர்றதுக்கு அதுவும் ஒரு காரணந்தான்”.
ரொம்ப நேரம் கழித்து பாட்டி சொன்னாள் ”எங்கப்பா என்னை ஒண்ணுமே செய்ய விடல. படிக்க விடல. வேலைசெய்ய விடல. அவரை மீறி வந்ததுக்கப்புறந்தான் நிலச்சு நின்னேன்” அவள் நினைவுகளில் மூழ்கிப் போனாள். அப்படியே அவர்கள் வீட்டில் தங்கி இருந்தாலும், இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவே முடியாது. மொட்டை அடிச்சு உட்கார வைக்கலன்னாலும் பல வைதவ்ய ஆசார்ங்கள கடப் பிடிச்சிதான் இருக்கச் சொல்லியிருப்பா. இப்ப என்ன வேணா யோசிக்கலாம் பேசலாம். அப்படி நடந்திருந்தா? இப்படி நடந்திருந்தா? சரி கழுதைய விடுவோம். இப்படி இரண்டாந்தாரமாக இவருக்கு வாக்கப்பட்டு, இன்னொருத்தி பாவத்தையும் சொமந்திருக்க வேண்டாம். என்னதான் சமாதானம் பண்ணிக் கொண்டாலும், இன்னொருத்தி பாவத்தில விழுறது…. பாலாம்பால் யோசித்துக் கொண்டே இருந்தாள். கமலா அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. டி.வி இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது சினிமாப்பாட்டு.
கொஞ்சம் கொஞ்சமாக விலகும் திரைக்குப் பின் தெரியும் நாடகம் போல பாலாம்பாளின் கடந்த காலம் வெளிவந்தது. கமலாவுக்கும் ஒன்றும் அவசரமில்லை. ஒவ்வொரு முறையும் பாலாம்பாள் பேச்சு உணர்ச்சிகரமான உச்சத்தில் கண்ணீருடன் முடிந்தது. இன்னொருத்தரைக் கஷ்டப்படுத்துகிறோம் என்று கமலாவுக்குத் தோன்றியது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“எங்கஷ்டத்தையும் யார்ட்டயாவது சொல்லணும்ல. ஆறுதலா இருக்கும்.” கேட்பதற்கு கமலாவுக்கு விருப்பம்தான். பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டவ. கண்ணீர் துளிர்க்கும் போது வேறு ஏதாவது பேசி முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவாள். கமலாவுக்கு நிறையத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருந்தது. சொல்ல பாலாம்பாள் விருப்பப்படுவாளோ என்னவோ? தெரிந்ததையெல்லாம் கௌதமியிடம் சொன்னாள். அவளும் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். நானும் அந்தப் பாட்டியைப் பார்க்க வர்றேன் என்று ஒருமுறை சொன்னாள். கமலாவுக்கு என்ன சொல்வதென்னு புரியவில்லை. ஏற்கனவே அப்பாவை, தாத்தாவை அவருடைய அப்பாவை கொடுமைக்காரர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் கௌதமிக்கு இன்னும் சாட்சி கிடைத்துவிடும். நடந்ததை எண்ணிப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அனுபவித்தவளுக்கு எப்படி இருக்கும்?
கமலா பத்துநாள் லிவில் சென்றுவிட்டு, வந்தாள்.
பாலாம்பாள் வீட்டில் புதிதாக யாரோ இருப்பது தெரிந்தது. அதுவும் பிராமணர்கள் மாதிரி இல்லை. அவள் புருஷனுடைய சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் போகும் வரை பாலாம்பாளை தெருக்களில் கடையில் பார்த்து பேசிவிட்டுச் சென்று விட்டாள். அவள் நினைத்தது சரிதான். கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டாள். பாலாம்பாளின் புருஷன் தங்கையாவின் முதல் மனைவியின் பிள்ளைகள். இரண்டாவது பெண் பேறுகாலத்தைக் கழிக்க இங்கே வந்திருக்கிறாள். பாலாம்பாள் அவள் புருஷனுக்கு இரண்டாந்தாரம். மனிதர்கள் வாழ்வில் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. பாலாம்பாளுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு ஆண் ஒரு பெண். முதல் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள். தங்கையா முதல் மனைவியை ஏமாற்றியிருக்கவேண்டும். கணவன் இன்னொரு திருமணம் முடிப்பது எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும்?
தங்கையாவை ஒருநாள் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நல்ல தாட்டியமான உடம்பு. கூர்மையான மூக்கு, நீள் வட்ட முகம், நல்ல நிறம் இந்த ஜாதியில் இப்படி ஆட்கள் உண்டு என்று அவள் நினைத்ததில்லை. நமஸ்காரம் பண்ணிவிட்டு போய்விட்டாள்.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அந்த வீட்டில் ஆளரவம் குறைந்தபிறகு சென்றாள். பாலம் (சுருக்கிக் கூப்பிட ஆரம்பித்து விட்டாள்) முகம் சற்று வாடி இருந்தாள். “அவ அம்மா கொண்டுவந்து விட்டுட்டுப் போய்ட்டா. எல்லாச் செலவும் என் செலவு. ஒன்பதாம் மாசத்தில இருந்து பிள்ளை பிறந்து போகும் வரை. மாத்திரை மருந்து, டானிக். நல்லவேளை பென்ஷன் வருது. செலவழிச்சிட்டு ஒண்ணும் மிச்சமில்லை. இவரும் அப்படித்தான். ஒரு சாமான் வாங்கவிட மாட்டார். அவ கேப்பா. இங்க நிறையா இருக்கிறமாதிரி தோணும். எதையாவது சொல்லி விடுவார். பிறந்த்திலிருந்து சிலபேர் ராசி. மத்தவங்களுக்குச் செய்து போட்டுக்கிட்டே இருக்கணும்னு. அவமட்டுமா வர்றா. பிள்ளைகள், பாக்க வர்ற சொந்தக்காரங்க….எனக்கும் நகை நட்டுப் போடணும்னு ஆசை இருக்காதா.” சொல்லிக்கொண்டே போனாள். கமலாவுக்குப் புரிந்தது போலிருந்தது.
தங்கையாவின் வருமானம் ஒரு மனைவிக்கே காணாது. இதில் இன்னொரு மனைவி. ஆண்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கேட்பார் கிடையாது. பெண்கள் அடங்கித்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அப்படித்தான். பாலம் வருத்தத்துடன், புலம்பிக்கொண்டே இதைக் கடந்துவிட்டாள். அவளே சொன்னமாதிரி வேறு வழி? அப்பன் கைவிட்டு விட்டான். புருஷனும் இல்லையென்றால், தனியாக வாழமுடியுமா? அதுவும் சின்ன வயதில் விதவையான பெண். தங்கையா இரண்டாவது தாரமாக இவளைக் கட்டியது மோசம் தான். ஆனால் அவளை எந்த “நல்ல ‘பிராமணன்’ இந்தப் பொண்ணைக் கட்டுவான்? எல்லோரும் முடிந்தவரை ஆச்சாரங்களை அனுஷ்டானங்களை பின்பற்றவே விரும்புகிறார்கள். பின்பற்றுவது போல நடிக்கவேண்டியும் இருக்கிறது. மற்றவர்கள் ஏதாவது சொல்லிவிடக்கூடாதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
“தங்கையாவை கல்யாணம் முடிக்கவில்லை என்றால் பாலாம்பாள் என்ன ஆகியிருப்பாள்?” கமலா நினைத்துப் பார்த்தாள். இப்போது இருப்பதைவிட நிலைமை மோசமாக இருந்திருக்கும். அதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. மனிதன் வாழ்வில் எதையும் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லவே முடியாது. அவளுக்கு ஐம்பத்தி ஐந்து வயசுக்கு மேல் புரிகிறது. எல்லாச் சூத்திரங்களையும் கலைத்துப் போடுவதுதான் மனித வாழ்க்கை.
* * * * * * * * *

தங்கையாவுக்கும் கொஞ்சநாள் கழித்து புதிதாய் வந்து உறவு கொண்டாடும் பிராமணத்தி யாரென்று தெரிந்துவிட்டது. “இந்தப் பிராமணத்தியக் கல்யாணம் பண்ணது தப்பாப் போச்சு. எவளாவது எங்கிருந்தாவது சொந்தக்காரின்னு வந்திர்றா அவா இவான்னு எதயாவது பேசிட்ருப்பாளுக. அவனுக்கு எல்லாவற்றுக்கு பதில் ஒன்று இருந்தது. “எவனாவது பிராமணன் உன்னை வைச்சுக் காப்பாத்தி இருப்பானா?” இந்தக் கேள்விக்குப் பாலாம்பாளிடம் பதில் கிடையாது. தனியாக, அப்பா உதவி இல்லாம ஒருபெண் அந்தக் காலத்தில் தனித்து வாழ்வது சாத்தியமே இல்லை. அப்பா எதிரியான பிறகு வேறு யார் துணைக்கு வருவார்?
தங்கையாவுக்கும் பழைய ஞாபகம் வந்தது. பாலாம்பாளை முதலில் பார்த்தது…கவனித்த்து …எப்போ?...
முதலில் அவருக்கு பக்கத்து வீட்டு, ராமம்மா ஞாபகம் வந்தாள். பதினைந்து வயதில் ருசி காட்டியவள். முகத்தைப் பார்க்கவே முடியாது. அந்த வயதில் முகத்தைப் பார்த்ததில்லை. அவளை மட்டுமா? இன்னும் எத்தனையோ பேரின் முகத்தை அவர் பார்த்தது இல்லை. அதனாலெல்லாம் எதுவும் குறைந்துவிடவில்லை. ஆனால் பாலாம்பாள் அப்படி அல்ல.
புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த பாலம்பாள் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. வழுக்கைத்தலைப் பிராமணன் ஒருத்தனுடன் வேலையில் சேர வந்திருந்தாள். எல்லாருக்கும் இருக்கும் குறுகுறுப்பு அவனுக்கும் இருந்தாலும் யார்? என்ன என்பதெல்லாம் தெரியவில்லை? நிறம் அவனைப் போல இருந்தது பிடித்திருந்தது. முகத்தில் நல்ல களை. ஆனால் ஒரு சோகம் எப்போதும் முகத்தில் இருந்தது. மேல் ஜாதி. கூட ஆள் வேற வருகிறது. அவளெல்லாம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி இருந்தான்.
தினமும் சாயங்காலமானால், சுப்புராஜ் மோட்டார் ஷெட்டில் போய் உட்கார்ந்து விடுவான் அல்லது மணி அண்ணாச்சி கடை. பேச்சு சுவராஸ்யமாக நடக்கும். சுப்புராஜ் மோட்டார் ஷெட் மெயின் ரோட்டில் பஸ்டாண்டுக்கு எதிர்ப்புறத்தில் இருந்தது. காரோட்டுவதிலிருந்து, கார் மெகானிஸம் வரை கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தான். வேலை உறுதியாகி விடும் என்று அப்பா சொல்லி இருந்தாலும், மூன்று வருடமாக ஒன்றும் நடக்கவில்லை. டிஸ்ட்ரிக்ட் போர்டு என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாது.
ஒருநாள் சுப்புராஜ் சொன்னார் “உன்னைத் தேடி வானரமுட்டித் தேவமாரு ரெண்டு பேரு வந்தானுக. என்ன விஷயம்னு கேட்டா, ஒண்ணும் சரியாச் சொல்லல. கமுக்கமாப் பேசுனானுக. ஏதாவது தகறாரா? அவனுக சகவாசம் ஆகாதே”
தங்கையா கொஞ்சம் ரவுடித்தனம் பண்ணுகிறவந்தான். அதெல்லாம் விட்டுக் கொஞ்ச நாளாச்சு. அப்பாவும் டாக்டரும் சொல்லி இருக்காங்க. வேலை நிரந்தரம் ஆகணும்னா அதெல்லாம் விட்ரணும். இப்போதெல்லாம் அடி தடிக்குப் போவதில்லை. ஆனால் இன்னும் தகராறு வந்தால் விடுபவன் இல்லை. முரட்டு சுபாவம். மிலிடெரியில் இருந்து லீவில் வந்தவன் திரும்பவில்லை. அங்கிருந்து பலமுறை கடிதங்கள் வந்து விட்டன. தற்போது வம்பு தும்புகளுக்கு போகாமலிருக்க அதுவும் ஒரு காரணம். போலிஸ் கேஸ் அது இது என்றாகிவிட்டால் மிலிடெரிக்காரனிடம் அனுப்பிவிடுவார்கள். அப்பாவுக்குத் தபால்காரனும், போலிஸ்காரர்களும் பழக்கம். அதனால், கடித்த்தைப் பெறுபவர் இந்த விலாசத்தில் இல்லை என்று மிலிடெரிக்கடித்த்தை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த நேரத்தில் வானரமுட்டித் தேவமாரு ஆட்கள் தேடி வந்தால் என்ன அர்த்தம். அந்த ஏரியாவில் எவளிடமும் தொடர்பில்லையே. எங்கும் தகராறு இல்லை. யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார்கள்.
“திரும்பி வருவேன்னு சொன்னாங்களா?”
“இரண்டு நா கழிச்சு வாரோம்னாங்க”
என்ன விஷயம்னு சொல்ல்லையா?
“அவரிட்ட ஒரு துப்புக் கேக்கணும்னு சொன்னானுக. மேல என்னவிவரம்னு சொல்லலை”
தங்கையாவுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், துப்புக் கேக்கணும் என்ற வார்த்தைகள் ஆறுதலாக இருந்தன. விவகாரம் தன்னைப் பற்றியதாக இருக்காது போல் தோன்றியது. ஆனாலும், நெட்டையான கட்டுடல் ஆட்கள். என்ன செய்வார்களோ தெரியாது. எங்கே எல்லாம் சேட்டைகள் பண்ணினோம் என்று நினைத்துப் பார்த்தான். சுப்புராஜ்தான் இவன் கூட்டாளி. விஸ்கி குடிப்பது, விளையாடப் போவது, பெண்களைத் தேடுவது எல்லாம். மிலிடெரிக்காரர்கள் திருட்டுத்தனமாய் விஸ்கி கொண்டுவந்து கொடுப்பார்கள். அவ்வப்போது போலீஸ்காரர்களுக்கும் ஓரிரண்டு தம்ளர் ஓசி கிடைக்கும். சுப்புராஜ் ஷெட்டில் இரவு எட்டு மணிக்கு மேல்.
மூன்றாவது நாள் வானரமுட்டி ஆட்கள் வந்தார்கள். தங்கையாவை அழைத்துத் தனியே பேசிக்கொண்டிருந்தார்கள். சுப்புராஜ் சந்தேகப் பட்டு, இரண்டு மூன்று அடியாட்களைத் தயார் செய்து வைத்திருந்தான். என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? திடீரென்று தகராறு ஆகிவிடக்கூடும். ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. கொஞ்சநேரம் பேசிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
காலையில் வேலைக்குப் போனதும் பாலாம்பாளைத் தேடினான். அவள் பிரசவ அறைக்குள் இருந்தாள். திரும்பி வந்து விட்டான். எதற்குத் தேடினான் என்று மற்றவர்களுக்குப் புரியவில்லை. அவன் இரண்டு முறை வந்து போனதை அறிந்தும் பாலாம்பாள் அமைதியாக இருந்தாள். விதவையான அவளை ஒரு ஆண் தேடிவந்தது தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும்.ஆனாலும் கூட வேலை பார்க்கிறவன் அதனால் பெரிசாகச் சொல்ல முடியாது. சாயங்காலம், சித்தப்பா அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது, தங்கையா சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். வழக்கம்போல் சித்தப்பாவும் அவளும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கூடவே அவனும் வந்தான். மணி ஆறாகிவிட்டது. இருட்டு மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தது. அவன் எதற்காகக் கூட வருகிறான்?
தங்கையாவைப் பற்றி அந்த அலுவலகத்தில் யாரும் நன்றாகச் சொல்லவில்லை. முரடன், சண்டையிடுபவன். சண்டியர்த்தனம் பண்ணுகிறவன். தங்கையா வருவது கொஞ்சம் பயமாக இருந்தாலும், சித்தப்பா பக்கத்தில் இருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை வருகிறது என்பது புரிந்துவிட்டது. அவள் பிறந்ததிலிருந்தே பிரச்சனைதான்.
சித்தப்பா காலையில் அவளை காலையில் கூட வந்தார். அவர் கண்கள் சிவப்பாக இருந்த்தைக் கவனித்தாலும் அவள் ஒன்றும் கேட்கவில்லை. வேலை கிடைத்ததைலிருந்து பாதி நிம்மதி வந்தது போலிருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவது போல் இருந்தது. வானரமுட்டி சண்டியர்கள் இரண்டு பேரை அவள் அப்பா ஏற்பாடு செய்திருக்கிறாராம். அவளைக் கடத்திக் கொண்டுபோய் அவரிடம் விட்டுவிட வேண்டுமென்றும் அதற்கு பணம் தருவதாகவும் சொல்லியிருக்கிறாராம். சொல்வதற்கே கூச்சப்பட்டுச் சொன்னார். அதிர்ச்சியில் ஒன்றும் யோசிக்கத்தோன்றவில்லை. இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதைவிட மோசமாகப் போகலாம். கோபம் உடலில் ஜிவ்வென்று ஏறியது. சாலையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து, சத்தம் வெளியே வராமல் அடக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். எதிரே வந்த ஒன்றிரண்டு பேர் சித்தப்பாவையும் அவளையும் உற்றுக் கவனித்தனர். சித்தப்பாவுக்கும் குரல் தடுமாறியது. “சரி சரி ரோட்ல அழாதெ. வேண்டாம். உனக்கு ஒண்ணும் ஆகாது தங்கையாவும் பாத்துக்கறேன்னு சொல்லிருக்கான். அவனுக தங்கையாவை மீறி நடக்க மாட்டாங்களாம். இருந்தாலும் உனக்கும் தெரியணுமேண்ணுதான் சொன்னேன். கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கணும்மில்லயா?” அவர்களுக்கு எதிரே கூட்டமாக இரட்டைக்காளை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கத்திக் கொண்டே பலர் போனார்கள். பேச்சை மாற்றுவதற்கு சித்தப்பா சொன்னார் “முதல் தேர்தல் வரப் போகுது. ராமசாமிப் பூங்காவில ராத்திரி கூட்டமாம். நம்ம ஊர்ல…” அவர் பேசியதை அதற்கு மேல் அவள் கேட்கவில்லை. கூட்டம் தாண்டியதும் சொல்லிக் கொண்டே போனார்.
தங்கையாவுக்கு இரண்டு சண்டியர்களையும் தெரியும். அதனால் அவனைக் கேட்டிருக்கிறார்கள். “கவர்மண்ட் ஆளுகளைக் கை வைக்காதீங்க. வேலையப் பாத்துக்கிட்டுப் போங்க. பிராமணத்தி பாவத்தில விழாதீங்க. அவளும் உங்க ஊர் வெள்ளைப் பாண்டியைக் கும்பிடறவதான்” என்று ஏதேதோ சொல்லி அனுப்பி விட்டான். இனி ஆபத்தில்ல. ஆனாலும் இன்னும் என்னென்ன செய்வார் என்பது அவளுக்குப் பயமாக இருந்தது. நாலாட்டின்முத்தூர் வெள்ளைப் பாண்டிச் சாமி கைவிடமாட்டார். என் வாழ்க்கை நன்றாக அமைந்தால் உனக்கு நூத்தம்பது தேங்காய் வெடலை போடுகிறேன் என்று பலமுறை கும்பிட்டிருக்கிறாள். அதை நிறைவேற்றும் நாள் வருமா? அந்த வெள்ளைப் பாண்டிதான் தங்கையா மாதிரி ஆளை தனக்கு ஆதரவாக அனுப்பி இருக்க வேண்டும் என்று நம்பினாள். ரொம்பச் சக்தியுள்ள சாமி. ஊர்ல உள்ள பெருமாள் கோவில் சாமியை வேண்டாமல் ஏன் வெள்ளைப் பாண்டிச் சாமியை வேண்டிக்கொண்டோம் என்று நினைத்தாள். பெருமாள் நின்று கொல்வார். உடனடியாக் காப்பாத்தும் வீரம், சக்தி உடனடிப் பாதுகாப்பு எல்லாம் வெள்ளைப் பாண்டிச் சாமியால்தான் முடியும்.
பாலம் மெல்ல மெல்ல தங்கையாவைப் பற்றி ஊரில் அலுவலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தாள். ஐந்து பேரைக் காதலித்துக் கொண்டிருந்தான். எதுவுமே தெய்வீக்க் காதல் அல்ல. எல்லாம் மண்ணுக்கே உரிய காதல். அவன் கூட வேலை பார்த்த செவிட்டுப் பேச்சியம்மாள், அவனுடைய மேலதிகாரியின் நண்பராக அறிமுகமாகிய ஒரு டாக்டரின் மனைவியான கோதை, எட்டாங்கிளாஸ் வரை அவன் படித்த பள்ளியின் ஆசிரியருடைய நான்கு பெண்களில் இரண்டாவது பெண்ணான திலகவதி, மூன்றாவது பெண்ணான புனிதவதி, பஸ்டாண்ட் அருகில் டீக்கடை வைத்திருக்கும் கணேச ஐயரின் மனைவி. எல்லோரும் அவர்மீது அதீத காதல் கொண்டிருந்தனர். எங்கே எப்படி தங்கையாவைச் சந்தித்தார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. இது தவிர அவன் மனைவியும் அவனைத் தேடித்தேடி அலைந்தாள். அவ்வப்போது சாராயம் குடிப்பான். அடிதடி சண்டை போடுவான். ஆள்பலம் இருக்கிறதாம்.
இப்படிப்பட்ட ஒருவனுடன் சாதாரணமாக எப்படி பேசமுடியும்? வேலை பற்றித்தான் அவளால் பேச முடிந்தது. தனிமையில் எங்காவது சந்தித்த போதும், அவன் கண்கள் அவள் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் அளந்து கண்களில் பதிந்து கொண்டிருந்தன. தன்மீது அவளுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்த்து. அவன் கவனிப்பதை அவளும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இப்படித்தான் செய்தான் என்பது அவள் அவனைத் திருமணம் முடித்து இருபது ஆண்டுகள் கழித்துத்தான் தெரிந்தது.
கொஞ்ச நாட்களில் இரவில் உறக்கம் வராமல் தவித்தாள். முதலில் அவ்வப்போது இரவில் கனவில் வந்த அவன், இப்போது தினமும் பகல் கனவுகளிலும் தோன்ற ஆரம்பித்தான். அவள் உடலும் கனவுப் படுக்கையில் உறங்கிப் பழகி விட்டது. இதற்குமேல் அவன் தொல்லையை தாளமுடியாது என்று அவள் உடல் ஒருநாள் அறிவித்த போது அவன் அவள் எதிரே நின்றிருந்தான். அலுவலகத்தில் அன்று எல்லோரும் அவன் சொல்லி ஏற்பாடு செய்தபடி சீக்கிரம் போய்விட்டார்கள். தவிர்க்கமுடியாத அந்திமாலை நேரத்தில் அவள் அந்த வலையில் விழுந்தாள்.
அவளுடைய வாழ்க்கை மட்டும் தறிகெட்டு ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது. ஆனாலும், இருட்டுக்குள் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல் சூத்திரக் கயிரொன்றைப் பிடித்துவிட்டதாகவே நினைத்தாள். நாற்பது வருடங்கள் கழித்து அது தவறல்ல என்று தெரிந்தது. அவன் அவளுடன் இருந்ததே அதிசயம்தான். அதற்கு அவள் கொடுத்த விலை மிக அதிகமானதென்று தோன்றியது.
ஆகஸ்ட் இருபத்தி ஐந்தாம் தேதி 1954 தான் அவளின் இந்த வாழ்க்கை தீர்மானிக்கப் பட்டது. இனிமேல் வாழ்ந்து பலனில்லை என்று முடிவுக்கு வந்தாள். அன்று இரவு அவளுக்குப் பிடித்த மோர்சாதத்துடன் பக்டோன் கலந்து சாப்பிட்டுவிட்டும் படுத்துவிட்டாள். மூன்று நாள் கழித்து கண்விழித்த போது கழுத்தில் ஏதோ உறுத்துவது போலிருந்தது. . மஞ்சள் கயிறு. இரண்டு வருடங்களுக்கு மேலாக வற்புறுத்தியும் அவன் தாலி கட்ட மறுத்தான். பிறகு பிறகு என்று தள்ளிப் போட்டான். குழந்தை பிறந்துவிட்டது. அப்போதும் மறுத்தான். தொட்டிலுக்கருகில் வைத்திருந்த மண்ணெண்ணை விளக்கு சரிந்துவிழுந்து, தீயேரிந்து தொட்டிலுடன் குழந்தையும் எரிந்துவிட்டது. இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது. அதன் கிரியை கூட ஊரிலிருந்த தெரிந்தவர்களால் நடத்தப் பட்டது.
இப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். ரொம்ப நெஞ்சழுத்தம். அதிலிருந்து இருபத்தி எட்டாம் நாள் வைத்தியநாத ஐயர் வீட்டில் பாலாம்பாள் கழுத்தில் தங்கையா மீண்டும் ஒருமுறை தாலிகட்டினான். இரண்டு நிபந்தனைகள் விதித்தாள். மாமிசம் சமைக்கச் சொல்லக் கூடாது. சாப்பிடச் சொல்லக் கூடாது.
இரண்டுமாதம் கழித்து, முதல் மனைவி பச்சையம்மாவின் அப்பா மூன்று பேரைக் கூட்டிக் கொண்டு வந்தார். தாலி கட்டியது தெரிந்துவிட்டது. தாலி கட்டாமல் இருந்தவரை அவர்களுக்கு பிரச்சனை இல்லை. இரண்டு கட்டு வீட்டில், உள் வாசலில் தங்கையா நின்று யாரும் வீட்டுக்குள் வந்துவிடக்கூடாதென்று கொண்டான். அவளை விட்டுவிட்டு வந்துவிடும்படி நிர்ப்பந்தித்தார்கள். ஒருகட்டத்தில் ‘உள்ளே நுழைந்தால் காலை வெட்டுவேன்’ என்று சொன்ன பிறகுதான் உள்ளே இருந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாலாம்பாளுக்கு நம்பிக்கை வந்தது. இனிமேல் வைத்துக் காப்பாற்றுவான். அவர்கள் நிலைமை தலைக்கு மேல போய்விட்டதென்று போய்விட்டார்கள்.

பாலாம்பாளைப் பற்றி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கமலா விரும்பினாள். ஆனால் அது சாத்தியமாகவில்லை. நினைத்த்தையெல்லாம் நாம் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஒருவருடத்தில் கமலாவுக்கு மாற்றலாகி சென்னை சென்று விட்டாள். பாலாம்பாளைப் பற்றிய நினைவு குடைந்து கொண்டிருந்தது. பாலாம்பாளின் மகனிடமிருந்து வந்த கடைசிக்கடித்ததில் அவள் இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டாள். விஷேசத்துக்கு அவளால் போக முடியவில்லை. ஆனால் கமலாவால் பாலாம்பாளை மறக்க முடியவில்லை. பாலாம்பாளும் கடைசிவரை, தன் விருப்பத்தை வெளியே சொல்ல வில்லை. ஒரு பிராமணப் பெண்ணாக சகல சாவுச் சடங்குகளோடும் அவள் சாக விரும்பினாள். சொன்னாலும் நிறைவேறாது என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment