Tuesday, July 22, 2014

ஞானம் என்பது.....

 

       பக்தி இயக்கத்தின் காலத்தில் (இந்தப் பெயர் கூட நாமாகப் பின்னால் இட்டுக் கொண்டதுதான்.  அடியார்களும், ஆழ்வார்களும் நடமாடிய காலத்தில் ‘பக்தி இயக்க காலம்என்ற பதம் வழக்கின் இருக்க வாய்ப்பில்லை), படிக்கத் தெரிந்த அதாவது வாசிக்க்த் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தயக்கமாக இருக்கிறது.  குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் கல்வி பயில முடியாது என்ற நிலைமை இருந்தவரை, சிறுபான்மையினர் தான் கல்வி பயின்றிருக்க முடியும்.  அதிலும் பாடல் பாடி, இறைவனைப் பரவுவதென்பது, அதனினும் மேலான நிலையில் இருப்போர்க்கே வாய்த்திருக்கும். எனவே, நாயன்மார்களும், ஆழ்வார்களும் எந்தச் சமூகப் பிரிவுகளில் இருந்து தோன்றியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை. 

 

       இப்படிப்பட்ட சிறுபான்மையினர் எதை ஞானம் என்று வரையறை செய்தார்கள்? அதை அடைவதற்கான வழி என்னவென்று கண்டார்கள் அல்லது விண்டார்கள்? என்பது காணவேண்டிய ஒன்று.  ஞானம் என்பது இறைவனை அறிந்து கொள்வது, அவனுடைய திருவிளையாடல்களை அறிந்து கொள்வது என்பதாகவே கொள்ளப்பட்டது.  

 

 

       விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அறிதல் என்பது ஒரு பொருளை அவதானித்து அதன் குணங்களைச் சோதித்து அறிகிற வழியாகும்.  அப்படிச் சோதித்துச் சோதித்து அறிந்த விஷயங்களை தொகுப்பை அதன் மூலம் இயற்ற்கையைப்  பற்றிய நமது புரிதலை ‘ஞானம்என்று சொல்லலாம். ஆனால் பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஞானம் என்பது இறைவனுக்கு அடிமையாவதன் மூலம் அவன் அருளால் கிடைப்பது.  ஞானம் என்பது அவனை அறிவது. அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் விஞ்ஞானத்தின் வழியில் ஞானம் என்பதை ‘அறிவு என்ற பொருளில் கொண்டோமெனில், எந்த ஒரு பொருளை, அல்லது இயற்கை நிகழ்வைப் பற்றிய அறிவு என்று வரையறுக்கலாம். உதாரணமாக, கடலைப் பற்றி மனிதன் அறிந்து கொண்டதையெல்ல்லாம் தொகுத்தால், அது ஒரு விஞ்ஞானப் பிரிவாக ஆகிவிடும். அதைப் பற்றி அறிந்து கொள்ளும் விதம் என்பது, கடலில் சென்று அதில் உள்ளவற்றை அவதானித்து, சோதனைகள் செய்து, மறு சோதனைகள் செய்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனிதர்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் சோதித்து, கடைசியில் அனைத்தையும் தொகுத்துக் கிடைப்பதை கடலைப் பற்றிய ஞானம் என்று சொல்லிக் கொள்ளலாம்.  இறைவனைப் பொறுத்தவரை, அவரிடம் கேள்வி கேட்காமல் சரணடைவதென்பதே ஞானம். 

 

       அடுத்ததாக, பக்தி இயக்க்காலத்தில் நாயன்மார்களும் பாடிப் பாடிப் பரவியதெல்லாம் இறைவனின் பெருமைகளை மட்டுமல்ல. முதலடியாக, வாழ்வின் யதார்த்தத்தில் இருந்து விலகுதல், அதாவது குடும்பம் என்ற பொறுப்பில் இருந்து விலகுவது, பெண்ணாசையில் அதீதமாக ஈடுபட்டு பின்னர் அதை வெறுத்து, சமூகத்தை வெறுத்து இறைவனிடம் செல்வது. மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இயற்கையை மீறிய ஒரு சக்தியை அதாவது தனக்குப் பிடித்தமான ஒரு தெய்வத்தை வணங்குவது, அதனிடம் தன்னை இழப்பது.  அதற்கு அடுத்த படியாக, இந்தப் பிறவி வேண்டாம், சொர்க்கம் வேண்டும், அல்லது உன் காலடியில் விழவேண்டும் என்றெல்லாம்  இறைவனிடம் கையேந்திப் பிச்சை எடுப்பது. பக்திப் பாடல்களை இந்த வரையறக்குள் அடக்கி விடலாம்.

 

       பக்திப் பாடல்களில் துலங்கும் இலக்கியத் தரம் என்பது, உணர்ச்சி வேகத்தில் எழுகிற கவித்துவ உணர்வைப் பிரதிபலிக்கலாம்.  ஆனால் இறைவனைப் பாடுவதாலேயே அது இலக்கியமாகிவிடாது.  பக்திப் பாடல்களில் உன்னதமான மனிதக் குரல்கள் ஒலிக்காமல் இல்லை.  ஆனால் அவை அதற்காகவே எழுதப்பட்டவை அல்ல.

உதாரணமாக, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்  என்று கம்பீரமாக தொடங்கும் குரல் முதல் நான்கு அடிகளில் உச்சத்தை எட்டி, அடுத்த நான்கு வரிகளில் தன் கம்பீரத்தை இழந்து, மீண்டும் சூம்பிப்போய் விடுவதைக் கவனிக்கலாம்

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    

  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

     

.      ஆக, ஞானம் என்பது விஞ்ஞானத்தின் பொருளின் ஞானமாக இல்லை.  பக்தி இலக்கியத்தில் இலக்கியத் தரம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டாலும், அதற்குள் அழகியல் உள்முரண்பாடுகள் உண்டு. 

Monday, July 14, 2014

நமது பண்பாடு.

 

நமது பண்பாடு என்ற வார்த்தையும் கருதுகோளும் அடிக்கடி நம் காதில் விழுகிறது.  யாருடைய வாயிலிருந்தும் எளிதாக வெளிவரும் இந்த வார்த்தைகளுக்கான பொருளை முழுவதும் அறிந்து கொண்டுதான் பேசுகிறோமா? என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.  ‘நமதுஎன்ற வார்த்தையிலும், கருதுகோளிலும், ‘பண்பாடுஎன்ற வார்த்தையிலும் கருதுகோளிலும் மிகப் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன.  எப்போதுமே எதையும் அறுதியிட்டுச் சொல்பவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஏனெனில் இந்த உலகமும், அதில் உள்ள எதுவுமே எந்த ஒழுக்கத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவில்லை.  எனவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிந்த்தாக நினைத்துக் கொண்டிருப்பவன் அடிப்படையில் முட்டாளாகவே இருக்கிறான். 

 

        முதலில் நாம்என்ற கருதுகோளை எடுத்துக் கொள்வோம்.  அந்த வரையறைக்குள் எதையெல்லாம் அடக்குகிறோம் என்பது அவரவர் சமூகநிலை, அரசியல் நிலைப்பாடு என்பனவற்றை உள்ளடக்கியது.  இந்த நாமும் கூட காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம்மாறிக் கொண்டே இருப்பது. உதாரணமாக, பாண்டிய சேர சோழ அரசுகள் இருந்த காலத்தில், பாண்டிய நாட்டில் வாழும் ஒருவர் அங்கு வாழும் மக்களை ‘நாம்என்று கருத வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும்.  சேர நாட்டில் வாழ்ந்தவர் அவரைப் பொறுத்தவரை வேற்று நாட்டவர்.  1946ஆம் ஆண்டில் லாகூரில் வாழ்ந்த ஒரு பஞ்சாபி தன்னை இந்தியர் என்றே அடையாளம் கண்டிருப்பார்.  ஆனால், 1949ஆம் ஆண்டில் அவர் தன்னை ஒரு பாகிஸ்தானி என்றே அடையாளம் காணவேண்டி இருந்திருக்கும். 

 

        பண்பாடு என்பதும் இவ்வாறே இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  கோமணம் கட்டிக் கொண்டே வாழ்வது பழைய பண்பாடு, ஆண்கள் குடுமியோ சடைமுடியோ வைத்துக் கொள்வதும் நமது பண்பாடு, இப்போது நவீனமுறையில் ‘பங்க்வைத்துக் கொள்வதும் நமது பண்பாடுதான். ஆடைகள் அலங்காரங்களுடன் உள்மனதும் மாறி விடுகிறது.  தமிழகத்தில் பெண்கள் சைக்கிள் விட ஆரம்பித்ததில் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் பேண்ட் அல்லது சல்வார் கமீஸ் அணிவது அதிகமாகிவிட்ட்தைக் காணமுடிகிறது. 

 

        எனவே நாம்’ , ‘பண்பாடுஎன்ற கருத்தாக்கங்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.  இன்று நாம் அணிந்திருக்கும் உடைகள், பேண்ட், சட்டை, காலணிகள், எதுவும் நமது பண்பாட்டில் பிறக்கவில்லை. நாம் எழுதும் பொருட்கள், அலுவலகத்தில் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் நமது பண்பாட்டில் கண்டுபிடிக்கப் பட்டவை அல்ல. செய்தித்தாள், கணினி, பேருந்து, விமானம் ரயில் என்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எதுவும் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.  ஏன் தமிழர்களின் அடையாளமாக நினைத்துக் கொண்டிருக்கிற, நாம் அதிகம் விரும்பி உண்ணுகிற, சாம்பார் வெளிமாநிலத்தில் இருந்து வந்தது.  இட்லி கூட தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் இருந்து வந்த்தாம். தேங்காயும் அங்கிருந்தே வந்ததாம். மிளகாய், தென்னமரிக்காவில் இருந்தும், காபி அரேபியாவில் இருந்தும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்த நிலையில் நாம் நமது என்றோ நமது பண்பாடு என்றோ சொல்வதை, சில ஆண்டுகள் வரை பார்த்த்து கூடக் கிடையாது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பண்பாடு என்றும் அதைக் காக்க வேண்டும் என்று கூச்சல் கேட்கும் போது நாம் உண்மையிலேயே மெய்மறந்துபோய்விடுகிறோம். அதாவது உண்மைகளை மறந்து போகிறோம்.

 

       எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிற ஒன்றை, ஏதோ அது நிலையானதே போல், பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. அதைக் காப்பாற்றச் சிலபேர் அரசியல் பேசுவதும், அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதும் அவ்வாறே தவறே ஆகும்

 

நாம் ஏன் பிறந்தோம்?

 

        இந்தக் கேள்வியை வாழ்நாளில் ஒரு முறையேனும் தமக்குள் கேட்டுக் கொள்ளாத மனிதன் இருக்க மாட்டான்.   கடவுள் படைத்தார்.  அதனால் ஏதாவதொரு காரணம் இருக்கும் என்று ஊகிப்பவர்கள் உண்டு.  கடவுள் படைக்கவில்லை.  காரணமும் தெரியவில்லை என்று பகுத்தறிவு பேசுகிறவர்களும் உண்டு.  தற்காலிகமாக இப்படி ஒரு பதிலை அவ்வப்போது சொல்லி, நமது கேள்வி கேட்கும்மனதை அடக்கி வைத்தாலும், நாம் ஏன் பிறந்தோம் என்ற கேள்வி அடிக்கடி தலையை நீட்டித் தொந்தரவு செய்கிறது. 

       

        அலகிலா விளையாட்டுடையார்இறைவன் அவருடைய திருவிளையாடல்களில் நாமும் ஒன்று என்று எளிய விடைகளில் மனம் நிறைவடைந்து விடுவோருக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் அளவும் விரிவும், புரிவதில்லை. நாமிருக்கும் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய பால்வெளி  (Milky way galaxy) யின் விட்டம் ஒரு லட்சம் (100000) ஒளி வருடங்கள். (அதாவது, ஒளியின் வேகத்தில் ஒரு லட்சம் வருடங்கள் பயணம் செய்தால் எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம்).  அருகருகில் இருக்கும் இரண்டு ‘கேலக்ஸி களுக்கு இடையில் உள்ள தூரம், சராசரியாக முப்பது லட்சம் ஒளி வருடங்கள் (ஒளியின் வேகத்தில் முப்பது லட்சம் வருடங்கள் பயணம் செய்தால் கடக்கும் தூரம்).  நினைத்தாலே வியக்க வைக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக பூமியும் அதிலே எதற்கும் புலப்படாத மனித உயிர்களும் இருக்கின்றன. 

 

        கற்பனை கூடச் செய்ய இயலாத அளவுக்கு விரிந்திருக்கும், விரிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் அழகை, அதில் கண்காணாப் புள்ளியாக, துகளாக இருக்கும் பூமியை, பூமிக்குள் ஒரு துகள் ஆக இருக்கும் மனிதன், இந்தப் பூமியும் இதில் உள்ள மற்ற உயிர்களும், தாவரங்களும் தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக நினைத்தால், அது, மனிதனின் அறியாமையின் விளைவாக, தன்னைச் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுயமோகத்தின் விளைவாக இருக்குமே தவிர வேறெதுவும் இல்லை.  ஏதோ இறைவன் கனிகளை, மரங்களை, ஏரிகளை மலைகளை எல்லாம் மனிதன் அனுபவிப்பதற்காகத்தான் படைத்தான் என்று நாம் இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கான காரணமாக வரித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையை அறிய வேண்டுமெனில் நாம் புறவயமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  அது மனிதனால் முடியுமா?  கடலுக்குள் வாழும் சிறு மீன் தனது பார்வையின் பரப்பையும் அறிவையும் வைத்துக் கொண்டு கடலை அளக்க முயல்வது போன்றதுதான் இது.  கடலுக்கும் எல்லைகள் உண்டு.  அதை மீனால் அளக்க முடியாது. கடலை விட்டு வெளியே போனால் மீனால் உயிரோடு இருக்க முடியாது.  ஆனால் சில மனிதர்களால் கற்பனையில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை அனுமானத்தில் அளக்க முடிந்திருக்கிறது.  அவர்கள் விஞ்ஞானிகள்.  (நாம், அதாவது மனிதர்கள் எல்லோரும் விஞ்ஞானத்தின் வாதத்தைப் புரிந்து கொள்ள முடியும், அறிந்து கொள்ள முடியும். அவர்கள் ஒன்றும் அதி மனிதர்கள் அல்ல.  இதில் தான் அவர்கள் ஞானத்தை அடைந்து விட்ட்தாகப் பீற்றிக் கொள்ளும் மதவாதிகளான குருக்களை மிஞ்சி விடுகிறார்கள். ஏனேனில் மதவாதிகள் தாங்கள் ஏதோ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு மட்டுமே உண்மை விளங்கும், தாங்கள் மட்டுமே அதைப் புரிந்து கொண்டவர்கள், இறைவனைத் தாங்கள் மட்டுமே கண்டவர்கள் என்று உலகத்துக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உள்ளர்த்த்த்துடன் பறைசாற்றுகிறார்கள் – அதுவும் ஆங்கிலத்தில் கொஞ்சம் பேசத் தெரிந்து விட்டால் போதும் அப்பப்பா...).  .

 

        மனிதனுக்கும் தாவரங்களுக்கும் உள்ள உறவை ஒரு உதாரணம் மூலம் அறிய முயல்வோம்.  தனது இனத்தைப் பெருக்குவதில் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.  உதாரணமாக மாமரம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.  அது இடத்துக்கு இடம் நகர முடியாது.  தனது இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால், ஒரே இடத்தில் இருந்து கொண்டும் பெருக்க முடியாது.  ஒரே இடத்தில் இருந்தால் இடம், நீர் மற்ற வளர்வதற்கான வசதிகள் வேண்டிய அளவு கிடைக்காது, இட நெருக்கடி வேறு.  தனது விதைகளைப் பரப்ப வேண்டுமெனில், இடம் விட்டு இடம் நகரும் மிருகங்கள் மூலமாகத்தான் பரப்ப முடியும்.  மாமரம் அதை எவ்வாறு நிகழ்த்துகிறது? மாங்காய் விதையாகப் பக்குவப்படும் வரை அதை மிருகங்களோ பறவைகளோ உண்டால், அந்த பிஞ்சு விதையால் மரம் ஒன்றை உருவாக்க முடியாது.  அதனால், புளிப்புச் சுவையை, மனிதனாலோ வேறு மிருகங்களாலோ எளிதில் உண்ண முடியாத சுவையுடன், மென்மையின்றி இருக்கிறது.  மாங்காய், கனியாக மாறும் பருவத்தில், உண்ண எளிய பதார்த்தமாக, சுவை அதிகமாக, மென்மையாக, இருக்கிறது. அதுதான் விதை மரத்தை விட்டு இடம் பெயரச் சரியான நேரம்.  விதை புதிய இடத்தில் விழ வேண்டுமானால் மனிதன் அல்லது குரங்கு அல்லது வேறொரு மிருகம் சுவையான கனியை உண்ண வேண்டும், மீதமிருக்கும் கொட்டையை வீசி எறிய வேண்டும்.  அப்போது புதிய மாமரக் கன்று ஒன்று புதிய இட்த்தில் உருவாகும் சாத்தியக் கூறு ஏற்படுகிறது.

 

        நமக்காகத்தான் மாமரம் கனிகள் தருகிறது என்று மனிதன் எண்ணிக் கொண்டால், அது எவ்வளவு தவறான பார்வையாக இருக்கிறது.  மாமரம் தன்னைத் தக்க வைத்துப் பெருக்கிக் கொள்ள, இப்படி வழியை வைத்திருக்கிறது.  மனிதன் மாங்கனியை உண்டு வாழக் கற்றுக் கொண்டு, அதைப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டதனால் அதை மாமரம் வளர வசதியான சூழ்நிலை உள்ள இடத்தில் பயிரிட்டுக் கொள்கிறான்.  இயற்கையிலேயே உண்டான மரத்தை, அதை அவதானித்துப் படித்துப் பார்த்து, அதைப் பயன்படுத்தத் கற்றுக் கொண்டிருக்கிறான். அதனால், அவன் தான் மாமரத்தை உண்டாக்கியவன் போல நினைத்துக் கொள்ள முடியாது.  மனிதனுக்கும் உபயோகம் ஆகும் என்ற காரந்த்தினாலேயே மாமரத்தின் குலம் விருத்தி அடைகிறது.  அது மாமரத்துக்கும் ஏற்பட்ட லாபம்.  ஏனெனில் அதன் இனம் பெருத்து வாழ்கிறது.  இன்னொரு உதாரணம் சொல்ல்லாம்.  கோழிகளை மனிதன் சாப்பிடாவிட்டால், கோழிகள் இவ்வளவு எண்ணிக்கையில் பெருத்திருக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.  தம்மை மனிதனுக்கு உண்ணத் தருவதன் மூலம், தமது எண்ணிக்கையைப் பெருக்கி, தமது இனத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது கோழியினம்.   புலிகளை யாரும் சாப்பிடுவதில்லை.  அதனால் மனிதனுக்கு நேரடியான எந்தப் பலனும் இல்லை.  அதை வீடுகளில் வளர்க்கலாம், கறி சமைத்துச் சாப்பிடலாம் என்று வழக்கம் ஏற்பட்டால்,  புலியினம் பெருக வாய்ப்பு இருக்கிறது.  மற்றப்படி காடுகள் குறைந்து, மிருகங்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் புலியினம் மட்டும் மறைகிறது என்று கவலைப் படுவதில் அர்த்தமில்லை.  பரிணாம வளர்ச்சியின் பல கால கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கின்றன.  அவற்றையெல்லாம் காப்பாற்றி இருக்க முடியுமா? அல்லது காப்பாற்ற வேண்டுமா?

 

எதற்காகப் பிறந்தோம் என்று யோசிக்கலாமே தவிர, அதற்கு விடை என்னவோ ஒன்றுதான்.  நாம் எதற்காகவும் பிறக்க வில்லை.  இந்தப் பதில் மிகவும் சுவராஸ்யம் அற்றது.  கற்பனையின் குதிரைகளை முடக்கிப் போடுவது.  அதனாலேயே அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. இது மனிதனின் ஈகோ தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம். அதாவது உலகம் பிறந்தது எனக்காக என்று நம்பிக்கையை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மனித ஈகோ வின் தற்கொலை.    நாம் என்னவோ மாபெரும் சாதனைகளைச் செய்ய வந்திருக்கிறோம், நாம் எவ்வளவு பெரிய மனிதர், என்று எத்தனை பெரிய ஈகோவும் காற்றூதப்பட்ட பலூனில் இருந்து காற்றைப் பிடிங்கி விட்ட்து போன்று உண்மையைச் சந்திக்கும் தருணம் இது.

 

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?என்று எதையோ பூடகமாக, மர்மமாக அவிழ்த்து விட்ட கட்டுக் கதைகளின் நடுவே, நாம் நாமாகவே இருக்கிறோம், எந்தக் கடவுளின் அல்லது மாபெரும் சக்தியின் திட்டத்தில் நாம் பிறக்க வில்லை என்று உணர்வது பெருங்கடினமான செயல்.   

        இந்தப் பிரபஞ்சத்தில், சூரியனும், பூமியும் தோன்றியது ஒரு நிகழ்வு.  அதற்கு ஒரு பொருளும் இல்லை.  அது ஒரு விபத்தாகக் கூட இருக்கலாம்.  அதை யாரும் நிகழ்த்தி இருக்கவும் முடியாது.

 

        உயிரிங்களில் நாம் எவ்வகையில் (உடற்கூகளைப் பொறுத்தவரை) உயர்ந்தவர்கள்?  நம்மை விடப் பெரிய மிருகங்கள் இருக்கின்றன. நம்மை விட அதிக தூரம் பார்க்கக் கூடிய பறவைகள், நம்மை விட அதிக தூரம் ஒலியைக் கேட்கக்கூடிய மிருகங்கள், இதுமாதிரி நம்மை விட அதிகத் திறமை மிகுந்த மிருகங்கள் ஏராளமானவை இருக்கின்றன.  அவற்றை விட நாம் எந்த வகையில் உயர்ந்தவர்கள்?   நமக்குச் சாதகமான அளவுகோல்களை வைத்துக் கொண்டு, அப்படி அளவுகோல்களை வைத்துக் கொள்ளும் உரிமையும் திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்று நினத்து கொண்டு நாம் மற்ற மிருகங்களை, உயிரின்ங்களை, அவை நம்மை விடத் தாழ்ந்த நிலையில் உள்ளவை என்று நினைக்கிறோம்.  இந்த உலகத்தை, இப்போது நாம் ஆண்டு கொண்டிருப்பதால், அப்படி நினைக்கிறோம்.  ஒரு காலத்தில், டைனொசோர்கள் ஆதிக்கம் செலுத்தின.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உயிர்கள் ஆதிக்கம் செலுத்தின. இன்னும் கொஞ்சகாலம் போனால், மனிதனைவிட சக்தி வாய்ந்த ஒன்று வேறு ஏதாவதொன்று தோன்றி பூமியை ஆதிக்கம் செலுத்தலாம் என்பது உயிரியலில் இயலாத, நிகழ முடியாத ஒன்றா?

 

ஒரு விஷயத்தை அளக்கும் அளவை நாம் தீர்மானம் செய்து கொண்டு நாம் ஏதோ பழங்களும் தோட்டங்களும் நமக்காகத்தான் இருக்கின்றன என்று ஒரு தோட்டத்தின் முதலாளி மாதிரி யோசித்துப் பழகிவிட்டோம்.   எதுவும் யாருக்காவது சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். அல்லது யாராவது பிரபஞ்சத்தைப் படைத்துத்தான் இருக்க வேண்டும் என்று யோசிக்காமல் மாற்றி யோசிக்கும் வழி இருக்கிறதா?

 

        நாம் அறிந்தவரை பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறது.  அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை நாம் ஊகிக்க முடியவில்லை.  நமக்குத் தெரியாது.  அது ஏதோ ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  அதனாலேயே அந்த சக்தி நாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்று வாதிப்பதில் அர்த்த மில்லை.  சந்திரன் கடவுள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  அங்கே மனிதன் போனதும் அது கடவுள் இல்லை என்று தெரிந்து விடவில்லையா? – ஆனாலும் சந்திரனைக் கும்பிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  கும்பிடாவிட்டால் ஏதாவது கெடுதல் நேர்ந்துவிடும் என்ற பயம். –

 

        பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒரு பேருண்மை அதன் விரிவும் பரப்பும்.  புராணத்திலும், கதையிலும் படித்த, கற்பனை செய்த அளவுகோல்கள் பிரபஞ்சத்தை அளக்கப் போதுமானவை அல்ல.  மீண்டும் மீனின் உதாரணத்துக்கே வருவோம்.  ஒரு அரைசெண்டிமீட்டர் அளவுள்ள மீன் எதை வைத்துக் கடலின் பரப்பை, ஆழத்தை அளக்க முடியும்?  அளக்க முடியாதது, குணங்கள் அற்றது என்று பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் கடவுளை வர்ணிப்பதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.  அவர்கள் தங்கள் கற்பனைக்கு எட்டிய வகையில் கற்பனை செய்து கொண்டார்கள்.  சந்திரன் கூட அவர்களுக்கு அளக்க முடியாத தூரமாக இருந்திருக்கலாம்.  இப்போதிருக்கும் அளக்க முடியாத தூரம் என்பது விஞ்ஞானம் சார்ந்தது.  இதுவரை தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் அளக்க முடியாத தூரம் என்பது புதிய அளவு கோலின் படி குறிப்பிட வேண்டி இருக்கிறது.

 

        சூரியனினை விட, 1900 மடங்கு மீண்டும் சொல்கிறேன், 1900 மடங்கு, பெரிய நட்சத்திரத்தை மனிதன் அடையாளம் கண்டிருக்கிறான்.  அதன் முன்னால் சூரியன் ஒரு சிறு புள்ளி.  அதை யார் எதற்காகப் படைத்திருக்க முடியும்.? இத்தனூண்டு என்று கூடச் சொல்ல முடியாத பூமியில் கண்ணுக்குத் தெரியாத அணுத்துகளாக இருக்கும் மனிதனின் கற்பனையில் யாராவது படைத்துத்தான் ஏதாவதொன்று தோன்றி இருக்க முடியும்.  ஏனெனில் நாம் பூமியில் பார்ப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது.  அதை மீறி நம்மால் யோசிக்க முடியவில்லை.  வேதியியலின் முதல் விதி என்ன சொல்கிறது. பொருளை யாராலும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.  ஆனால் இதை வேதியியல் பாடத்தில் மதிப்பெண் பெறும் விடையாக மட்டும் எழுதுகிறோம்.  பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையும் இதுதான் உண்மை.  அதை யாரும் படைக்க வில்லை. யாரும் படைத்திருக்கவும் முடியாது.  இந்த உண்மையை நாம் செரித்துக் கொள்ள முடியவில்லை என்றால், நாம் எப்போதும் போல எல்லாம் வல்ல இறைவனைச் சரணடையலாம்.  ஒன்றும் குறைந்துவிடாது.  ஆனால், நம்மால் உண்மையைச் சந்திக்கும் மனத்திடம் இல்லை.

 


        நாம் எதற்காகப் பிறந்தோம்?  நிச்சயமாக கடவுளின் லீலா வினோதத்தின் ஒரு பகுதியாக அல்ல.  அப்படிக் கற்பனை செய்து கொள்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.  நாம் என்ன செய்ய விரும்புகிறோம்? என்று இந்தக் கேள்வியை மாற்றிக் கேட்டால் ஒரு வேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருகிறது.  இருக்கின்ற வாழ்வின் சராசரி 70 ஆண்டுகளில், பணம் சேர்ப்பது ஒருவரது கனவாக இருக்கலாம்.  அல்லது பெரிய பெரிய கட்ட்டங்களைக் கட்டுவது ஒருவரது கனவாக இருக்கலாம்.  பெரிய மருத்துவராக இருப்பதோ, இலக்கியவாதியாக இருக்க விழையலாம்.  எதுவாக வேண்டுமானாலும் நாம் வாழலாம்.   நாம் எதற்காகப் பிறந்தோம் என்பதற்கான பதில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதுதான். 

Monday, July 07, 2014

ஸ்ரீகாந்த் சரத் சந்திர சட்டோபாத்யாய்

:சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவருக்கும் சில பொதுவான சிந்தனைகள் உண்டு.  அவற்றில் ஒன்று சமூகத்தில் பெண்களின் நிலைமை.  இந்த நவீன காலத்தில் அதற்குப் பெண்ணியம் என்று பெயரிட்டுக் கொண்டாலும், நவீனகாலச் சிந்தனைகள் தொடங்கிய, ஜனநாயகச் சிந்தனைகள் மலரத் தொடங்கிய காலத்தில் இருந்தே இது குறித்த கவலைகள் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிந்தனையாளர்கள் படைப்பாளிகளுக்கு இருந்தே வந்துள்ளன.

 

        ஒருவகையில் பார்த்தால், நாவல் என்ற வடிவம் தொடங்கும் காலத்தில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்த ஆங்கிலேயப் பெண் எழுத்தாளர்களின் (உதாரணமாக, Virginia wolf, Bronte sisters),  படைப்புக்களின் பெண்களின் குரல் தனித்து ஒலிக்கத் தொடங்கியது. நாவல் என்ற வடிவம் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும் போதும் இதன் பாதிப்பு இருந்தது. வங்காளத்தில் எழுதப்ப்பட்ட முதல் நாவலின் பெயர் கூட அதனைச் சுட்டும். (துர்கேஷ் நந்தினி - பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயா). அவரைத் தொடர்ந்து நாவல்களில் யதார்த்த உலகை சித்தரித்த்தும், அதுவும் இடைத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின், குறிப்பாகப் பெண்களின் நிலையைச் சித்தரித்தவர்களில் சரத் சந்திர சட்டோபாத்தியாயா மிகவும் முக்கியமானவர்.

 

        சரத் சந்திர சட்டோபாத்தியாயாவின் நாவல்களில் பெண்களின் சித்தரிப்பில் உயிர்ப்பும், சத்திய ஆவேசமும் அடிநாதமாக இருக்கும்.  ஆனால் எதுவும் ஓங்கி ஒலிக்காது. அடிநாதம் என்பது கூட நாமாகப் புரிந்து கொள்வது தான்.  ஆனால், கதையின் சித்தரிப்பில் யதார்த்தமே பரவி இருக்கும். பெண்களை இவ்வளவு கனிவோடு சித்தரித்த அவர் வாழ்ந்து இறந்தது, 1938ஆம் ஆண்டு. அவருடைய படைப்புக்களில் மிகச் சிறந்த படைப்பாக்க் கருதப்படுவது, ஸ்ரீகாந்த்.  அவருடைய மற்றக் கதைகளிலும் வங்காளத்தில் பெண்களில் நிலைமை பற்றிய சித்தரிப்புக்கள் யதார்த்தமாக இருந்த போதிலும், ஸ்ரீகாந்த் நாவலில் அது உச்சத்தை அடைந்துவிடுகிறது.  என்னுடைய வங்காளி நண்பரிடம் கேட்டேன் “சரத் சந்திர சட்டோபாத்தியாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஏதாவது சொல்லுங்கள்அவர் சொன்னார் ‘நீ ஸ்ரீகாந்த் படித்துவிட்டாய் அல்லவா? அதுதான் அவரது வாழ்க்கை வரலாறு”.  எனக்கு வியப்பு மிகுந்தது.  ஒன்று இப்படி ஒரு நாவலை ஒருவர் அந்தக் காலத்து இந்தியப் பண்பாட்டுச் சூழலில் எழுதியது. இரண்டாவது, அதில் எழுதப்பட்டது அவருடைய சொந்த அனுபவங்களின் பெரும்பகுதியாக இருந்தது.   

 

        சமூக மதிப்புகளைத் தூக்கி வைத்துவிட்டு ஸ்ரீகாந்த் கொண்டிருந்த உறவுகளைப் பற்றி எந்தவிதமான மதிப்புக்குறைந்த வார்த்தைகளும் இன்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, (அவர் கதைகளை எழுதிய காலத்தில் மிக மிக அரிது), முழுவதும் பெண்கள் மீதான அனுதாபத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

 

        நாவலின் மையப் பாத்திரமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து நேசிக்கும் ஒரு பெண்ணாக வரும் ராஜலக்ஷ்மி, பெரிய பணக்காரர்கள் வீட்டில் சங்கீதம் பாடி சம்பாதிப்பவள், சமூகத்தின் ஒழுக்க வரையறைகளை மீறி நடப்பவள்.  , அதற்கும் மேலாக அவளது நடவடிக்கைகளை வாசகன் தான் யூகிக்க வேண்டி இருக்கிறது. நாவலில் ஓரிடத்திலேனும் அவள் கொள்ளும் உறவுகள் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.  அவளுடைய கௌரவத்தை நாவல் கேலி செய்வதும் இல்லை.  சரத் சந்திரர் அந்தப் பெண் பாத்திரத்தின் மீது கொண்ட மரியாதையும் அதில் வெளிப்படுகிறது.  அதைப் பற்றி ஸ்ரீகாந்த் உள்ளுக்குள் உணர்ந்தாலும், வருத்த்த்தை வெளிக்காட்டுவதில்லை. அதனாலெல்லாம் அவள் மீது அவன் கொண்ட அன்பைக் குறைத்து விட முடியாது.  இந்த நேசம்தான் காதல் என்ற சொல்லைப் புனிதமாக்குகிறது.  உடல் ரீதியில் அவள் அவனுக்கு அன்னியமானாலும், அவன் கடல்கடந்து பர்மா சென்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க முடிவதில்லை.  இருவரின் நேசமும் ஒரு அமைதியான ஆற்றைப் போல கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.  விவரிக்கப்படாத பகுதிகளில் கூட  மறைமுகமாக அந்தக் காதலின் நிழல் படிந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் பல பெண்களுடன் பழகுகிறான் – (பழகுதல் என்ற சொல்லின் மிகச் சரியான நல்ல பொருளில்)-.  ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தால் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதையும், அவர்கள் தங்களை எந்த அளவுக்குத் தியாகம் செய்து ஒரு ஆணின் துணையைப் பெற வேண்டியிருக்கிறது என்பதையும் அழகிய, அனுதாபமுள்ள ஓவியமாக வரைந்து காட்டுகிறது.  சரத் சந்திர்ர் காட்டும் பெண்ணியம், கூச்சலிடும் பெண்ணியம் அல்ல (கூச்சல் இடுவது தவறானது அல்ல என்ற போதும்).  மனதைத் தொட்டுவிடும் பெண்ணியம்.  தமிழ்நாட்டு எழுத்தாளரான லக்ஷ்மி போன்று ‘கண்ணீர் இழுப்பிகளை சரத் சந்திரர் எழுதவில்லை, நியாயமான ஆனால் கௌரவமான பார்வையில், பெண்களின் அந்தக் காலத்துப் பிரச்சனைகளை முன்வைக்கிறார்.  இதை மறுபடி மறுபடி சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்காக ‘இரங்கும்பார்வை இருந்தாலும், அது அவமானப்படுத்தும் வகையில் இருப்பதில்லை.