Tuesday, July 28, 2009

நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்

ஐயா, அருமைப் பெரியவரே,
நீங்கள் பெரிய புத்திசாலி
இன்னும் நிறையப்பேரும்
அதைவிட அதிகமானவர்களும்,
புத்திசாலிகள் மட்டுமல்ல,
வாழத்தெரிந்தவர்கள்.
ஏகப்பட்ட புத்தகங்களைப்
படித்து, பட்டங்களை வாங்கிக்
குவித்து விட்டீர்கள்
சொத்துக்களை வைத்திருக்கிறீர்கள்

நானும் படித்துப் பார்த்தேன்,
படிப்பு வரவில்லை
அதனாலென்ன?
நான் மனிதனில்லையா?

நான் வேண்டுமென்றே
படிக்க விரும்பவில்லைதான்
நான் முட்டாள் தான்
ஆனால் முட்டாளாக இருக்க
எனக்கு
உரிமையில்லையா?





உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
எனக்கு ஏன் தெரியவேண்டும்?
எனக்குத் தெரிந்தது ஏதாவது
உங்களுக்குத் தெரியுமா?

நான் வருத்தப்பட்டுப்
பாரத்தைச் சுமந்து, அறிவை
நெறித்துக் கொன்றவனில்லை.

ஆசிரியன் என்னை
அடிமைபோல் நடத்தினான்
.கேள்வி கேட்டால்,
சந்தேகம் கேட்டால்,
மிரட்டினான்
புத்தகத்திலிருப்பதையே
வாசித்துக் காட்டினான்
விளையாட விடாமல்
வீட்டுப் பாடம் கொடுத்தான்

செருப்புத் தைக்கும் ஃபேக்டரி
அது தானே பள்ளிக்கூடம்
ஒரே மாதிரி கையெழுத்து,
ஒரே மாதிரி மனப்பாடம்,
ஒரே மாதிரி மூளை
ஒரெ மாதிரி உலகம்
ஒரே மாதிரி ஒரேமாதிரி
புத்திசாலிகள்
==
வே. ராஜகோபால்

Tuesday, July 21, 2009

பொய்யாய்ப் பழங்கதையாய்.........
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலரும் பெருங்கனவொன்றைச் சுமந்து கொண்டிருக்கின்றனர். ‘பொன்னியின் செல்வன்’, சிவகாமியின் சபதம் இன்னும்பல -சரித்திர நாவல் என்றழைக்கப்படுகிற- கட்டுக்கதைகளை சரித்திரமென்று நம்பி அல்லது நம்புவதாக அடுத்தவர்களை நம்பவைத்து, பல சோழப் பேரரசர்களின் வாரிசாக தங்களை விளம்பரப்படுத்த விரும்புகிறார்கள்.
டான் க்விக்சாட் என்ற ஸ்பானிய நாவலில் வரும் வீரன் காணும் கனவுகள் போல் இவர்களின் கனவும் காலத்துக்கு ஒவ்வாதது. கதைகளெல்லாம் சரித்திரமானால், சரித்திரமெல்லாம் கதையாகுமா? பொற்காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை இருக்கப் போவதும் இல்லை. இன்றைய அரசியலில் தாங்கள் பயன் படுத்தத் தேவையான மாய்மாலங்களை, நேற்றைய சரித்திரத்தின் தொடர்ச்சியாக நீட்டிப்பது ஒரு தந்திரம்.
தமிழ்நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் சென்று பல மொழி, இன மக்களிடையே வாழும் தமிழர்களுக்கு இந்தப் புனைவுகள் வெற்றுப் பெருமை பேச வாய்ப்பைத் தருகின்றன.
அப்படி என்ன தமிழினம் மற்றவர்கள் செய்யாததைச் செய்துவிட்டது? நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. இது கனவுகளிலும் மாயைகளிலும் உழன்று கொண்டிருப்போர்க்கு அதிர்ச்சி தரக்கூடும்.
கம்பனைப் போல் வள்ளுவன் போல் கவிஞன் உண்டா? என்று வீரச் சவால் விடுபவர்கள் யோசிக்கவேண்டியது ஒன்றுண்டு. கவிஞன் இல்லாத மொழி உண்டா? அவர்கள் புகழ் பாடாத இனம் உண்டா?
எல்லோருக்கும் இருக்கும் மூக்கு நமக்கும் உண்டு. வடிவில் சிறிது மாறுபட்டாலும் மூக்குதானே? அதன் பயன் ஒன்று தானே?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பேசிவிட்டு, தமிழினம் தான் பெரிது, இதைவிட சிறந்தது இல்லை என்பதோ அதன் காரணமாக மேலும் உரிமையோ சலுகையோ கேட்பது நியாயமற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றாமல் நேற்றுத் தோன்றிய மொழி என்பதனாலேயே ஒரு மொழியோ இனமோ தாழ்ந்து விடுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதால் மட்டும் தமிழ் எல்லாவற்றுக்கு பெரியதாகி விடுமா?
மனிதரனைவரும் ஒரேவிதமான உரிமைகளைப் பெற்றவர்கள். அவர்களுடைய மொழியின் பெருமையும் அவ்வாறே. கவிதை, வரலாறு கலாச்சாரம் என்றெல்லாம் எதைக் கருதுகின்றோமோ அவை எல்லாம் மனித குலத்தின் பொது. அதற்கு ஒருவரோ, ஓரினமோ உரிமை கொண்டாட முடியாது.
தாய் மொழியில் கல்வி என்று கூக்குரலிடுவோர்க்கு ஒரு கேள்வி. தாய் மொழி எனக்குச் சோறு போடவில்லையெனில் அது எனக்கு எதற்கு வேண்டும்? பட்டினி கிடப்பவனுக்கோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவனுக்கோ, அதற்காக வேற்றிடம் தேடிச் சென்றவனுக்கோ தமிழின் பழம்பெருமை பேசுவது தவிர வேறு வழி என்ன? அது வெறும் பழங்கதை(nostalgia). தமிழ்நாட்டில் பாலும் தேனுமா ஓடுகிறது?
இங்கே கலைமேதைகளும் கவிப்பேரரசுகளும் தாங்கள் அடைந்துவிட்ட இடங்களில் நின்று என்னதான் பேசினாலும் கடைக்கோடியில் நிற்கும் தமிழனுக்கு என்ன பயன்? நீங்கள் பெற்ற வசதிகளை எல்லாம் எங்களுக்கும் தாருங்கள் நாங்களும் தமிழ் பற்றிப் பெருமை பேசுகிறோம்.
இந்தக் காலத்தில் மொழி, இனம், ஜாதி, தேசம் என்ற அடையாளங்கள் விஞ்ஞானபூர்வமாகத் தேவையற்றவை. இந்த அடையாளங்களை மீறி வருகிறவர்களுக்கே இனி வருங்காலம். அதுதான் நடைமுறைக்கு ஒத்துவரும்,(pragmatic). இதைப் பலமுறை பல மனிதர்கள் நிரூபித்திருக்கிறார்கள். எங்கேயோ பிறந்து யாருக்காகவோ வாழ்ந்து சேவை செய்து மடிந்தவர்களே இந்த யுகத்தின் முன்மாதிரிகள். ஸி.எஃப்.ஆண்ட்ரூஸ், வெரியர் இர்வின், மிரா பென் அய்ன்ஸ்ஸ்டீன், சந்திர சேகர், ஹர் கோவிந் குரானா போன்றவர்கள்.
தமிழையோ அதன் வரலாற்றையோ காப்பாற்ற படைகளும் கோஷங்களும் தேவையில்லை. தமிழர்கள் உலகம் வியக்கும் சாதனைகள் செய்தால், தமிழ், படைகள் இல்லாமலே வாழும்.
மிஞ்சியவை
கைகளுக்குள்ளிருந்து நழுவிச் செல்லும்
தண்ணீர் போல
கனவுகள் வழிந்து விடுகின்றன.

Thursday, July 16, 2009

பி ற் ப க ல்

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.
கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.
யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.
“என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.
அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.
சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும்.ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை



2

இருந்தாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் தோன்றியது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.
சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இர்ண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப்ரிப்பேர் என்றுஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.
மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக நிரம்பி வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.
ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையள்ம் தெரிந்த்தோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரைபர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனும் பாவம் என்ன செய்வான்? வருமானம் கிடையாது. அவன் வீடும் இடந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.
லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டைசரிபார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு ? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் த்ட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?
படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.
வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக உள்ளே வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?
“இல்லை” என்று தலையசைத்தான்.


“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கைகள் இப்படி அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்ம்ண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது ந்னைதாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.
சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.
அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.
தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் ஆன் கேட்டது இவன் காதிலும் கேட்டது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.
உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேர்மாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத்தேடிவரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” ஆனாலும் தொடரமுடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”
“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க” பச்சன் சிங் குளிக்கப் போனான்.
சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”
“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”
“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”
“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல ச்ம்பாத்தியம். ஆனாப் பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்குஒம் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.
சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கொங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டுவர்ரென்”

கடைவேற வச்சிருக்கயா? என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராம்த்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பண்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .
“பன்டி எப்படி இறந்தான்?”
யாரோ பைக்கை எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல.
பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.
“அவன் பெண்டாட்டி?”
“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”
“பையன் எங்க இருக்கான்?”
“அவகூடத்தான்”
ஜீரணிக்கமுடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.
தன்வீர் தொடர்ந்தான் “ அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு …? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.
இரண்டு நாட்களுக்குள் கிராம்த்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.
தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.


சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போதுஇவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்குக்ம் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸா ராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதுய் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போன் அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?
பதினைந்து வருடங்களுக்கு முன் இர் தங்கைகளும் குடும்பத்தின் மானத்திக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம். சிறுவனாக இருந்தாலும் குடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்த்ப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் மறுபடி மறுபடி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளெபோய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.
இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்பார்களே?
இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமட்லோம்.. வீட்டைவிட்டே வெளொயே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்த்ம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.


அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை.
பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் விற்றாகிவிட்டது.
பத்தாண்டுகளுக்கு மேல் ஆசாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.
இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.
இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான்”
பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா சித்தப்பா, தங்கைகள் எல்லாம்தான் பதிலாக இருக்கக்கூடும். டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

Wednesday, July 15, 2009

உரையாடல் - ஒரு பக்கக் கதை


ஒரு நீண்ட பயணத்தின் பிறகு ஏற்படும் களைப்பு இன்னும் தீரவில்லை. இந்தக் களைப்பு எப்போதும் அவளிடம் குடியிருந்தது. இன்று புதிய இடத்தில் தூங்குவது கஷ்டமாக இருந்தது. இரவின் அமைதியில், ஊரிலிருந்து சொல்லாமல் வந்துவிட்ட பதட்டம் இன்னும் இருந்தது. ‘மகனும் மருமகளும் தேடிக் கொண்டிருக்கக்கூடும். நன்றாகத் தேடட்டும். நான் இல்லை என்றால் தான் தெரியும். அவள் வந்ததில் இருந்தே ராசியில்லை. அதைச் சொன்னால் என்ன தப்பு? அதுதானே உண்மை. பொண்டாட்டி வந்ததில் இருந்தே இந்தப் பயலை வளைத்துப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் தம்பி மகள். என்ன சொல்ல?. எல்லாம் தலைஎழுத்து.” நெடுநேரம் விழித்திருந்த பின் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.
காலை எழுந்த போது நன்றாக விடிந்துவிட்டது. மகள் அடுப்படியில் ஏதோ செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. விறுவிறு என்று எழுந்து போய்க்கேட்டாள் “ஏண்டி எழுப்ப வேண்டியது தானே.” “ஆமா அங்கிருந்து பஸ்ல வந்திருக்க. சரி தூங்கட்டும்னுதான் விட்டேன் இப்ப அவசரமா எழுந்து என்ன செய்யப் போற?”
“ஒண்ணும் இல்ல.” சொல்லிவிட்டு பல்விளக்கப் போனாள். மீண்டும் மீண்டும் நேற்று மத்தியானத்துக்கு மேல் மருமகளுடன் சண்டையிட்டது நினைவில் வந்தது. “அதிகமாகப் பேசி விட்டேனோ? சரி போ ஆனது ஆய்ப்போச்சு. இவ வீடு எப்படியோ? இவளும் சரியில்லைன்னா இங்கிருந்தும் போக வேண்டியதுதான். எனக்கு ஏன் இப்படி வாய்க்கிறது? எல்லோரையும் போல சுமூகமா வாழ முடியல….. இந்த வீட்டிலும் சண்டை வந்துருமா?” பயமாக இருந்தது. அவள் வாக்கில் சனி இருப்பதாக கல்யாணி அம்மா சொல்வாள். அது சரி
அம்மா, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்திருக்கிறாள். ஏதாவது சண்டையாக இருக்கவேண்டும் என்று அகிலாவுக்குப் புரிந்தது. இங்கயும் இதே கதை. ஏண்டா கல்யாணம் முடித்தோம் என்றிருந்தது அவளுக்கு. ஆம்பளப் பயகளெ இப்படித்தான் இருக்கானுக. பிள்ளைய வேற பெத்தாச்சு. கழுதய எப்படியோ காலத்தை ஓட்டவேண்டியதுதான். இவரை விட்டுட்டு தம்பி கிட்ட போக முடியாது. அவனே தரிகணத்தோம் போடுறான். இந்தா அம்மா கூடச்சண்டை போட்ருப்பான். பொண்டாட்டிக்காக. கொஞ்ச நாளு அம்மா இருந்துட்டுப் போகட்டும்” அம்மா பல் விளக்கிட்டு வந்தாள்.
“எப்ப கிளம்பினீங்க?”
‘நேத்து ராத்திரி எட்டு மணிக்கு”
“தம்பி எப்படியிருக்கான்?’
“ஹூம்….. அவனுக்கென்ன நல்லாத்தான் இருக்கான்”. வார்த்தைகளை கிண்டலாக இழுத்துச் சொன்ன விதத்தில் ஏதோ பிரச்சனையுடன் தான் வந்திருக்கிறாள் என்பது வெளிப்பட்டது. அதற்கு மேல் பேசினால் இப்போதே தொடங்கிவிடும். அகிலா வேண்டுமென்றெ அமைதியாக இருந்தாள். நேற்று மாமியார் இங்கே இருப்பதற்காக வந்து சண்டைபோட்டுவிட்டுப் போனதை அம்மாவிடம் சொன்னால் அவளும் கத்த ஆரம்பித்து விடுவாள். இவரு கிட்ட பேச ஆரம்பிச்சிட்டான்னா ஓயாது. நல்லா கவனிச்சுக்கிட்டாலோ “எங்கம்மா கூட மட்டும் சண்ட போட்ட உங்கம்மாவை ரொம்பக்கவனிக்கிற” என்று குற்றம் சாட்டுவார்.
மாலையில் அம்மா ஊருக்குப் போகிறேன் என்று கிளம்பியபோது, அவள் “சரி” என்று பேச்சை முடித்தாள். ஏன் அப்படிச்சொன்னோம் என்று அவளுக்கே புரியவில்லை. அம்மாவுக்கும்தான்.
இப்படித்தான் தாம்பத்தியம் போய்க்கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சொல்லாமலும் சொல்ல விரும்பாததைச் சொல்லியும். சண்டை ஏதாவது வந்துவிடக்கூடாதே என்று பதுங்கிப் பதுங்கி உள்ளெ அமுங்கிப் போகிற எண்ணங்கள்.

தமிழ் நாடகம்,கவிதை -

2.அடுத்து நாடகத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் எழும் கேள்வி நாடகம் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நல்ல நாடகத்தை ஒருமுறைக்கு மேல் பார்ப்பேன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தகுதி வேண்டும்?
சினிமாவைப் போலன்றி, தமிழில் நல்ல நாடகங்களைப் பார்த்த அனுபவம் ஒரு சிலருக்கேனும் உண்டு. எல்லோரும் எளிதில் பார்க்கும் வகையில் அவை நடத்தப்படுவதில்லை. ஏதாவதொரு நாளில் குறைந்த பார்வையாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டு, காணாமல் போய்விடுகின்றன இவை. சினிமாவுக்கு நேர் மாறான கதி தமிழ் நாடகத்துக்கு. நல்ல தமிழ் நாடகங்கள் (அவற்றில் கணிசமானவை மொழிபெயர்ப்புகள்) இருக்கின்றன. ஆனால் பார்க்க, ஆதரிக்க போதுமான ஆள் கிடையாது. நாடகத்தை தொழிலாக வைத்துக் கொண்டு யாரும் இங்கே வாழ முடியாது. யாராவது நல்ல நாடகம் பார்க்க விரும்பினாலும் எளிதில் கைகூடாது. அதற்கு கதி மோட்சம் கொடுக்க முடியாது. நாடகாசிரியர் என்று யாரும் இல்லை. கதாசிரியர்கள் அவ்வப்போது நாடகம் எழுதி பரிசோதனை முயற்சிகள் செய்கின்றனர். ஒரு மாநிலம் என்ற தளத்தில் தமிழ் நாடகத்தின் பங்கென்ன என்று யோசித்தால் ஒன்றுமில்லை. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது.
அடுத்து இசை. பழங்காலந் தொட்டு தமிழ்நாட்டில் இசைக்கலைக்கு ஒரு மரபு உண்டு. பாட்டுக்கேட்காத தமிழனே இல்லை எனலாம். தொல்லிசைக்கு(classical music) ஆதரவு குறைவாக இருந்தாலும், அது சினிமாவில் புதுப்புது அயல் தேச இசைகளைக் கோர்த்து மெல்லிசை என்று பெரும் ஆதரவுடன் பவனி வருகிறது. தொல்லிசை ஒரு குறிப்பிட்ட இனம் ஜாதி வர்க்கம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டது. அதனாலோ என்னவோ அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் பக்தி என்ற கடலுக்குள் மூழ்கிவிட்டது. சமகால உள்ளடக்கம் இசையிலும் அதன் ரசனையிலும் பெருமாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. இதற்கு மாற்றாக சினிமாப் பாடல் (அதன் யதார்த்தம், நேர்மை எவ்வளவு குறைந்து காணப்பட்டாலும்) சமகால பிரச்சனைகளை (ஆழமில்லாமல்) தீண்டிச் செல்கிறது. சினிமாவின் கதையற்ற தன்மை பாடலுக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறது.
கருவி இசை என்ற வகையில் உன்னதமான இசை தமிழில், தமிழ்நாட்டில் உண்டு. நேரடி யாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவைக் கேட்டு ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விடலாம். இதற்கு எந்த இசைஅறிவும் தேவையில்லை. கேட்கும் ஆர்வம் இருந்தால் போதும்.
கவிதையின் நிலை தான் மிகப் பரிதாபகரமானதாகத் தெரிகிறது. நிறையப்பேர், அல்ல, ஏகப்பட்டபேர் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் படிக்கப் படிக்கக் கவலை எழுகிறது. அந்த அந்த பஜனை கோஷ்டிகளில் சேர்ந்துவிட்டால் அல்லது ஒரு சன்னிதானம் அருள் புரிந்தால் ஒருவேளை கவிஞன் கவனம் பெறலாம். நல்ல கவிதை காணாமல் போய்விடும். அபாயம் அதிகமிருக்கிறது. தேடிக்கண்டு கொள்ளும் அளவுக்கு வாசகனுக்கு அது எட்டுவதில்லை. பத்திரிக்கை,தொலைக்காட்சி என்று ஊடகங்களில் வடிகட்டிய பிறகு கவிதை, நல்ல கவிதை குப்பைக்குப் போய்விடும் போலத் தெரிகிறது. கொல்லன் உலையில் ஊசி தேடியது போல. எங்கே தேடுவது அதை? ஆனாலும் நிறைய நல்ல கவிதைகளை தமிழ் வாசகன் படித்துவிட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இடத்தை நல்ல கவிதைகள் பிடிக்க முடியாது என்பதே இப்போதைய நிலை.

Tuesday, July 14, 2009

தமிழ் சினிமா இழிவின் முகம்

தமிழ்க் கலாச்சாரத்தின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் எதுவும் இல்லை. குறைந்த பட்சம் பொதுவெளியில் எதுவும் இல்லை. மிக அதிசயமாக எங்காவது ஒளிந்திருக்கக்கூடும். பொருளாதாரத்தில் அப்படியொன்றும் பின் தங்கிவிடாத தமிழ் மாநிலத்தின் கலாச்சார வெளியை, சாரமற்ற பிரதிகளும், தனித்துவமற்ற, சுயசிந்தனையற்ற மனிதர்களும் (அவர்களைக் கலைஞர்கள் என்று சொல்லத் தகாது.) நிரப்பியிருப்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.
இந்தக் கட்டுரை முழுவதுமே ஒரு பார்வையாளன் என்ற தகுதியிலேயெ எழுதப்பட்டிருக்கிறது. சினிமாவையோ, நாடகத்தையோ தெருவுக்கு கொண்டு வரும் உரிமை யாருக்கும் எவ்வளவு உண்டோ அதே அளவு உரிமை, அதை தயவு தாட்சண்யமின்றி விமரிசிக்கும் தகுதி ஒரு பிரஜை என்ற வகையில் எனக்கு உண்டு.
மிகப் பிரபலமான சினிமாத்துறையிலிருந்து தொடங்குவோம். பார்த்ததும் நம்மை உலுக்கும் எத்தனையோ திரைப்படங்கள் உலகத்தில் உண்டு. எழுபதாண்டைத் தாண்டிய தமிழ் சினிமாத் துறையில் அவற்றில் ஒன்று கூட இல்லை. காட்டப்படும் கதையும் படமும் ஒரே மாதிரியான காட்சி, வசன, ஒலி, ஒளி கொண்டு, கோவிலில் பஜனை, அர்ச்சனை செய்வது போன்று மீண்டும் மீண்டும் திரைக்கு வருகின்றன. இளைஞர்களின் காதலைத் தாண்டி வேறு பிரச்சனைகள், கரு இருப்பதே இல்லை. இளைஞர்களுக்கு வேறு பிரச்சனைகளும் உண்டு. இளைஞர்களைத் தவிர மற்றவர்களுக்கும் திரைப்படங்களில் காட்டும் அளவுக்கு பிரச்சனைகள், தேவைகள் உண்டு. இப்படிக் குப்பைகள் திரைகளை, மனங்களை, பத்திரிக்கைகளை, தொலைக்காட்சியை, முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டால், நல்ல கதைகளுக்கு இடம் இல்லாமலாகி விடுகிறது.
இப்படி விமரிசனம் செய்தால் உடனே சினிமா வியாபாரம், அது கலைச்சேவை அல்ல என்று கூக்குரல் எழுகிறது. கலை வியாபாரம் அல்ல என்றால், உலகில் மற்ற நாடுகளில் கலையும் வியாபாரமாகிறதே என்பதுதான் பதில். நமது சினிமாக்காரர்கள் கலையை வியாபாரம் பண்ண விரும்பவில்லை. அவர்களுக்கு சினிமாவும் தெரியாது அதை வியாபாரம் செய்யவும் தெரியாது. அரைத்துப் புளித்த மாவையே அரைத்துப் பணம் பார்த்தவர்களுக்கு புதியதாக மாவரைக்கத் தெரியாது. யாரோ சொன்ன மாதிரி ‘காற்றைப் புணரும் அசைவுகளை’ நடனமாக்குகிறவர்கள். அவர்களுக்கு நல்ல நீலப்படம் எடுக்கவும் தெரியாது. நல்ல நடனப்படம் எடுக்கவும் தெரியாது.
அடுத்த சாக்கு(excuse). நீங்கள் வந்து படம் எடுத்தால் தெரியும். வந்து எடுங்கள். தோசைக்கடையில் போய் உன் தோசை சரியில்லை என்று சொன்னால் உடனே அவர்கள் நீங்கள் வந்து தோசை சுடுங்கள் என்று சொல்வது போன்றது.-- (War cannot be left to Generals alone. போர் நடத்துவதை ராணுவ அதிகாரிகளிடம் மட்டும் தந்துவிடமுடியாது. அது மற்றவர்களை பாதிக்கக் கூடியது)-- அதுபோல சினிமா எடுப்பவன் தான் அதுபற்றி விமரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழ்வாழ்வின் எந்த அடையாளமும் இன்றி எவருடைய முகமோ கதையோ, வாழ்வோ, பாட்டோ, இசையோ திரையில் வருகிறது. இதற்கும் தமிழனுக்கும், இந்தியனுக்கும் ஏன் மனிதனுக்கும் எந்த உறவும் இல்லை. இவை எல்லாம் பொய்யானது, எங்கோ திருடியது. ஒட்டுப் போட்ட துணியால் தைத்த உடை போன்றது. வேறுவேறு அளவுள்ள, நிறமான பொம்மைகளிலிருந்து கைகளை, கால்களை முகங்களை அங்கங்களைப் பிரித்தெடுத்து ஒட்டவைத்து செய்த புதிய பொம்மை அது. இதுதான் தமிழ் சினிமா. இந்த சினிமா நமக்குத் தேவையில்லை. நம்மால் உடனடியாகச் செய்யக்கூடியது கடுமையாக இந்தச் செத்துப் போன சினிமாவை உரக்க விமரிசிப்பதும், அதைப்பார்க்காமலிருப்பதுமே.

Thursday, July 09, 2009

இது கல்விக்கூடமா? இங்கு அறிவு வளறுமா?

நான் ஆசிரியன் அல்லன். சென்னையில் பள்ளிக் கூடத்து ஆசிரியரின் நிலைமை பரிதாபகரமானது. குறிப்பாக, தனியார் பள்ளிகளில். முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளம் 2000 கிடைத்தால் அதிருஷ்டசாலி. பத்தாயிரம் பதினைந்தாயிரம் கிடைத்தாலோ சொர்க்கவாசி. அரசு நிர்ணயித்த ஊதியம் 25000 வரை.(( இதே இடத்தில் ஒட்டுனராக இருந்தால் குறைந்தபட்ச

சம்பளம் 6500லிருந்து 10000 வரை. ஒரு ஒப்புமைக்குத்தான்)) காலையிலிருந்து மாலைவரை பள்ளிக் கூடத்தில் கழிக்கவேண்டும். மாணவன் ஏதாவது வகுப்புத்தேர்வில் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியருக்கு பாடம் புகட்டும் நிர்வாகம். மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்காணிக்க வீடியோ கேமராக்கள். நமது நாட்டின் (எல்லாச்) சிறைச்சாலைகளில் கூட இந்த வசதி கிடையாது. மனப்பாடம் செய்தேதீரவேண்டிய வழியில் தேர்வுகள். ஒரு மதிப்பெண் குறைந்தாலும் கைவிட்டுப் போகும் மாணவனின் ஆசைக்கனவுகள். எல்லோரும் பொறியியல் படித்தே ஆகவேண்டிய மாதிரி அவர்களுக்கு மட்டும் நல்ல சம்பளம். புத்திசாலி என்றால் பொறியியல் படிப்பதைத் தவிர வேறு கனவு காண முடியாத படிக்கு சமூக நிர்ப்பந்தம். (ஆசிரியராயிருக்கும் ஒருவர்- மத்திய வர்க்கம்- மணப்பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்) இதையெல்லாம் வைத்துக் கொண்டு விஞ்ஞானிகளை உருவாக்கி வல்லரசாகி.. ...போதுமென்று நினைக்கிறேன்.கோச்சிங்/டியுஷன் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. விளம்பர வாசகத்தை மாற்றிச் சொன்னால் "there are things that you can't buy with money. For every thing else there is coaching"(Mastercard advt-changed a bit). இதனால் யாருக்கும் சுய அறிவே தேவையில்லை. சொந்தச் சரக்கே-creativity-தேவையில்லை. நம்ம ஊரின் காபியடிக்கும் வேலைக்கு-imitating technology of the west-சொந்த அறிவால் எந்தப் பயனும் இல்லை.

ஒரே ஆச்சரியம் இத்தனை தடைகளையும் தாண்டி சில புத்திசாலிகள் -creativity உள்ளவர்கள் - வந்து விடுகிறார்கள் (அவர்கள் வெளிநாடு போகாதிருக்கும் கொடுமையைச் செய்தால்) அவர்களை எப்படி விலைக்கு வாங்கி, செயலிழக்கச் செய்வது? அதை அரசு அதிகாரிகள் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.- எல்லாம் வழக்கம்போல்தான். ஏற்கனவே சொன்னவுங்க ஏமாளி ஆனாங்க எல்லாந் தெரிஞ்சிருந்தும் --- வே. ரா.


Monday, July 06, 2009

silai vaikkum kalai.

சிலை வைக்கும் கலையில் யாரையும் விட உயர்ந்தது, வழக்கம் போல், தமிழினம். பழங்கால கல்வெட்டுப் பழக்கத்திலிருந்து பக்கத்துவீட்டு பெரியவர் உருவம் வரை மாலை ஏற்கத்தயாராக நிற்பவை எத்தனை? சிலை வைத்ததை பெருமையாக கவிதை வடித்து கனைக்கிற தலைவர்கள் எத்தனை? அடுத்தபத்தாண்டுகளில் எத்தனை சிலைகள் வரும் என்று கணக்கிட முடியாது. அவைகளில் எத்தனை காக்காய்கள் எச்சமிடும் என்பதையும்தான். ஒருவர் அய்ம்பது அடி சிலை வைத்தால் அடுத்தவர் நூறடிக்கு சிலை வைத்தால்தான் தூக்கம் வருகிறது. எச்ச மழையில் நனையும் அவற்றில் ஒன்றின் முடி உடைந்தால்
பெருங்கலவரம். இன்னும் சிலை .வைப்போம்

thiruvilaiyadal

முதுகின்மேல்
கனத்த மூடை
சரித்திரமென்று

மூளையில்
அழுத்திக்கொண்டிருக்கிறது
பெருத்தபாரம்
கலாச்சாரம் என்று

செங்கல் குவியல்கள்
புதைத்திருக்கின்றன
என் குரலை

கண்களில் ஊசியேற்றி
நிரப்பப்பட்டிருக்கிறது
இரசாயனத்திரவம்
கனவுகள் என்று
நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இத்திருவிளையாடலை