Tuesday, February 28, 2017

நானும் ஒரு இந்து

என் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்
அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்
என் தாய் தந்தையரின் பெயரை,
என் ஜாதியை,
என் சான்றிதழ்களைத் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
நான் ஒரு இந்து என்பதற்கான எல்லா
சான்றுகளும் உள்ளவன்

என் ஊரைத் தெரிந்து கொள்ளுங்கள்
மொழியின் பெயரையாவது சொல்லுங்கள்
நடை உடை பாவனைகளை வைத்து
எழுதிக் கொள்ளுங்கள்
இருபத்தி ஐந்து அடையாள அட்டைகள்
என்னிடம் உள்ளன
நான் இந்தியன் என்பதற்கான எல்லாச்
சான்றுகளும் என்னிடம் உள்ளவன்

நான் இன்னொரு பெயரை,
இன்னொரு ஜாதியை,
தாய் தந்தையரை
இன்னொரு மதம் சார்ந்தவனை
வெறுப்பவனில்லை
என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள்

ஆங்கிலேயன் கிழித்த கோட்டுக்குள்
தேசம் தேசம் என்று
குதித்துக் கொண்டிருக்கும்
விட்டில் பூச்சிகளுக்குத் தெரியாது
மனிதர்களின் சிறகுகள்,
அவர்கள் பறந்து தாண்டும் எல்லைகள்
அவன் வானத்தின் எல்லையின்மை

இன்னொரு நாட்டை, ஊரை, மொழியை
நடை, உடை பாவனைகளை
வெறுப்பவனில்லை என்பதையும்
எத்தனை அடையாள அட்டைகளில்
என்னை அடைக்க  நீங்கள் முயன்றாலும்
என்னை முழுமையாகக் காண
உங்களால் முடியாது என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்

என் முதுகில் குத்தப்பட்ட
எல்லா முத்திரைகளின் இடையிலும்
என் முதுகு முழுமையாக
சேதப்படாமல் இருக்கிறது என்பதை
பார்த்துக் கொள்ளுங்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக
நான் ஒரு இந்து என்பதையும்
பார்த்து, கேட்டு, தெரிந்து
புரிந்துகொள்ளுங்கள்

நான் யாருக்கும்
எதிரியல்ல
நான் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை
யாரையும் கொல்ல வேண்டியதில்லை
என் அடையாளத்தை நிரூபிக்க என்பதையும்

நான் ஒரு இந்து என்பதையும்,


Monday, February 27, 2017

ஆன்மீகவாதியாவதற்குக் குறுக்கு வழி

           சமீபத்தில் ஆன்மிக வாதிகள் (ஸ்பிரிட்சுவலிஸ்ட்) பெருகிவருகிறார்கள். அல்லது அரசியல் நிலவரத்தைத் தெரிந்து கொண்டு, அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் கவனித்து தங்களை வளப்படுத்திக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டுவதற்கான எல்லா கார்பரேட் தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

          முதலில் இது போலவே கார்பரேட் சாமியார்கள் இருந்தார்கள்.  அவர்கள் என்ன ஆனார்கள்? எதைச் சேர்த்துவைத்தார்கள்? இப்போது அவர்களின் சீடர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் எல்லாம் விளங்கிவிடும்.

            தீரேந்திரப் பிரம்மச்சாரி என்பவர் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது பெரும் செல்வாக்குடன் இருந்தார்.  மஹரிஷி மகேஷ் யோகி என்பவர், நூற்றுக் கணக்கில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருந்தார்.  அமெரிக்காவில் பெரும் பண்ணை இல்லங்களை வைத்திருந்தார்.  மஹரிஷி ரஜ்னீஷ் என்றும் யோகி இது போலவே வலம் வந்தார்.  அவர்களெல்லாம், பெரும் பெரும் பணக்காரர்களாக பெரும் ஆடம்பரத்துடன் வாழ்ந்தார்கள்.  அவர்களுடைய சொத்துக்கள் அவர்களுடைய ஆகச் சிறந்த சீடர்கள் என்னும் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.  ஒருவரைப் பஜனை பாடிக்கொண்டே இத்தனை சொத்துக்களை ஒரே தலைமுறையில் அடையமுடியும் என்றால் அது இது மாதிரி ஆன்மீக வாதிகளின் சீடராக இருந்தாலேயே முடியும்.  அதற்கென சில திறமைகள் தேவைப்படும். பேச்சுவன்மை, தகிடுதத்தங்கள் செய்தும் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் திறமை, போட்டியாளர்களாக வருகிறவர்களை ஒதுக்கிவிடும் புத்திக் கூர்மை – இதையெல்லாம் நேர்மறைக் குணங்களாக இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்- இன்றளவும் அரசியல் கட்சிகளின் உள்ளே நிகழ்பவைதான் இவை.   சாமியார்களும், அவர்களின் சீடர்களும் பொன்னையும் பொருளையும், ஆடம்பரங்களையும், தமது ஆதரவாளர்கள் கூட்டத்தையும் இப்படித்தான் சேமித்து வைக்கிறார்கள்.  எல்லா (மதம் சார்ந்த அல்லது வேறு நிறுவனங்களையும் போல) இவையும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்/செய்யும்.

            சமீபத்தில் எழுந்த புதிய புதிய சாமியார்களும், பெரும் செல்வங்களைச் சேர்த்து, ‘பண்பாட்டு சிக்கல்களில், பொருளாதார, பேராசையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் மத்திய உயர் மத்திய வர்க்கத்தின் மேய்ப்பர்களாக இவர்கள் இருப்பதும், ஏதோ நிம்மதியைக் கடையில் வாங்குவது போல் இவர்களிடம் வாங்கிவிட்ட்தாக நம்பிக் கொண்டிருக்கும் சீடர்களுக்கும் மயக்கம் தெளிய வழியில்லை என்றே தோன்றுகிறது.

          இப்படி ஆன்மிக வாதியாவதற்கு குறுக்கு வழிகள் சில.  முதலில், பழைய இலக்கியங்கள், தத்துவம் என்று சொல்லப் படும் பிதற்றல்கள், இவற்றைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டு, அவ்வப்போது தங்கள் வார்த்தைகளில் அவை தங்களுடைய சொற்களே போல பேச வேண்டும்.   அவற்றில் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருந்தால் அகில இந்திய அல்லது அகில உலக பெருமை வாய்க்கும். இந்த மேற்கோள்கள் யாருக்கும் புரிய வேண்டும் என்ற தேவையில்லை.  இப்படித்தானே அரசியல் நடக்கிறதுஎன்று  நீங்கள் சொல்ல்லாம்.  ஆமாம். அதைத்தான் சொல்கிறேன்.     பகட்டும், பகட்டு வார்த்தைகளும், படாடோபமும், சொத்தும், பெரும் நிறுவனங்களும் ஆன்மீகம் என்று அவர்கள் சொல்லிக் கொள்கிற எதனுடனும் தொடர்பில்லாதவை.   

           இது போல இன்னொரு கோணம் உண்டு.  விஞ்ஞானத்தில் ஏதாவதொரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதன் வார்த்தைகளில், நாம் எதையும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில் பேசுவதும் அல்லது ஏற்கனவே நமது வேதங்களில் அல்லது மாபெரும் இலக்கியங்களில் சொல்லப் பட்டுவிட்டது  என்றும் பிதற்றித் திரியும் குணம் வேண்டும்.  விஞ்ஞானத்தில் அடிப்படையான, அடிப்படைத் தரவுகள் ஒரே மாதிரி இருக்கும் நிலையில், யார் செய்தாலும் பரிசோதனையில் முடிவுகள் ஒரே மாதிரி விடையைத் தரவேண்டும், என்ற கொள்கையின் முன் இந்தச் சாமியார்களுடையல் எல்லாச் சாதனைகளும் அடிபட்டு விடும்.

            அடுத்து ஏதாவதொரு அரசியல் வாதியின் வாலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  தன்னை ஒரு ஞானியின் சீடராகக் காட்டிக் கொள்வதன் லாபம் அரசியல் வாதிக்கும் தெரியும்.  அவர் மூலம் நிலம் கையகப் படுத்துவது சொத்துச் சேர்ப்பது இவற்றிற்கு பெரும் உதவிகள் கிடைக்கும். 

     சில இலக்கியவாதிகளும், தங்களை இலக்கியத்தின் மூலம் ஞானியென்று நிறுவ, அல்லது பெற்ற புகழைத் தக்க வைத்துக் கொள்ள இவ்வாறான போலி ஞானிகளின் புகழோடு தங்களையும் இணைத்துக் கொள்ளலாம்.  அதில் அவர்களுக்குப் பயனுண்டு.   

பொய்யும் வழுவும் - பொ. வேல்சாமி

11        

  பொ. வேல்சாமி என்ற பெயரை 90களில் அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும், அவரது நூல்களைப் படித்ததில்லை.  இக் கட்டுரைத் தொகுப்பைப் படிக்க வேண்டும் என்று பல முறை நினைத்தேன்.  இப்போது தான் வாங்கினேன்.  தமிழ் படித்துவிட்டு, வேறு ஏதோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தீவிரமான ஆர்வம் கொண்டாலன்றி, ஆய்வுக் கட்டுரைகள் எழுத இயலாது.  அவருக்குள் சொல்லித் தீரவேண்டிய ஏதோ இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நூலை வாங்கினேன்.

            அவரிடம் இருக்கும் வரலாறு சமூகம் குறித்த அக்கறைகள் சாதாரணமானவர்களும் கொள்ள வேண்டிய அக்கறைகள். 

            தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றிய கட்டுரை மிக மிக முக்கியமானதாகத் தெரிந்தது. தமது சான்றாதாரங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அவர் பெரும் மேதைகளி முடிவுகளைவும் அவற்றின் துணை கொண்டு உரசிப்பார்க்கிறார். இந்த்த் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது.   தமிழ் ஆய்வுக்களத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டியது.  அவர் தரும் செய்திகளைத் தொகுத்தால், பிராமி எழுத்துருவில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்களுடன், பல வடமொழிகள் (சமஸ்கிருதம், பாலி, இன்னும்பல) மற்றும் தென்மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன்னர் எழுதப்பட்டன என்று அறிகிறோம்.   அதுவரை வாய்மொழியாக வழங்கி வந்த மொழிகளில், முதலில் அரசாணைகளும் பின்னர் செவிவழிப் பரவியிருந்த செய்யுள்களும் பாடல்களும் எழுத்தில் பதிவு பெற்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மிகச் சிறப்பான கட்டுரை அது.


            மற்றக் கட்டுரைகளும் சிறப்பானவைகள்.  படிக்க வேண்டிய புத்தகம். 

ஆஷ் அடிச்சுவட்டில் - ஆ.இரா. வேங்கடாசலபதி


            இந்த நூல் வெளிவந்த நாளில் இருந்தே வாங்க வேண்டும் என்று நினைத்தேன்ஆனால், ஆஷ் பற்றிய ஆசிரியரின் கட்டுரையை ஃபிரண்ட்லைன் இதழில் படித்துவிட்ட்தால் இந்நூலில் உள்ள மற்றக் கட்டுரைகள் எவை என்று அறிய விரும்பினேன். 

            ஆஷ் தவிர இன்னும் தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்ட பலருடைய வாழ்க்கைகள் இந்நூலில் பேசப்படுகின்றன.   இராமனுஜ நாயுடு பற்றி ஆசிரியருடைய இன்னொரு புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். 

            எல்லீஸ் என்ற ஆங்கிலேயர், ஜியு போப், பாரதி ஆய்வாளர், ரா.அ. பத்மனாபன், உ.வே. சாமிநாதய்யர், போன்ற ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தவர்களுடன், சி.எஸ். சுப்பிரமணியன் (பொதுவுடமைக் கட்சி), ம.வெ. ராமானுஜாச்சாரியார் போன்ற, தமிழ்நாட்டினர் அறிந்து கொள்ளவேண்டிய ஆளுமைகள் குறித்த ஆவணப்பதிவாகும் இந்நூல்.

            உ.வே.சா பற்றிய கட்டுரை முக்கியமானது.  அவரது புலமையின் மேன்மையும், (என் சரிதம் போன்ற நூல்களில்) நடையின் எளிமையும், யாருக்கு, எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தும் தெரிந்தும் இருந்ததை எடுத்துரைக்கின்றது.  இது இன்றைய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை. 

            ம.வே. ராமானுஜாச்சாரியார் மஹாபாரதத்தை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற தன் அவாவை நிறைவேற்ற என்னென்ன பெருமுயற்சிகள், அயராத உழைப்பில் ஈடுபட்டார் என்பதை அவர் குறித்த கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது.  என்னைப் பொறுத்தவரை, மஹாபாரதம் ஒரு பெருங்கடல்.  அதில் கரையில் நின்று பார்க்கும் அளவுதான் பொறுமையும் நேரமும் இருக்கிறது.  அதை இப்போது கிடைக்கும் காவிய நடையிலோ, அல்லது ஜெயமோகன் நடையிலோ படிக்க அயற்சியாக இருக்கிறது.  இந்நூலாசிரியர் குறிப்பிடுவது போல, நவீன மொழியில் – பாரதியின் வார்த்தைகளில் அல்லது அவருடைய பாஞ்சாலி சபதம் போன்ற கவிதை மொழியில், புதிய பதங்களுடன், புதிய நடையில் – எழுதப்பட வேண்டிய தேவை இருக்கிறது.


            மிக மேன்மையான மனிதர்களைப் பற்றிய அருமையான தெளிவான, சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள்.

Sunday, February 19, 2017

ஜெயகாந்தனின் ‘ ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’

           இந்த நாவலை சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்னால் படித்ததாக ஞாபகம்.  அதை முற்றிலும் மறந்து விட்டேன்.  ஆனால் முன்னுரையின் வாசகங்கள் நன்றாக ஞாபகம் இருந்தன.இத்தனை ஆண்டுகள் கழிந்தும் நாவல் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது.  அப்படி என்னதான் இருந்தது அந்த நாவலில் என்ற ஆர்வமிகுதியில் இதை வாங்கினேன்.  அதைப் படித்த பின்னர் தோன்றியதை எழுதுகிறேன்.

            நாவலின் மொழி மிகவும் எளிமையானது.  நேரடியானது.  அதையே நான் நிறைவாகப் பார்க்கிறேன்.   சிக்கலான மொழியில் எழுதினாலேயே அறிவுஜீவி ஆகலாம் என்ற கருத்துக்கு எதிராக இது இருக்கிறது.  அதில் வரும் மாந்தர்களும் அனைவருக்கும் புரியும் எளிய மொழியிலேயே பேசுகிறார்கள். யார் படித்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய மொழியும் நடையும் வாதமும் இதன் மிகப் பெரிய பலம்.

            மனித வாழ்வின் அடையாளங்களின் பொருள் என்ன? என்ற கேள்விக்குப் பதிலை நாவல் தேடுகிறது.  தன் மனைவி ஒரு நாவிதனுடன் ஓடிப்போய் விட்டாள் என்ற அவமானத்தில் ஊரைவிட்டு ஓடும் பப்பா, ஒரு நேரத்தில், தன் நண்பன் இறந்ததும் அவனுடைய மனைவிக்கு வாழ்க்கை தருகிறார். தாய் தகப்பன் அறியாத குழந்தையை எடுத்து இருவரும் வளர்க்கிறார்கள்.  இதுவெல்லாம், நினைவுகூரலாக வருகின்றன.  அதனால், நிகழ்ந்ததை, விமரிசனங்கள், தர்க்கங்கள் இன்றி எழுதிச் செல்கிறார் ஜெயகாந்தன்.   பப்பாவின் வாழ்க்கை முழுவதும் யதார்த்தமாக நிகழ வேண்டியது நிகழ்ந்ததாகவே எந்த அறம்/ஒழுக்கம் குறித்த பார்வைகளும் இன்றி கதை சொல்கிறார்.  வாழ்க்கை அப்படித்தானே தன்னை எழுதிச் செல்கிறது?

            ஒரு அடையாளமும் இல்லாத மனிதன், தனது வேர்களைத் தேடி, சொந்தங்களைத் தேடி வருகிறான்.  ஆனால் அவனுக்கு வாழ்க்கை குறித்த தீர்க்கமான தத்துவப் பார்வைகள் கிடையாது.  அவனுக்குத் தெரிந்த ஒரே நடைமுறை அடுத்தவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பது.  அந்த மரியாதை அவர்களுடைய குலத்தினாலோ, மதத்தினாலோ, ஊரினாலோ அல்லது ஆண்/பெண் என்பதாலோ, நல்லவன் கெட்டவன் என்பதனாலோ, சட்டத்தின் அடிப்படையினாலோ பைத்தியம் அல்லது மற்றக் குணங்களினாலோ தீர்மானிக்கப் படுவது அல்ல.   ஜெயகாந்தனும், மனிதனின் அசைக்க முடியாத உரிமைகளின் ஒன்றாக அதைக் கருதுகிறார். அதையே நாவல் சொல்கிறது.

            ஹென்றியின் வழியே அறிவுஜீவி என்பவன் சமூகத்தின் சட்டகத்துக்கு வெளியே இருப்பான் என்றில்லாமல், சமூகத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு அதை விமரிசிக்கிறவனாகவும், முரண்படுகிறவனாகவும், அறம் பற்றிய புரிதலை போதனைகள் மூலமாக இல்லாமல் வாழ்வதன் மூலமாக ஏற்படுத்துகிறவனாகவும் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார்.  அவன் சமூகத்தை நோக்கியே வருகிறான். ஆனாலும் அதன் அறங்கள் குறித்துக் கவலைகொள்கிறான். 
            நாவலில் வருகின்ற பைத்தியக்காரி மனிதனுக்கிருக்கும் அளவற்ற சுதந்திரத்தின் குறியீடாக வருகிறாள்.   ஹென்றி தொடங்கிய இடத்திலிருந்து சமூகத்தில் ஓரங்கமாக மாறும் கதையில் அதற்கு எதிர்த்திசையில் அடையாளங்கள் அற்ற விடுதலையை நோக்கிப் போகிறாள்.

            தேவராஜனுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏற்படும் பிணக்கும், அக்கம்மாவுக்கும் தேவராஜனுடைய மனைவிக்கும் ஏற்படும் பிணக்கும், தேவராஜனுக்கும், கிளியாம்பாளுக்கும் இருக்கும் உறவும், சமூக உறவுகள் பல தளங்களில், சாதி இன்னும் பல சிக்கல்களுக்குள் இருப்பதைக் காட்டுகின்றன.  இவர்களுக்குப் பகைப் புலமாகவே ஹென்றியும் பைத்தியக்காரியும் இருக்கிறார்கள். 

            வழக்கம் போலவே புதிய சிந்தனைகளை முன்வைக்கும் ஒரு ஜெயகாந்தன் நாவல். அவை இன்னும் புதியவைகளாகவே இருப்பது நம்மைப் பற்றிய ஒரு புரிதலைத் தருகிறது.      

Saturday, February 18, 2017

யாருமே ரசிக்காத
நகரத்து அரைநிலவு போலவே
யாருமே வாசிக்காத
யாரோ எழுதிய கவிதையும்
காத்திருக்கிறது
அதற்கு மணம் உண்டா
என்பதை யாரறிவார்?

பீநாறிப் பூக்களின்
கிறக்கத்தில் உறங்கும்
நாய்களின் குரைப்பு
ரசனையாகிறது

எத்தனை கோடி மனிதர்களோ
நசித்துப் பொடியாகி
மறைந்த பூமியின்
துகள்களில் அவர்களின்
வாழ்க்கை எழுதப்பட்டிருந்தாலும்
அவற்றின் மொழி தெரியாமல்
யார்தான் படிக்க முடியும்?

எழுதப்பட்ட கதைகளை விட
எழுதப்படாத வரலாறுகள்

எத்தனையோ?

Sunday, February 12, 2017

எடியே.....
            தாஹா மாடாயி
            இந்த நூலை எழுதியவர் வைக்கம் முகம்மது பஷீரின் மனைவியின் அனுபவங்களை அவரிடம் கேட்டு எழுதியிருக்கிறார்.  தமிழில் தந்தவர் சுகுமாரன். மொழிபெயர்ப்பும் சிறப்பாக இருக்கிறது.
            எனக்கு மிகவும் பிடித்த ‘வைக்கம் பஷீரைப் பற்றி எது வந்தாலும் படிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது.  அவர் என்னைப் போல் பலருக்கும் பிடித்த எழுத்தாளராக இருப்பது அவரின் தனித்த ஆளுமையில் விளைந்த கதைகள் காரணமாகவே.
            சமூகத்தின் அனைத்துப் பக்கங்களையும் கோடிட்டுக் காட்டியவர் பஷீர்.  அவருடன் வாழ்ந்த ’பாபி’யின் வார்த்தைகளும் படிக்கச் சுவையாக வே இருக்கின்றன.  படிக்க வேண்டிய புத்தகம். ***

தெய்வம் என்பதோர்...
            தொ. பரமசிவம்
            தமிழ்நாட்டின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான தொ.பரமசிவம் அவர்களின் நூல் இது.  நான் படிக்கும் அவருடைய மூன்றாவது நூல்.  நாட்டார் வழக்காறுகளை, எங்கோ படிந்து மறைந்து இருக்கும் வரலாற்றின் சுவடுகளைக் கண்டறிந்து நம்மைப் புளகாங்கிதப் படுத்துவதில் இவருக்கு இணையில்லை.  வார்த்தைகளில் எளிமை, கருத்துக்களைத் தெளிவாக எழுதும் விதம், ஆழ்ந்த பண்பாட்டு ஞானம் அனைத்தும் கொண்ட கட்டுரைகள்.  இவ்வளவு விரைவாகப் படித்துவிடுவேன் என்று நினைத்ததில்லை. ****


            அசோகமித்திரனின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  இயல்புநவிற்சியான தொனியில் கதைகள். இரண்டு தொகுதிகளையும் படித்துவிட்டால் அவரைப் பற்றிய ஒரு முழு வரைபடம் கிடைக்கக்கூடும்.

Saturday, February 11, 2017

காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் – 1
இருளில் நகரும் யானை - 2
                      மனுஷ்யபுத்திரன்

            மனுஷ்யபுத்திரனுடைய சில கவிதைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன்.  தொகுப்பாக இப்போது தான் படிக்கிறேன்.  தமிழகத்தின் தற்போதைய கவிஞர்களில் முக்கியமானவராக, பிரபலமானவராக இருக்கிறார் என்பதனாலேயே ஒரு மனத்தடை இருந்தது.  இங்கே பிரபலம் பெறுவதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்ற செல்ஃபி பண்பாட்டில் எதையும் தானே பயின்ற பின்னரே முடிவுக்வுக்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

            ஆனால் மனுஷ்யபுத்திரனைப் படித்து மிகவும் மகிழ்வு கொண்டேன்.  அவரிடம் எளிய மொழியும், அறச்சீற்றமும், அரசியல் நிகழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினையாக எழும் கவிதைளும் அவருடைய ஆளுமையில் எனக்குப் பிடித்திருந்தன.  தனிப்பட்ட முறையில் அவர் எப்படி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.  அது தெரிந்திருக்க வேண்டியதில்லை என்றே நம்புகிறேன்.

1.      காந்தியுடன் விருந்துக்குச் செல்கிறேன்

முதல் கவிதை நம்மை அதிர்ச்சிக்கும், உள்ளாக்குகிறது.  ‘வாங்கடா என்று தன் உறுப்பைக் காட்டிட்க்கொண்டு சவால் விடும் பெண்ணை நாம் எங்கும் இலக்கியத்தில் சந்தித்திருக்கிறோமா? ‘இனி நகரங்கள் எரியப் போவதில்லை’ என்பது பெண்களுக்கு நேரும் நிலைகுறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.  மிகச்சிறப்பான கவிதைகளில் ஒன்று.

சாமியார்களைப் பற்றி, ’கடவுள்கள் இறந்த உலகின், தனிமைக்குள், நுழைகிறார்கள், கள்ளத் தீர்க்க தரிசிகள்’ என்கிறார்.

’ஒரு சிந்துவும் இன்னொரு சிந்துவும்’ கவிதை புதிய வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது விளையாட்டு வீராங்கனை சிந்துவுக்கும், வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத்துடிக்கும் ‘இன்னொரு சிந்துவுக்கும்’ ஒப்பீடு செய்கிறார். ‘வெற்றியும் தோல்வியும் எப்படி ஒரே நேரத்தில் நிகழமுடியும்’ என்பவை முக்கியமான வரிகள். (தங்கப் பதக்கத்தைக் கோட்டைவிட்ட சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது கண்டு இந்தியாவே மகிழ்ந்த தருணம் அது – தோல்வியிலும் மகிழ்வு உண்டு).

‘டம்மிகள் இல்லாமல் நிஜங்கள் வெல்வது கடினம் அன்பே’  நமக்கும் தெரிகிறது.

’தவறான முடிவுகளில் நம்மைத் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. சரியான முடிவுகளில் உங்களை மாற்றிக் கொள்வதற்கான எல்லா வாய்ப்புக்களையும் இழந்து விடுகிறீர்கள்’ என்ற வரிகள் பல உட்பொருட்களைக் கொண்டவையாக இருக்கின்றன.  ஒரு எதேச்சாதிகாரி’ ’தவறான முடிவுகளை எடுப்பதே இல்லை’ என்றே நம்புகிறான். அவனை ஒரு போதும் திருத்த முடியாது.  ஆனால் தான் தவறு செய்யக் கூடும் என்று நம்புகிறவன் சரியான வழிக்கு வந்துவிடுவான்.

’அன்பு உபயோகிக்க முடியாத கவிதையாகி விடுகிறது’ என்பதை நாம் ஒப்புக் கொள்வோம்.
‘சோக கீதங்கள் இசைப்பவர்கள் மட்டும்  இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவோ சோகமானதாகா மாறியிருக்கும்’
காந்தியுடன் இரவு விருந்துக்குச் செல்கிறேன் என்ற கவிதை, காந்திய வழிகளின் இன்றையத் தேவையை உணர்த்துகிறது.  
இன்னும் பலகவிதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  மிக நல்ல தொகுப்பு

2.      இருளில் நகரும் யானை – இத்தொகுப்பிலும் மிக நல்ல கவிதைகள். இருக்கின்றன.  தினமும் நிகழும்வாடிக்கைகளைவேடிக்கைகளைக் கண்டு கவிதை பிறக்கிறது, அது நன்றாகவே கவிதையாகி இருக்கிறது.  அதன் மூலம் நித்தியமான கேள்விகள் எழுகின்றன.  இவ்வளவு குறுகிய காலத்தில் எழுதினாலும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன. 

இன்னொன்றும் தோன்றுகிறது. இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்த்திருந்தால் நன்றாக வந்திருக்கும் கவிதைகள் மிகச் சிறப்பான கவிதைகளாக வந்திருக்கும்.  இது ஒரு யூகம் தான்.  தவறாகவும் இருக்கக் கூடும். 

அடுத்த புத்தகம் ‘ பஷீரின் எடியே’ – வைக்கம் முகம்மது  பஷீரின் மனைவி சொல்லச் சொல்ல தாஹா மாடாயி மலையாளத்தில் எழுதியது.  தமிழில் மொழிபெயர்த்தவர் சுகுமாரன்.
            வைக்கம் முகம்மது பஷீர் பெயரைக் கேட்டாலே சிலிர்க்கிற அளவுக்கு அவருடைய படைப்புகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.  இந்தப் புத்தகத்துடன் அவரது மற்றப் புத்தகங்கள் இரண்டையும் வாங்கியிருக்கிறேன்.  நினைவுகூரல் வகையில் எழுதப்பட்ட இச்சிறு நூலை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.(91 பக்கங்கள்)

            எனது அபிமான எழுத்தாளரின் ஆளுமையைப் புரிந்து கொள்ள உதவியது.  நல்ல மொழிபெயர்ப்பு.

Tuesday, February 07, 2017

ஒரு சிறு இசை – வண்ணதாசன்

                 வண்ணதாசனுடைய இந்தக் கதைத் தொகுப்பை வாசிக்கும் முன்னர் அவரது முதல் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்” வாசித்தேன்.  என்னுடைய பார்வையில் அவரிடம் நிகழ்ந்த மாற்றம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.

            ஏற்கனவே நான் முந்தைய பதிவில் சொன்னது போல வண்ணதாசனின் பார்வை நுண்ணோக்கியில் (மைக்ரொஸ்கோப்) பார்ப்பது போன்றது. ஒரு போஸ்ட்கார்ட் சைசில் உள்ள புகைப்படம் போல வாழ்வின் ஒரு சிறு பகுதியை மிக விரிவாகச் சொல்கிறவர்.  சில நேரங்களில் புகைப்பட்த்தில் என்ன இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரியும். சில படங்களில் நாமே ஒரு சலனத்தைக் கற்பனை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

            அவருடைய கதைகளில் பெரும்பாலும் கதை நிகழ்களங்களின் பெயர்கள், தெருக்கள், ஊர்கள் அரிதாகவே சொல்லப்படும்.  ஆனாலும் எல்லா ஊர்களிலும், எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடியவையாகவே கதைகள் இருக்கும்.  இதில் ஒரு 'யுனிவர்சல்' தன்மை இருப்பதைக் காணலாம்.

            இத்தொகுப்பில் மிகச் சிறந்த கதைகள் என்று சிலவற்றைச் சொல்ல்லாம். ‘கல்பனா ஸ்டூடியோவில் ஒரு போட்டோ’, ‘சந்தனம்’ ஒரு பறவையின் வாழ்வு’ ‘தண்ணீருக்கு மேல் தண்ணீருக்குக் கீழ்’ இவைகளில் சில.  இவற்றில் உறவுகளில் நிகழும் அகப் புறச் சிக்கல்கள் மென்மையாக, இயல்பாக அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. 

            ’கல்பனா...’ கதையில் போகிற போக்கில் ஒரு லாரி டிரைவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பழைய உறவின் புதிய பரிணாமம் பல ஆண்டுகளுக்குப் பின் அவருக்கும் நமக்கும் தெரியவருகிறது.  எந்த உணர்ச்சியும் மிகைப்படாமல், தெளிவாக, அறம்பற்றிய தீர்ப்புகள் இன்றி, இயல்பாக கதை சொல்கிறார்.  

            வண்ணதாசனின் கதைகளில் யார் மையப் பாத்திரம் என்பது முதலிலேயே தெரிவதில்லை.  கதையைப் படித்து முடித்ததும் தெரியலாம்.  ஏதோ ஒருவரியில் வருகிற யாரோ எதுவோ கதையின் மையப் புள்ளியாக இருக்கலாம்.  அந்த ஆச்சரியத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.  ’தண்ணீருக்கு மேல்...’  கதையை இந்த வகையில் சேர்க்கலாம்.

            முதல் தொகுப்பிலும் இத் தொகுப்பிலும் இயல்புக்கு மீறீச் சில நிகழ்வுகள், மனிதர்கள் சொல்லாடல்கள் ஒன்றிரண்டு இருக்கின்றன. உதாரணமாக, ‘மன்மத லீலை’ கதையில் வயதில் மூத்த ஒருவர் தன் மகனைப் போன்ற வயதில், உறவில் உள்ளவனிடம் சொல்லும் வார்த்தைகள் இவை “உன் வீட்டுக்காரியை... சொப்பனத்தில் பாத்தேன். எப்படித் தெரியுமா? நிறை அம்மணமா. அரணாக் கொடி கூட இல்லை’.    ’கனியான பின்னும்’ கதை இயல்பான மொழியில் சொல்லப்பட்டாலும் கொஞ்சம் மெனக்கெட்டு அழகு பூசியது போல் தெரிகிறது.  வண்ணதாசனில் பலம் நுண்ணோக்கிப் பார்வை.
 
         பொதுவாக புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரை யாரும் எதுவும் சொல்ல விரும்புவ்தில்லை.  ஆனாலும் இதைக் கவனப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

            சிறு அல்லது எளிய குடும்பங்களின் அல்லது மனிதர்களின் எளிய பிரச்சனைகளை சொன்ன முதல் தொகுப்பிலிருந்து ஒரு வேறுபாடு தெரிகிறது.  கொஞ்சம்  டெலிகேட் ஆன ’அடல்ட்’ பிரச்சனைகளைக் கையாளும் முதிர்ச்சியும், அறம் குறித்த பார்வைகளை அவற்றின் மீது திணிக்காமல் இயல்பாக நிகழும் நிகழ்வுகளாக அவற்றை சொல்லிச் செல்வதில் இத் தொகுப்பு முதல் தொகுப்பிலிருந்து வேறுபட்டது. இது மற்றத் தொகுப்புகளினூடே நிகழ்ந்த விதம் குறித்து இப்போது என்னால் பேச முடியாது.  முதல் தொகுப்பில் தனது வார்த்தைகள், விவரணையில் அழகில் மயங்கிக் கதை சொல்லி, சில நேரங்களில் முடிவைத் திணிப்பது போன்ற முடிவுகள் உண்டு. உதாரணம் குற்றாலம் கதையில் வரும் கடைசி வரிகள் ‘குற்றாலத்துக்கு’ (போயிருக்கிறான்) என்ற உருவகம்.  

 இத்தொகுப்பிலும் சில இடங்களில் அழகில் மயங்கி வார்த்தைகள் அதிகமாக வரும் சில பகுதிகள் இருக்கின்றன. இந்தப் பண்பு, முதல் தொகுப்புடன் ஒப்பிடும் போது கடைசியாக வந்த தொகுப்பில் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், தன் அழகின் போதையில் மயங்குவது நமது இயல்பு என்ற வகையில் அவற்றைத் தள்ளிவிடலாம்.  ஏனெனில் பலகதைகள் நன்றாக இருக்கின்றன.  நல்ல தொகுப்பு. ***

Wednesday, February 01, 2017

கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசிதேன்.  இந்தப் புத்தகத்தை வாங்கக் காரணம் அல்லது தூண்டுதல் – வண்ணதாசன் இந்த ஆண்டு ’ஒரு சிறு இசை’  என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக வாங்கிய சாஹித்ய அகாதமி பரிசு – அது மீண்டும் வண்ணதாசனை தொட வைத்தது.

            அவருடைய கவிதைகளை, கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருந்தாலும் அவருடைய முதல் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள் (!976) படித்ததும், அதில் அவருடைய தனித்தன்மை வெளிப்படுவதைக் காணமுடிந்தது.  கடைசித் தொகுப்பான ‘ஒரு சிறு இசை’ தொகுப்பையும் படித்து ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் இரண்டு நூல்களையும் வாங்கினேன்.   அதையும் படித்தபின் ஒப்பிட முயற்சி செய்வேன்.

            இத் தொகுப்பில் எல்லாக கதைகளிலும் இருக்கும் ஒரு பொதுப்பண்பு – மிக நுட்பமான விவரங்கள்.  மனிதர்களின், இயற்கையின், விலங்குகள் பறவைகளின் சிறு சிறு அசைவுகள், பேச்சுக்கள், செய்கைகள் பதிவாகின்றன. ஒரு நுண்ணோக்கியில் (மைக்ரொஸ்கோப்) மனிதர்களை அவர்களின் சூழலுடன் வைத்துப் பார்ப்பது போல் அமைந்த கதைகள்.   இன்னும் அவருடைய நடை அப்படித்தான் இருக்கிறதா என்பதை அடுத்த தொகுப்பை படித்துவிட்டு எழுதுகிறேன்.   மிக மிக எளிய மனிதர்களின் வாழ்க்கை, அதன் எல்லாப் பக்கங்களுடனும் சொல்லப்பட்டிருக்கிறது.

            தனது துயர்மிகுந்த வாழ்க்கையினூடே காலையில் சாலையில் உறங்கும் சிறுவர்களுக்குத் தேனிர் வாங்கித் தரும் ‘அவள்’(எச்சம்),  தனுவை மனதில் நேசித்து மயங்கும் ஞானப்பன், சினிமாவில் நடிக்க வந்து ஒரு கிளியுடன் வாழும் புட்டா, கிளியைத் திரைப்படக் காட்சிக்காக வாடகைகுக் கேட்கும் உதவியாளன், அதைத் தரமுடியாது என்று வறுமையிலும் மறுக்கிற புட்டா .. இன்னும் எத்தனையோ மனிதர்களை மிக யதார்த்தமான நடையில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சந்திக்கலாம்.  பரிவும் அன்பும் கொண்ட ஒரு மொழியை உடையவர் வண்ணதாசன்.


            மிக நல்ல கதைகள் அடங்கிய தொகுப்பு. ****