Wednesday, November 11, 2009

பிரதிபலிக்கும் தளங்கள்

சைமன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும், கலிஸ்தா சுறுப்படைந்து குளியலறைக்குச் சென்றாள். தண்ணீர் இதமான சூடாக இருந்த்து. பாத்ரூம் கண்ணாடி நீராவியால் பனித்திரை போல் மறைக்கப்படும் வரை, விரல்களில் சுருக்கம் ஏற்படும் வரை நீருக்கடியில் நின்றாள்.

தலையில் ஷாம்புவைச் சிறிது கொட்டி தேய்க்கும் போது முடி இழைகள் அவள் விரல்களில் சுற்றிக் கொண்டன. தன் மீது தண்ணீரை வழிந்தோடும்போது இன்னும் முடி இழைகள் நீரில் சுழன்று வடிகாலில் செல்வதைப் பார்த்தாள். உடலிலிருந்த சோப்புநுரை நுரைகளை கழுவிவிட்டு ஷவரை விட்டு வெளியில் வந்தாள். உடலைத்துண்டால் போர்த்திக் கொண்டு, கண்ணாடியைக் கையால் ஒரு முறை துடைத்தாள். நின்று பார்த்தாள்.

சைமன் கதவைத் தட்டினான் “என்ன உள்ளே ஓ.கே யா?

அவள் கதவைத் திறந்தாள்.

“ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“நான் இதை வெறுக்கிறேன்” அவள் முணுமுணுத்தாள்

அவன் அவளைக் கட்டியணைத்து, கழுத்தில் முத்தமிட்டான்.

“சீரியஸாத்தான், சைமன், என் தலையைப் பார்த்தாயா? நான் எப்படி இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”

“ஆமா, ரொம்ப அழகாக இருக்கிறாய்” அவன் தொடர்ந்தான் “எப்பவும் போல. இனிமேலும் அழகாய்த்தான் இருப்பாய்”

அவள் சிரித்தாள். அவளுக்குத் தெரியும் அவன் பொய் சொல்லுகிறான். சில விஷயங்கள் இயல்பாகவே பொய்யாகி விடுகின்றன.

“அழகா…இருக்கிறேன்.. ஹ...”

“ஆமா.”

“அது எப்படிங்கிறேன்?”

“நீ என்ன சொல்ற? எப்படியா? அது அப்படித்தான்..” அவன் கண்களில் ஒளியில்லை. நெற்றி சுருங்கியது. ஆயிரம் வாதங்களை மறுத்து கடைசித் தடவை அழுத்திச் சொல்வது போல்

மீண்டும் சொன்னான் “அழகாக இருக்கிறாய்”

“இல்லை” கலிஸ்தா யோசித்தாள். அவன் எப்படி நினைக்க முடியும்? அவனால் முடியாது. அவன் அப்படி நினைக்கவில்லை. இது அழகானதல்ல. இது புற்றுநோய். இது இழப்பு. நீலப்பச்சை டைல்ஸ் பதித்த பாத்ரூம் தரையெங்கும் அவள் கருத்த தலைமயிர் கொட்டிப் பரவியிருந்த்து. அவள் தலை கொஞ்சம் ஒட்டியிருந்த முடிகளுடன் சொரசொரப்பாக இருந்தது.
அவன் கையை நீட்டினான். அவள் கூச்சத்திலும் விலக்காமல் இருக்க முயன்றாள். ஆனாலும் விலகுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் முன்புபோல் இல்லை. அவன்மீதும் தான் முன்புபோல் உணரவில்லை என்று பயந்தாள்.

“மீதமிருப்பதையும் சிரைத்து விட வேண்டும்” சொல்லும் போது அவள் தொண்டை அடைத்தது. இதைச் சொல்லத் தயாராக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் தயார்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

“நான் சிரைத்து விடுகிறேன். என்னைப் பண்ண விடு” அவன் சொன்னான்.

“நல்லது. இப்பவே பண்ணிவிடுவோம். இத்தோட இதை முடிக்கணும்னு விரும்புகிறேன்”
அவன் மருந்துகள் வைத்திருக்கும் மர டிராயரை உருட்டித் தேடி ஒரு புது ரேஸரை எடுத்தான். “மெல்லியது” என்று அதன் பிளாஸ்டிக் அட்டையில் சிவப்பெழுத்தில் இருந்தது

அவள் ஜாக்கிரதையாக பாத்டப்பின் விளிம்பில் உட்கார்ந்தாள். அவன் கையில் ஷேவிங் கிரீம் டப்பாவுடன் அவளருகில் நின்றான். அவன் ஷேவிங்கிரீமைத் தலையில் தடவத் தொடங்கியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் அழ விரும்பவில்லை. அவள் விரும்புவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

“முடி, வெறும் முடிதானே” அவள் நினைத்தாள்.
அவன் சிங்க்கில் கைகளைக் கழுவினான். அவன் திரும்பி நிற்கும் போது அவனைப் பார்த்தாள். முடிச்சுருள்கற்றைகள் வேர்வையில் ஈரமாக இருந்தன. அவளுக்காக அவன் தைரியமாக இருந்தான். இதை எப்படிச் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

ரேசருடன் அவளிடம் திரும்பினான். அவள் கைகளால் அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்டாள். பிடித்துக் கொள்ளவேண்டும்.

ரேசர் அவள் தலையை சிரைக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று. அவள் எண்ணுவதை விட்டுவிட்டாள். ரேசரின் வேலை முடிவின்றித் தொடர்வது போல் தோன்றியது.
திடீரென்று அவளுக்குத் தோன்றியது. தம் உடலிலிருந்து, இதமான சூடுதரும் உரோமங்கள், சிரைக்கப் படும் போது செம்மறி ஆடுகள் என்ன உணரும்? செம்மறிகள் கொடுமை இழைக்கப்பட்டதாக, திருடப்பட்டதாக உணருமா? என்றெல்லாம் அவள் யோசித்ததில்லை. செம்மறிகள் பற்றி அவள் யோசித்ததே இல்லையே.

அவன் முடித்துவிட்டான். ரேசரைக் கழுவினான். தலையைத் துவட்ட செண்ட் போட்ட துண்டை எடுத்தாள். தன்கையால் மொட்டைத் தலையைத் தடவிப் பார்த்தாள்.

சைமன் ரேசரை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டான். பாத்ரும் டப்பின் விளிம்பில் அவளருகில் உட்கார்ந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. கைகளால் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவன் கையை விலக்கிக்கொண்டு விடாதபடி தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான். அவன் நீண்ட விரல்கள் அவளுடலின் இந்தப் புதிய பகுதியை தொடவும், தடவவும், நினைவில் இருத்திக் கொள்ளவும் விரும்பின.

கலிஸ்தா மென்மையாக அவனுடைய சுருள்முடிகளுக்கும் கைகளை விட்டு, அடிப்பகுதியைப்
பிடித்து அவற்றின் இளஞ்சூட்டில் கைகளை அப்படியோ வைத்துக் கொண்டிருந்தாள். சுருக்கம் விழுந்த அவன் வெள்ளைச் சட்டையில் புதைந்து அழுதாள்.

“அழகாக இருக்கிறது” இந்த வார்த்தைகளை மட்டும் அவன் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.

கொஞ்சமாவது உறுதி இருந்தால் அவள் மீண்டும் சிரித்திருப்பாள். ஆனால் முடியவில்லை.
விழித்தபோது காலை மூன்று மணி.. கடிகாரத்தின் எண்களிலிருந்து வந்த ஒளி அவள் கண்களை உறுத்தியது. அவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். குளிர்ந்தது.

அறையிலிருந்த அமைதி வினோதமாக இருந்தது. மூச்சைப் பெரிதாக இழுத்து விட்டுக் கொண்டு சீராக்க் குறட்டைவிட்டுத் தூங்கும் சைமன் அவளருகில் படுத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தாள். எழுந்து உட்கார்ந்தாள். படுக்கையில் இருந்த கால்களை எடுத்துத் தரையில் வைத்தாள். காலில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் பட்டது. தன்னை தடுமாறாமல் நிறுத்திக் கொண்டு ஹாலுக்குள் கவனமாக நடந்தாள். ஹாலில் இருந்த பாத்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

மெல்ல நடந்து கதவைத் திறந்தாள். அவன் தான். கையில் ரேசருடன் குப்பைத் தொட்டிப்பக்கம் தலையை நீட்டிக் கொண்டிருந்தான். அநேனகமாக வேலை முடிந்துவிட்ட்து. பாத்ரூம் டைல்கள் மீது கத்தை கத்தையாக முடி பரவிக் கிடந்தது. இரண்டு இழுப்புகளில் வேலை முடிந்துவிட்டது. நீல நிற ரத்தக் குழாய்கள் மொட்டைத் தலையில் பெரிதாகத் தெரிந்தன.

நம்பமுடியாமல் கால்கள், குரல், சிந்தனை எல்லாம் ஸ்தம்பித்துவிட்டன. அவன் நிமிர்ந்து அவள் நிற்பதைப் பார்த்தான். அவன் கண்கள், மூக்கின் நுனி சிவந்திருந்தன.
அவனிடம் போனாள். கழுத்தின் பின்புறம் தொடங்கிக் கண் இமைகள், கன்னங்கள் தாடை மீது கைகளைத் தடவினாள். அவன் முன்புறம் குனிந்து மென்மையான முன் தலையால் அவள் தலைமீது மெல்ல அழுத்தினான். அவன் உருவத்தை, கண்ணீரை, அவள் வலியைப் புரிந்து கொள்ள வேண்டிய அவன் தேவையை மனதில் இருத்திக் கொண்டாள். அவன் அவள் கண்களால் பார்த்தான். அவளும் அவன் கண்களால் பார்க்க முடிந்தது.

அவள் சொன்னாள் “அழகாக இருக்கிறது”

* * * * * * * * * * * * * * *

REFLECTING SURFACES, Christie Lambert Boston Literary Magazine, Fall,2009. Tamil Translation by V.Rajagopal

ஆங்கிலத்தில் கிறிஸ்டி லாம்பர்ட்., போஸ்டன் லிடர்ரி மேகஸீன், Fall, 2009
தமிழில் வே. ராஜகோபால்.

Tuesday, November 10, 2009

வில்லேருழவர் 3


அம்பு


அம்பு என்பது நமது எண்ணம். வில்லின் உறுதியையும் இலக்கின் மையத்தையும் இணைக்கிறது. எண்ணம் மிகமிகத் தெளிவாக, நேராக, சமச்சீராக, இருக்கவேண்டும். அம்பை விட்டுவிட்டால் திரும்ப வராது. இலக்குத் தயாராக இருக்கிறது என்பதற்காகவோ வில்லில் நாணேற்றிவிட்டோம் என்பதற்காகவோ முழுக்கவனமின்றி அம்பை எய்துவிடாமல், அதைச் செலுத்துவது வரைக்கும் நடந்ததனைத்தும் முறையாக, மிகச் சரியாக இல்லை என்றால், அது செலுத்தாமல் இருபதே நல்லது. தவறு செய்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக மட்டும் அம்பு எய்வதை நிறுத்தாதே. சரியான முறையில் நாணேற்றினால் கைகளை விரித்து அம்பை விடு. அம்பு இலக்கைத் தவறவிட்டாலும் அடுத்தமுறை எப்படி சரியாக விடுவது என்பதை நீ அறிந்து கொள்வாய். அந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை நீ அறிய முடியாது. ஒவ்வொரு அம்பும் தன் நினைவை விட்டுச் செல்லும் அந்த மொத்த நினைவுகள் தான் மேலும் மேலும் சிறப்பாக அம்புவிட வைக்கும்.


இலக்கு
அடையவேண்டிய குறிக்கோள்தான் இலக்கு. வில்வீரன் அதை தீர்மானிக்கிறான். அது வெகு தூரத்தில் இருந்தாலும் நாம் அடையமுடியவில்லை என்றால் அதைக் குறை கூற முடியாது. இதில்தான் வில்வித்தையின் பெருமை இருக்கிறது. எதிரி உன்னைவிட பலசாலி என்று நீ சாக்குச் சொல்ல முடியாது. நீதான் இலக்கைத் தேர்ந்தெடுத்தாய் அதற்கு நீதான் பொறுப்பு. இலக்கு முன்னாலோ பின்னாலோ பெரிதாகவோ சிறிதாகவோ இடப்புறமோ வலப்புறமோ இருக்கலாம். அதை மதித்து மனத்தின் அருகில் கொண்டுவரவேண்டும். அது உன் அம்பின் முனையில் இருக்கும் போது அதை நாணிலிருந்து விடவேண்டும். இலக்கை எதிரியாக மட்டும் நினைத்தால், இலக்கை நீஅடித்துவிடலாம். ஆனால் உனக்குள் எந்த நிறைவையும் அடையமுடியாது.

ஒரு காகிதத்தின் அல்லது மரத்தின் நடுவில் அம்பைவிடுவது தான் வாழ்வின் அனுபவமாகிவிடும். அது பொருளற்றது. மற்றவர்களுடன் இருக்கும் போது, சுவராஸ்யமாக எதையும் செய்யமுடிவதில்லை என்று புலம்ப நேரிடும். அதனால், இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதை அடிக்க முயலவேண்டும். இலக்கைப் பெருமையுடனும் மரியாதையுடனும் அணுகவேண்டும். அதன் மதிப்பென்ன? அதற்காக எவ்வளவு பயிற்சியும் உள்ளுணர்வும் உனக்குத் தேவைப்பட்டது என்பது உனக்குத் தெரியவேண்டும். இலக்கைப் பார்க்கும் போது அதை மட்டும் கவனிக்காதே. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கவனி. ஏனெனில், அம்பை விடும்போது, காற்று, எடை, தூரம் என்பன போன்ற நீ கவனிக்காத பல விஷயங்கள் அதை பாதிக்கும்.

நீ இலக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இலக்காக இருந்தால் எப்படி இருப்பேன்? எய்தவன் பெருமைப்பட வேண்டுமெனில் அம்பு எங்கே குத்துவதை விரும்புவேன்? என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொள்ள வேண்டும். வில்வீரன் இருந்தால்தான் இலக்கும் இருக்கும். அதை அடையவேண்டும் என்ற வீரனின் ஆசைதான் இலக்கின் இருப்பதற்கான நியாயம். இல்லையெனில் அது வெறும் உயிரற்ற பொருள், மரத்துண்டு அல்லது காகிதத்துண்டு. அம்பு எவ்வாறு இலக்கைத் தேடுகிறதோ அவ்வாறே இலக்கும் அம்பைத் தேடுகிறது. ஏனெனில் அம்புதான் இலக்கு இருப்பதற்கான அர்த்தத்தைத் தருகிறது. அது வெறும் காகித அல்லது மரத் துண்டு அல்ல. வில்வீரனுக்கு அதுதான் உலகின் மையம்.
வில்லேருழவர் 2

“நீங்கள் மிகச்சிறந்த வில்வீரர் என்று அவன் சொன்னான். நீங்கள் வில்வித்தையில் வல்லவர் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மரவேலை பார்க்க வேண்டும்.

“மரவேலை செய்யவேண்டும் என்பது என் கனவு. வில்வித்தை எல்லாவற்றுக்கும் உதவும். சொல்லப்போனால் வில்வித்தை கற்றவனுக்கு வில் அம்பு, இலக்கு எதுவும் தேவையில்லை’

அந்தச் சிறுவன் தொடர்ந்தான் “ இந்தக் கிராமத்தில் சுவராஸ்யமாக எதுவும் நடப்பதில்லை. இப்போது திடீரென்று நான் ஒரு வில் வீர்ரை, ‘குரு’வைப் பார்க்கிறேன் யாருமே அவரைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவன் கண்கள் ஒளிவிட்டன.

வில்வித்தை என்றால் என்ன? எனக்குச் சொல்லித் தருவீர்களா?

சொல்லித் தருவது ஒன்றும் கஷ்டமானதல்ல. கிராமத்துக்குச் செல்லும் போதே வழியில் ஒருமணி நேரத்துக்குள் முடித்துவிடுவேன். மிக மிகச் தேர்ச்சி பெறுவது வரை நீ தினமும் பயிற்சி செய்வது தான் கஷ்டமானது.,

சரியென்று சொல்லிவிடுங்களேன் என்று சிறுவனின் கண்கள் அவனைக் கெஞ்சுவது போலிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் டெட்சுயா அமைதியாக நடந்தான். அவன் மீண்டும் பேசிய போது அவன் குரல் இளமையாக ஒலித்தது.

“இன்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது.. ரொம்ப வருஷங்களுக்கு முன் என் உயிரைக் காப்பாற்றிய ஒருவருக்கு நான் மரியாதை செய்தேன். அதனால் நான் எல்லா விதிகளையும் சொல்லித்தருவேன். அதற்கு மேல் முடியாது. நீ நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் என் உபதேசத்தை நீ விரும்பியபடி உபயோகிக்கலாம். கொஞ்சநேரத்துக்கு முன்னால் என்னை ‘குரு’ என்று சொன்னாய். குரு என்றால் யார்? எதையாவது யாருக்காவது சொல்லித் தருபவன் குரு அல்ல. யார் ஒருவன் ஒரு மாணவனின் ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் முழுத் திறமையையும் அவனே கண்டு கொள்ளக் கற்பிக்கிறானோ அவன்தான் குரு. மலையிலிருந்து இறங்கும் போது டெட்சுயா வில்வித்தையை அவனுக்கு விளக்கினான்.

தோழர்கள்

அம்பும் வில்லும் பற்றிய தனது மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாத வில்வீரன் தனது குணங்களையும் குறைகளையும் அறிந்துகொள்வதில்லை. அதனால் எதையும் நீ தொடங்குமுன் உன் வேலையில் ஆர்வமுள்ள தோழர்களை, தெரிந்தவர்களைத் தேடு. மற்ற வில்வீர்ர்களைத் தேடு என்று நான் சொல்லவில்லை. மற்ற திறமைகள் உள்ளவர்களைத் தேடு. மகிழ்ச்சியுடன் தொடரும் எந்த வித்தையையும் மாதிரித்தான் வில்வித்தையும். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இவரை விடச் சிறந்தவர் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குத் திறமையான தோழர்கள் பற்றிச் சொல்லவில்லை
.தவறுசெய்யப் பயப்படுகிற, அதனாலேயே தவறுகள் செய்கிற மனிதர்கள். அதனால் அவர்கள் வேலையை யாரும் அங்கீகரிப்பதில்லை. ஆனால், அது போன்றவர்கள் தான் உலகை மாற்றி அமைக்கிறார்கள். பல தவறுகள் செய்த பின்னால் ஏதாவது செய்து, அவர்கள் வாழும் சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவார்கள். தங்களைச் சுற்றி ஏதாவது நடக்கும் என்று காத்திருந்து பின்னர் தங்கள் பாதையை அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பொறுத்திருக்க மாட்டாதவர்கள். செயலில் ஈடுபடும் போதே பெரும் ஆபத்து என்று தெரிந்தும் முடிவெடுப்பவர்கள்.

இலக்கை எதிர்கொள்ளும் முன்னால் வில்லை நெஞ்சுக்கு உயர்த்தும்போதே திசையை மாற்றும் சுதந்திரத்தை அவன் உணரவேண்டியது அவசியம். அதனால் இதுமாதிரி மனிதர்களுடன் வாழ்வது முக்கியம். நாணிலிருந்து கையை விடும்போது தனக்குள் சொல்லிக் கொள்ளவேண்டும் “நாணை இழுக்கும்போது நீண்ட பாதையைக் கடந்துவிட்டேன். தேவையான சவால்களை என்னால் முடிந்த வரை எடுத்து இந்த அம்பை விடுகிறேன்.

எல்லோரையும் போல் சிந்திப்பவர்கள் நல்ல தோழர்கள் அல்ல. வில்வித்தையில் ஆர்வத்தை நீ பகிர்ந்து கொள்ளும் தோழர்களைத் தேடும் போது உள்ளுணர்வை மட்டும் நம்பு. மற்றவார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதே. மனிதர்கள் தங்களுடைய குறைகளைக் கவனத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைபோடுகிறார்கள். புதிய முயற்சிகள் செய்பவர்கள், துணிந்து சவால்களை சந்திப்பவர்கள், அதனால் கீழே விழுந்தாலும் அடி பட்டாலும் மீண்டும் துணிந்து இறங்குபவர்கள், இவர்களுடன் சேர்ந்து கொள்.

ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளை ஒத்துக்கொள்வோர், தங்களைப்போல் எண்ணாதவர்களை விமரிசிப்போர், ஓரடி எடுத்து வைக்கும் முன்னால் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று தெரிந்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைக்கும் மனிதர்கள், ஐயங்களைவிட அறுதியிட்ட உண்மைகளை விரும்புவோர், இவர்களிடமிருந்து தள்ளியிரு.,

திறந்த மனதுடையோர், பலங்குறைந்திருப்பதைப் பற்றி அஞ்சாதவர்களுடன் சேர்ந்துகொள். அடுத்தவர்கள் செய்வதைக் கவனித்தால், முன்னேறமுடியும் என்பது புரிந்தவர்கள். கவனிப்பது தீர்ப்புச் சொல்வதற்காக அல்ல உறுதியையும், ஈடுபாட்டையும் நேசிப்பதற்காக.

வில்வித்தை மீது விவசாயிக்கோ, சமையல்காரனுக்கோ ஈடுபாடு இருக்காது என்று நீ நினைக்கலாம். தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ அதை தங்கள் வேலையிலும் புகுத்திவிடுவார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். நீயும் அதையே செய். ரொட்டி செய்பவனிடமிருந்து கைகளை எப்படிப் பயன்படுத்துவது, மசாலாக்களை சரியாக எப்படிச் சேர்ப்பது என்று நீ அறிந்து கொள்வாய். பொறுமை, கடும் உழைப்பு, பருவங்களை மதிப்பது, புயல்களை திட்டாமலிருப்பது(ஏனெனில் அது நேரத்தை வீணாக்குவதுதான்) இவற்றை விவசாயியிட்டமிருந்து கற்றுக் கொள்ளலாம். உனது வில்லின் மரத்தைப் போல் வளைந்துகொடுக்து, பாதையில் வரும் குறிப்புகளை உணர்ந்து கொள்பவருடன் சேர்ந்துகொள். அவர்கள் தாண்ட முடியாத தடைகள், நல்ல வாய்ப்புக்கள் வரும்போது திசைமாறத் தயங்காதவர்கள்.

அவர்கள் தண்ணீர் போல. பாறையைச் சுற்றி ஓடும்; நதியின் பாதையில் சென்று சில நேரம் பெரிய ஏரியாக நிறையும்வரை காத்திருந்து பின் வழிந்தோடிப் பயணம் தொடரும்; ஏனெனில் இலக்கு கடல் என்று தண்ணீர் எப்போதும் மறப்பதில்லை. இப்போது அல்லது அப்புறம் அதை அடைந்தே ஆகவேண்டும்.

சரி இதுதான் முடிவு. இதற்குமேல் செல்லமாட்டேன் என்று சொல்பவருடன் சேராதே. குளிருக்குப் பிறகு வசந்தம் வருவதுபோல் நிச்சயம். எதுவும் முடிவதில்லை. உனது இலக்கை அடைந்த பின் மீண்டும் தொடங்கு. வந்த வழியில் நீ கற்றதையெல்லாம் பயன்படுத்து.

பாட்டுப்பாடி கதைசொல்லி, இன்பங்களை அனுபவித்து, கண்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுடன் சேர்ந்துவிடு. ஏனெனில் மகிழ்ச்சி அடுத்தவர்களைத் தொற்றிக் கொள்ளும். தன்னிரக்கத்தில், தனிமையில் கஷ்ட்த்தில் ஸ்தம்பித்து விடுவதிலிருந்து தடுக்கும்.

உற்சாகத்துடன் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து கொள். அவர்கள் உனக்கு உபயோகப் படுவது போலவே நீயும் அவர்களுக்கு உபயோகப்படுவாய். அவர்களின் கருவிகளைப் புரிந்துகொள். அவர்களின் திறனை அதிகரிப்பது பற்றி யோசி.

உன் வில்லையும், அம்பையும், இலக்கையும் பாதையையும் நீ சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. .

வில்

வில்லே உயிர். சக்தியின் ஊற்று. அம்பு ஒரு நாள் சென்றுவிடும். இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. வில் உன்னுடனே இருக்கும். அதை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவ்வப்போது ஓய்வு வேண்டும். எப்போதும் நாணேற்றிய வில் பலத்தை இழந்துவிடுகிறது. எனவே மீண்டும் உறுதிபெற அதற்கு ஓய்வு கொடு. பின் நீ நாணேற்றும் போது அது முழுபலத்துடன் இருக்கும். வில்லுக்கு மனசாட்சி கிடையாது. அது வில்வீரனின் ஆசையின், கைகளின் நீட்சி. அது கொல்ல அல்லது அமைதிக்கு உதவும். அதனால் நீ தெளிவான எண்ணங்களுடன் இரு. வில் நன்றாக வளைந்து கொடுத்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அதற்கு மேல் வளைத்தால் உடைந்துவிடும் அல்லது வைத்திருப்பவனை களைப்படையச் செய்யும். உன் கருவிகளுடன் இயைந்து இரு. அதனால் முடிந்த்தற்கு மேல் எதிர்பார்க்காதே.

வில், வீரனின் கைகளில் இருக்கிறது அல்லது ஓய்வெடுக்கிறது. ஆனால் கைகளில் உடம்பின் எல்லாத் தசைகளும், வீரனின் எண்ணங்களும் வில்விடும் முயற்சியும் ஒருமுனைப்படுகிறது. நாணேற்றும் போது கம்பீரமாக நிற்க, உடம்பின் எல்லாப் பாகங்களும் தம்முடைய வேலையை வேண்டிய அளவு மட்டுமே செய்ய விடு. சக்தியை வீணாக்காதே. அப்படிச் செய்தால் களைத்துவிடாமல் தொடர்ந்து அம்புகள் விடலாம். வில்லை அறிந்து கொள்வதற்கு அது உனது கைகளின் உறுப்பாகவும் எண்ணங்களின் நீட்சியாகவும் இருக்கவேண்டும்.

'

Friday, November 06, 2009

வில்லேருழவன் - 1
‘டெட்சுயா’

சிறுவன் அதிர்ச்சியில் அன்னியனைப் பார்த்தான்.

‘இந்த ஊரில் யாருமே டெட்சுயா வில்லேந்தி இருப்பதைப் பார்த்ததில்லையே. அவன் மர ஆசாரி என்றுதான் எல்லோருக்கும் தெரியும்.” அவன் பதிலளித்தான்.
‘அடியோடு விட்டிருக்கலாம், ஒருவேளை தைரியம் இழந்திருக்கலாம் ஆனால் அதனால் எனக்கொன்றுமில்லை. தன் கலையை அவன் கைவிட்டால் அவன் இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த வில்வீரன் என்று கருதமுடியாது. அவனுக்குச் சவால் விடவும், அவனுக்குத் தகுதியற்ற அவன் பெருமையை முடிவுக்குக் கொண்டுவரவும் நான் இத்தனை நாளாக பயணம் செய்து வந்திருக்கிறேன்.’
அவனுடன் பேசுவதில் பொருளில்லை என்று அந்தப் பையன் தெரிந்துகொண்டான். தன் தவறை உணரும்படி அவனை மரஆசாரியின் கடைக்கு கூட்டிச் செல்வது தான் நல்லது.

டெட்சுயா வீட்டுக்குப் பின்னாலிருந்த பட்டறையில் இருந்தான். யார் வந்திருக்கிறார் என்று பார்க்கத் திரும்பினான். வந்தவனுடைய கையிலிருந்த பெரிய மூட்டையைக் கண்ட்தும் அவன் புன்னகை உறைந்துவிட்ட்து. ‘நீ நினைப்பதுதான் இது’ புதிதாக வந்தவன் சொன்னான். பெரிய கதாநாயகனை அவமானப் படுத்தவோ, சண்டைக்கு இழுக்கவோ நான் இங்கே வரவில்லை. இத்தனை வருடப் பயிற்சிக்குப் பிறகு வில்வித்தையின் உச்சத்தை அடைந்துவிட்டேன் என்பதை நிரூபிக்கவே வந்தேன்.” டெட்சுயா கவனிக்காத்து போல் வேலையைத் தொடர்ந்தான். ஒரு மேஜைக்குக் கால் வைத்துக் கொண்டிருந்தான்.


ஒரு தலைமுறைக்கு உதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று உன்னைப் போல் மறைந்துவிடக்கூடாது. நான் உங்களுடைய உபதேசங்களைப் பின்பற்றினேன். வில்வித்த்தையை மதித்தேன் நான் அம்புவிடுவதை நீ பார்க்கும் அளவுக்கு எனக்குத் தகுதி உண்டு. நீங்கள் அதைச் செய்தால், இப்படியே திரும்பிவிடுவேன். வில்வித்தையில் மிகப் பெரிய குருவை எங்கே காணலாம் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டேன். புதியவன் தன் மூட்டையிலிருந்து நீண்ட பளபளக்கும் அம்பு ஒன்றை அதன் நடுப்பகுதிக்கும் சற்றுக் கீழே பிடித்து உருவினான்.

டெட்சுயாவைப் பணிந்து வணங்கினான். தோட்ட்த்துக்குள் சென்று ஒரு இட்த்தைப் பார்த்து மீண்டும் வணங்கினான். பிறகு, பின்புறம் புறா இறகு வைக்கப்பட்ட அம்பு ஒன்றை வெளியில் எடுத்தான். அம்பு விடுவதற்கேற்ற மாதிரி உறுதியுடன் அசையாமல் நின்றான். ஒருகையால் வில்லை முகத்துக்கு நேராகப் பிடித்து இன்னொரு கையால் அம்பை சரியான் இடத்தில் பொறுத்தினான். சிறுவன் உள்ளுர மகிழ்ச்சியுடன் வியப்புடன் பார்த்தான். டெட்சுயா வேலை செய்வதை நிறுத்திவிட்டு புதியவனை ஆர்வத்துடன் கவனித்தான்.

அம்பைப் பொருத்தி, வில்லை நெஞ்சுக்கு நேராக உயர்த்தினான். தலைக்குமேல உயர்த்தினான். மெல்ல கீழிறக்கும்போது நாணைப் பின்னிழுத்தான். அம்பு முகத்துக்கு நேராக வரும்போது, வில் முழுமையாக இழுக்கப்பட்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டது போலிருந்தது. அவனும், வில்லும் அசையாமல் இருந்தனர். சிறுவன் அம்பு குறிவைத்திருக்கும் இடத்தைப் பார்த்தான். அவனுக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று நாணில் இருந்த கை விரிந்தது. பின்னால் சென்றது இன்னொரு கையிலிருந்த வில் வளைந்து நின்றது. அம்பு மறைந்து தூரத்தில் மீண்டும் தெரிந்தது. ‘போ, எடுத்து வா என்றான் டெட்சுயா. சிறுவன் அம்பை எடுத்து வந்தான். அது நாற்பது மீட்டருக்கு அப்பால் ஒரு செர்ரிப் பழத்தைத் துளைத்திருந்தது.

டெட்சுயா புதியவனை குனிந்து வணங்கிவிட்டு பட்டறையின் ஒரு மூலைக்குச் சென்றான். நீண்ட தோல் பையில் இருந்த மெல்லிய அழகாகச் செதுக்கப்பட்ட மரத்துண்டை எடுத்தான். தோல் பையை பிரித்து அதிலிருந்த வில் ஒன்றை எடுத்தான். அது புதியவனிடமிருந்த்து மாதிரிதான் இருந்த்து. ஆனால் பலமுறை உபயோகிக்கப்பட்டது. என்னிடம் அம்பு கிடையாது. உன்னிடம் உள்ளதைத்தான் உபயோகிப்பேன். நீ கேட்டுக் கொண்ட்து மாதிரி செய்வேன். ஆனால் நீ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். நானிருக்கும் ஊரை யாருக்கும் எப்போதும் சொல்லக் கூடாது. யாராவது கேட்டால், நான் அவனைக் கண்டுபிடிக்க உலகத்தின் கோடிக்கே சென்றேன் ஆனால் பின்னால் தெரிந்த்து பாம்புகடித்து அவன் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டான்’ என்று சொல்லிவிடு’ புதியவன் தலையாட்டிவிட்டு தன்னுடைய அம்பு ஒன்றைக் கொடுத்தான்.

நீண்ட மூங்கில் வில்லின் ஒரு முனையை சுவரில் வைத்து அழுத்தி டெட்சுயா வில்லைக் கட்டினான். ஒன்’றும் சொல்லாமல் மலைகளைப் பார்த்துச் செல்ல ஆரம்பித்தான். புதியவனும் சிறுவனும் அவனுடன்சென்றனர். ஒருமணி நேரம் நடந்து இரண்டு மலைகளுக்கிடையில் பெரும் பள்ளம் இருந்த இடத்தை அடைந்தனர். பள்ளத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்த்து. இடைவெளிப் பள்ளத்திக் கடக்க கயிற்றுப் பாலம். அது எந்த நேரத்திலும் அற்று விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

டெட்சுயா மௌனமாக கயிற்றுப் பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்றான். அது மிக பயங்கரமாக ஆடியது. மறுபுறத்திலிருந்த எதையோ பார்த்துக் குனிந்து வணங்கிவிட்டு, அம்பை நாணேற்றி, தூக்கிப்பிடித்து நெஞ்சுக்கு நேர் வைத்து விட்டான். இருபது மீட்டருக்கு அப்பால் ஒரு பீச் பழத்தை அம்பு துளைத்திருந்த்தை சிறுவனும் புதியவனும் பார்த்தனர்.
‘நீ செர்ரிப் பழத்தில் நான் பீச் பழத்தில் அம்பை விட்டோம்’ டெட்சுயா கரைக்குத் திரும்பிக்கொண்டே சொன்னான். .

‘செர்ரி சின்னது. நாற்பது மீட்டர் தொலைவிலிருந்து அதைத் துளைத்தாய். நான் இருபது மீட்டரிலிருந்து. அதனால் நான் இப்போது செய்த்தை நீயும் செய்யவேண்டும். இந்தப் பாலத்தின் நடுவில் நின்று நான் செய்த மாதிரிச் செய்’
புதியவன் பயந்துநடுங்கி லொடலொடக்குப் பாலத்தின் நடுவில் சென்றான். கீழெ பள்ளத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான். டெட்சுயா செய்தமாதிரியே அவனும் செய்தான். பீச் மரத்தில் அம்பைவிட்டான் ஆனால் அம்பு விலகிப் போய்விட்டது.

கரைக்குத் திரும்பியபோது பயத்தில் அவன் முகம் வெளுத்திருந்தது. ‘உன்னிடம் திறமையும் கண்ணியமும், சரியாக நிற்பதும் இருக்கிறது. வில்லின் நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன் மனதை வெற்றி கொள்ளவில்லை. எல்லா சூழ்நிலைகளும் உனக்குச் சாதகமாக இருக்கும்போது நன்றாக அம்புவிடுகிறாய். ஆனால் ஆபத்தான சூழலில் இலக்கை உன் அம்பு எட்டவில்லை. வில்வீரன் போர்க்களத்தை தானாகத் தேர்ந்தெடுக்க முடியாது. மீண்டும் பயிற்சியைத் தொடங்கு.சாதகமில்லாத் சூழலில் போரிடப் பழகு. வில்லின் வழியில் செல். அது வாழ்க்கைப் பயணம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள் நல்ல குறிதவறாமல் எய்வதும் மனதில் அமைதியுடன் எய்வதும் வேறுவேறு.

புதியவன் மீண்டும் நன்றாகக் குனிந்து வணங்கிவிட்டு, வில்லையும் அம்பையும் தோளில் சுமந்த நீண்ட பைக்குள் வைத்து அவ்விடத்தை விட்டு நீங்கினான். திரும்பி வரும்போது சிறுவன் மகிழ்ச்சியில் குதித்தான். ‘டெட்சுயா நீங்க காட்டிட்டீங்க.. நீங்க தான் உண்மையிலேயே பெரிய வீரன்’
முதலில் நாம் மற்றவர்களிடமிருந்து கேட்கவும், மரியாதை செய்யவும் கற்றுக் கொள்ளாமல் அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. புதிதாக வந்தவன் ரொம்ப நல்லவன். வெளியில் அப்படித் தெரிந்தாலும், அவன் என்னை அவமானப் படுத்தவில்லை. என்னைவிடப் திறமைசாலிஎன்று காட்டவும் முயலவில்லை. பார்ப்பதற்கு ஏதோ அவன் எனக்குச் சவால் விடுவது போல் இருந்தாலும்
அவன் தன் திறமையைப் பெருமைக்குக் காட்டவிரும்பினான். நாம் ஒத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராத சூழலில் மாட்டிக் கொள்வது வில்வீர்ர்களுக்கு நடப்பது தான். அவனும் அதைத்தான் இன்று என்னை செய்து காட்டவைத்தான்.

-------will continue------


english "The Way of the Bow" - A novel by Paulo Coelho
Tamil V.Rajagopal

Wednesday, November 04, 2009

Education in Mother tongue

தமிழில் கல்வி

உயர்ந்த நோக்கங்களைப் பற்றி காலங்காலமாகப் பேசி விட்டு, அதை நோக்கிய ஒரடி வைக்கவும் தயங்கும் மனிதர்களாகத்தான் நாம் இருக்கிறோம். சமூகம் பற்றிய நமது நம்பிக்கைகளுக்கும் அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும், பெரும்பாலும், இருப்பதில்லை. வாழ்வின் முரண்பாடுகளில் இது ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், சமூகத்தை முன் செலுத்தும் வகையில் அரசியல் கலாச்சார வெளிகளில் ஆளுமைகள் இன்னும் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
உதாரணமாக, சட்டத்துக்கு முன்னால் மனிதர்களின் சமத்துவம் பற்றி மேடைகளில் உரக்கப் பேசுவதும் கீழிரங்கிப் போகும் போதே தன்னை உயர்த்திக்காட்டும் நடவடிக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்வதும் நமது தலைவர்கள்( கலாச்சார, இலக்கியத் தலைமகன்கள் உட்பட) வழக்கம்.

இந்த முறையில்தான் ‘தமிழில் கல்வி’ என்ற கருத்தும் கோஷமாக வைக்கப்படுகின்றது. மிகக் கசப்பான உண்மை ஒன்றை இந்த இட்த்தில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தமிழில் உயர்கல்வி பெறும் அளவிற்கு அறிவியல் சாதனங்கள் (குறிப்பாக பாடப் புத்தகங்கள்) இல்லை என்பதே உண்மை. மைக்கேல் ஃபாரடேயின் கொள்கைகளை விளக்கும் காலத்துடன் தமிழ் அறிவியல் புத்தகங்களின் பயன்பாடு முடிந்துவிடுகிறது. இன்றைய அறிவியலின் மொழி பெரும்பாலும் ஆங்கிலமாக இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு மொழிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் எந்த மொழியும் இன்றைய விஞ்ஞானத்தின் கருத்துக்களைத் தடையின்றி, படிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிப்பதற்கு ஏற்றதல்ல. இந்த நிலையில் தமிழில் உயர்கல்வி என்பது இயலாதது. அனேகமாக இதை அனைவரும் ஒப்புக்கொள்வர். முதலில் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும். மொழி அதற்கேற்ப தானாக தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும். புதிய தொழில்நுட்பத்துடன் புதிய சொற்கள் புழக்கத்துக்கு வரும். உதாரணமாக டெலிவிஷனை தமிழன் கண்டுபிடித்திருந்தால், உலகமெங்குக் தமிழ்ச்சொல்லில்தான் அது அழைக்கப்பட்டிருக்கும். மொழியைவிட அறிவை மதிக்கவும் நாம் சொல்லித்தரவேண்டும். (தமிழில் நன்றாகப் பேசத்தெரிந்தால் அவர் அறிஞராகிவிடுவாரா?- பேச்சாளராகக்கூடும்). அறிவை மதிக்காமல் மொழியை மதிக்கும் நாட்டில் நன்றாகப் பொய்சொல்பவர்கள் கிடைப்பார்கள். உண்மைகளைக் கண்டு சொல்லும் விஞ்ஞானிகளோ அறிவை வளர்ப்பதன் மூலம், மொழியை வளர்க்கும் அறிவாளிகளோ இருப்பது குறைவு.

இதிலிருந்து அடுத்த படியாக உயர்கல்வி பெற்றால் தான் உய்வுண்டு என்று ஆகிவிட்ட சூழலில், உயர்கல்வி பெறும் அதே மொழியில் சிந்திக்கப் பயில்வது தவிர்க்க இயலாதது. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ மற்ற நாடுகளிலோ சென்று ஆராய்ச்சி செய்யவிரும்பும் ஒருவன், அடிப்படைக்கல்வியை ஆங்கிலத்தில் பெறுவதே நல்லது. அது அவன் அந்த மொழியில் சிந்திப்பதை எளிய செயலாக்கிவிடும். எனவே ஆரம்பக் கல்வியும் (தமிழ் என்ற பாடத்தைத் தவிர) ஆங்கிலத்தில் இருப்பது வசதியானதே.

வெளிநாடுகளில் சென்று பயிலாதவரும் கூட, இந்தியாவுக்குள்ளேயே வெளிமாநிலங்களுக்குச் சென்றால், ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் மொழியைக் கற்றுக் கொள்ளும் வரை, அல்லது அதற்குத் தேவை ஏற்படும் வரை, தன் தொழிலை, வேலையைப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழிற்கல்வி என்று சொல்லும் போது யாரைக் குறிபார்த்துச் சொல்லப் படுகிறது? நகரங்களில், பெரிய பணக்காரர்களோ, அல்லது மேல்மத்திய வர்க்கத்து பிள்ளைகளோ பயிலும் பள்ளிகளை வைத்தோ சொல்லப்படுவதில்லை. ஏற்கனவே, அதிகப் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுடைய பிள்ளைகளாய், கிராமங்களில் அறிவுச்சாதனங்களின்/(ஊடகங்களின்) பயனைப் பெறமுடியாத அளவில் பிற்படுத்தப் பட்ட மாணவர்களை நோக்கித்தான் இந்த தமிழிற்கல்வி என்ற வாசகம் (கோஷம்) வீசப்படுகின்றது. இவர்களின் கனவுகள் கூட, நகரத்தில் வசிக்கும், முழுஅறிவுச் சாதனங்களைப் பயன்படுத்தும் பணக்கார, மத்திய வர்க்கத்து மக்களின் கனவுகளின் அடிப்படையில்தான் எழுகின்றன. சென்னையில் இருப்பவன் அமெரிக்கா செல்ல நினைத்தால், அதையே கிராமத்திலிருப்பவனும் நினைக்கிறான். எனவே, அந்த நோக்கிலும் ஆங்கிலக்கல்வி கிராமத்துப் பள்ளியில் முக்கியமானதாகி விடுகின்றது.

தமிழில் கல்வி கற்றால் என்ன பயன் என்று கேட்டால் மீண்டும் பதில் கசப்பானதாகவே இருக்கிறது. தமிழில் கல்வி கற்றவன், சிறுதொழில் செய்யவும், சிறுவேலைகள் செய்யவும் தான் ஏற்றவன் என்பது சமூகத்தில் நாம் காணும் காட்சி, நிதரிசனம். இன்றைய நிலையில் இதுமாதிரி தொழிலில் உள்ளவர்கள் கூட ஆங்கிலம் பயின்றால் நல்லது. எனது சொந்தக்காரர் ஒருவர், தொழிற்சாலைகளுக்கான ‘ஏர் கண்டிஷனிங்’ மெஷின்கள் ரிப்பேர் பார்த்துவந்தார். அவர் ஃபிட்டர் வேலைக்குப் படித்திருந்தாலும், இதில் ஈடுபட்டிருந்தார். அவரும் சொன்னார் “இதே வேலையில் ஆங்கிலத்தில் பேசும் தகுதி இருப்பதாலேயே இவருடைய போட்டியாளருக்கு அதிகம் வேலைகள் வருகின்றன. எனது வருமானத்தை அது பாதிக்கிறது” எனவே தாய்மொழிக்கல்வி என்பது, எல்லோரும் சமம் என்பதைப் போல நல்ல கோஷமாக இருக்குமே தவிர, செயல் படுத்த முடியாததாகவே இருக்கும். எல்லோரும் சமம் என்பதிலாவது ஒரு உயரிய நோக்கம் இருக்கிறது. தமிழிற்கல்வி என்பதில் தமிழிற்கல்வி என்பதற்காகவே தவிர வேறு உயரிய நோக்கம் இல்லை. (just for the sake of it) அது கிராமத்தில் உள்ளவரை, ஏற்கனவே உயர்கல்வி கிடைக்காமல் தவிக்கும் ஒரு மக்கள் திரளை, ஓதுக்கிவைக்கப் பயன்படும்.

நமது அரசியல் வாதிகளும், கல்வியாளர்களும் சும்மா சொல்லுகிறார்களே தவிர, முழுமனதோடு எதையும் சொல்வதில்லை. அதைச் செய்யவும் விரும்புவதில்லை அல்லது அவர்களால் முடிவதில்லை. திட்டங்களைச் செயல்படுத்தும் நமது (efficiency) திறமை/செயல்முறை மிகக் கேவலமானது. எல்லாத்திட்டங்களையும் போலவே, அரைகுறையாக முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம். அறுபதாண்டுகளாகியும் எல்லாக்குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பமுடியாத நாட்டின் அரசியல்வாதிகள், மக்கள் நாம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

ஆங்கிலத்தில் கல்விபயின்றால் விரைவில் பொருளாதார ரீதியில் உயரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவரை, உயரமுடியும் என்ற அரசியல் கலாச்சார நிலை உள்ளவரை எல்லோருக்கும் ஆங்கிலக்கல்வி தருவதே நல்ல நடைமுறையாக இருக்க முடியும்.
பஞ்சத்தில் அடிபட்டு, கூலிகளாய் பலதேசமெங்கும் சென்ற பழைய தலைமுறையினர், வயிற்றுப் பாட்டுக்குத் தானே வெளிநாடு சென்றனர். இப்போதும், பெரிய பெரிய நிறுவங்களில் நாடு விட்டு நாடு சென்று கூலிக்காக (அது டாலரில் வருகுதென்றால் கூலியாகாதா?) அறிவை விற்பவர்கள் தமிழைப் பயில்வதில் ஆர்வம் காட்டியிருந்தால் போயிருப்பார்களா? அவர்கள் எல்லாம் தமிழை மறந்துதானே விட்டார்கள். அது தவறல்ல. பொருளாதார முன்னேற்றதின் முன் மொழி அடிவாங்கிவிடுகிறது. சரித்திரமெங்கும் நிகழ்ந்த்து தான். அவர்கள் பொருளாதார நிலை உயர்ந்த்தும் தமிழைப்பற்றிக் கவலைப் படுகிறார்கள். இப்போது வறிய நிலையிலிருந்து ஆங்கிலக்கல்வி பயில முடியாதவன், ஆங்கிலக்கல்வியா பொருளாதார முன்னேற்றம் அடையவிரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? இவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானதில்லையா?

தமிழிற்கல்வி என்று பேசும் அனைவரும் (முக்கியமாக அரசியல் கலாச்சாரத் தலைமைகள்) முதலில், ஏற்கனவே பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இல்லாதவர்களை இன்னும் ஓட்டாண்டிகளாக்கும் இந்தக் கோஷத்தை உடனடியாக கை விடவேண்டும். கல்விச் சாதனங்களை (புத்தகங்கள்) உயர்கல்வித் தரத்தில் கொண்டுவந்த பிறகு இந்தக் கோஷத்தைக் கையில் எடுக்கலாம். சமச்சீர் கல்வி பற்றிப் பேசும் இந்தக் காலத்தில், பயிற்றுமொழியும் சமமானால், இதுபற்றிப் பேசலாம். அதுவரை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்கள் படிக்கட்டும். பயிற்றுவிப்பவர்கள் பயிற்றுவிக்கட்டும்.

Tuesday, November 03, 2009

தவம்

விஸ்வாமித்திரன் ரிஷியாகி விட்டான். இந்த விஷயத்தை சேடிப் பெண் ஒருத்தி சொல்லிவிட்டுச் சென்றாள். அவனுக்கும் குஷியாக இருந்தது. அவனுடைய முன்னாள் நண்பன் ரிஷியானது மிக நல்ல செய்தி. அவனுடைய ஒற்றர்கள் வந்து சொல்ல வில்லை. அரசவைக்குச் சென்றவுடன் சொல்லுவார்கள். சேடிப் பெண் சொன்னது நல்லதாகப் போயிற்று. அரசவையில் அமரும் போது சொல்லிவிடலாம். அமைச்சர்களும் அதிர்ச்சி அடையக் கூடும். திரிசங்கு சாதாரண மன்னன் அல்ல. அவனுடைய ஒற்றர் வலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஒருபுறம் மகிழ்ந்தாலும் கொஞ்சம் தயக்கமும் இருந்த்து. விஸ்வாமித்திரன் கைமீறிப் போய் விட்டான். இனி அவனைப் பிடிக்க முடியாது. சின்ன வயதில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவன். பல வருட காலமாக காணாமல் போயிருந்தான். தவமிருக்கக் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். திடீரென்று ரிஷி – இப்போது தகவல் வருகிறது. பிள்ளைப் பருவத்திலேயே அப்பா பெயர் கேட்டால் தெரியாது. திரிசங்குவின் அம்மாதான் சொன்னாள். “க்ஷத்திரிய தகப்பனுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்று ஜோஸியக்காரன் சொன்னானாம்.” யாருக்கும் முழுவிபரம் தெரியவில்லை. இப்போது கேட்க முடியாது. ரிஷியாகி விட்டான். பெரிய மனிதன் ஆனபிறகு தாய் தகப்பன் பற்றிச் சொல்ல முடியாது. இது தானே உலக வழக்கம். ரிஷிமூலம் என்று இதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

திரிசங்குக்குத் தோன்றியது. இப்போது ராஜரிஷியாக இருக்கும் அம்பரன் சரியில்லை. தலைக்கனம் அதிகமாகிவிட்ட்து. அவனுக்குப் பதிலாக விஸ்வாமித்திரனை நியமித்து விடலாம். அவனுடைய சீடர்களிடமிருந்து எதிப்புக் கிளம்பும் அதை சமாளிக்க வேண்டும். விஸ்வாமித்திரனையே கேட்டு விடலாம். ஆனால் அவனை, தப்பு தப்பு அவரை கேட்டால் தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுவிடுவான். முதலில் அம்பரனை ஒழித்துவிட்டால், அவனும் தயங்கமாட்டான். வர வர அம்பரனின் போக்குச் சரியில்லை. அவனும் பிராமணர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட்டான். அவனைப் பிரம்மரிஷி ஆக்குவதாக பேச்சு அடிபடுகிறது. அந்தப் பேச்சும் திரிசங்கு காதில் விழுந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அம்பரன் பிரம்மரிஷியாகிவிட்டால்? இப்போதே அவன் சரியில்லை. அப்புறம் அவ்வளவுதான். திரிசங்குவையே ஆட்டிவைப்பான்.
அன்றிலிருந்தே திட்டம் தீட்ட ஆரம்பித்தான். அம்பரனையும் அவனுடைய சீடர்களையும் எப்படி ஒழிப்பது? யாருக்கும் தெரியக்கூடாது. தன் பேரும் இதில் அடிபடக்கூடாது. ஏதோ ஒரு விபத்து மாதிரித் தெரியவேண்டும். யாராவது கொஞ்சம் சந்தேகப் பட்டாலும் அவர்களை ஒழித்துவிட வேண்டும்.

எட்டுமாதம் கழித்து ஒரு அம்மாவாசை நாளில், கங்கையில் சீடர்களுடன் அம்பரன் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. ஒருவரும் தப்பவில்லை. கரையில் அந்த நேரம் யாருமில்லை. அம்மாவாசையன்று யார் நதியில் பயணம் போவார்? இதில் ஏதோ சூது என்று நிறையப் பேருக்குச் சந்தேகம். ஆனால் பேசமுடியவில்லை. பெரிய இடத்து விஷயம். பேசி வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது. அதற்கு முந்தினநாள், அம்பரன் ஏதோ யாகத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தானாம். அவனும் அவன் சீடர்களும் நதிக்கு எப்பொழுது போனார்கள் என்பதே தெரியவில்லை. திரிசங்கு யாரையும் ராஜரிஷியாக நியமிக்கவில்லை. ஏதோ வருத்த்த்தில் கழித்தான் என்று பேசிக்கொண்டார்கள் ஜனங்கள். அம்பரனுக்கு முதல் திதி பண்ணிவிட்டுத் திரும்பிய அவன் மகனும் இரண்டாவது நாள் இறந்துவிட்டான். அப்பாவை இழந்த சோகம் என்று ஊரில் பேசிக் கொண்டதாக கேள்விப்பட்டான் மன்னன். அரசவையில் அப்படித்தான் சொன்னான். அவன் யூகிப்பதற்கு எதுவுமில்லை.

அடுத்த முறை விஸ்வாமித்திரன் அம்பரன் அவைக்கு வர இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அதுவரை ராஜரிஷி பதவி காலியாகவே இருந்தது. விஸ்வாமித்திரனுக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட்து. அவன் ராஜரிஷியாகிவிடலாம் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. குறிப்பாக, அம்பரன் மனைவிக்கு. ஏற்கனவே, திரிசங்கு கூப்பிட்டு ரகஸியமாகச் சொல்லிவிட்டான். வெளியில் தெரியாமலிருந்தால் இரண்டு கிராமங்களை தானங் கொடுப்பதாகச் சொன்னான். செத்துப் போன கணவனைவிட இரண்டு கிராமங்களின் வரி முக்கியமானதென்று அவளுக்குத்தெரியும். இன்னும் பலகாலத்துக்கு நன்றாக வாழலாம். அரசனின் பேச்சைக் கேட்காமலிருக்க முடியுமா? உயிர்.

ராஜரிஷி ஆனதும் விஸ்வாமித்திரனுக்குத் தனிக்களையே வந்து விட்ட்து. திரிசங்குவுக்கும் ரொம்ப வசதியாகிவிட்டது. இதுவரை ராஜரிஷியாக இருந்தவர்கள் எல்லாம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்கள். நல்லநாள் கெட்டநாள் சகுனம், வரி படைஎடுப்பு, தண்டனை, பதவி, தானம் சொல்லப் போனால் மனைவியுடன் ஒன்றாக இருப்பதற்குக் கூட ராஜரிஷியின் அனுமதி பெற்று, அவன் நேரம் குறித்துத் தந்த பின்னால்தான் முடியும். ஒரே கொட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திரிசங்கு கேட்டான் “ சொர்க்கம் என்றால் என்ன?”

விஸ்வாமித்திரன் சொன்னான் “ நானும் பார்த்த்தில்லை, ஆனால் அங்கே எல்லாவசதிகளும் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன்”´

அப்படியானால் நாம் சென்று பார்க்கலாமா?

அது முடியாது. செத்தபிறகு தான் அங்கே ஒருவனை அனுப்புவதா வேண்டாமா என்று
எமனுடைய காரியதரிசி சித்திரகுப்தன் தீர்மானிப்பான். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்

நாம் ஏன் பார்க்க முடியாது?

அது தான் முறை.

அதைமீறினால்?

மீற முடியாது
நான் அரசன் மீற முடியாதா?

முடியாது.

நீர்?

நானும் மீற முடியாது

அப்படியானால் ரிஷியான நீரே சொர்க்கம் போக முடியாதா?

விஸ்வாமித்திரன் யோசித்தான். “என்ன செய்வது? நானே அங்கே போக முடியாதா? ஒன்றும் தெரியாத அரசன் கேட்டுவிட்டான். அன்றிலிருந்து அவன் தூங்கவில்லை. இரவும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்தான். விஸ்வாமித்திரன் செய்யமுடியாத காரியம் உண்டா? என் தவ வலிமை என்ன என்பதைக் காட்டுகிறேன். சூளுரைத்துக் கொண்டான்.

அடுத்தநாள் காலையில் திரிசங்குவைச் சென்று பார்த்தான். தன் மனக் கிடக்கையைச்
சொன்னான். திரிசங்குக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ விளையாட்டுப் போக்கில் சொன்னது இப்படி ஆகி விட்டதே என்று வருந்தினான். ஆனால் விஸ்வாமித்திரன் கிளம்பிவிட்டான்.
இருபதாண்டுகள் தவமிருந்தான். ஊண், உறக்கம் இன்றி, வேறு எந்த நினைவுமின்றித் தவம். சிவனுக்கே பொறுக்கவில்லை. தேவரும் அவுணரும் பயந்தனர். விஸ்வாமித்திரனைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பிடிவாதம் பிடித்தவன். பிரதிவாதி பயங்கரம். எதுசொன்னாலும், ஏறுக்கு மாறாகத்தான் செய்வான். என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கினர். இந்திரன் தான் யோசனை சொன்னான். இவனையும் தேவர் குலத்தில் சேர்த்துவிடுவோம் அதுதான் சரியான வழி. பலசாலி, புத்திசாலி இவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அது ஆபத்து. அவன் நம்மை எதிர்ப்பான். நமது கட்சியில் சேர்த்துவிடுவோம். அதை அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். எல்லாமறிந்த சிவபெருமான் சிரித்தான்.

தேவர்கள் சார்பில் இந்திரன் வசிஷ்டனை அனுப்பினான். வசிஷ்டனும் பல வாரங்கள் விஸ்வாமித்திரன் தவக்குடிலின் முன் காத்திருந்தான். அவன் விழிப்பதாக இல்லை. வசிஷ்டனுக்குத் தானே விஸ்வாமித்திரன் தவத்தைக் கலைக்க மனமில்லை. என்னதான் அவன் க்ஷத்திரியனாக இருந்தாலும், தவசி. தன்னையொத்த துறவி மீது அவனுக்கு ஒரு பரிவு இருந்தது. அதுவும் இத்தனை கடுமையான தவக்கோலம் யாரும் பூமியில் பூண்டதில்லை. ஒரு பயமும் இருந்தது. தவத்தில் தன்னை மிஞ்சியவன் சக்தியிலும் தன்னை மிஞ்சிவிடுவானோ என்ற பயம். பலமிகுந்த அனைவருக்கும் எழும் பயம். அவன் தவத்தைக் கலைக்கும் போது கோபத்தில் ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்?அதிலிருந்து விடுபட அவன் காலிலேயே விழவேண்டும். பிரம்மரிஷிக்கு மனமில்லை. தான் பெற்றிருந்த வலிமை, துறவிகளின் தலைவன் என்ற பெருமை, எல்லாவற்றையும் இழக்க மனமில்லை. இந்திரனிடமே மீண்டும் சென்றான்.

இந்திரனுக்கும் ஒரு தயக்கம் இருந்தது. வசிஷ்டரால் முடியவில்லை என்றால் யாரால் முடியும். வசிஷ்டன் தவவலிமை இழந்தால் இந்திரனுக்கும் தேவர் குலத்துக்கும் இழப்புத்தான். இது மாதிரி தவ சிரேஷ்டன் இன்னொருவன் கிடைப்பானா? இப்போதே விஸ்வாமித்திரனை நினைத்தால் பயமாக இருக்கிறது. விஸ்வாமித்திரன் தவமும் கலையவேண்டும், நமது ராஜாங்கமும் நடைபெறவேண்டும். யோசித்து முடிவெடுத்தான்.

மேனகை. இந்திரனின் மிகநெருங்கிய காதலி. தேவர்களின் காமக்கிழத்தி. என்னதான் இந்திரனின் காமக் களியாட்டதின் தலைவியாக இருந்தாலும், அவனுக்கு அடிமைதானே. அவள் பெண். அவன் சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும். தேவ சபையின் நலன்
காக்கப்படவேண்டும்.

கலைந்தது தவம். மேனகை பெற்றாள் சாபம். கோபம் தணிந்த நேரம், வசிஷ்டன் அவனைப் பார்த்து வணக்கம் சொன்னான். விஸ்வாமித்திரனுக்கு ஆச்சரியம். வசிஷ்டரா? ஆம் வசிஷ்டரேதான். கோபம் தணிந்து புன்னகை பூத்தான்.

“ நமஸ்காரம் யாரைப் பார்க்க வந்தீர்கள் ஐயா?

உங்களைத்தான்

எங்களைத்தானா? நான் மிகவும் சிறியவன். நீங்கள் பிரம்மரிஷி. நீங்கள் என்னை?

அது நேற்று வரை. இன்று உன் தவ வலிமை என் பெருமையை மிஞ்சிவிட்ட்து. இன்றுமுதல்

நீயும் பிரம்மரிஷி

என்ன பிரம்மரிஷியா?

“பிரம்மனுக்கு ரிஷியா? பிராமணனுக்கு ரிஷியா?” ஆச்சரியத்துடன் கேட்டான் விஸ்வாமித்திரன்.

அவனுக்குப் புரிந்தது. என் தவ வலிமை மிகுந்த்தும் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்கள். ஒத்துக் கொள்ளலாமா? திரிசங்குவும் ஷத்திரிய குலமும் என்னாவது? ஆனால் மேல்நிலைக்குச் செல்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. நான் மட்டும் விதி விலக்கல்லவே? சரி என்று ஒத்துக் கொண்டான். வசிஷ்டன் அவனை இந்திர சபைக்கு அழைத்துச் சென்றான். அங்கே பலநாட்கள் கொண்டாட்டங்கள் நடந்தன. விஸ்வாமித்திரன் பூலோகத்தை மறந்தே போனான்.

இந்திரன் ஒரு நாள் நினைவூட்டினான். “விஸ்வாமித்திர்ரே, நீங்கள் சாபமிட்ட மேனகை
இன்னும் பூலோகத்தில் வாடிக்கொண்டிருக்கிறாள். அவளை உங்கள் பழைய சிஷ்யன் திரிசங்குவிடம் சேடியாகப் பணிபுரிய அனுப்பி இருக்கிறேன். அவனுக்கும் தெரியாது. இப்போது நீங்கள் தயை கூர்ந்து, அவளுக்குச் சாப விமோசனம் அளிக்கவேண்டும்”

இந்திரனின் சூது விஸ்வாமித்திரனுக்கு இப்போதுதான் புரிந்தது. மேனகையைவிட்டுத் தன் தவத்தைக் கலைத்தது, பின்னர் தன்னை தேவலோகத்தில் தனது அவையில் வைத்துக் கட்டுப் படுத்தியது, எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான். திரிசங்குவை நினைத்துப் பார்த்தான். தன்னை முதல் முதலாக அங்கீகரித்து, ராஜரிஷியாக்கியவன். அவனில்லாவிட்டால் தவம் செய்யப் போயிருக்கமாட்டேன். உடனே கிளம்பிவிட்டான்.

திரிசங்கு தூங்கிக் கொண்டிருந்தான். பக்கதில் மேனகை, லோகு என்ற பெயருடன் பணிவிடை செய்துவந்தாள். அவளுக்கும் தான் யாரென்று தெரியாது. எப்படி வந்தோம் என்பதும் நினைவில்லை. விஸ்வாமித்திரன் போனதும் திரிசங்கு விழுந்தடித்து ஓடிவந்தான்.

"தவசிரேஷ்டரே நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து காத்திருந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது நான் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தவம் முடிந்து இங்கே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் சேவகர்கள் தாங்கள் தவமிருந்த இடத்தில் உங்கள் வரவை நோக்கி இன்னும் நின்று கொண்டிருப்பார்கள்”
காலில் விழுந்தான். வயதான கோலத்தில் அவனைப்பார்த்த விஸ்வாமித்திரனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. முனிவன் தேவலோகத்தில் இருக்கும் வரை பூலோகத்தின் துயரங்கள் அவனை எட்டவில்லை. பூலோகம் வந்ததும் இப்படி நிகழ்ந்த்து ஆச்சரியமாக இருந்தது.

“கவலைப் படாதே. உன்னை நான் மறந்தது உண்மைதான். தேவகுமாரன் கொஞ்சம் என்னை தாமதிக்க வைத்துவிட்டான். உனக்காகத்தான் தவம் செய்யச் சென்றேன். சொர்க்கத்துக்கு உன்னை அனுப்பவே நான் தவமிருந்தேன். இத்தனைக் காலம் நீ கஷ்டப்பட்ட்தற்கு விடிவு வந்துவிட்ட்து. இப்போது என் தவ்வலிமையால் உன்னை சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன்.”

‘ஸ்வாமி, எனக்காக நீங்கள் இத்தனை கஷ்டப்பட்டபோது, நான் கொஞ்சம் கஷ்டப்படலாகாதா? நீங்கள் என்னுடனே இந்த ராஜியத்தில் இருக்க வேண்டும்.”
நீ ரொம்ப நாள் காத்திருந்துவிட்டாய். இனியும் உன்னை ஏமாற்றமாட்டேன். இதோ நீ, இந்த லோகு என்று இங்கே வந்த மேனகையுடன் தேவலோகம் செல்.” வானை நோக்கி இருவரையும் தள்ளினார் விஸ்வாமித்திரர்.

கொஞ்ச நேரத்தில் திரிசங்கு மீண்டும் அவர் காலடியில் பொத்தென்று விழுந்தான். விழுந்ததில் நல்ல அடிபட்டுவிட்டது. விஸ்வாமித்திரருக்கும் காலில் லேசான அடி. மேனகையைக் காணவில்லை. அவளை தேவ சபையில் சொர்க்கத்தில் உள்ளே விட்டு, திரிசங்குவை கீழே தள்ளிவிட்டார்கள் தேவலோகத்தில் இருந்த பிரம்மசபையினர். கோபத்துடன் எழுந்தார் விஸ்வாமித்திரர்.

திரிசங்கு சொன்னான் ”சொர்க்கத்தை வாசலில் இருந்து பார்த்தேன் அதுவே போதும்” விஸ்வாமித்திரன் யோசிக்க ஆரம்பித்தான். இப்படி அவன் கனவு நிறைவேறாது.

* * * * * * * * **

விஸ்வாமித்திரன் மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தான். பலயுகங்கள் கழிந்தன.

நந்தன் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு முன்னே வந்து நின்றான். வேலை செய்து செய்து உடம்பு மெலிந்து, ரொம்பவும் சீக்காளியாயிருந்தான். பிறந்ததிலிருந்து ஆண்டைக்கு அடிமையாக இருந்தே வாழ்நாள் கழிந்துவிட்டது. எத்தனை முறை முயன்றாலும் எந்த ஊரின் கோயிலுக்குள்ளும் அவன் நுழையமுடியவில்லை. நாயன்மார்களுடன் கலந்துவிடலாமென்றால், அவர்கள் இறைவனைப் பாடி ஊர் ஊராகச் செல்லும் போது எல்லோரும் முன்னே செல்ல அவன் நாற்பதடி பின்னே செல்லவேண்டியிருந்தது. ஆண்டை வயல்காட்டில் வேலையில்லாத காலங்களில் தான் பஜனைக் கூட்டத்தில் சேர அனுமதித்தார். அவன் இல்லாத வேளையில் அவன் மனைவியும் எட்டு வயது, பத்து வயதுப் பிள்ளைகளும் நந்தன் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது.

“இந்த நாறப் பொழப்புக்கு நீ சிவபெருமானைப் பார்க்காமலே இருக்கலாம். சிவபெருமான் உன் வேலையைக் குறைக்கலாம் எங்க வேலையை பெருக்கிட்டாரு. சாமி கும்பிட்டதெல்லாம் போதும், ஆண்டை குடுத்த வேலையை ஒழுங்காச் செய்யி” அவன் மனைவி கறுப்பாயி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் வேலை செய்து களைத்துவிட்டான். இனிமேல் முடியாது. வேலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி சைவ பக்திக் கூட்டதில சேர்றதுதான். நாற்பதடி பின்னாடி நடந்தாலும், வேளை தவறாமல், ஊர்தவறாமல் சோறு கிடைத்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். செப்பரடிகள் கூட்டத்தில் சேர்ந்து வந்ததுமுதல் பிரச்சனையில்லை. இறைவன் பேரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் போதும். செப்பரடிகள் சொல்லும் பாடல் வரிகளைத் திரும்பச் சொல்ல வேண்டும். இதைவிட எளிதான வேலை உண்டா? இரவும் பகலும் வயலில் ஓய்வு இல்லாமல் உழைத்த உடம்பு. கோயிலுக்குள்ள விடவில்லை என்றால் என்ன? ஆண்டைகிட்ட படறபாட்டுக்கு இங்க ஒண்ணுமே இல்ல. கயிலாயம் செல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அரற்ற ஆரம்பித்தான்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இறைவனின் அடிமையாவதுதான். இறைவனை வழிபடும் கூட்டங்களில் பித்தனைப் போல் அலைந்தான். செப்பரடிகளிடம் வந்து சேர்ந்ததிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது.

இன்னைக்குத்தான் சிதம்பரம் வந்து சேர்ந்தார் செப்பரடிகள். அவருடன் அவனையும் சேர்த்து இருபத்தி எட்டுப் பேர். எல்லோரும் கோயிலுக்குள் போய்விட்டார்கள். அவன் மட்டும் வெளியில் காத்திருந்தான். உண்டைக்கட்டிச் சோறு கிடைத்துவிடும். நேற்றுக் காலையில் சாப்பிட்டது. சில நேரங்களில் இப்படி ஆகிவிடும். எல்லோரும் தர்மவான்களாக இருப்பதில்லை. சிவனடியார்களாக இருந்தால் கூட. அவனுக்கு வேறு தெரியவில்லை. வேலைபார்த்துக் களைத்த உடம்பு. சரியான நேரத்தில் ஆகாரம் கேட்கும். கூட்டதிலிருந்து விலகி ஒளிந்து, புத்தமடத்தில் கெஞ்சிக் கூத்தாடிக் கிடைத்தது. புத்தமடம் கொஞ்சம் ரகஸியமாக நடப்பதால் யாருக்கும் தெரியாது. அந்தந்த ஊரில் சிலருக்கு மட்டும் தெரியும். புத்தமடம் இருக்குதென்று தெரிந்தால் அடி கொளுத்திவிடுவார்கள். அவனுக்குத் தெரியும். பசித்தவனுக்குத் தெரியாதா சோறு எங்கே கிடைக்குமென்று?

இருப்பதிலேயே வயசான புத்த துறவி கேட்டார் “எங்கள் மடத்தில் சேர்ந்துவிடு தினமும் சாப்பாடு கிடைக்கும் வேலை செய்ய ஆட்களே இல்லை” நந்தனுக்குத் தோன்றியது “அங்கயும் வேலைதானா. இந்தச் சனியன் நம்மை விடாது. சைவத்துக்குப் போனாலும், புத்தத்துக்குப் போனாலும். கூட ஆண்டை வேற வந்து அடிப்பான். "ஏண்டா இங்க சேந்தே". சைவத்தில வருஷம் முழுக்க ஆண்டைக்கிட்ட வேல பாத்துட்டு எப்பவாவது கூடப் போய்ச் சேந்துக்கலாம். புதுசாச் சிவனடியார் கூட்டத்தைத் தொடங்கினால் தலைவனாக ஆகிவிடலாம். பஞ்சமரின் அடியார் கூட்டம். ஆண்டையும் சாமி பேரச் சொன்னா முதல்ல திட்டினாலும், பிறகு பயத்தில் அனுமதித்து விடுவார். புத்த மடத்தில அப்படி முடியாது. சதா நேரமும் அங்கயே இருக்கணும். நல்லது தான் ஆனா ஆண்டை விடமாட்டாரே. ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி, என்ன வேணாலும் செய்வாரு. குண்டில சூட்டுக் கம்பியக்கூட விட்டுருவாங்க. வழிவழியா வர்ற வழக்கத்தை மீறிட்டான்னு தண்டம் போடுவாரு. சாவறதுக்கு பதிலா சைவ அடியார்ட்ட சேந்துக்கலாம். இதான் முடிவு என்று நின்று கொண்டிருந்தான். அப்ப பாத்து, இரண்டு பேரு, நந்தன் மகனை அழைத்துக் கொண்டு அவனிடம் வந்தார்கள்.

வந்ததும் அடிதான். நல்ல வாட்டமான கட்டைகளை எடுத்து அடித்தார்கள். “அடிக்காதீங்க, நடராஜரைப் பாக்காமலேயே வந்திர்ரேன். ஆண்டைக்கிட்ட வர்றேன்.” அவன் மகனும் அலறிக் கொண்டிருந்தான். நந்தன் உணர்வின்றிக் கிடந்தான். அவனை யாரும் தூக்க வரவில்லை. தொட்டால் தீட்டு. அப்போது தான் “அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்” என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்த செப்பரடிகள் அவனைப்பார்த்தார்.

அடித்தவர்கள் நால்வரும் ஆண்டையின் ஆட்கள் என்று அவருக்கும் தெரிந்தது. ந்நதனுக்காக பரிந்து பேச முடியாது. இவன் எங்கடா நம்மிடம் வந்தான் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளை தீட்டு ஒழிந்தது. இனி மனத்தடுமாற்றம் இன்றி அவர் இறைவனைப் பாடிப் பரவலாம். நந்தனின் மகனும் அடிவாங்கியதில் விழுந்து கிடந்தான். கொஞ்சம் உணர்வு வந்ததும் தட்டுத் தடுமாறிக் கொண்டே ஊரைப்பார்க்க நடந்தான். அப்பா இங்க கிடைக்காம இருந்திருந்தா பிழச்சிருப்பார் என்று முனகிக் கொண்டே சென்றான். நந்தனை அங்கே விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அவனால் தூக்க முடியாது. யாரும் வரவும் மாட்டார்கள். நந்தன் பிணத்தை நாய்கள் காகங்கள் தின்றுவிடும். நினைக்கும் போது அழுதான். சிவன் பேரைச் சொல்லிச் சாவதில் என்ன இருக்கிறது? அடிமை என்றும் அடிமை தான். ஆண்டைக்கோ அல்லது சிவனுக்கோ. சொன்னாலும் அவன் கேட்டதில்லை.

செப்பரடிகள் தூரத்திலிருந்தே சொன்னார் “தீக்கு தீட்டுக் கிடையாது. எண்ணைய விட்டுக் கொளுத்திடு” நந்தன் கோயிலுக்குள் போகாமலேயே எரிந்தான். இனிமேல் எந்த அடிமையும் சைவக் கூட்ட்த்தில் சேரமாட்டான். ஆனால் புலையனும் சிவன் பேரைச் சொன்னால் அவனுக்கு நான் அடிமை என்று உரக்கப் பேசலாம்.

விஸ்வாமித்திரன் இன்னும் தவம் கலையவில்லை. நந்தன் இறந்தது தெரிந்து ஒருமுறை விழித்துப் பார்த்தான். இன்னும் தவம் செய்ய வேண்டும்.

• * * * * * * ** *

“விஸ்வாமித்திரனுக்கு தேவலோகத்தைப் பற்றித் தெரியுமா? ஏதோ புது லோகத்தப் படைக்கப் போரேன்னு கிளம்பினாராமே? அது போலத்தான் இப்போ கிளம்பிருக்காங்க. தினம் ஒரு கட்சி. அன்னன்னைக்குச் சோத்துக்கே வழியில்லாத பயக எல்லாம் புது உலகம் படைப்போம் அப்படீன்னா புது உலகம் என்ன பொம்மைக்கடையா? ஊர்வலம் போவாங்க. தகராறு பண்ணுவாங்க. அடிவாங்குவானுக. ஒளிஞ்சிக்குவானுக. இதுதான நடக்கு காலங்காலமா மாவோயிஸ்டுங்கிறான், புத்திஸ்டுங்கறான். தலித்துங்கறான், நந்தனார்ங்கிறான் ” சென்னையில் நடந்த ஊர்வலத்தைப் பார்த்து, சுப்பிரமணியனும், செல்லையாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் சரித்திரப் பேராசிரியர்கள். தினமும் கடற்கரைச்சாலையில் உடற்பயிற்சிக்காக நடப்பவர்கள். அம்பெட்கர் சிலை வரும்போது அவரைப் பற்றிப் பேசுவார்கள், பெரியார் சிலைவந்தால் அவரைப் பற்றிப் பேசுவார்கள். விஸ்வாமித்திரன் சிலையாக இல்லை. அதனால் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது அவர்களுக்குத் தெரியாது. விஸ்வாமித்திரனும் தவமிருந்தே காற்றில் கரைந்துவிட்டான். அவன் ஏக்கம் கடைசிவரை தீரவே இல்லை.