Friday, December 18, 2009

அத்தியாயம் - 3
நாற்பது வருஷங்களுக்கு மேலாக்க்கனவு காண்பது எளிதல்ல.. கனவு காண்பது ஒரு கலை. கனவு காணத் தெரியணும். கனவு காண்றவங்களைத் தெரியணும். கனவு காண முதல்ல தூங்கத் தெரியணும். பகல் கனவுக்கு பகல் தூக்கம். ஈஸி சேர் வந்த்து கொஞ்சவருஷமாத்தான். அடுப்புக்களுக்குப் பின்புறம் இருக்கும் நீளவாட்டு இடத்தில் மணைப் பலகையின் மேல் தலை வைத்துஏதாவது புத்தகமோ பத்திரிக்கையோ வாசிக்கத் தொடங்குவார்.
“மணி மொழி என்னை மறந்துவிடு என்று தமிழ்வாணன் கேட்டால் மறுக்கமுடியாது அவரால். ‘கொலையுதிர்காலம் என்று புதிய காலம் அடுத்த மாதம் தொடங்கிவிடுமோ என்று பயந்து பகலில் காலை உதறியதும் உண்டு. ‘புளிய மரத்தின் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே புத்தகம் கை நழுவிக் கீழே விழுந்துவிடும். ‘என்ன தூக்கம்யா’ என்று முனகிக் கொண்டே கண்ணாடியைச் சரி செய்த்டு கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்குவதுண்டு. ரொம்பக் கண்ணசந்தால் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுப் படுப்பதும் உண்டு. ராத்திரி படித்துக் கிழிப்பது கிடையாது. வீட்டம்மாள்,எரிச்சலில் புத்தகத்தை கிழித்துப் போட்டுவிடுவாள் என்றபயம். இட்லிக் கடை வைத்தவர் எழுத்தாளர் ஆவதில் மனைவிக்கு ஆர்வமில்லை. கண் கெட்டால் ஊர்ல கண் டாக்டர் கூடக் கிடையாது. இன்னொரு செலவு.
நெல்லை மாவட்ட ஆணைக்குழுவின் ஓட்டப்பிடாரம் கிளையில் சடையப்ப பிள்ளைக்கு ஏகச் சுதந்திரம். நூலகருக்கு பலவேளைகளில் அவர் கடையிலிருந்து டீ கொடுத்தனுப்புவார். பொண்டாட்டி ஊருக்குப் போயிருந்தால் மூணு வேளையும் நூலகருக்குக் கதி சடையப்ப வள்ளல் தான். இது தவிர பத்து அஞ்சு என்று கொடுக்கல் வாங்கல் உண்டு. புதிய புத்தகம் வந்துஅதிசயம் நடந்தால் சடையப்பருக்காக எடுத்து வைத்திருப்பார் நூலகர். கறிச்சட்டியின் கரிபட்ட விரல் அச்சு சில புத்தகங்களில் இருப்பதாக இந்தச் சலுகையைக் கவனித்த மற்ற வாசகர்கள் கேட்டால் அமைதியாக இருப்பார்.
கொஞ்ச நாளாக எழுத்துப் பைத்தியம் பிடிக்க சில காரணங்கள் இருந்தன. “தமிழ்ல எவனுக்குய்யா எழுத்த் தெரியுது?” நான் தமிழ்ல படிக்கிறதேஇல்ல” என்று தமிழைக் குப்பையைப் போல் தள்ளிவிடுவோரின் அலட்டல்களும், மறுபடி மறுபடி அதே சரக்கை சமூக நாவல் என்றோ மர்ம நாவல் என்றோ மாதந்தோறும் பன்றிக் குட்டி போடும் சிலரும், இலக்கிய மடங்கள் உருவாக்கி நாந்தான் பெரியவாள், இவாள் அடுத்தவாள் என்று வாள் வாள் என்று கத்திக் கொண்டே வாள் சண்டைக்கு வருவோரும், பட்டம் மகுடம் என்று முடிசூட்டுவோரும் எழுதுவதை எல்லாம் படித்துப் புளித்துக் கிழித்துவிட்டார்.
எல்லோரையும் விட தனக்கு அதிகம் தெரியும் என்று சடையப்பருக்கு அபிப்பிராயம் இருந்தாலும், நூலகர் தன்னை பெரிய விமரிசகர் என்று நினைத்த்தில்லை. சோத்துக்கு இதுதான் வழி என்று வந்த பிறகு…. வண்டியிழுப்பவனுகு லாட்டரி விழுந்த்துபோல் சடையப்ப பிள்ளை எழுத்தாளனாகி விட்டால், ? அதனால் நூலகர் சடையப்ப பிள்ளையை ஆதரித்தார்.
“யாருங்க ஒழுங்கா எழுதுறா அவனவன் முதுகு சொறிய கூட்டம் தேடுதான். நல்ல எழுத்தாளன்ன எழுதிட்டுச் சும்மா இருக்க வேண்டியது தான. படிக்கிறவனுக்குத் தெரியாதோ? இதுல விமரிசனம்னு புருடாவேற. ஐநூறு காபி கூட விக்காத பயலுக நான் உலகத்தையே மாத்திப் போட்டேன்னு சொன்னா? நூலகரின் கருத்தில் சடையப்பருக்கும் உடன்பாடு உண்டு. நாற்பது வருஷத்துக்கு மேலாக எல்லாக் குப்பைகளையும், கோமேதகங்களையும் படித்துக் கொண்டிருக்கும் அவருக்குத் தெரியாத எதையும் எந்தக் கொம்பனும் எழுதிவிட முடியாது.
தினமும் பகல் தூக்கத்தில் அவர் கனவில் எழுதித் தள்ளிய கதைகளைக் காவியங்களை நாவல்களை எவனும் எழுத முடியாது. இவரே எழுதவில்லையே? பிறகு எவன் மிஞ்சுவான். அவை பகல் கனவுகள் மட்டுமல்ல. கனவுகாணும் நேரத்தில் நிஜம். கனவில் பயணம் செய்யும்போது அதற்கு வெளியிலும் பயணம் செய்ய முடியுமா?
மணி மூன்றாகிவிட்ட்து. கொஞ்சம் லேட். ‘திருப்புகழ் வாரியார் விரிவுரை’யைத் தலைக்கடியில் வைத்துவிட்டு… தூக்கத்தைத் தழுவினார். இன்று முருகன் பக்கரை விசித்ரமணி, பொற்கலனை இட்டநடையில் வருவானோ?(சாட்சாத் அவனே தான்) அல்லது கோமதியம்மாள் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு வருவாளோ?

No comments:

Post a Comment