Friday, December 18, 2009

அத்தியாயம் 6

ஒருநாள் ஓட்டப்பிடாரத்துக்கு ஒரு சாமிகள் வந்தார். ஜகத்குரு ஸ்ரி ராமானுஜதாச ஸ்வாமிஜி ன்னு கோட்டை ஐயங்கார் சொன்னார். – கோட்டை எல்லாம் போய் மூணு தலைமுறை ஆனாலும் கோட்டை ஐயங்கார்தான். கோட்டை விட்ட ஐயங்கார் – கோட்டை விட்டில் தங்கியிருந்தார். ரொம்ப ஆசாரமான குடும்பம். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருப்பார். கோட்டை ரொம்பப் பெருமையாச் சொன்னார். ஜகத்குரு ஏன் சின்ன ஊருக்கு வருகிறார்? பெரிய ஊர்களில் பெரிய குருக்கள் சின்ன ஊரில் சின்ன குருக்கள். பெரிசும் சிறிசும் சொத்துக்கள்.
கணபதியா பிள்ளை அதைக் கேள்விப்பட்டு பிள்ளையிடம் பேச்செடுத்தார். “ரொம்ப்ப் பெரிய’வாளாமே?”
“நீங்க வேற ஏடாகூடமாச் சொல்லிச் சண்டை இழுத்துவிட்ராதீரும்.. அவரு என்னை வேற வரச்சொல்லிட்டுப் போய்ட்டார். போகவா வேண்டாமான்னு இருக்கேன்.”
“ஸ்வாமிஜியெல்லாம் வந்தா ரொம்ப ஆசாரம் பாப்பாங்க. ஏற்கனவே ஆசாரமான இடமே பெரிய தொல்லையா இருக்கும். அவரு வேற இன்னும் ஆசாரம் பாத்தா.. உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க.. நான் வரலையா.. என்னையும் கூப்பிட்டாரு. நிறையப் பேரு போனா அவருக்குப் பெருமைதான். ஆனால் குனிஞ்சு கும்பிடு கால்ல விழு அப்பிடி இப்பிடிம்பாரு. நமக்குக் கஷ்டம்.”
“நம்ம மடாதிபதி ஆதீனம் வந்தா ஐயங்கார் வர்றாருல்ல. பிரசங்கம் முழுக்க கேட்டுட்டுத்தான் போவார். சாமிகள்ல் இந்த சாமி அந்த சாமி அப்படின்னு கிடையாதில்ல.” அவர் சொல்லச் சொல்ல கணபதியா பிள்ளையும் போக வேண்டியதாகிவிட்டது.
அங்கே சிம்மாசனம் போன்ற நாற்காலியில், பட்டுத்துணி விரித்து, அதில் தெய்வக்களை பொருந்திய ஸ்வாமிஜி உட்கார்ந்திருந்தார். காவி வேஷ்டியும், காவித்துண்டுமாக இருந்தாலும் அதன் பார்டரில் தங்க நிறத்தில் பட்டுவைத்து இழைத்திருந்த்து. அவர் முன்னால் தேங்காய பழம், பூ, அரிசி, மாவிலை வைத்த தண்ணீர்ச் செம்பு, எல்லாம் இருந்த்து. சடையப்ப பிள்ளைக்கு இது சாமியாரா கடவுளா என்று குழப்பமாக இருந்த்து. கந்தசாமி பிள்ளை இருந்திருந்தால் கேட்டிருக்கலாம், நம்ம ஆளுக இந்தச் சாமியாரைக் காலில் விழுந்து கும்பிடலாமா அல்லது கைகூப்பித் தொழுதால் போதுமா?
பத்து-இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னால் ச.பிள்ளையும், கணபதியா பிள்ளையும் போய் நின்று கொண்டார்கள். ஊதுபத்திப் புகையும், சாம்பிராணிப் புகையும் இன்னும் ஏதோ வாசனைகளும் வந்தன. முன்னாலிரண்டு பேர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டிருக்க பின்னால் ஒவ்வொருவராகச் செல்ல நின்று கொண்டிருந்தனர். பக்திமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மனிதர்களின் நடுவே முன்னால் பார்த்தார். அங்கே ஆண்டாளம்மாள் நின்று கொண்டிருந்தாள். ஊரிலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவச்சி. அவர் ஏதோ பேசினார் அதைக் கேட்டு எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
“மன அமைதியே இல்லாமலிருக்கின்றது.”
“தினமும் குத்து விளக்க ஏத்தி வப்பேளோல்லியோ? வச்சு. அம்பாளைப் பூஜை பண்ணுங்கோ. இப்படி தொடர்ந்து பண்ணினா மன அமைதி வரும்.”
அந்த அம்மாள் சொன்னாள் “நான் ஆஸ்பத்திரியில இருக்கேன். பிரசவமெல்லாம் பாக்கணும். வீட்டுக்கு வந்தா சுத்தமில்லையேன்னு விளக்குத் தெனமும் ஏத்தறதில்ல. எப்பவாவது தான் ஏத்துவேன்”
“அதாம் பாத்தேளா. சுத்த பத்தமா இருந்து, அம்பாளப் பூஜை செய்யுங்கோ. சாந்தி கிடைக்கும்.”
அந்த அம்மாள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்த்து. பாவம் அவள், என்ன செய்வாள்? வேலை அப்படி. தினமும் ஒரு கேஸாவது வந்து விடும். பிரசவம் பார்ப்பது லேசா? எவ்வளவு கஷ்டமான வேலை. அவ ஒருத்திதான் இந்த ஊர் டிஸ்பன்சரில இருக்கா. வேற யாரு பண்ணுவா. பிறகு இந்த ஊர்ல இந்த வேலைய யார்பாப்பா? என்னேன்னத்தை எல்லாம் அள்ளிப்போடணும். எல்லாம் அழுக்குத் தானே. அம்பாளுக்குச் சுத்தம் வேண்டும். தீட்டாயிடுமே”. குழந்தை பெறுவது கடவுளின் அருளால். பிரசவம் பார்ப்பது மட்டும் எப்படி அசுத்தமான செயலாகிவிடுகிறது? அப்போதிருந்து இந்த முரண்பாடை எப்படித் தீர்ப்பதென்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவருடைய எழுத்தாளப் புத்தி சும்மாவிடவில்லை. அவரைக் குடைந்து கொண்டே இருந்த்து. ஆனாலும், சாமியாரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, கடைகு வந்து சேர்ந்தார். ஊர்ப் பெரிய மனிதர்களிடம் அதுவே பேச்சாக இருந்த்து.
என்னைக்கும் இல்லாத திருநாளா ஆண்டாளம்மாள் கடைக்கு வந்து கொண்டிருந்தாள். பொதுவா வரமாட்டாளே? இங்க ஏன் வர்றா என்று யோசித்தார். ‘” ஒரு டீ குடுங்க “ என்றாள். குடுத்துக் கொண்டே கேட்டார் “வேலைய்யா இல்லையா?”
“கோவில்பட்டி போயிருக்காக”. “
சாமியார் என்ன சொன்னார்” கேட்டார்.
“தினம் பூஜை பண்ணனுமாம். அவுகளை கோவில்பட்டிக்கு மாத்திட்டாக. பிள்ளைகள் எங்கூட இருக்கு. ஆஸ்பத்திரி வேலையப் பாக்கவா? வீட்டு வேலையப் பாக்கவா? இல்லைன்னா கட கண்ணிக்குப் போகவா? இதுல தினம் சுத்தமா இருந்து பூஜை பண்ணவா? ரொம்பக் கஷ்டம். அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம். நாம் படற கஷ்டம் அம்பாளுக்குத் தெரியாமலா இருக்கு. ஏதோ மனச் சாந்திக்குப் இவார்ட்டப் போனேன். அவரு இப்படிச் சொல்றாரு. என்ன செய்ய?” ஆண்டாளம்மா சொல்லிவிட்டுப் போன பின்னாலும் அவள் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சடையப்ப பிள்ளையின் மனம் அப்படி? அவரின் இந்தக்குணம் அவருக்கே ஒரு குறையாகத்தான் பட்டது. உலகத்தில யார் கஷ்டப் பட்டாலும் அது தனக்கு வந்த கஷ்டம் மாதிரி யோசிப்பார். ஒரு உதவியும் செய்ய முடியலைன்னாலும் யோசிப்பார். அத்த்தவிர என்ன செய்ய முடியும்? அவருக்கு வக்கு அவ்வளவுதான்.
சாயந்தரம் கணபதியா பிள்ளை டீக்குடிக்க வந்தார். வழக்கம் போல இன்னைக்குப் பேச்சில சாமியார் வந்தார். அவர் வருவது பெரிய அதிசயம் என்று ஐயங்கார்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஐயர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், அவரைப் பார்த்து சேவித்தார்கள். இன்னும் நடுவில் பிள்ளை ஆண்டாளம்மாவின் பிரச்சனையைச் சொன்னார். ஒருமாதம் முன்பு தன் மனைவிக்குப் பிரசவம் பாத்திருந்த ஆண்டாளம்மாவை நல்ல வேலை செய்பவள் என்று காமாட்சி ஐயர் சொல்லிக் கொண்டிர்ந்தார். கணபதியா பிள்ளை குரலைக் கனைத்துக் கொண்டு தொடங்கும் போதே ஏதோ முக்கியமானதைச் சொல்ல வருகிறார் என்று சடையப்ப பிள்ளை கவனமாக்க் கேட்டார். எல்லா நாளையும் போல அன்றும் டீக்கடை மாநாட்டில் அவர் பேச்சு தான் எடுபடும்.
ஸ்வாமிஜியைப் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், தன் மனைவிக்கு ஆண்டாளம்மாள் அன்றைக்குப் பிரசவம் பார்க்கவில்லையெனில் அவளும் குழந்தையும் இறந்திருக்கக் கூடும் என்று காமாட்சி ஐயர் சொன்னார். கணபதியா பிள்ளை அதை ஆமோதித்தார். கடவுள் பூஜை என்று எவ்வளவுதான் நம்பினாலும், ஆண்டாளம்மாள் இல்லையென்றால் ஊரில் பலருக்கு சுகப்பிரசவம் நடந்திருக்காது. ரொம்ப நாள் விண்ணப்பங்கள் கொடுத்து, கலெக்டர்முதல் எம்.எல்.ஏ ., மந்திரி என்று பார்த்து அழுது ஊருக்கு வந்த அரசு டிஸ்பன்ஸரி ரொம்ப ஓகோ என்றில்லாவிட்டாலும் சில விஷயங்களில் செயல்பட்டு வந்தது. முதன் முதலாக ஆணுறைகளை விநியோகித்து, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கத்தோடும் கூச்சத்தோடும் ஆண்கள் சிரிப்பாய்ச் சிரித்து வெடித்தனர். சிலர் பலூனைப் போல் ஊதி வேடிக்கை காட்டி விளையாடினார்கள். இதெல்லாம் செய்வதைச் சொன்னால் அம்பாள் என்ன செய்வாளோ என்று ஊர்க்கார்ர்களுக்கு பயமும் இருந்தது. நீ சுத்தமில்லை பூஜை செய்யக் கூடாது என்று ஆண்டாளம்மாவிடம் சொல்லிவிட்டார். ஆண்டாளம்மா ரொம்ப பக்தி. வீட்ல பஜன பூஜை எல்லா ஏற்பாடு பண்றாங்க. சாமியார் அவங்க கிட்ட சொன்னது வர்றவங்களுக்குத் தெரிஞ்சா, எல்லாம் ஏடா கூடமாகிடும்.
மூன்றாவது நாளில் ஆண்டாளம்மா வீட்டில் சத்ய சாயிபாபா பூஜை என்று அவரையும் கூப்பிட்டிருந்தார்கள். அவர் போனபோது இருபது முப்பது பேர் உட்கார்ந்து பாபாவின் படத்தின் முன் பஜனை பாடிக்கொண்டிருந்தனர். வெள்ளைப் புடவை கட்டியிருந்த செல்லம்மாவும் இருந்தாள். அவளருகில் புளியனூத்து கிராம பாபா சமிதி தலைவர் செத்துப் போன கனகாம்பரம் பிள்ளையின் மனைவி கல்யாணி அம்மாள் கலர்ப் புடவை கட்டி உட்கார்ந்திருந்தாள். சடையப்ப பிள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்குள் பஜனை முடிந்து சுண்டல் விநியோகம் செய்தார்கள். பாபா புதிய ஸ்வாமியாகத் தோன்றினாலும், இவரைக் கும்பிடலாமா வேண்டாமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. பஜனை முடிந்ததும் கல்யாணியம்மாள் குட்டிப் பிரசங்கம் நடத்தினாள். அங்கே எந்த விதமான பேதமும் கிடையாது. யார் வேண்டுமானாலும் சமிதியில் சேரலாம். கட்டுப்பாடுகள், தீட்டு, பெண்கள் என்ற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. அன்றிலிருந்து ஆண்டாளம்மா வீட்டில் பெருமாளுக்குப் பக்கத்தில் சாயிபாபா சேர்ந்து கொண்டார். நாளாக நாளாக சடையப்ப பிள்ளையின் மனைவி கோமதியம்மாளும் சேர்ந்து கொண்டாள். அவளும்‘ எந்த பேதமும் கிடையாது’ என்பதை மந்திரம் போல் சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் சேரவேண்டுமென்று அவள் விரும்பினாலும், கடை கண்ணி வேலை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார்.
சாயிபாபாவின் படமும் புகழும் பரவிவிட்டது. அடுத்தமுறை கோட்டை ஐயங்கார் வீட்டுக்கு ராமானுஜ தாச ஸ்வாமிஜி வந்ததும் போனதும் நிறையப் பேருக்குத் தெரியவே இல்லை. அதற்கப்புறம் அவர் வருவதேயில்லை. ஐயங்கார் பேரன் ஆண்டாளம்மா வீட்டுப் பஜனையில் சிங்கி அடித்துக் கொண்டிருந்தான். அவன் அம்மா வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் புதிய பாடல்களை பஜனையில் பாட மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் சமிதியின் இந்த வருட்த்திலிருந்து தலைவியாம். கோமதியம்மாள் சடைவுடன் முனகிக் கொண்டிருந்தாள். அவள் தலைவியாக வர திட்டம் போடுகிறாளோ என்று சடையப்ப பிள்ளைக்குச் சந்தேகம். அங்கே தான் எந்த பேதமும் கிடையாதே.

No comments:

Post a Comment