Sunday, December 06, 2009

வில்லேருழவர் 4

நிற்கும் முறை

வில், அம்பு இலக்கு இவற்றின் தன்மையைப் புரிந்து கொண்டபின்னால், அம்பை எய்வதைக் கற்றுக் கொள்ள அமைதியும், பெருமிதமும் கொள்ளவேண்டும். அமைதி இதயத்திலிருந்து வரும். இதயம் பாதுகாப்பற்றுத் துன்பப்பட்டாலும், நல்ல நிலையில் நின்றுகொண்டால் எதையும் நன்றாகச் செய்யமுடியும் என்பதை அறியும். அழகு என்பது மேலோட்டமானதல்ல. அது மனிதன் தன்னையும், தன் வேலையையும் பெருமைப்படுத்தும் வழி. சில நேரங்களில் நிற்கும்முறை வசதியாக இல்லை என்றால், அது பொய் அல்லது செயற்கையானது என நினைக்காதே. அது கடினமாக இருப்பதால் உண்மையானது. வில்வீரன் தன் மரியாதையால் பெருமைப்படுத்துவதாக இலக்கு நினைத்துக் கொள்ள அது உதவுகிறது. நிற்கும் அழகு ரொம்ப வசதியானதல்ல அது அம்பை எய்வதற்கான மிகப் பொறுத்தமான நிலை. தேவையற்றவைகளை நீக்கினால் வருவது அழகு. வில்வீரன் எளிமையை, மனம் ஒருமுகப்படுவதைக் கண்டுகொள்கிறான். எவ்வளவு எளிமையானதாக, அமைதியானதாக நிற்கும் முறை இருக்கிறதோ அவ்வளவு எழிலானது. ஓரே நிறத்தில் இருப்பதால் பனி அழகாக இருக்கிறது, கடல் சமதளமாகத் தோன்றுவதால் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் பனியும் கடலும் ஆழமானவை. தங்களை அறிந்தவை..

அம்பைப் பிடிக்கும் முறை

அம்பைப் பிடிப்பதென்பது உன் உத்தேசத்தை தொடுவதாகும். அம்பு முழுவதையும் நீ பார்க்கவேண்டும், அதைச் பாதையில் செலுத்தும் இறகுகள் சரியாக இருக்கிறதா என்று பார். முனை கூர்மையாக இருக்கிறதென்பதை நிச்சயம் செய்து கொள்.

அது நேராக இருகிறதா, வளைந்தோ முந்தைய எய்தலில் பழுதுபட்டோ இருக்கிறதா என்பதை நிச்சயம் செய்துகொள். அம்பு அதன் எளிமையினாலும், எடைக்குறைவாலும் பலமில்லாததாக தோன்றக்கூடும். ஆனால் வில்வீரனின் பலம் என்பது அம்பு அவன் உடலின் மனதின் சக்தியை வெகுதூரம் கொண்டு போவதாக இருக்க வேண்டும்.

ஒரே அம்பினால் கப்பல் மூழ்கியதாக பழைய கதை ஒன்று உண்டு. கப்பலின் மரத்தில் எங்கே பலங்குறைந்த இடம் என்று வில்விட்டவனுக்குத் தெரியும். அதனால் கப்பலில் ஓட்டைவிழுந்து தண்ணீர் மெல்ல உள்ளே சென்று விட்ட்து. அதனால் அவனுடைய கிராமத்தை நோக்கிப் படைஎடுத்துவந்த எதிரிகளின் எண்ணம் சிதறியது.

அம்பு என்பது விட்டவனின் எண்ணம். தன்னிச்சையாகச் செல்கிறது. அதை விட்டபோது வில்வீரன் தேர்ந்தெடுத்த பாதையில் செல்கிறது. அது காற்றாலும், புவிஈர்ப்பினாலும் பாதிக்கப் படுகிறது. இவை அதன் பாதையின் ஒரு பகுதிதான். மரத்திலிருந்து புயலினால் கிழிந்தாலும் இலை இலையாகவே இருக்கிறது. மனிதனின் குறி நேராக, மிகச்சரியானதாக, உறுதியாக, இருக்கவேண்டும். இலக்கை நோக்கிய இடைவெளியை அது கடக்கும் போது யாரும் அதை நிறுத்த முடியாது.

வில்லைப் பிடிக்கும் முறை

அமைதியாக இரு. மூச்சை நன்றாக இழுத்து விடு. உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் உன் தோழர்கள் கவனிப்பார்கள். தேவையெனில் உதவுவார்கள். உன் எதிரியும் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதே. அச்சமற்ற கைகளுக்கும் நடுங்கும் கைகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எனவே பதட்டமாக இருந்தால் மூச்சை நன்றாக இழுத்துவிடு அது ஒவ்வொரு அடியிலும் உன் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

வில்லைக் கையில் எடுத்து உன் உடல்முன் –தகுந்த முறையில் - வைக்கும் தருணத்தில், அம்பு விடுவதற்கு, அதுவரை நீ செய்த ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைத்துப் பார். பதட்டம் இல்லாமல் இதைச் செய். ஏனெனில், எல்லா விதிகளையும் ஞாபகத்தில் வைக்க முடியாது. அமைதியான மனதில் நீ ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைக்கும்போது, மிக கடினமான எல்லாத் தருணங்களையும் அவற்றை நீ எவ்வாறு கடந்தாய் என்பதையும் காண்பாய். இது உனக்குத் தன்னம்பிக்கையைத் தரும் உன் கைகள் நடுங்குவது நின்றுவிடும்.

வில்லின் நாணை இழுக்கும் முறை

வில் ஒரு இசைக்கருவி. நாண் மூலம் அதன் ஒலி வெளிப்படுகிறது. நாண் மிக நீளமானது. வில் அதன் ஒரு புள்ளியைத்தான் தொடுகிறது. வில்வீரனின் அறிவும், அனுபவமும் அந்தப் புள்ளியில் தான் குவிக்கப்பட வேண்டும்.

அவன் இடப்புறமோ வலப்புறமோ சிறிதும் சாய்ந்தால், அந்தப் புள்ளி வில்செல்லும் வழியிலிருந்து கீழோ மேலோ இருந்தால், அவன் இலக்கை அடிக்க முடியாது. எனவே நாணை இழுக்கும்போது, இசைக்கருவியை இயக்கும் கலைஞன் போல் இரு. இசையில் இடத்தை/ இடைவெளியை விட, காலம் முக்கியமானது. எழுதப்பட்ட இசையின் சுர வரிகள் பொருளற்றவை. அதைப் வாசிக்கத் தெரிந்தவன் சுர வரிகளை இசையாகயும், தாளகதியாகவும் மாற்றமுடியும்.

இலக்கை, அதன் இருப்பை வில்வீரன் சாத்தியப்படுத்துவது போலவே, அம்பு வில்லின் இருப்பை சாத்தியப்படுத்துகிறது. அம்பைக் உன் கைகளால் நீ வீசலாம். ஆனால் அம்பு இல்லாத வில் பயனற்றது.
அதனால், கைகளை நீட்டும் போது வில்லின் நீட்சியாக உன்னை நினைக்காதே. அம்பு சலனமற்ற மையம் எனவும் நீ வில்லையும், நாணையும் அருகில் கொண்டுவருவதாகவும் நினை.

வில்லின் நாணை மெல்லத் தொடு. அதன் துணையை வேண்டு.

No comments:

Post a Comment