Friday, December 18, 2009

சடையப்ப பிள்ளையின் பகல் கனவுகள் 1

சடையப்ப பிள்ளை திடீரென்று என் வீட்டுக்கு வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. தெரு முனையில் நின்று கொண்டிருப்பதாகவும் வந்து அழைத்துப் போகும் படியும் செல்போனில் சொன்னார். எப்படி வந்தார்? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.
இரண்டாவது தளத்திலிருந்த என் வீட்டிலிருந்து கீழே சென்று நிற்கும் போது கொஞ்சம் தள்ளியிருந்த தொகுப்பு வீடுகளின் முன்னே நின்றுகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்க்கவில்லை. அழைத்தால் வந்துவிடுவார். எப்படிக் கூப்பிடுவது? “ஐயா, இங்க” நான் இரண்டாவது முறை கூப்பிடுவதற்குள் என்னைப் பார்த்துவிட்டார்.
வியப்பாக இருந்தது. நீண்ட வெண்தாடியும், தொப்பையும் முப்பது வருடங்களுக்கு முன்னிருந்தவாறே இருந்தன. தலை கலைந்திருந்த்து. கையில் ஒரு பெரிய சூட்கேஸ். வாங்கிக் கொண்டேன்.
நானொன்றும் பெரிய வீட்டில் இல்லையென்றாலும், அவர் முன்னரே தகவல் சொல்லாமல் வந்திருந்தாலும், சடையப்ப பிள்ளையை என்னால் மறக்க முடியாது. இப்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வகையில் அவரும் காரணம். புத்தகம் படிப்பதில், அதை விவாதிப்பதில் சிறுவயதில் எனக்குத் துணையாய் இருந்தவர்.
நகரத்தில் அனுபவிக்கும் அனைத்துத் துயரங்களோடும் கிராமத்திலிருந்த ஒரு பொன்னான உலகின் கற்பனையில் மூழ்கியிருக்கும் எனக்கு அவர் வந்தது கனவுலகிலிருந்து ஒரு நினைவுப் பொக்கிஷம் வந்தது போலிருந்தது. காலையில் வேலைக்குப் போகும் போது அவருக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கி வைத்து விட்டுப் போனேன். “இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க..சாயந்தரம் வந்து பேசுவோம்.. வேற ஏதாவது அவசர வேலையிருக்கா?” கேட்டேன். “ஒண்ணும் இல்லை” என்று மிக மெதுவாகச் சொன்னார். பொதுவாக சத்தம் போட்டு பேசும் அவர் குரல் அமைதியாக ஒலித்து என்னமோ போலிருந்தது எனக்கு. படியிறங்கிப் போகும் போது அவர் கண்களைக் கூர்ந்து கவனித்தேன். அசாதாரணமான கூர்மை தெரிந்தது. பஸ் ஏறி அலுவலகம் செல்லும் வரை அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பதினைந்து பதினாறு வயதுப் பருவத்தில் அவர் கடையில் அமர்ந்து, நானும், சேகரும் பாலுவும் அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அவ்வப்போது இட்லி வடை இவற்றின் விற்பனைக்கு நடுவில் சடையப்ப பிள்ளையும் கலந்து கொள்வார். முதலில், அவர் கடையில் டீகுடிக்கிறோம் என்பதனால் பேசுகிறார் என்று நான் நினைத்ததுண்டு. போகப் போகத்தெரிந்த்து. கதை கவிதைகளில் அவருக்கு ஆர்வம் இருந்த்து. எனக்கும் அவருக்கும் இருபத்தைந்து வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கும். ‘நம்ப கணபதியா பிள்ளையின் பேரன்” என்ற பாசம் இருந்திருக்கலாம். எனக்கும் புதிதாய் அம்மா அப்பாவுடன் குடிபோன சின்ன ஊரில் வசதியாக இருந்தது.
சாயந்திரம், ஆறுமணிக்கு வந்தேன். அவர் குளித்து முடித்து வழக்கம் போல கம்பீரமாக என் அறையில் எப்போதும் உடையக் காத்திருக்கும் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று அந்தக்காலத்தில் சொல்வது போல் சொல்வார் என்று எதிர் பார்த்தேன். அமைதியாக இருந்தார். மாறியிருக்க்க் கூடும். முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட்து. நானே எத்தனையோ மாறிவிட்டேன்.
நேற்றியிலிருந்த திருநீற்றுப் பட்டை அளவு குறைந்திருந்த்து. கைகளிலும் முப்பட்டை, தெரிந்தும் தெரியாத மாதிரித் தீட்டியிருந்தார்.. வெள்ளைச்சட்டையும், வேட்டியும் அணிந்து தாடியுடன் மிகத்தெளிந்த ஞானிபோலத் தெரிந்தார். துவைக்கப் பயந்து பல வண்ணச் சட்டைகளைப் பல நாட்கள் அணியும் எனக்கு அது எவ்வளவு கஷ்டம் என்று தோன்றியது. சட்டைக்குள் உருத்திராட்சக் கொட்டை தெரிந்த்து. இன்னும் விடவில்லை. கீழிரங்கி முருகன் கடையில் டீக்குடித்துவிட்டு நடந்து கொண்டே பேச ஆரம்பித்தோம்.
“தம்பி, சில கதைகள் எழுதியிருக்கேன். அதை வெளியிடணும்” அவர் சொன்ன வேகமும் அப்போது முகத்திலும் உடலிலும் ஏற்பட்ட பதட்டமும் ஏதோ தண்ணீருக்குல் மூழ்கிக் கொண்டிருப்பவர் மாதிரித் தெரிந்த்து. கண்களைப் பார்த்தேன் தீர்க்கமான அசாதாரணமான பார்வை.
“சரி முயற்சிப்போம்”
“நிறைய இருக்கு. நாலஞ்சு புத்தகம் தேறும். இப்பவே வேலையை ஆரம்பிச்சாத்தான் முடியும்.” அவருக்கு இந்த வயதில் என்ன அவசரம் என்று புரியவில்லை. எழுவது எழுவத்தைந்து வயதில். ஹூம் அவசரம் இருக்க்க் கூடும். ஏதாவது வியாதியோ? பயமாக இருந்த்து எனக்கு. சரியான வருமானம் இல்லாமல் திருமணம் குடும்பம் எல்லாவற்றுக்கும் பயந்து வாழும் நானொன்றும் அவ்வளவு பெரிய ஆசாமி அல்ல என்று இவருக்குத் தெரியுமோ? நான் என்னுடைய இயலாமையைச் சொன்னேன். இருபது வருடமாக இந்தப் பெரிய நகரத்தில் இருந்தாலும் நான் சிபாரிசு செய்த்தும் புத்தகம் வெளியிடும் அளவுக்கு எந்த புத்தக வியாபாரியையும் தெரியாது.
“தம்பி நீங்க மலர் பதிப்பகத்தில தான இருக்கீங்க?’
“ஆமா, அங்க சாதாரண வேலையாள்.” ஊரில் பெருமைக்கு எடிட்டர் என்று சும்மா சொல்லி வைத்திருந்தேன். அதை நம்பி வந்து விட்டாரோ? சில நேரங்களில் இப்படி நேர்ந்துவிடுகிறது. அவரும் என்னைப் போன்றே எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்தான். சின்ன வயதில் நகரத்துக்கு வந்து ‘வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன்.’ பசிக்காக கனவுகளை விற்றுவிட்டேன். பாவம் இவர் இத்தனை வருடங்களாக கனவுகளைச் சுமந்திருக்கிறார். கனவுகளின் பாரம் அதீதமானது. அவற்றைத் தூக்கிக்கொண்டு இத்தனை வருட்ங்கள் வாழ அமானுஷ்யப் பலம் வேண்டும். வந்திருக்கிறார்.
அவருக்குச் சமாதானமாகச் சொன்னேன். “கொஞ்சநாள் முயற்சிசெய்தால் நடக்கும்…எனக்கும் துணைக்காச்சு.”
“உங்க கடை.அதான் இட்லிக்கடை என்னாச்சு என்ன செஞ்சீங்க?
“அதான் நம்ப முருகண்ட்ட குடுத்திட்டேன்”
“அப்போ கோமதியம்மா?”
“அவ போயி நாலு மாதமாகுது”
அதிர்ச்சியிலிருந்து மீள ஒரு நிமிடம் ஆனது. மரணம் எப்போதும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. “ஐயோ எப்படி ஆச்சு?”
“போய்ட்டா திடீர்னு”
“வயசொண்ணும் அவ்வளவு இல்லையே?”
“ஊஹூம்” சொல்லிவிட்டுக் கலங்கினார்.
கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். நிரந்தரமாக இருக்கும் எண்ணத்தில்தான் வந்திருக்க வேண்டும். இருபது முப்பது வருடங்கள் தாமதித்து விட்டாரோ? அலைய வேண்டியிருக்குமே? சின்ன வயசில வந்த என்னாலயே முடியல. எழுத்தாளன எவன் மதிக்கான் இந்த ஊரில.

சாப்பிட்டுவிட்டுத் இருவரும் தூங்கும் போது மணி பத்தாகிவிட்டது. அவர் குறட்டை சன்னமாகத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் பெரியதாக்க் கேட்ட்து. சீராக இல்லாமல், விட்டுவிட்டு. சில நொடிகளில் நின்று அமைதியானது மூச்சு. எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. ஏதாவது ஆகிவிட்டால்? புதுச் சத்தத்தில் தூங்க முடியும் என்று தோன்றவில்லை.
இத்தனை வருடங்களாகி விட்ட்து. கதை கவிதை கனவு வேகம் எல்லாம் போய் மரக்கட்டையாய் இருந்து கொண்டிருந்த எனக்கு.. அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று படிக்க வேண்டும் என்று தோன்றியது. நம்முடன் இருந்த ஒருவர் நம்மைவிட நன்றாக எழுதினால் மனதில் வரும் பொறாமையும் பெருமையும், .. எனக்கும் அதுதானோ?
நான் சின்னவயதில் எழுதாத எதை எழுதியிருப்பார்? ஒரே ஊரில் ஒரே கடையில் உட்கார்ந்து அவருடன் ஊரிலிருந்த பலரைப் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருந்த்தெல்லாம் ஞாபகம் வந்தது. அவரும் நானும் கனவு கண்ட காலங்கள். என்னை அதைப் படி இதை எழுது இப்படி எழுதுன்னு சொல்லிக் கொண்டிருப்பார். நான் வெற்றி பெற்றிருந்தால் அந்தப் பெருமையில் மகிழ்ந்திருப்பார். இப்போதென்ன? அவர் எழுத்துக்கள் வெளிவந்தால் எனக்குப் பெருமைதான்.
பதினொரு மணிக்கு அவருடைய சூட்கேஸை சத்தமில்லாமல் திறந்தேன். நானும் ‘எடிட்டர்’ என்பது ஞாபகம் வந்தது. உள்ளே ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பேப்பர் கட்டுத் தெரிந்தது. இருட்டில், இன்னும் இரண்டு கட்டுக்கள் தெரிந்தன. ஒரு கட்டை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளறையின் கதவைச் சாத்திவிட்டு, காகிதங்களைப் பிரித்தேன்.
எனது கடந்த காலம், ஊர், மனிதர்கள் உள்ளே நினைவுகளாய் கோணல் கோணலான எழுத்துக்களில் வரிவரியாய் பக்கம் பக்கமாய்க் கிடந்தது. ரெடிமேட் துணிக்கடையில் ஒவ்வொரு சட்டையாய் எடுத்துப் பார்ப்பது போல் படிக்க ஆரம்பித்தேன். எது கதை எது நினைவு எது பொய் எல்லாம் நானாகத்தான் தெரிந்தேன் இருந்தேன்.

No comments:

Post a Comment