Friday, December 18, 2009

• அத்தியாயம் -4- * * * * * * * * * * * * * * *

சடையப்ப்பிள்ளையின் கடைக்குத் தினமும் டீக்குடிக்க வந்தவர்களில் கணபதியாபிள்ளையை அவரால் மறக்க முடியாது. ஆறு பத்துக்கெல்லாம் வந்து விடுவார். ‘உங்க கையால டீக் குடிச்சாத்தான் நல்லா இருக்கு”. நெட்டையான மெலிந்த தேகம். கண்ணு நல்ல முண்டக்கண்ணு. நாலுமுழக் கைத்தறி வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார். அவர் உயரத்துக்கு அது பத்தாது என்றாலும் அந்தப் பழக்கம்தான். பாகவதர்மாதிரிக் கிராப்பு.. குளித்துவிட்டு மேலெல்லாம் திருநீறு தீட்டிப் பக்திப் பழமாகத்தான் வருவார். வரும்போதே “சேக்கிழார் மாதிரி இருக்கீக அண்ணாச்சி. நீண்ட வெண் முடிச்சடையும், தழையத் தொங்கும் வெண்தாடியும், பரந்த் நெற்றிமுழுக்கப் பதாகையிடும் திருநீறும்’ என்று நக்கலடிப்பார். சிலநேரம் இரண்டு பேருமாய்ச் சேர்ந்து சிவன் கோவிலில் நடக்கு பக்திப் பேருரைகளில் முன் வரிசையில் அமர்ந்து உரையாற்றுபவர்களை பரவசத்தில் ஆழ்த்தியதும் உண்டு. முன்னைப் பழம்பொருளும், பின்னைப் பெரும்பொருளும் என்று ராத்திரி பேச ஆரம்பித்தால் பண்டார சந்நிதானத்தின் பெருசும் சிறுசும் பேசுவது போலிருக்கும்.
ஆபீஸுக்குப் போகும் போது இன்னொருதரம் டீக் குடிக்க வருவார். ஆறுமணிக்குப் பேப்பரில் படித்த விஷயங்களைச் செரித்து ஒன்பது மணிக்கு கடைக்கு வரும்போது விமரிசனம் செய்வார். அவர் பேச்சைக் கேட்பதற்கென்று பலர் காத்திருப்பது போல் கூட்டம் இருக்கும். பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்கள் இரைச்சலுக்கு நடுவில் .அவர் குரல் தனித்து ஒலிக்கும். அன்றைக்கும் அப்படித்தான் ஒலித்த்து.
“கடையத் திறக்கப் போறானாம்ல” என்று தொடங்கினார்.
தலைப்பாய அவிழ்த்து உட்கார்ந்து கொண்டிருந்த பாண்டித் தேவர் சொன்னார் “டீக்கடையை திறந்தாங்க டீக்குடிச்சுப் பழக்கமாயிட்டுது. அறுபது வருஷம் முந்தி டீக்கடை, காபிக்கடை சிகரெட்டுக் கடை ஏது?”
“டீக்கடையத் திறந்த்துக்கு அப்பறம் டீக் குடிக்காம இருக்க முடியல. அதை வேற திறந்தா?” கணபதியாபிள்ளை நிறுத்திவிட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தார். அவர் கூட பிளாக் ஆபிஸில் வேலை பார்க்கும் ராம்மூர்த்தி முகத்தில் சிரிப்புப் கொப்பளித்த்து. அவ்வப் போது கிடைத்த போது ரகசியமாக குடித்து வந்தவர் சொன்னார் “பிள்ளைவாள், இட்லிக்கடை வச்சா. இட்லி சாப்பிட்டோம். அடுத்துடீப் போட ஆரம்பிச்சார் டீக்குடிக்க ஆரம்பிச்சோம். ஒரு நாளைக்கு மூணு நாலு டீக் குடிக்கிறோம். அடுத்துப் பிள்ளை…..” அத்துடன் நிறுத்திவிட்டார். இருந்தவர்கள் எல்லோரும் வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டனர்.
சடையப்ப பிள்ளையின் உருவம் அப்படி. நல்ல உயரம். தாட்டியமான உடம்பு. பிள்ளையாருக்கிருப்பது போல் தொந்தி. தலையில் சிவபெருமான் போல கொண்டை. நெற்றியில் மூன்றுவிரல் பட்டை. தோளிலும் கைகளில் மூன்று இடங்களிலும், வயிற்றிலும் முப்பட்டைகள். கழுத்தில் பெரிய பெரிய உருத்திராட்சக் கொட்டை. முக்கால்வாசித் தொந்தியை மூடிக்கொண்டிருக்கும் வேட்டி. அந்த நேரம்தான். கீய்…ய்ய் என்று சத்தம் கேட்ட்து. ஒன்பது மணி லயன் வந்திட்டான். நடராஜ பிள்ளைதான் டிரைவர்.
ராம்மூர்த்தி நிறுத்தி கொஞ்ச நேரம் கழித்து பிள்ளை சொன்னார் “ஹூம் சாராயக்கடை திறந்தா ஜனம் தட்டழிஞ்சில்ல போகும்” அவர் சுபாவம் அப்படி. அதிகமாகப் பேசமாட்டார். அப்ப்ப பாத்து கதர் ஜிப்பாவும் வேட்டியுமா சி.ஆர்.எஸ். வந்தார். அவருக்கு சடையப்ப பிள்ளை டீக்கடையக் கண்டாலே பிடிக்காது. லோ கிளாஸ் ஆளுக, பேச்சு கூப்பாடு. கணபதியா பிள்ளை சொன்னார் “ராஜாஜி வர்றார்” பக்கத்தில் ரேஷன் கடை வைத்திருந்தார். நாள் பூராம் இருந்தாலும் வெளியில இருந்து பச்சைத் தண்ணி கூடச் சாப்பிட மாட்டாரு. கௌரவக் குறைச்சல். , .
நல்ல நேரம்பார்த்து கீழ முடிமன் போற வழியில போலிஸ் ஸ்டேஷன் பக்கத்தில் அரசாங்க அனுமதியோட சாராயக் கடை திறந்தான். கவர்மெண்ட்டுக்கு வருமானம் காணாதாம். கணபதியா பிள்ளையும், ராம்மூர்த்தி ஐயரும் முதலில் சாயந்தர டீயை நிறுத்தினார்கள். அப்பவே சடையப்ப பிள்ளைக்குப் புரிந்துவிட்ட்து. ரண்டு மூன்று தடவை ஜாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தார். கேட்கிற மாதிரி இல்ல. வீணாச் சடவு எதுக்குன்னு விட்டுட்டாரு. கடைக்கு வர்றத் நிறுத்திட்டாங்க.
தூக்கம் கலைந்துவிட்ட்து. பலவருஷம் முன்னால செத்துப் போன கணபதியாபிள்ளை இன்னைக்குத் தூக்கத்தைக் கலச்சிட்டார். “மணி மூணரை ஆச்சு” முருகன் சொன்னது எழுந்து உட்கார்ந்தார். முகத்தை கழுஇ திருநீறு போசி வருவதற்கும் கடை வாசலில் பிரேமா வந்து நிற்பதற்கும் சரியாக இருந்த்து.
என்ன அழகான முகம். லக்ஷ்மிகரம். நல்ல சிவப்பு அப்பனைப் போல. கன்னம் ரோசாப்பு மாதிரி இருக்கு. அவ அம்மாவும் அழகுதான். அவர் டீக் குடிக்கத விடாம இருந்தா இப்படி ஆய்ருக்குமா?
“என்னம்மா வேணும்?”
“தாத்தா, ரெண்டு வடையும், ஒரு டீயும்” சின்னத் தூக்குச் சட்டியை நீட்டினாள். அவுக அம்மாவுக்கு மட்டும் வடையா? இவளுக்கும் கிடைகுமா? ஒரு வடையை சும்மா குடுத்து விடலாம். முருகன் இருக்கானே. கோமதிட்ட குசும்பு சொல்லிட்டா? அவ கத்துவா? பெரிய இவுஹோ? தானம் தண்ணிபட்டபாடு.. அவள் இழுப்பதை கற்பனை பண்ணிக் கொண்டு சும்மா இருந்தார். கருணை இருந்தா மட்டுங்காணாது செய்யத் தைரியம் வேணும். இன்னொண்ணும் இருக்கு. ஒரு நாக் கொடுத்தா, தெனம் எதிர் பாப்பா. இட்லிக்கடைக்காரனுக்கு கருணை கசப்பைக் கொடுக்கும். ஏதோ கிராமத்தில வியாபாரம் ஓடுது. இதுமாதிரி ஆரம்பிச்சா.. அறிவு எச்சரிக்கை கொடுத்த்தும் கை சுருங்கிக் கொள்ளும். பகலில் காணும் கனவுக்கும் பிரேமாவுக்கும் சம்பந்தம் உண்டா? எழுதறவனுக்கும் எழுதறதுக்கும் உள்ள சம்பந்தந்தான. கொஞ்சநேரம் குழம்பினாலும் சுதாரித்துக் கொள்வார். பிள்ளை குட்டி இருந்தா இப்படித் தோணாதோ?
பிரேமாவின் அம்மா, அதான் பார்வதி, செத்துப் போன கணபதியாபிள்ளை சம்சாரம். சாயங்காலம் சீவி சிங்காரிச்சுத் தயாராக இருப்பாள். அவள் நிறத்துக்கும் முகத்துக்கும் இந்தச் சின்ன ஊரில் நல்ல கிராக்கி உண்டு. அவரு இட்லிக் கடை ஓடலயா?
டீப் போட்டுக் கொண்டே யோசித்தார். “அவளுந்தா என்ன செய்வா? ஆபிஸ் பணத்தை கையாடிக் குடிச்சு கும்மாளம் போட்டு, சீரழிஞ்சு சஸ்பெண்ட் ஆகி அவர் சாகும் போது ஒத்தக் காசில்ல கைல… கூடவே சுத்தி வந்து லட்சுமணப்பய கவுத்திட்டான். விளங்குவானா? எத்த்னையோ வெள்ளப் புடவைக்காரி இருக்காளுக, உலகம்மா இல்லையா? மாவாட்டி, முருக்குச் சுத்தி பிழைக்கிற பொம்பளைக..வாழ்ந்த வாழ்வுன்னு ஒண்ணு இருக்குல்ல.. அந்தப் பவுசிலயே இருக்கணும்னா? பிறவு அழகுன்னு ஒண்ணு இருக்கே. சுத்திவர நாய்களும் இருக்கு… சும்மா இருக்க முடியுமா?
வடையத் தாளில் சுத்தி..டீயைத் தூக்குச் சட்டியில் அவளிடம் கொடுத்தார். “அவ அம்மா… இவளையும்….” நினக்கும் போதே பதட்டமாக இருந்த்து. கள்ளுக் கடைகளைத் திறந்துவிட்ட முதலமைச்சரைத் திட்டினார். அவருக்கென்ன பவுசாத்தான் இருக்கார்.
பிரேமா போய்விட்டாள்.
அதற்கு மேல் கடையில் சாயந்தரக் கூட்டம் வர ஆரம்பித்துவிட்ட்து.
இரவு பத்தரை மணிக்கு கடையைப் பூட்டும்போது…லக்ஷ்மணனும் கூட லோகநாதனும் மைனர் மாதிரி வாயில் புகையும், கையில் பூவும் இன்னொரு கையில் சிகரெட்டும்… நடையில் ஆட்டமுமாக நடுத் தெருவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
சடையப்ப பிள்ளைக்கு இருந்த களைப்பில் இரவில் படுத்த்தும் தூங்கிப் போய்விடுவார். இரவில் கனவு காண்பது அவருக்குப் பழக்கமில்லை.
* * * * * * * * * * * *

No comments:

Post a Comment