Tuesday, December 01, 2009

கல்வி கல்லூரி கட்டுப்பாடு காதல், கற்பு இன்னபிற.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அறிவு மனிதனின் அறிவுதேட்டத்தை, தாகத்தை, வாழ்வு மற்றும் சூழல் குறித்த புரிதலை வளர்க்கவேண்டும் என்பது தான் அவற்றை அமைப்பதற்கான காரணம், குறிக்கோள். நமது வசதிக்காக அறிவியல், சமூகவியல் போன்ற பெயர்களாக, துறைகளாக பிரித்தாலும் அறிவும் ஞானமும் அப்படிப் பிரிக்கக் கூடியவை அல்ல. நமது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே உள்ள தகவல்களைப் புகட்டும்/திணிக்கும் இடங்கள் என்ற வரையறையில் தான் இங்கு செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன. அறிவைத் தேடும் இடங்கள் என்று மாற்றி அமைத்தால் தான் கல்வியின் உண்மையான குறிக்கோள் நிறைவேறும். ஞானத்தைத் தேடும் எந்த இடத்திலும் இருக்க வேண்டியது சுதந்திரம். சுதந்திரமும், சிந்தனையும் மிக நெருங்கியவை. இந்தச் சுதந்திரம் நமது கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் இருக்கிறதா?
இப்போது இருக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருக்கும் பல கட்டுப்பாடுகளுக்கும், கல்வியின் முதற்பணியான அறிவுத் தேடலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கல்லூரிகள் தொழிற்துறைக்கான வேலையாட்களைத் தயார் செய்யும் அறிவுத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஓரளவுக்கு இது தேவை என்றாலும் இதுமட்டுமே கல்வியின் பணி அல்ல. தகவல் தொழில் நுட்பப் பட்டதாரிகள் தொழிற்துறைக்குத் தேவை என்று நாம் பல்லாயிரக்கணக்கான தகவல், தொழிற்நுட்பத் துறைசார்ந்த கணிணியியல் பட்ட்தாரிகளை உருவாக்கிவிட்டோம். அவர்களும் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள் நல்லது. இருபத்தி ஒராம் நூற்றாண்டில் ஒரு நாட்டுக்கு கணிணி வல்லுனர்கள் மட்டும் போதுமா? மிகச் சிறப்பாகப் பயிலும் அனைவரும் தொழில்நுட்பக் கல்வி பயிலப் போய்விட்டால், மற்ற துறைகளில் மிகச் சிறந்த மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தேவை இல்லையா? இலக்கியத்துக்கோ, வரலாற்றுக்கோ, சமூகவியலுக்கோ மிகச்சிறந்த மாணவர்களின் தேவையில்லையா?
இப்படிக் கேள்விகளை நமது கல்வியாளர்கள் ஏன் கேட்கவில்லை? கேட்டார்களெனின் பெற்ற விடை என்ன? நிலைமையை மாற்ற என்ன செய்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகள் நமது ஊடகங்களில் எழவே இல்லை. இந்தக் கேள்விகளை அதற்கான பதில்களை, புதிய தலைமுறையினர் சந்திக்கவேண்டும்.
மிகச்சிறப்பாக இயற்பியல் படிக்கும் மாணவன் இயற்பியலில் கல்வியைத் தொடராமல், தொழில்நுட்பப் படிப்பைப் படிப்பதால் அவனுக்கு லாபம் என்றாலும் தேசத்துக்கு நட்டம்தானே? தனிமாணவனைக் குறை சொல்ல முடியாது. அவன் நல்ல சம்பளம் பெறும் இடத்தில் தான் சேருவான். அந்த மாணவனைப் பொறுத்தவரை அதுதான் சரி.
அடுத்த தலைமுறையினருக்கு ஆங்கிலம், தமிழ் வரலாறு, இயற்பியல், வேதியியல் கணிதம் கற்பிக்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை இல்லையா? மிகச் சிறந்த மாணவர்கள் அனைவரும் இந்தத் துறைகளைத் தவிர்த்தால், நல்ல ஆசிரியர் வேலைக்கு யார் வருவார்கள்? நல்ல ஆசிரியர்கள் இந்தப் பாடங்களைக் கற்பிக்க வில்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு தேர்ந்த தொழில்நுட்பப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களை யார் தயார் செய்வார்கள்? ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியில் பாடங்களுக்கும் பொறியியல் பாடங்களுக்கும் உள்ள உறவு எல்லோரும் அறிந்தது தானே.
எனவே அறிவியல் பாடங்களை படிப்பதற்கும், ஆசிரியப்பணி செய்வதற்கும் நமது மிகச்சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பது அவசியம். நல்ல வருமானம் தான் நல்ல படிப்பாளிகளை ஈர்க்கும் என்றால், ஆசிரியப்பணிகளுக்கும் அத்தகைய ஈர்ப்பை ஏற்படுத்துவது அவசியம்.
பள்ளிகளையும் கல்லூரிகளையும் வியாபாரமாக நடத்தினால், குறைவான சம்பளம் நிறைய வேலை என்று கூலி வேலை செய்வது போல் நடத்தினால் அறிவு எப்படி வளரும்? ஆத்திரம்தான் வளரும். இன்னொன்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று கல்லூரி, பள்ளி நடத்தும் பெரும்பாலோர், அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்பதிலேயே அவர்களின் கல்வி ஆர்வம் தெரிந்துவிடும். ரவுடிகளாகவும், மோசமான சூதாடிகளாகவும் இருந்தவர்கள் கல்வித்துறைக்கு வந்தால், அங்கே என்ன நடக்கிறது? தாங்கள் ஒழுக்கமாக இல்லாதவர்கள் பெரிய கல்வி நிறுவனங்களை நிறுவி, மாணவர்களுக்கு ஒழுக்கம் என்று அவர்கள் கருதுகிற விஷயங்களைத் திணிப்பது எந்த அளவுக்கு நியாயம்? இவர்களின் மனத் திரிபுகளுக்கும் கல்விக்கும் என்ன உறவு இருக்கிறது?
உதாரணமாக, மாணவனும் மாணவியும் கல்லூரி வளாகத்தில் பேசக்கூடாது. கல்லூரிப்பேருந்தில் பேசக்கூடாது. (சிரிப்பது என்பது மரணதண்டனைக்குண்டான குற்றம்). அவர்கள் எல்லாம் என்ன சர்க்கஸ் மிருகங்களா? கல்விக்கூடங்களை மருத்துவமனைகளாக ஆக்கிவிடுவார்களா? மதிப்பெண் குறையக் கூடாது. குறைந்தால் பெற்றோரைக் கூட்டி வரவேண்டும். தாளாளர் அவர்களை அவமானப் படுத்துவதைப் மாணவன் சகித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளை உதாரணம் காட்டும் நாம் இந்த விஷயத்தில் வெளிநாடுகளைப் போன்று செயல்படமுடியுமா? முடியாதா?
அறிவை வளர்ப்பதை விட்டு, கல்விக்கூடங்களைப் தொழிற்சாலைகள் போல், ஆசிரியர்களைப் பிச்சைக்கார்ர்களைப் போல், மாணவர்களைக் கைதிகளைப் போல், நடத்தும் கல்லூரிகள் நமக்கு அடிமைகளைத்தான் உற்பத்தி செய்து தரும். சுதந்திரச் சிந்தனை, எதையும் கேள்வி கேட்கும் தேடல் இதையெல்லாம் நசுக்கிவிட்டால், புதிய சிந்தனையாளர்கள் எங்கே பிறப்பார்கள்?
பெரிய ஆச்சரியம் என்ன என்றால் பெற்றோர்களுக்கும் இந்த அடிமை வளர்ப்பு முறைதான் பிடித்திருக்கிறது. பையன் சுதந்திரமாகச் சிந்தித்துவிட்டால், போச்சு. காதலித்துவிடுவான். கெட்டுவிடுவான். வரதட்சணை வாங்கமாட்டான். ஜாதிவிட்டு திருமணம் முடித்துவிடுவான். நாம் சொன்னதை செய்ய மாட்டான். சுருக்கமாகச் சொன்னால், நமக்கும் அடிமையாக இருக்க மாட்டான். அவர்களுக்கும் அடிமைதான் வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா? அல்லது எதிர்காலம் அடிமைகளில் காலமாகத்தான் இருக்க வேண்டுமா?
கெட்டுவிடுதல் என்ற விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்ளுதல் என்பது கெட்டுவிடுதல் என்பதாக கருதப் படுகிறது. பன்னிரண்டு-பதின்மூன்று வயதிலிருந்து எழும் இயல்பான, (உணவைப்போலவே தேவையான) இன்னொரு பசியை அடக்கிவைப்பதால் தேவையற்ற மனக்குழப்பமும், உடல் அவதியும் ஏற்படுகின்றன. இந்த பதின் பருவப் பசியை காதலென்று கருதி, திருமணத்தில் அது முடியவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால், (ஏனேனில் காதல் திருமணத்தில் தான் முடியவேண்டும் அல்லது பெண்ணோ ஆணோ – கெட்டுப் போய்விட்டதாக அர்த்தம்) திருமணம் முடித்து, படித்து முன்னேராமல் பாழாகிற ஆண்களும் பெண்களும் உண்டு. இது பதின்பருவத்தின் பசி என்று உணர்ந்து, அதற்கு வடிகால் கிடைத்தால், அதை அனுபவித்து ஒதுக்கிவிட்டு, மற்ற நேரங்களில் படிப்பையும், வேலையையும் மனஉளைச்சல் இன்றித் தொடரும் வழியே சரியானதெனப் படுகிறது. மற்றும் ஒரு பலனும் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புரிந்து கொள்ள முடியும். அதனால், கல்விக் கூடங்களில் குறிப்பாக கல்லூரிகளில் பேசக்கூடாது பார்க்கக் கூடாது என்ற தடைகள் இருப்பது மன, சமூக வளர்ச்சிக்கு உதவாது. இப்போது என்ன நடக்கிறதென்றால், இந்தப் பதின் பருவத்துப் பசியை அடக்கமுடியாமல் அனுபவிக்கவும் முடியாமல், மன அழுத்தத்துடன் இந்தப் பருவத்தைக் கழிக்கும் இளம் வயதினரைத்தான் காண்கிறோம். பெண்களைப் பற்றி ஆண்களுக்கும் ஆண்களைப் பற்றிப் பெண்களுக்கும் இருக்கும் பல தவறான புரிதல்களுக்கு இது தான் காரணம். நமது கலாச்சாரம் இப்படி இருந்ததில்லை. இலைமறை காயாகவும் நேரடியான விழாக்கள் மூலமாகவும் நடந்தே வந்திருக்கிறது. இப்போதும், இந்த வயதினர் வாய்ப்புக் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தவே செய்கின்றனர். நிலைமை இப்படி இருக்க அதை மூடி வைத்து விடுவதால் எந்தப் பயனும் இல்லை. வெளிப்படையாக பிரச்சனைகளைப் பேசினால் தான் இது வெளிவரும்.
மேலும் கற்பு என்ற கருத்தே மிகவும் அயோக்கியத்தனமாகத்தான் சமூகத்தில் கையாளப்படுகிறது. பலருக்கும் இதே கருத்து இருந்தாலும் சொன்னால், குஷ்புவுக்கு நேர்ந்த கதி நேரும் என்று பயந்துபோய் சொல்லாமல் இருக்கின்றனர்.
பெண் உடல் பெண்ணுக்குச் சொந்தமானது. குறிப்பிட்ட வயதுக்கப்புறம் அவள் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது போலவே ஆணுடலும் ஆணுக்குச் சொந்தமானது. இப்போது உடல் இச்சையைப் பொறுத்தவரை திருமணம் ஒன்றுதான் சமூகத்தால் அனுமதிக்கப் பட்ட முறை. அது பெற்றோர் கையில் ஒரு அடக்கியாளும் ஆயுதமாக கையாளப்படுகிறது. வரதட்சணை,(பெரும்பாலான) மாமியார்-மருமகள் சண்டைகள், போலிச் சடங்குகள் அவற்றை நிறைவேற்றுவதில் ஆடம்பரம், (பணம் இல்லாதவர்களைப் பொறுத்தவரை) வெட்டிச் செலவுகள், அனைத்தும் இதன் விளைவுகள். முதல் முதலாக பெண்ணை அல்லது ஆணை திருமணத்தன்று இரவில் சந்திக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு இல்லறம் நடத்த வேண்டிய அளவு மன, உடல் பக்குவம் திடீரென்று எப்படி வரும்?
இப்போது எழும் புதிய தலைமுறை இதையெல்லாம் மீற எத்தனிக்கிறது. அது நல்லதென்றேபடுகிறது. காதல் திருமணங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, தகவல் தொழிற்நுட்பக் கணிணித்துறையில், சமூக கட்டுக்களை உடைத்தல் இயல்பாக நடைபெறுகிறது. உடலுறவு என்பது தேனீர் குடிப்பது அல்லது உணவு உண்பது போன்று நடைபெறும் நிலையில் அது தனக்கான சரியான இடத்தை அடைகிறது. எந்த கலாச்சார மேதை, கலாச்சாரப் போலீஸாராலும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இது மேலெழும். இளைஞர்களின் பாதை புதியதாகவும், சமூகத்துக்குத் தேவையானதாகவும் இருக்கிறது.
உடனே கூக்குரல் எழும். காட்டுமிராண்டித்தனமாக வாழ வேண்டுமா? நாம் இப்போது காட்டுமிராண்டிகளாக வாழவில்லை. இனிமேலும் வாழப்போவதும் இல்லை. மனிதகுலம் தனக்கு நல்லது எது என்று காலப்போக்கில் நிர்ணயித்துக் கொள்ளும். எப்படி இப்போது மனிதகுலம் சுற்றுச் சூழலைப் பற்றி யோசிக்கிறதோ அப்படியே உடலுறவு முறைகளைப் பற்றியும் சிந்திக்கும். காட்டுமிராண்டிகள் ஆவோமா என்பது கேள்வி அல்ல. இப்போது இருக்கும் அடக்குமுறைக் காதல்களை மீறி எழுவோமா என்பதே கேள்வி.
யாரையும் யாரும் தெரிந்து ஏமாற்றக்கூடாது. ஒத்து வரவில்லை என்று ஆனபின்னால் அதை மூடிவைத்து என்ன பயன்? பிள்ளைகள் நிலைமை மோசமாகிவிடும் என்பது இன்னொன்று. மனம் ஒன்றியிராத தாய்-தகப்பன் நடுவில் வாழும் பிள்ளைகள் மட்டும் மோசமாக ஆகிவிடாதா? இப்போது ஆகவில்லையா? ஆண்களும் பெண்களும் விவாகரத்துச் செய்துகொள்ளும் வழியை எளிமையாக்கிவிட்டால், பல குடும்பங்களில் மகிழ்ச்சியின்றிக் குமைந்துகொண்டிருக்கும் மனங்கள் அமைதிபெறும். நாம் வாழப்போவதென்னவோ கொஞ்ச வருடங்கள் அதில் மகிழ்ச்சியாகக் கழிப்பதை விட்டு, மனக்கஷ்டத்துடன் ஏன் வாழவேண்டும்? தினமும் சண்டையிட்டு, டென்ஷனாகி, நோய்கள் உண்டாகி, வாடி வதங்கி ஏன் சாகவேண்டும். வாழும் போது சுய கௌரவத்துடன் வாழ வேண்டும்.
இந்தக் காலத்து தலைமுறையும் இதைப்பற்றி சிந்திக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment