Friday, December 18, 2009

அத்தியாயம் 2

ரொம்ப நாளாக சடையப்ப பிள்ளைக்கு ஆசை. ரொம்ப வருஷங்களாக என்று தான் சொல்ல வேண்டும். ஐம்பது வயசு வரை மனசுக்குள் மூடி வைத்திருந்த அக்கினிக் குஞ்சு இப்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்ட்து. சிறிய மெழுகுதிரி போல் தொடங்கி…சொக்கப்பனையாக …அதைவிடப் பெரிதாக…
அவருடன் இட்லிக் கடையில் கூடமாட ஒத்தாசை செய்யும் முருகனுக்கு இது விபரீதமாகத் தோன்றியது. இந்த வயசில் இந்த ஆசையா? பெரிய எழுத்தாள்னாகனும்… சின்ன வயசில் பள்ளிக்கூட்த்தில பதினொண்ணாங்கிளாசில பெயிலானதுல இருந்து அவருக்குள்ள நுழைந்த வெறி. நான் எவ்வளவு பெரிய அறிவாளியாக்கும் என்று நிரூபிக்க…இந்தப் பரிட்சை எழவெல்லாம் என்னை ஒடுக்க முடியாது என்று அவருக்குள் ஒரு சங்கல்பம்.
“பதினொண்ணாங் கிளாஸ் பாஸ் ஆனதுங் கூட்டு வாங்க பேங்க்ல வேல போட்டுத் தாரேன்ன்னு பெரிய ஆபிசராக இருந்த முத்தையா பிள்ளை சொல்லிட்டுப் போனதில இருந்து உலகநாத பிள்ளைக்கு மகன் பேங்க்ல வேலை பாக்றதாக் கனவு. கழுத கெட்டாக் குட்டிச் செவருன்னு ஓட்டப்பிடாரத்தில இட்லிக்கடை போடவேண்டியதாச்சு. ஆசை இருக்குத் தாஸில் பண்ண..
முருகனுக்கு ஒரே குழப்பமாக இருந்த்து. ஐயா ஏதாவது பத்திரிக்கைல எழுதப் போய் மெட்ராஸுக்குப் போனா…கடைய என்ன செய்வாரு…? நமக்குத் தெரிஞ்சது இட்லிக்கடையும் இவரும் இந்த ஊருந்தான். சடையப்பரின் வீட்டம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான். …கோமதியம்மாளுக்கு அந்த குழப்பமில்லை. “அவுகளுக்கென்ன.. ஏதாவது பேசுவாக…ரொம்ப வருஷம்மா கேட்டுக்கிட்ருக்கேன். பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம்” ஒரே வரியில் அவரைச் சிலுவையில் அறையும் தைரியம் யாருக்கு வரும்?
வெய்யில் கொளுத்திக்க் கொண்டிருந்த மே மாதம் பதின்மூன்றாம் தேதி ஓட்டப்பிடாரத்தில் பெரிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் கூடினார்கள். மாபெரும் இலக்கிய மாநாடு என்று தெருக்களில் மூன்று இடங்களில் துணிப் பேனர்கள் மறித்துக் கை காட்டின. பல வெற்றுச் சுவர்களில் ‘இலக்கியக் கூத்தர்’ கந்தசாமிப் பிள்ளையின் அறுபதாவது பிறந்தநாள் மற்றும் இலக்கிய விழா’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் எல்லோரையும் வரவேற்றன. கழுத்தில் மாலையுடன் கந்தசாமிப் பிள்ளை வருக வருக என்று தங்கப் பதக்கம் சிவாஜி மீசையுடன் வரவேற்று மிரட்டிக் கொண்டிருந்தார்.
சாப்பாடும் தங்குமிடமும் ஓசி. தமிழ் எழுத்தாளர்களுக்கு அது போதாதா. காக்காய்க் கூட்டமாய்ப் பறந்து வந்துவிட்டார்கள். ரொம்ப நல்ல புத்தகம்னா ஐநூறு பிரதி விற்றுவிடும் தமிழ் ஞான உலகின் பிதாமகன்கள்.
சடையப்ப பிள்ளைக்கு தானே தலைமை தாங்குவது போலிருந்த்து. கந்தசாமிப் பிள்ளையும் அவரும் வேறா என்ன? முப்பது வருடங்களுக்கு முன்னால் ஏதொ கையெழுத்துப் பத்திரிக்கையில் கொசுறுப்பணி ஆற்றியதில் வந்த பெயரையும் புகழையும் வைத்துக் கதையை ஓட்டிக் கொண்டிருந்தார் கந்தசாமிப் பிள்ளை. அவ்வப்போது புத்தகங்கள் படிப்பதும் உண்டு. அலமாரி நிறையப் புத்தக்ங்கள் இருந்தாலும் யாருக்கும் கொடுப்பது கிடையாது. படிப்பதும் கிடையாது என்பது அவரறிந்த ரகஸியம். தமிழ் எழுத்தாளர்கள், படிப்பாளிகள் பலர் திருடர்கள் – புத்தகத்தை மட்டுமல்ல உள்ளடக்கத்தையும் திருடுவார்கள் - என்பது மட்டும் காரணமல்ல. லட்சங்கள் கிடைத்தால் கொள்ளைக்கார்ர்கள் கூட்ட்த்தில் தலைமை தாங்கும் தகுதி உள்ள நல்லவர்கள் என்பது அவருக்குத் தெரியும்.
கந்தசாமிப் பிள்ளையின் இலக்கியப் பங்களிப்புகளைவிட சடையப்ப பிள்ளையின் இலக்கிய ஆர்வம் மிக அதிகம். ஆனால் இட்லிக்கடை வைத்திருப்பவர் திருவள்ளூவரே ஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் எடுபடமாட்டார் என்பது கந்தசாமிப் பிள்ளைக்குத் தெரியும். நகைக்கடைக்கார்ரும் துணிக்கடைக்கார்ரும் இலக்கியம் படைக்கும் போது நான் இட்லிக்கடையிலிருந்து இலக்கியம் படைக்க முடியாதா என்பது சடையப்பரின் வாதம்.
அவர் தமிழில் (பிறகென்ன இங்கிலீஷிலா? ஏன்யா வயித் தெரிச்சலக் கிளப்புதியோ) இதுவரை ஒன்றுமே எழுதியதில்லை என்பதோ, யாரும் அவரை எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கமாட்டார்கள் என்பதோ ஒரு பொருட்டல்ல. தினமும் மதிய உணவிற்குப் பின் அரைத்தூக்கத்தில் எழுதிக் குவித்த காவியங்கள் எத்தனை என்பது இந்த அலட்டல் சிகாமணிகளுக்குத் தெரியுமா?
இருபது பேர் தாடிக்கார்ர்கள். மூன்றுபேர் முழுவழுக்கை, ஏழுபேர் பேண்ட் ஜீன்ஸ், வேட்டி சிகர்ரெட் சகிதமாக ஐந்துபேர், ஜிப்பாவில் நான்கு, ஜோல்னாப் பையுடன் பதினொருபேர்… இன்னும் எந்த தனித்துவமும் இல்லாமல் இருபத்தி மூன்றுபேர். சாப்பாட்டுக் கணக்காக சடையப்ப பிள்ளை மனதில் இத்தனைபேர் வெளியூர்க்கார்ர்கள். உள்ளூரில் ஒத்தாசையாக பன்னிரண்டுபேர் – கணக்கெழுத அரைகுறையாப் படித்த எதிர்காலத்து மலர் பதிப்பக எடிட்டர்.
சடையப்ப்பிள்ளை கூடுதலாக நாலைந்து பேரை வைத்துக் கொண்டு வயிற்றுத் தேவைகளுக்குச் செய்த சிறந்த சேவையில் பட்ட படாத பாட்டில் இலக்கியவாதிகளின் கருத்துப் பறிமாற்றங்களைக் கேட்க முடியாததாகி விட்டது. மூன்று நாட்களிலும் வேலை வேலை வேலை. இலக்கியத்துக்குப் பெருநஷ்டம் என்று சடையப்ப பிள்ளை வருத்தப் பட்டார். வந்திருந்த எழுத்தாளர்களும் சடையப்ப பிள்ளையைச் சட்டை செய்யவில்லை. அவனுக எதோ வானத்தில இருந்து வந்த தேவதைகள் மாதிரி. எகத்தாளம் புடிச்ச பயலுக. எதையொ நினச்சுக்கிட்டு எதையொ சொல்லுவானுக. குத்தல் குறும்பு நக்கல் ஒண்ணும் குறைச்சல் கிடையாது.
கந்தசாமிப் பிள்ளையும் கூட்டத்துக்கெல்லாம் கூப்பிடாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லும்வாக்கில் சொல்லிவிட்டார். இவருக்குக் கொஞ்சம் வருத்தம். காசு எப்போது கிடைக்கும் என்பது கவலையாக இருந்தது. இலக்கியத்தைப் பற்றித்தான் பேசமுடியவில்லை. இட்லிக் காசாவது வந்து சேர வேண்டுமே? இன்னொருபக்கம் யாருமே தன்னை இலக்கியவாதியாகச் சொல்லாத்து மனதில் பெரிதாக உறுத்தியது. எழுதுறவன் தான் இலக்கியவாதியா? அவனுக என்னத்தப் படிக்கானுக? எப்பவுமே எழுத முயலாத, தெளிவுள்ள வாசகனைவிடப் படிக்க முடியுமா? அவன விட பெரிய இலக்கியவாதி யாரு? எந்தச் சார்பும் இல்லாம வாழ்க்கையப் பார்க்க முடியுமா? இவனுக எழுதிக் கிழிக்கதெல்லாம் படிச்சுத் தொலைக்கானே அது என்ன லேசான வேலையா? ஏதோ ஒரு ஞானமுள்ள வாசகனுக்காக எழுதறதா பீத்ரானுக..
நடுநடுவில் சாப்பாடு பறிமாறும் போது, அவர் காதில் விழுந்த்து. ‘சிறுகதைன்னா தொடக்கம் உச்சம்னு இருக்கணும்”
“ஆமா பெரிய இவனுக …வாழ்கையென்ன தொடக்கம் உச்சம் என்று கிரம்ம் வைத்துக் கொண்டா போகிறது”
“நாவல்னா விரிந்த கென்வாஸில் த்த்துவம் பேசவேண்டும்”
வாழ்க்கை த்த்துவமாகவா பூக்கிறது. நாவலில் வாழ்க்கை வெளிப்பட்டால் போதாதா? மற்றதை வாசகன் பார்த்துக் கொள்ள மாட்டானா? தாடிக்காரர்களும் மொட்டைத் தலையர்களும் ஜிப்பாக்கார்ர்களும் பயமுறுத்துவதினால் தான் நிறையப் பேர் படிப்பதில்லை. படித்தவன் எழுதுவதில்லை. ஏன் நான் கூட எழுதுவதில்லை. ஏதாவதொரு அளவு கோலை வைத்துக்கொண்டு, எந்த குரூப் எந்தநடை, நம்ம கூட வருவானா விசுவாசமா இருப்பானா என்று ரகளை பண்ணிவிடுவார்கள். இப்படி வெளுப்பவர்களிடம் தன்னைப் போன்ற அப்பாவிகளின் வார்த்தைகள் எடுபடாது என்றே சடையப்ப பிள்ளைக்குத் தெரிந்திருந்த்து.
மதியக் கனவுகளில் எல்லா வகைக் கதைகளையும் எழுதி, மற்றவர்களின் கதையைக்கூட்த் திருத்தி எழுதி – இது கனவில் தானே கைகூடும். – கிட்டும் சுகமே தனி. புதுமைப் பித்தனோ, கோணங்கியோ இன்றுவந்த …….வோ அவருடைய கனவுக் கத்தரிக் கோலில் எவரும் தப்பியதில்லை. இதுமாதிரிக் கிறுக்கன் எவனாவது உண்டா? என்று அவரே கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் கந்தசாமிப் பிள்ளையவிட தான் பெரிய இலக்கியவாதிங்கிறதல சந்தேகம் இல்லை.
தனக்கும் விடிவு வராதான்னு கனவு கண்டு கொண்டிருந்தார். அவ்வப்போது சாயந்தரத்துக்கு மேல போகும் எல்லோருக்கும் கனவு மிட்டாய்கள் கிடைக்கும்.
ஒருநாள் தில்லையாடும் எம்பெருமான் திரிகால மூர்த்தி அவர் கனவில் வந்தார். “சடையப்பா நீ பாட்டுக்கு கனவு கண்டுகொண்டு இரு. நீ நினைக்க நினைக்க கணபதி எழுதிக் கொள்வான். வெற்றி உனக்கே” என்று அருள் கூறிச் சென்றுவிட்டார். சடையப்பருக்கு ஆச்சரியம். வேண்டுதல் வேண்டாமை இல்லாமலேயே எப்படி வந்தார் கடவுள். கனவில் வந்த்து சிவபெருமானா? சிவாஜி கணேசனா? கணபதின்னா ஆதிமூல கணபதியா எப்படி எழுதுவான். யார் அச்சடிப்பா? சடையப்பருக்குப் பெருங்கவலையாகிவிட்டது.
“எல்லாம் எனையாளும் ஈசன் செயல் என்று கனவு காணும் பணியைத் தொடர்ந்தார். அவ்வப்போது குறட்டையில் மாட்டிக்கொண்டு கனவுகள் சிதறிப் போனதும் உண்டு. நடுப்பகலில் ஹோட்டலின் பின்னறையில் பெஞ்சில் முருகன் அரைத்தூக்கத்தில் விழித்திருந்தான்.
எழுத்தாளனாகி ஊருவிட்டுப் போனார்னா கடையப் பாத்துக்கோடான்னு விட்டார்னா புண்ணியமாப் போகும். “வயசு வேற முப்பதாச்சு. ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு… இப்ப எவம் பொண்ணு தாரேங்கான்.. வீட்லயே குத்தவச்சிக்கிட்டு மண்ணாப் போவாளுக இட்லிக்கடை முருகனுக்கு பொண்ணு கிடையாதாம்… முத்துலகஷ்மிக் கழுத கூட நான் கண்டா முகத்தைச் சிலுப்புறா”
சடையப்ப பிள்ளை காலைல அஞ்சரை மணிக்கு குளிச்சிட்டு ஆறுமணிக்கு கடையில் டீப் போட ஆரம்பிச்சார்ன்னா … மதியம் ரெண்டு மணிவரைக்கும் இட்லி,வடை, காபி, சாப்பாடுன்னு ஓடும். மத்தியானம் இரண்டரை மணிக்கு மேல்தான் கொஞ்சம் தலை சாய்க்கிற நேரம். முருகன் சொல்வான் “நாய்த்தூக்கம்” பாதித் தூக்கம் பாதி விழிப்பு. கல்லாப் பெட்டியில் எத்தனைகாசு விழுது யாரு பேசுறா…. எல்லாங் கேட்கும். அது அவர் பகல் கனவு காண்ற நேரம். நாற்பது வருஷமாக் கண்டுக்கிட்டே இருக்காரு.
***************************

No comments:

Post a Comment