Sunday, April 16, 2017

ஒவ்வொரு நல்ல புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருகிறது
ஒரு இதயம்

அதன் படபடப்பில்
நானும் மகிழ்ந்து
சிறகைப் படபடக்கிறேன்
சிலிர்த்தாட்டுகிறேன்
என் காக்கைத் தலையை

அதன் வார்த்தைகளில் இருந்து
ரத்தம் பாய்கிறது
எனது உடலில்
சக்தி பீறிடுகிறது
எனது மூளையில்

அமெரிக்காவின் ஒபாமாவின்
அடையாளக் குழப்பம்
எனதாகிறது

கார்ஸியா மார்க்வெஸ்ஸின்
கொலையுண்ட மனிதன்
என் ஊரிலிருந்தான்

ஜெ.எம் கோயட்ஸியின்
பேராசிரியர்
சிறுமையில் வீழும் போது
அந்தப் பெண்ணின் குரல்
இந்தியப் பல்கலைக் கழகங்களில்
எதிரொலிக்கிறது

நாமெல்லாம் வெவ்வேறு
நாடென்றும் இனமென்றும்
மொழியென்றும்
யார் சொன்னது?

நாம் பறவைகள்
பூமியில் இருக்கும்
அத்தனை மரங்களும் பழங்களும்
நமது சொந்தமே

ஒவ்வொரு புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருவது
ஒரு இதயம்

அது நமது.

No comments:

Post a Comment