Tuesday, August 23, 2016

பாடலும் மென்மை உணர்வின்மையும்

தமிழ் நாட்டில் ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்ற குறுந்தொகைப் பாடல் மிகவும் புகழ்பெற்றது.



கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி  
    
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ  
    
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் 
    
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவு முளவோநீ யறியும் பூவே

நேரடியான பொருளைச் சொன்னால் (பலரிடம் கடன் வாங்கிய உரை), ”தேனை உண்டு வாழும் வண்டே, நீ எங்கள் ஊர் (ஆள்)என்பதால் எனக்குப் பிடித்ததைச் சொல்லாமல், கண்ட உண்மை எதுவோ அதைச் சொல். ஏழுபிறப்பிலும் என்னுடன் காதலுடன் இருப்பவளும், மயில் போன்ற மென்மையையும், அழகான பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலை விட மணமுள்ள பூ எதையாவது நீ அறிவாயா?”

திருவிளையாடல் திரைப்படத்தில் பாண்டியன், தருமி சிவபெருமான் நக்கீரன் இவர்களிடையே நடைபெறுவதாக வரும் உரையாடல் ஒன்றி மையக் கருவாக இருப்பதாலேயே புகழ்பெற்றுவிட்டது.  பாடலின் இலக்கிய நயத்துக்கும் அது குறித்த விவாதத்துக்கும் எந்தச் உறவும் இல்லை.  உரையாடலின் வேகத்தில் சிவனையே எதிர்க்கும் தமிழ்ப்புலவனின், அரசுப் புலவனின் அகம்பாவத்தில் பாடலின் பொருளைச் சிதைக்கும் காட்சிதான் அரங்கேறுகிறது.

ஒருவன் காதல்மிகுதியால் தன் காதலி கூந்தலை உயர்வாகச் சொல்லும் போக்கில் அமைந்திருக்கிறது.  மணம் என்பது இங்கே காதலை உணர்த்துவதாகப் புரிந்து கொள்ளலாம்.
இதைவிட்டு விட்டு, கூந்தலுக்கு மணம் உண்டா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அது புகழ்பெறுவது இலக்கியத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தூரத்தைக் காட்டுகிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாடலில் உள்ளபடி காதில் தேன் வந்து பாயுமா? என்று கேட்பதைப் போன்றதே இது.

பொருளை விட்டுவிட்டு, வெட்டிப் பேச்சுப் பேசும் தமிழ் அரசியல் மரபின் தொடர்ச்சியாகவே இந்த வசன காவியம் நிகழ்கிறது. சொற்கள் அடுக்காக, அழகாக, இருந்தால் போதும் அது சிறந்த வசனம், சிறந்த நாடகம், சிறந்த பேச்சு என்ற வலைக்குள் ‘கொங்கு தேர்” சிக்கிக் கொண்டு விட்டது. வெளிவர எவ்வளவு நாளாகுமோ?






No comments:

Post a Comment