Tuesday, March 07, 2017

கரைந்தது

விடிகாலையில்
தொந்தரவு செய்யும்
எழுத வேண்டிய
புத்தகத்தின் தலைப்பு

பல் துலக்கத் துவங்கியதும்
மறைந்துவிடும்
அவ்வப்போது மின்னலிடும்
கவிதை வரிகள்
வேலையிருளில் கரைந்துவிடும்

களைத்துத் தூங்க ஆரம்பிக்கும் போது
மெதுவாக வருடும்
வரிகளின் அழகில் மயங்கி
உறங்கும் இரவு

இன்னும் சில நாட்களில்
எவனோ ஒருவன்
எழுதியிருப்பான்
நான் தொலையவிட்ட
வரிகளை

வார்த்தைகள்
பறவைகள் போல
லௌகிகத்தின் கத்திக்குக்
கழுத்தைத் தராமல்
தப்பித்து
வானில் பறந்துவிடும்\

எங்காவது
பச்சை மரத்தின் கிளைகளில் தங்கும்

அவற்றில் குரலில்
ஏதாவதொரு கவிஞன்
தன் கனவைப் பதித்திருப்பான்


No comments:

Post a Comment