Saturday, September 19, 2009

டார்வின் பற்றி
ஆயிரத்து எண்ணுற்று ஐம்பத்தி ஒன்பதுக்கு முன்னால் அருட்தந்தை விலியம் பாலே சொன்னதை ஒத்துக் கொள்வது எளிதாக இருந்திருக்கும். அவர் தான் எழுதிய “இயற்கையான் ஆன்மீகம்” என்ற புத்தகத்தில் இப்படி எழுதினார் “உயிர்களைப் படைத்ததே கடவுளின் மாபெரும் செயல்”.. (- குறிப்பாக மனித உயிர்- என்று பொய் கௌரவத்துடன் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) இன்று இந்த கூற்றைச் சற்று மாற்றிவிடுவோம்: பரிணாமம் தான் பிரபஞ்சத்தின் மாபெரும் செயல். பரிணாமம்தான் உயிர்களின் (பரம)பிதா. இதுவரை இயற்பியல் படைத்த அனைத்தையும் விட உயிர் ஒன்றுதான் மிக வியப்பானது மிக அழகானது. பெயர் தெரியாத யாரோ எனக்கு அனுப்பியிருந்த டி-ஷ்ர்ட்டில் எழுதியிருந்ததைப்ப் போல் பூமியிலேயே மிகப் பெரிய வேடிக்கை. ஒரே விளையாட்டு.

உண்மையாக, பரிணாமம்தான் பிரபஞ்சம் முழுவதிலும் மிகப் பெரிய வேடிக்கை. விஞ்ஞானிகளின் ஊகப்படி, பிரபஞ்சம் முழுவதிலும் பல கிரகங்களில், ஒன்றிற்கொன்று தொடர்பற்று, தீவுகளாக உயிரினங்கள் இருக்க்கின்றன. ஆனால் உயிர்கள் இருக்கும் ஒரு கிரகத்துக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பேற்படமுடியாத வகையில் பிரபஞ்சத்தின் மிகப்பெரும் வெளியில் அவை பரவி இருக்கின்றன. வேறு எங்காவது உயிர் இருந்தால் அந்த உயிர்கள் டார்வின் சொன்னபடி அமைந்திருக்கும் என்பது ஊகம் என்பதற்கு மேலாக, உண்மையுடன் தொடர்புடையதாக இருக்கும். வேறு உயிர்கள் வாழக்கூடும் என்ற வாதத்தின் வலு, அப்படி உயிர்கள் இருந்தால் டார்வின் சொன்னபடி இருக்கக்கூடும் என்ற வாதத்தின் வலுவைவிடக் குறைந்ததுதான். ஆனால் பிரபஞ்சத்தில் நாம் தனித்திருப்பது சாத்தியமே. அப்படி இருந்தால், மிகப் பெரிய வேடிக்கை நடக்கும் இந்த பூமி பிரபஞ்சத்தில் குறிப்பிடத்தக்க கிரகமாக இருக்கும்.
உயிரின் மிகப்முக்கியமான சிறப்பு என்ன? அது இயற்பியலின் விதிகளை ஒருபோதும் மீறுவதில்லை.( அப்படி மீறல்கள் நடந்தால் விஞ்ஞானிகள் இயற்பியலின் புதிய விதிகளை எழுதவேண்டியுருக்கும் – விஞ்ஞானத்தின் சரித்திரத்தில் இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.) அது கற்பனையை வியக்கவைக்கும் எதிர்பாராத வழிகளில் விஞ்ஞானத்தை முன்தள்ளி இருக்கிறது. நமக்கு உயிர்களைப் பற்றித் தெரியாதிருந்தால், உயிர்கள் இருப்பது சாத்தியம் என்று நம்பியிருக்கமாட்டோம். அது தவிர, உயிர்களே இல்லாவிட்டால், அதை நம்பாமலிருப்பதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள்.
டார்வினின் பரிணாமக் கொள்கை வெடித்தெழும் முன்னால், இயற்பியலின் விதிகள், கல்லையும்-மண்ணையும், வாயு மேகங்களையும்-விண்மீன்களையும், நீர்ச்சுழல்களையும்-அலைகளையும், நீர்ச்சுழலைப் போன்ற கேலக்ஸிகளையும், அலைகளைப் போல் சென்றுகொண்டே துகள்கள் போல் செயல்படுகிற ஒளியையும் உருவாக்கியிருக்கலாம். சுவராஸியமானதாகவும், வியக்கவைப்பதாகவும் பல நேரங்களில் மர்மமானதாகவும் இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. உயிர்கள் இப்போது (நாடகத்தில்) நுழைகின்றன. இயற்பியல் விஞ்ஞானியின் பார்வையில் குதித்தோடும் கங்காரு, விருட்டெனப் பாயும் வவ்வால், குதித்தெழும் டால்பின், உயரப் பறக்கும் பறவை இவற்றைப் பாருங்கள். ஒருபோதும் பாறை குதித்ததில்லை; வண்டுகள் போல் ஊர்ந்து சென்று கற்கள் துணை தேடியதில்லை; மணல் துகள், நீர்ப்பூச்சி போல் நீந்திச் சென்றதில்லை. இந்த உயிர்கள் இயற்பியல் விதிகளின் சிறு புள்ளியைக் கூட மீறியதில்லை. வெப்பஇயக்கவியல் விதிகளை மீறுவதாக சொல்லப் படுவதற்கு மாறாக அவை அவ்விதிகளின்படியே செயல்படுகின்றன. இயக்கவிதிகளை மீறாமல், அவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மிருகங்கள் நடக்கின்றன; ஓடுகின்றன; திடீரென்று விலகி ஓடுகின்றன; பறக்கின்றன; இரைமீது பாய்கின்றன; ஏமாற்றித் தப்புகின்றன.
ஒருபோதும் இயற்பியல் விதிகளை மீறாமல், உயிர்கள் புதிய விதத்தில் எழுகின்றன. எப்படி இந்த மாயம் நடக்கிறது? பல வியப்பூட்டும் நுண்ணிய விவரங்களில் வேறுபட்டாலும், இவை ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டிய அளவுக்கு ஒற்றுமைகளும் உண்டு. இந்த நடைமுறைக்கான ஒரே விடை, டார்வினின் பரிணாம வளர்ச்சி; எப்போதாவது மாறும் தகவல்கள் பொதிந்த நியதிகளின் உயிர்பிழைத்தல். விஞ்ஞானத்தில் வேறுபல விஷயங்கள் எவ்வளவு தீர்மானமாக நமக்குத் தெரியுமோ, அதே அளவு தீர்மானமாக, உயிர்கள் இப்படித்தான் ஜனித்தன என்ற இந்த விஷயமும் நமக்குத் தெரியும். பிரபஞ்சத்தில் வேறு எங்கு உயிர்கள் இருந்தாலும் அவைகளும் இப்படித்தான் ஜனித்திருக்க வேண்டும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்
உலகத்தின் (உயிர்கள் என்னும்) இந்தப் பெரிய வேடிக்கை, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வேடிக்கை அல்ல என்றானால் என்ன ஆகும்? ஒருவேளை, மற்ற கிரகங்களில் வேறு உயிர்கள் இருந்து, அவை நம்மைவிட அறிவாளிகளாகவும், படைப்புத்திறன் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்து, நாம் அவர்களைக் கடவுளாகக் கருத வேண்டிய நிலையும் ஏற்பட்டு, அவர்களைச் சந்திக்க வேண்டிய அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ ஏற்பட்டால் என்ன ஆகும்? அவர்கள் உண்மையிலேயே கடவுளாகி விடுவார்களா? மத்திய காலத்து மனிதன் முதல் முதலாக போயிங் 747 விமானத்தையோ, மொபைல் போனையோ அல்லது கூகிள் எர்த்தையோ திடீரெனப் பார்த்திருந்தால் செய்வதுபோல, நாமும் அவர்கள் முன் மண்டியிட்டு துதிபாட நினைப்போமா? பார்ப்பதற்கு கடவுளைப் போலவே அவர்கள் இருந்தாலும், வேற்று கிரக உயிர்கள் கடவுளாக இருக்க முடியாது. ஒரு மிக முக்கியக் காரணம் உண்டு. அவர்கள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை; பிரபஞ்சம், நம்மைப் படைத்தது போலவே அவர்களைப் படைத்தது. எவ்வளவு அதிமனிதனாக இருந்தாலும், எந்த அறிவாலும் படைக்க முடியாத அளவு மிகச் சிக்கலானது இந்த அறிவு. அது புள்ளி இயலின் படி நடக்கவே முடியாதது. எனவே, -உயிரற்ற பிரபஞ்சத்திலிருந்து – மாய மந்திரங்கள் அற்ற- இயற்பியலில், எளிமையாகத் தொடங்கி மெல்ல பல நிலைகளில் வளர்ந்துதான் அறிவு எழுந்திருக்க வேண்டும்.


டார்வினின் பரிணாம தத்துவம் இப்படி (உயிர்) பிறப்பதற்குத் தாதியாக இருப்பதுதான் அதன் மாபெரும் சிறப்பு. இது ஆதிகால எளிமையில் தொடங்குகிறது. படிப்படியான நிலைகளில் வளர்ந்து, சிக்கலான அமைப்பாக எழுகிறது: பார்க்கையில் முடிவற்ற சிக்கலாக-மனிதன் வரைக்கும் சிக்கலானதாக,-அநேகமாக இன்னும் மிகச் சிக்கலானதாக வளர்கிறது. மானுட நிலையைத் தாண்டிய, நாம் கற்பனை செய்யமுடியாத அளவு அதிமானுட நிலையில் உயிர்கள் வாழும் பல உலகங்கள் இருக்கலாம். மானிட நிலையை தாண்டியிருக்கலாம் என்பதற்கு அர்த்தம் இயற்கையைத் (விதிகளைத்) தாண்டிய நிலை என்று கொள்ள முடியாது. டார்வினின் பரிணாம வளர்ச்சி ஒன்றுதான் கடைசியில் சிக்கலான சுயமாக சிந்திக்கும் அறிவை(உயிர்களை) உருவாக்கும் ஒரே வழி என்பதை நாம் அறிவோம். அது அப்படி உண்டாக்கிய பின், இயல்பாகவே அந்த (புத்திசாலி)உயிர்கள் இன்னும் சிக்கலான பொருட்களை உருவாக்கும்; கலைகள், இசை, தொழில்நுட்பம், கணிணி, இணையம், யாருக்கு தெரியும் இன்னும் என்னென்னவென்று. டார்வினின் பரிணாம வளர்ச்சி ஒன்றுதான் பிரப்ஞ்சத்தில் இப்படி படைக்கும் வழி என்பதில்லை. நம்மால் கண்டுபிடிக்கப் படாத, கற்பனை செய்யாத, பல பரிணாம வளர்ச்சிகள் இருக்கலாம். எவ்வளவு வியப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தாலும் அவை ஒருபோதும் மாய மந்திரமாக இருக்க முடியாது. டார்வின் பரிணாம வளர்ச்சியைப் போலவே, ஒருபோதும் இயற்பியல் விதிகளை மீறாமல் எளிமையிலிருந்து சிக்கலானதற்கு எழும் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.
இப்போது கடவுள் எங்கே போவார்? கருணையுடன் சொல்வதானால் அவருக்குச் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. நம் பாராட்டுக்களை, துதிகளை, பயங்களைக் கோரும் சாதனைகள் ஒன்றுமிராது. பரிணாம வளர்ச்சி என்பது கடவுள் தேவையில்லை என்பதற்கான நோட்டீஸ், வேலை கிடையாது என்பதற்கான சீட்டு. ஆனால் நாம் இன்னும் செல்ல வேண்டியதிருக்கிறது. ஒன்றும் வேலையில்லாத சிக்கலான படைப்பாற்றல் கொண்டது தேவையில்லை என்பது மட்டுமல்ல. கடவுள் என்ற தெய்வீக வடிவமைப்பாளர் (டிசைனர்) குறைந்த பட்சம் அவர் படைத்து விட்ட பொருட்களைப் விளக்குவதற்காகவேனும் அவற்றைப் போல, சிக்கலானவராக இருக்கவேண்டும். கடவுள் சாகவில்லை. அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை.(இருந்தால் தானே சாக).
இப்போது ரொம்ப நாகரீகமான ஒரு வகை தெய்வீகவாதி சொல்லுவான். ”ஐயோ கடவுளே, கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு ஒன்றும் புரியாதவரா? கடவுள் இருப்பதும் இல்லாததும் பற்றிப் பேசுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் வேலையாகிவிட்டதா? விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா என்பது ஒரு பொருட்டல்ல. முக்கியமானது எதுவெனில் கடவுள் உனக்கும் எனக்கும் இருக்கிறாரா இல்லையா என்பதே. கடவுள் எனக்கு உண்மையாக இருந்தால், விஞ்ஞானம் அவரை வேண்டாதவராக்கிவிட்டதா இல்லையா என்பதைப் பற்றி யாருக்குக் கவலை. அவ்வளவு திமிர். அவ்வளவு மேட்டிமைத்தனம்.”
அது சரி அதில்தான் உங்கள் படகு மிதக்கும் என்றால் நீங்கள் தனித்துறையில் துடுப்பை வலித்துக் கொண்டிருப்பீர்கள். பெரும்பான்மையான உலக மக்களின் நம்பிக்கை மிகத் தெளிவானது. அவர்கள் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள். ஜிப்ரால்டர் ஜலசந்தியின் பாறையைப் போல் பருப்பொருளாக, சத்தியமாக அவர் இருக்கிறார். ரொம்பப் படித்த மதவாதிகளோ போஸ்ட் மாடர்ன்(பின் நவீனத்துவ) ஆட்களோ தேவையற்ற குப்பை மேட்டிலிருந்து கடவுளைக் காப்பாற்றுவதாக,நினைப்பார்களெனில், அவரின் இருப்பின் மகிமையை குறைத்தார்களெனில், அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டியதிருக்கும். கிறித்தவக் கோவிலிலோ மசூதியிலோ கடவுளின் மீது அவர்கள் திணித்திருக்கும் குணங்கள் ரொம்ப கோரமாக இருப்பதாக சொன்னால் நீங்கள் ஒரு நாத்திகர் என்று சொல்வார்கள். அவர்கள் சரியாகத்தான் சொல்வார்கள்.
-ரிசர்ட் டாகின்ஸ்-
மொழி பெயர்ப்பு.

No comments:

Post a Comment