Wednesday, May 31, 2017

வரலாற்றின் பேரரசர்

புதிய பேரரசர்
அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார்
மனிதரைப் போலவே இருக்கிறார்
அவதார புருஷன் போலப் பேசுகிறார்
பாய்ந்தோடும் கருப்பு நதிகளின்
களங்கமனைத்தும் நீங்கிவிடும்
பாலும் தேனும் பாய்ந்துவரும்
ஏனெனில்
பேரரசர் ஆணையிட்டுவிட்டார்

விண்மீன்கள் பாடுகின்றன
அசரீரிகள் கேட்கின்றன
இனிய வார்த்தைகள்
நேரான பார்வையில் தெரியாத
நச்சுத் துளிகள் ஆவியாகிப்
பரவுகின்றன
ஏனெனில்
பேரரசர் ஆணையிட்டுவிட்டார்
கொசுக்களைக் கொல்ல வேண்டும்.
நமக்கும் கொஞ்சம் மூச்சடைக்கும்
அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
நாட்டுக்காக

நாமெல்லாம் நாடில்லையா?
என்று
கேள்வி கேட்கக் கூடாது
பேரரசரின் ஆணையில் இதுவும் இருக்கிறது

நான் பதின்மூன்றாம் நூற்றாண்டைப்
பற்றித்தான் பேசுகிறேன்
நாமிருப்பது இருபத்தி ஒன்றாவது
என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்

பணம் இல்லை என்றால்
உங்கள் விரலைச் (டிஜிட்) சப்புங்கள்
பிரெட் இல்லை என்றால்
கேக் சாப்பிடுங்கள்

கிரேக்கர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே
வானத்தில் பறக்கும் இயந்திரத்தைப் படைத்தார்கள்
நாம் கிரேக்கர்களாக வேண்டியதில்லை

தேவதூதர்கள் தொட்டதும்
நோய்கள் குணமாகிவிடும்
நாம் ஒன்றும் கிறித்தவர்கள் ஆகவேண்டியதில்லை

ரோமானியக் கடவுள்கள்
எத்தனையோ ஆயிரம் உண்டு
எல்லா ரோமனியர்களும்
பேரரசர்களாக முடிந்த்தா?

அடிமைகளாக இருந்தவர்கள் தானே
வரலாற்றில் அதிகம்
நாம் மட்டுமென்ன
வரலாற்றை மாற்றி எழுத முடியுமா?

எதையெதையோ எழுதி,
கவிதை என்றும் சொல்ல்லாம்

எவரெவரோ வந்து ஆட்சி செய்வதைப் போலவே..

No comments:

Post a Comment