Saturday, January 09, 2021

                                                      மாபெரும் டிஜிடல் சிறை

 

            வீடுகளில், அலுவலகங்களில், தெருக்களில், கோயில்களில், பள்ளிகளில், பொது இடங்களில் என்று எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.  சிறைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  அங்கே தான் காமிராக்கள் முதலில் பொருத்தப்பட்டிருக்கக் கூடும்.  இதற்குச் சொல்லப்படும் காரணம் நமது பாதுகாப்பு.  இவற்றையெல்லாம் வைத்த பின்னும் நாம் பாதுகாப்பாக உணர்கிறோமா?.

            நான் பயன்படுத்தும் கைபேசி தொடங்கி, இணையத்தில் நாம் எதைச் செய்தாலும் அதை ஒரு இயந்திரமோ அல்லது மனிதனோ கண்காணிக்கிற நிலை இப்போது இருக்கிறது. 

            மேற்கண்ட இரண்டையும் இணைத்துப் பார்த்தால், நம்மை யாரோ கண்காணித்துக் கொண்டே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  நாம் சுதந்திரமானவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது.

            இயந்திரங்கள் நாம் முன்னர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் அல்லது வேறு எதுவென்றாலும் அவற்றின் மூலம் நமது விருப்பங்கள் தேர்வுகளைக் கண்டுகொண்டு, மேலும் அவை போன்ற பொருட்கள் புத்தகங்கள் அல்லது வேறு எவையென்றாலும் அவற்றை நம் முன் கொண்டு நிறுத்துகின்றன.  அந்த இயந்திரங்களின் வழியே நமக்குத் தெரியாத ஒருவர் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொண்டு, நம்மை நாம் அறியாமலேயே வழிநடத்த முடியும்.  இதன் சாத்தியங்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  ஏதோ சிறைக்கதவுகளுக்குள் வாழ்வது போன்ற உணர்வை இவை தருகின்றன. இனி இதிலிருந்து யாரும் மீள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது.

            அடுத்ததாக, பஸ் டிக்கெட்டிலிருந்து எதை வாங்கினாலும், தொலைபேசி எண், ஆதார் அடையாள எண் அல்லத் வருமான வரி எண் என்று எங்கே சென்றாலும், நாம் எதை வாங்கினாலும் நமது அடையாளத்தை நாமே ஏதாவது ஒரு சான்று கொடுத்து நிரூபிக்க வேண்டியிருக்கிறது. நமக்கே நம் பெயர் இதுதானா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அடையாள அட்டை தலையாய இடம் வகிக்கிறது.  ஒவ்வொருவரிடமும், குறைந்தது இருபத்தி ஐந்து அடையாள அட்டைகள் இருக்கக்கூடும். ரேஷன் கார்டு தொடங்கி கிரிடிட் அல்லத் டெபிட் கார்டு வரை என்னென்ன செய்ய வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு கார்டு நமக்குத் தரப்படுகிறது. 

            அதற்கு அடுத்தபடி, எதற்கெல்லாம் கார்டு இருக்கிறதோ அதற்கெல்லாம் புதிய பாஸ்வேர்ட்கள் புனையவேண்டும்.  எத்தனை பாஸ்வேர்ட்களைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்? எழுதியும் வைக்க வேண்டாம் அது ரிஸ்க் என்று எல்லா நிறுவனங்களும் சொல்கின்றன.  எல்லா இடங்களிலும் கை ரேகை அல்லது கண் மூலம் அடையாளம் காண்பது என்று வைத்து விடலாம் என்றே தோன்றுகிறது. 

            இப்படி எத்தனையோ விதங்களில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், எத்தனையோ பாஸ்வேர்ட்கள் இருந்தபோதும் ஏமாறுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

            இதனால், நாம் எப்போதுமே விழிப்பாக அதாவது அலர்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  இது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை.  அதைவிட அலர்ட்டாக இருக்க வேண்டுமே என்ற கவலையும், பயமும் இருந்து கொண்டே இருக்கின்றன.  இந்த பயம் எந்தக் குறிப்பிட்ட  உருவத்தையோ அல்லது கருதுகோளையோ பற்றியதல்ல.  உருவமற்ற, எப்போதும் நம்முடன் இருக்கிற பயம்.  நாகரீகமடைந்து வருகிறோம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அனுபவிக்கிறோம் என்பது எவ்வளவு மனச்சுமையை நம்மீது சுமத்துகிறது?

            டிஜிடல் வசதிகள் தேவையில்லை என்று சொல்ல முடியாத காலத்தில் வாழ்கிறோம்.  மேற்சொன்ன ரிஸ்க்களை சந்தித்தே ஆகவேண்டும். அடுத்து டி.என்.ஏ அடையாளத்தை வைத்து மனிதர்களை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டால் மற்ற எல்லா அடையாள அட்டைகளையும் தொலைத்துவிடலாம் என்று கற்பனை செய்கிறேன். எங்கே சென்றாலும் ஒரு சொட்டு ரத்தம் அல்லது எச்சில் அல்லது முடி என்று சோதனை செய்து வசதிகளைப் பெறுகின்ற காலம் வந்துவிடலாம். 

            அடிப்படையில், நம் ஒவ்வொருவருக்குமான உடைமைகளை (பணம், சொத்து, பொருள் அனைத்தும் இதில் அடங்கும்) அடையாளப்படுத்தி அனுபவிப்பதற்குத் தானே இத்தனை தடைகளைக் தாண்ட வேண்டியிருக்கிறது. அதிலிருந்து மீள, கற்பனாவாத வழி ஒன்று எனக்குப்படுகிறது.  எல்லாவற்றையும் அதாவது நம் உழைப்பை அதன் ஊதியத்தை பணமாக மாற்றாமல், டி-மானிடைஸ் (demonetize) செய்துவிட்டால் என்ன? இருக்கிற பொருட்கள் எல்லாம் நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால் எதற்கும் பணம் செலுத்தத் தேவையில்லை.  இதன் தொடக்கமாகவே நாம் உழைப்புக்கு ஊதியமாக எதையும், பணம் உட்பட பெறக் கூடாது.  இப்படி ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறேன்.  இது சோஷலிசம், கம்யுனிசம் அல்லது முதலாளித்துவம் என்ற பெயர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

            பரஸ்பரம் நம்புவதாலேதான், வெற்றுக் காகிதம் ஆயிரம் ரூபாய் நோட்டாகிறது.  எல்லோரும் நம்புவதாலேதான் தேசம், பொருளாதாரம், பணம், கணக்கு, கழித்தல் கூட்டல் எல்லாம் வருகிறது.  இது ஒரு வகையான புராதன மனநிலை என்று தோன்றக் கூடும்.  ஆனால் நாம் தேசம், பணம், பொருளாதாரம், பணம் ஈட்டுதல் என்றெல்லாம் கட்டமைத்துக் கொண்டது எதற்காக? நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே? டிஜிடல் உலகில் அந்தப் பாதுகாப்பு, சற்றும் இல்லாத நிலை வரும்போது என்ன செய்யலாம்? உதாரணமாக நாடகத்தில் நடிப்பதற்காக, நாம் வேஷம் போடுகிறோம்.  நாடகம் என்ற ஒன்று தனியாக இல்லை.  வாழ்வே நாடகமாகிவிடும்போது அரிதாரம் தேவையற்றதாகிவிடுகிறது அல்லவா? 

No comments:

Post a Comment