Wednesday, March 30, 2016

நமக்குள் ஒளிந்திருக்கும் பூதம்

            நமக்குள் ஒளிந்திருக்கும் பூதம்
            எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது
           
            கண்ணாடி போல
            அது நம்மை நமக்கே
காட்டிக் கொடுத்து விடுகிறது

நாமே வடித்துக் கொண்ட முகத்தை
கிழித்தெறிய முடியாதது போல
அதை எறிந்து விட முடியாது

அவ்வப்போது புதைத்தாலும்
அறியாத நேரத்தில்
எழுந்து விஸ்வரூபம் எடுக்கிறது

நமது கீரீடங்களின் பின்புறத்தில்
ஒட்டியிருக்கும் ரத்தக் கறையைச்
சுட்டுகிறது

பொதுவெளியில் பட்ட
அவமானங்களின் பின்னிருக்கும்
நமது மேன்மையையும்
ஜொலிக்க வைக்கிறது

அரிதாரங்களைக் கழுவிவிட்டு
நம்மை நிர்வாணமாய்
நிறுத்துகிறது

அந்த
நமக்குள் ஒளிந்திருக்கும்
பூதம்.

            எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

1 comment: