Wednesday, March 30, 2016

ஐந்தொகை

ஒளிதரும் விளக்கெனும் ஒன்றினை ஏற்றினாய்
            உவகையும் உணர்விலே ஒன்றிடும் வகைசொனாய்
களிதரும் அனுபவக் காற்றிலே பறக்கிறாய்
            கானகம் வைகயம் கடலிலும் மிதக்கிறாய்

பலவகைப் பறவைகள் பாடுதல் கேட்கிறாய்       
            பரவசம் அடைந்துன் பார்வையை விரிக்கிறாய்
நிலவதன் குளிரொளி நித்தமும் கலக்கிறாய்
            நீலவான் வெளியிலே நித்யமாய்க் கலக்கிறாய்

சங்கிலி பிணைத்தவுன் சரித்திரம் சிதைக்கிறாய்
            சகலமும் பூமியில் சரிசமம் என்கிறாய்
எங்கெலாம் துயர்களின் ஏக்கமிசைக்குதோ       
            எழுந்தது எண்திசை கேட்க ஒலிக்கிறாய்

இசையிலே மயங்கினாய் இலக்கியம் தேறினாய்
            எழில்மிகும் கலைகளின் இன்பதி லூறினாய்
தசைகளில் அறத்தின் தண்மையை ஏற்றினாய்
            தர்மத்தின் சங்கொலி எங்குமுழக்கினாய்

வானிலே கோள்களின் வனப்பை அளக்கிறாய்
            வைகயகம் புள்ளியாய் வலம்வரக் காண்கிறாய்
தேனிலும் எண்ணரும் உயிரிலும் செல்களின்
 திண்மையைக் கண்டுளே திகைக்கிறாய் மகிழ்கிறாய்

அழகதன் சிரிப்பினை எண்புறம் பார்க்கிறாய்
            ஆயுத வாதிகள் ஆணவம் நகைக்கிறாய்
பொழுதொரு வண்ணமாய்ப் புரள்கிற மானிடர்
            புன்னகை பூக்கவே உண்மைகள் சொல்லுவாய்

சொர்க்கமும் நரகமும் சொந்தமென் றாடுவாய்
            சோதிவான் வெளியிலே சூரியன் நடுவிலே
அர்த்தமில் அமைதியில் சூனியம் போற்றுவாய்
            ஆயிரம் கேள்விகள் அடிக்கடி எழுப்புவாய் 

உன்னைநான் கண்டனன் உயிருளே இருக்கிறாய்
            ஒவ்வொரு நாளுமென் உள்ளிலே வளர்கிறாய்
என்னவென் றின்றுனை எவர்க்கும் உரைப்பதோ?

            எத்தனை பேறனெ எனக்குளே மறைப்பதோ?

No comments:

Post a Comment