Wednesday, March 30, 2016

யாருக்கும் தேசமில்லை

மீன்பிடிக்க வீசுகின்ற வலைக ளுக்குள்
                சிக்குகிற மீன்களுக்கே தேச முண்டு
வானெங்கும் சென்றுவர விரும்பு கின்ற
                மானிடரைப் பீடிக்கும் தேசம் ஏது?

கிணற்றுக்குள் கிடக்கின்ற தவளை யெல்லாம்
                கிளப்புகிற ஓசையிலே தேச முண்டு
கணக்கில்லாப் புதுமைகளைக் கண்டு சொல்லும்
                கடுந்தவத்துப் பயணிகட்குத் தேசம் ஏது?

மானிடரின் முதுகினிலே குத்திக் குத்தி
                மழுங்கிவிட்ட முத்திரைதான் தேசப் பாசம்
ஞானியரின் பாதையிலே தேச மில்லை
                நல்லோரின் சிறகுகளில் தேச மில்லை

அம்மணமாய்த் திரிந்தோமே தேச முண்டா?
                அரைகுறையாய் உண்டோமே தேச முண்டா?
பொம்மைகளாய் நமைநடத்தும் ஆட்சி யாளர்
                போடுகிற உடைகளிலே தேச முண்டா?

சாதிவெறிக் கொலைகாரக் கும்ப லுக்கும்
                சகித்துக்கொண் டிருக்கின்ற சட்டத் தோர்க்கும்
ஆதிக்க வாதிகட்குத் தேசம் உண்டா?
                அலைந்துபொருள் தேடுபவர்க்குத் தேசம் உண்டா?

சோறென்று கேட்போர்க்குத் தண்ணீர் தந்தால்
                சொர்க்கம்போல் தேசம்வரும் அங்கே அங்கே
யாரென்றும் கேட்கவொரு ஆளில் லாத
                அனாதைகட்கு வீடுதந்தால் தேசம் அங்கே 


நீயாரோ நான்யாரோ என்று வாழும்
                நீசருக்கு வொருபோதும் தேச மில்லை
சேயாக நமைஎண்ணும் மனமி ருந்தால்
                சிந்தித்து நமைக்காத்தால் தேசம் உண்டு

ஓயாத கூச்சலிலே தேச மில்லை
                உதவவரும் கரங்களிலே தேச முண்டு
ஆயாமல் சொலும்சொல்லில் தேச மில்லை

                அனைவரையும் அணைத்துநின்றால் தேச முண்டு

No comments:

Post a Comment