Friday, February 12, 2010

குடை ரிப்பேர் செய்பவன். ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

குடை ரிப்பேர் செய்பவன்.
ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

அன்று உருப்படாத நாள். கொஞ்சம் கற்பனை செய்யும் உள்ளங்களுக்குத் தெரியும். சில நாட்களுக்கும் மனிதர்களைப் போலவே வினொத குணங்கள் உண்டு. அவை மனிதர்களை குற்றம் செய்யவோ, நல்லது செய்யவோ, மன அமைதியுடன் நல்லதை நினைக்கவோ, கமுக்கமாக ஏதாவது கள்ளத்தனம் செய்யவோ, கோபப்படவோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ தூண்டுகின்றன. அன்றைய தினம் கடைசியாக சொன்னது மாதிரிதான் இருந்தது. சூடான காற்றை உள்ளிளுத்து, இயற்கையின் அழுகிய புண்களிலிருந்து, உழைப்பில் எழுந்த வேர்வையிலிருந்து, கெட்ட நாற்றத்தை வெளியேற்றி, புயலில் பேயாட்டம் போடும் மரக்கிளைகள் போல, ஒழுக்கம் தன் ரத்தத்தில் ஓடாத மனிதனோ மிருகமோ வாழ்வின் துயரங்களை தானறியாமலே வெளியிடுகின்றனர்.
பலவாரங்களாக மழை பெய்யவில்லை ஆனால் காற்றில் பிசுபிசுப்பு ரொம்ப அதிகமாக இருந்தது. அந்த மனிதனின் காலடியிலிருந்து எழுந்த புழுதிப் புகைமண்டலம் அருவருக்கும் அளவுக்கு பிசுபிசுத்து ஒட்டிக் கொள்வதாக இருந்தது. அவன் கைகளும் காலணிகளும், விலைமலிந்த கோட்டும் சூட்டும், தொப்பியும் அழுக்காக இருந்தன. ஆனால் அவனுக்குத் தன் உடையைப் பற்றிப் பெருமிதம் இருந்தது. அவைதான் அவனுடைய விடுதலையின் அறிகுறி. முந்தின நாள்தான் சிறையை விட்டு வெளியில் வந்தான். அதிகாரிகள் கொடுத்திருந்த கோட்-சூட்டை வெறுத்தான். அந்த சூட்டைக் கொடுத்துவிட்டு தன்னிடமிருந்த கொஞ்சப் பணத்தில் பெரும்பகுதியை விலையாக கொடுத்துப் புதுசாக இந்தக் கட்டம் போட்ட சூட் வாங்கினான். அவன் நேற்றுத்தான் சிறையிலிருந்து வந்தவனென்று அதைப் பார்த்து யாரும் சொல்ல முடியாது. அவன் செய்த சிறிய குற்றத்திற்காக பலவருடங்கள் சிறையில் கழித்தான். குறைந்த வருடங்கள் தண்டனை கிடைத்திருக்கும் ஆனால் நீதிபதியின் கவனக் குறைவினாலும், அவனுக்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லாததாலும் இப்படியாகி விட்டது. யார் மீதும் ஸ்டெப்பின்ஸ் வெறுப்புக் கொள்ளாவிட்டாலும், நண்பர்களை அதிகம் சம்பாதித்துக் கொள்ளும் ரகமல்ல. அதிகத் தண்டனையின் அநீதி கூட யார் மீதும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கவில்லை.
சிறையில் இருந்த காலத்தில் அவன் ரொம்ப வருத்தப்படவில்லை. தவிர்க்க முடியாததை - வலியவர்கள் எளியவர்கள் மீது சுமத்தும் நுகத்தடி - பொறுத்து ஏற்றுக் கொண்டான். அதனால் கொஞ்சம் மகிழ்வும் கொண்டான். விடுதலை பெற்றுவிட்டதால், வாழ்வை நன்றாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்களை நோக்க, கவனத்தைக் கூராக்கிக் கொண்டான். கூட்டில் அடைபட்ட நாயாக இருந்தவன், முகர்ந்து வேட்டைக்குச் செல்லும், தனது நலனுக்காக வேட்டை நாயாக – பூமியிலேயே மிக துடிப்புள்ளது – மாறினான். சமூகத்தின் வெளியில் இருந்து, (சிறை), தன் முன் உள்ள சமூகத்துக்கு மாறினான். நடுத்தர வயதில் இருந்தாலும், இளைஞனாக உணர்ந்தான். அவன் பையில் கொஞ்சம் டாலர்கள் இருந்தன. அவன் கட்டம் போட்ட சூட்டை வாங்காமலிருந்தால் அதிகம் செலவாகி இருக்காது.
அடுத்த வாரம் விடுதலையாகும் இன்னொரு மனிதன் இருந்தான். அவனுக்கு உடம்பு சரியில்லாத மனைவியும் பல குழந்தைகளும் உண்டு. ஸ்டெப்பின்ஸ், இயல்பாகவே இருந்த கருணையினாலும், தயவினாலும் மூட நம்பிக்கை போல் அவனிடமிருந்த உணர்ச்சி வசத்தினாலும் தன்னிடமிருந்ததில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்து விட்டான். பணத்தினால் அவனுடைய சுதந்திரம் பறிபோனது. இன்னொருவனுக்காக அதைத் கொடுத்து, அதில் பரவிய இசையில், விடுதலை பெற்றுத் திரும்பியதைக் கொண்டாட வேண்டும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டான்


நடந்து கொண்டே அவ்வப்போது தொப்பியை எடுத்து மொருமோரென்றிருந்த கைக்குட்டையை வைத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டான். அதிலிருந்த அழுக்கைப் பார்த்து கவலைப் பட்டான். குட்டையாக வெட்டப்பட்ட நரைத்த முடியைத் தடவிக் கொண்டான். கொஞ்சம் வளர்ந்தால் மகிழ்ச்சி அடைவான். கொஞ்சம் கூர்மையான கண்களுக்கு அதிலிருந்து தெரிந்துவிடும். அவ்வப்போது இன்னொரு பையிலிருந்து சற்று முன்னால் வாங்கியிருந்த கண்ணாடியை எடுத்து முகத்தைக் கவனித்தான். ஒவ்வொரு முறையும் அப்படிப் பார்க்கும் போது கன்னங்களை அழுத்தித் தேய்த்தான். மங்கலான, சிறையில் படிந்த மஞ்சள் நிறம் மறைந்து பளபளப்பு அதிகமாவதை நிறைவுடன் பார்த்துக் கொண்டான். அடிக்கடி ஞாபகத்துடன் தோள்களைச் சிலுப்பி, தாடையை உயர்த்தி, வலது காலை சற்று அகலமாக வைத்து நடந்தான். அப்படி நடக்கும் போது சில தடவைகள் தடுமாறினான். விடுதலையின் புது உணர்வில் திமிரும் இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தலைமகனாக குறைந்த பட்சம் சமமாக உணர்ந்தான். காரோ குதிரை வண்டியோ தன்னைக் கடக்கும் போது, ஒரு நடிகனின் திறமையுடன், ஏதோ பிசினஸ்மேன் முக்கியமான வேலைக்குப் போவது போல் தனக்குத் தானே நடித்துக் கொண்டான். ஆனால் எப்போதும் அவன் மனதில் ஒரு பெரிய பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. தன்னிடமிருந்த பணம் குறைவு, அது எவ்வளவு கஞ்சத் தனமாக செலவழித்தாலும் ரொம்ப நாள் வராது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு நண்பர்கள் இல்லை. வேலைதேடிப் போனால், உறுதியாக, சிறைவாசம் செய்தது தெரியவரும். உயிருடன் இருப்பதற்கான பிரச்சனையை எதிர்கொண்டான்.
ரொம்ப வெய்யில் அடித்தாலும், கோடை முடியும் நேரம். விரைவில் பனிபெய்யும், குளிர்காலம் வரும். விடுதலையை அனுபவிக்க வாழ விரும்பினான். விடுதலைதான் அவனிடம் இருந்த ஒரே சொத்து. அது முரண்பாடுதான். வாழ்வின் சக்தியான வேலை பெறுகின்ற திறமையை (விடுதலை) குறிக்கவில்லை. சிறைச்சாலையின் கற்சுவர்களுக்கு வெளியே நுணுக்கமான, புரிந்து கொள்ள முடியாத, ஒருநாளும் இணங்கிவிடாத சுவர் இருந்தது. சிறையிலிருந்து விடுதலையான மனிதனுக்கு எதிரான முன் தீர்மானமான வெறுப்பு. குதித்து நடந்தாலும், துடிப்புடன் தாவினாலும், அவன் சிறையிலிருந்து வெளிவந்தவன்தான். அவன் எப்போதும் போல ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவன் பிறந்த நியு இங்கிலாந்து மாநிலத்தின் முரட்டுத்தனம் இருந்ததால் எப்படி வாழ்வது என்பதை யோசித்தான்.
வேலைகேட்டு எந்த மனிதனையும் அணுகுவதால் பயனில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்தான். தன் ஐம்புலன்களால் உணர்ந்த விடுதலை ஒரு மணம்போல இருந்தாலும், சிறையின் நாற்றத்தை அதனால் மிஞ்ச முடியவில்லை. மூச்சடைக்கும் தூசிகளுக்குள் நடந்துகொண்டே, சுதந்திரமான மனிதர்களின் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முன்னால், சட்டத்தின் கைகளில் தன் முதுகை வளைப்பதற்கு முன்னால், தனக்குப் தெரிந்த மனிதர்களை எல்லாம் ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தான். சொந்த ஊரில் அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களும் இருந்தார்கள். யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்ற தன் உறுதியை மீறி அவர்களிடம் செல்லும் அளவுக்கு அவர்கள் யாரும் அவனை நேசிக்க வில்லை. இருந்தும் இல்லாதது போலிருக்கும் தூரத்துச் சொந்தங்கள் தவிர யாரும் இல்லை. அவர்களும் தொடர்பு கொள்ள விரும்பியது கிடையாது.
அவன் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த பெண் ஒருத்தி இருந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்வாள் என்று உறுதியாக நினைத்தான். ஆனால் சிறைக்குச் சென்று ஒரு வருடம் கழிந்த பின் அவள் வேறொருவனை மணந்து கொண்டதாக சுற்றிமுற்றித் தகவல்கள் வந்தன. அவள் திருமணமாகாமலேயே இருந்தாலும் அவளிடம் உதவி கேட்டுப் போக முடியாது. தொடக்கத்தில் உணர்ச்சி வசப்பட்ட பெண்களிடமிருந்து கடிதங்களும் மலர்க்கொத்துகளும் வந்தன. சிறையிலிருந்த காலம் முழுவதிலும் அவளிடமிருந்து எந்த சமிக்கையோ கடிதமோ, செய்தியோ வரவில்லை. ஒன்று கூட வரவில்லை. அவன் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. சிறைக்கதவுகள் முதலில் மூடிய நாளிலிருந்து ஒரு வினொதமான பொறுமை அவனிடம் குடிகொண்டது. அதை அவன் பெருமையுடன் வைத்துக் கொண்டான். அவளை வேண்டுமென்றே மறக்கவில்லை. ஆனால் அவளை நினைந்து வருந்தவுமில்லை. அவனுடைய மாபெரும் இழப்பிலும், சிதைவிலும் அவள் விழுங்கப்பட்டு விட்டாள். துன்பத்தையும், வலியையும் தாங்க தன்னை முழுவதும் இரும்பாக்கிக் கொள்ள நேரும்போது ஒரு ஊசி குத்துவது ஒரு பொருட்டல்ல. அன்று துயரமேதும் படாமல் அவளை நினைத்துப் பார்த்தான். அழகான வீட்டில் கணவனோடும், குழந்தைகளோடும் அவளைக் கற்பனை செய்து கொண்டான். அவள் உடல் பருத்திருக்கக் கூடும். ஒல்லியாகத்தான் இருந்தவள். கற்பனையில் நேர்த்தியாக குண்டாக கற்பனை செய்தான். அவளை குண்டாக கற்பனை செய்ததன் தொடர்ச்சியாக தன்னுடைய தசை, குண்டான் உடம்பை எலும்பில் வைத்துப் பார்த்தான். இப்போது பிரச்சனை அந்தப் பெண்ணைப் பற்றியதல்ல. அவனுடைய வாழ்விலிருந்து போய்விட்டாள். தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதே பிரச்சனை. இந்த கஷ்ட உலகில் சிறிதும் கருணை இன்றி தன்னை விழச்செய்யும் ஓரு இரும்புப் பொறி. அதில் அவன் மாட்டிக் கொள்ளவேண்டும்.
அவன் நடந்து கொண்டே இருந்தான். நண்பகல் ஆகிவிட்டது. அவனுக்குப் பசித்தது.அவன் பாக்கெட்டில் ஒரு பிரட் பாக்கெட்டும், இரண்டு துண்டுகள் பன்றிக் கறியும் இருந்தன. தண்ணீர் நுரைத்துப் பாயும் சத்தம் கேட்டது. ரோட்டு சந்திப்பில் அடர்ந்த காடு தொடங்கியது. மரங்களையும் செடிகொடிகளையும் விலக்கிவிட்டுக் கொண்டு நீரோடையின் சலசலப்பில் குளிர்ந்த பசுமை நிழலின் அமைதியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.
தெளிந்திருந்த தண்ணீருக்குக் குனிந்து, கைகளைக் கிண்ணம்போல் குவித்துக் குடித்தான். பிறகு சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குச் பின்னால் துளசி போன்ற ஒரு செடி இருந்தது. ரொட்டியையும் கறித்துண்டுகளை உண்டபின் அச்செடியின் வாசனையான இலைகளைப் பிடுங்கி தன்னையறியாமல் சவைக்கத் தொடங்கினான். அதன் சுவை மேல் அண்ணத்தில் தெரிந்தது. சுர்ரென்று அதன் விறுவிறுப்பு முன்பு போலவே ஏறியதில் சுகமாக இருந்தது பழைய ஞாபகங்கள் வந்தன. குட்டையாக வளரும் அந்தச் செடியை சின்னப் பையனாக இருக்கும் போது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பருவத்தின் இனிமைகளில் அதுவும் ஒன்று. இப்போது ருசி பார்த்ததும் மகிழ்ச்சியும் வருத்தமும் அவன் ஆத்மாவில் எழுந்தன. எவ்வளவு அதிசயமான இளமை, எத்தனை இனிமையானது அனுபவிக்க எத்தனை ஆழமானது, எத்தனை வருத்தப்பட வைப்பது. நீரோடையின் பக்கத்தில் துளசி இலைகளைச் சவைத்துக் கொண்டிருந்த அவன் இருதுருவங்களைப் புரிந்து கொண்டது போலிருந்தது. கடந்த காலத்தில் பின்னர் மாற்றமில்லாத எதிர்காலத்தில் - அந்த எதிர்காலத்தில், காலத்தின் சுழற்சிப்படி கடந்த காலமும் இருக்கும் - ஒருகணம் வாழ்ந்தான். அவன் புன்னகைத்தான். முகத்தில் சிறுவனைப் போல பாவனை தோன்றியது. தனது பழைய உறுதியான ரத்த நாளங்கள் புடைத்த கைகளால் இன்னொரு இலையைப் பறித்தான். கைகள் அவனுடைய மனநிலைக்குத் தகுந்து மாறவில்லை. ஆனால் கால்கள் சிறுவனைப் போல் ஆசுவாசம் கொண்டன. மண்ணின் நிறத்தில் நுரைபொங்கிப்பாயும் நீரோடையை, அதில் மங்கலாகச் ஜாலம் காட்டிய நிறங்களைப் உற்று நோக்கினான். தெளிவான பச்சைத் தண்ணீர், தெளியாத, மை போன்று தெரியும் ஆழம். மீன் இருக்கலாம் என்று யோசித்தான். மீன் பிடிக்க ஏதாவது இருந்தான் நன்றாக இருக்கும்.
காட்டுக்குள்ளிருந்து திடீரென இரண்டு பெண்கள் வந்தார்கள். பெரிய, அதிர்ச்சியடைந்த கண்கள். பயந்து போன வட்டமான வாய்களிலிருந்து அலறல் எழுந்தது. விருட்டென்று ஓட்டம். பிறகு அமைதி. அந்தப் பெண்கள் ஏன் முட்டாள்த்தனமாக ஓடினார்கள் என்று வியந்தான். அவனைப் பார்த்துப் பயந்திருக்கக் கூடும் என்பதை அவன் யோசிக்கவில்லை. இன்னொரு இலையைப் பறித்துத் தின்றான். அவன் கைதாகிச் சிறைக்குச் சென்ற நேரத்தில் திருமணம் முடிப்பதாக இருந்த பெண்ணைப் பற்றி சிந்தித்தான். அவனுடைய குழந்தைப் பருவ நினைவுகளில் அவள் இல்லை. இளைஞனாகிய பின் தான் பார்த்தான். இலைகளின் சுவை எப்படியோ அவளது முகத்தை அவன் முன் கொண்டு வந்தது. ஐம்புலங்களின் ஒரு உணர்வு சிலநேரங்களில் இன்னொரு உணர்வைத் தூண்டிவிடுவது வியப்புத்தான். நாவின் சுவை இப்போது அந்தக் காட்சியின் முழு விளைவைக் கிளறியது. கடைசி முறையாகப் பார்த்த்து போலவே அவளை பார்த்தான். அவள் வடிவில் அழகானவள் இல்லை என்றாலும், வேறொரு அழகு அவளிடம் இருந்தது. அவள் நடையில், பாவனையில், ஒரு மேன்மை இருந்தது. அவளது சிறிய கரடு முரடான முகத்தை, தலையில் வழுவழுப்பான சுருண்ட முடியை தெளிவாகப் பார்த்தான். மெலிந்த மங்கலான கைகளை, கவனமாக வெட்டப்பட்ட நகங்களை, தெளிவாகத் தெரியும் ரத்த நாளங்களைப் பார்த்தான். அவளுக்குக் கொடுத்த வைரக்கல் ஒளிர்வதைப் பார்த்தான். அவன் கைதானதும் அவள் அதை அனுப்பிவிட்டாள். மீண்டும் அவனுக்கே கொடுத்துவிட்டான். அது அவளிடம் இன்னும் இருக்கிறதா அதை அணிகிறாளா அவள் கணவன் அதைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று வியந்தான்.
சிறைவாசம் குழந்தைத் தனமான கற்பனைகளை எப்படியோ வளர்த்திருந்தது. அவளுடைய கணவன் அதைவிடப் பெரிய விலையுயர்ந்த வைரத்தை கொடுத்திருப்பானோ என்று யோசித்தான். பொறாமையில் அவனுக்கு மனம் வலித்தது. அவளுடைய மெலிந்த, மங்கலான கையில் இன்னொரு வைரம் இருப்பதை அவனால் பார்க்கப் பொறுக்கவில்லை. அவளுக்குப் ரொம்பவும் பொறுத்தமான கறுப்பு கவுணில் அவளைப் பார்த்தான். அதில் ஒருவித சிவப்பு நிறமும், பளபளக்கும் கறுமையும் இருந்தது. அவளுடைய மிக அலங்காரமான கவுண் அது, அதில் ஒரு இளவரசி மாதிரி இருந்தாள். அவள் மெல்லிய உடல் சோபாவின் ஓரத்தில் சாய்ந்து நிற்க, முழங்காலில் பளபளக்கும் கறுப்பு மடிப்புகள் ஒளிர ஒரு காலின் அழகைப் பார்க்க முடிந்தது. கால்கள் கவர்ச்சியாக சிறியதாக நன்றாக வளைந்து இருந்தன. நகரின் இசையரங்கில் கச்சேரி கேட்டுவிட்டு ரெஸ்டாரெண்ட்டில் சூப் குடித்த அந்த மாலை நேரத்தை நினைத்தான்.
மீண்டும் மனம் உணவு, உடை, வீடு என்று இருப்பதற்கான பிரச்சனைகளை நோக்கித் திரும்பியது. மனதைவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டான். வாழ்வின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப் பட்டான். இருந்த கொஞ்ச்சப் பணம் செலவான பின் எப்படிச் சாப்பிடுவது? நீரோடையைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். இலைகளை அசைபோடவில்லை. பையிலிருந்து சிகரெட் பைப்பையும், புகையிலை வைத்திருந்த காகிதத்தையும் எடுத்தான். ரொம்பக் கவனமாக பைப்பில் புகையிலையை நிரப்பினான். புகையிலை அரிது. பிறகு புகைக்க ஆரம்பித்தான். நீல நிறப் புகையினூடே அவன் முகம் கவலையில் வயதானது போலிருந்தது. குளிர்காலம் வந்துவிடும். இருக்க இடமில்லை. பட்டினியிலிருந்து காப்பாற்ற ரொம்ப ஒன்றும் பணமில்லை. எப்படி வேலை தேடுவதென்று தெரியவில்லை. மரக்கட்டைகளை வெட்டலாம் என்று குழப்பத்தில் நினைத்தான். ஊர்க்காரர்களுக்கு விறகுக்காகும். உளுத்துப் போன காரணகாரிய அறிவில் மனம் பயணம் செய்தது. அவனைப் போன்ற மனிதனுக்கு விறகு வெட்டுவதுதான் கிடைக்கக்கூடிய உசிதமான வேலையாகத் தோன்றியது.
சிகரெட்டைப் புகைத்துவிட்டு ஏதோ முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். வேகமாக நடந்து காட்டிலிருந்து மீண்டும் ரோட்டுக்கு வந்தான். வேலையைப் பற்றி முடிவை மனதில் வைத்து செல்பவனைப் போல் ஒரு வீடுவரை நடந்தான். சின்னச் சின்ன கட்டங்கள் அடங்கிய வெள்ளையான பெரிய பண்ணைவீடு. நம்பிக்கையாகத் தெரிந்தது. ஒருபுறம் இருந்த கதவை நெருங்கினான். மூலையிலிருந்து ஒரு நாய் பாய்ந்துவந்து குரைக்கத் தொடங்கியது. அவன் பேசியதும் நாயின் வால் குழைந்து ஆடியது. நாயைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த போது கதவு திறந்தது, அவனைப் பார்த்து ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் இருந்த சிறையின் கறை பார்த்த்தும் தெரிந்தது.



நாயின் முன் குறுகாதவன், அந்த வெள்ளை வீட்டில் வசித்த மனிதன் முன் கூனிக் குறுகினான். அந்த மனிதனுக்கு சுதந்திரம் பறிபோவதென்றால் என்னவென்றே தெரியாது. தலையைக் குனிந்து கொண்டே முனகினான். வீட்டுக்காரன், அவனைவிட வயதானவன். காது கொஞ்சம் கேட்காது. அவனை முறைத்தான். கடைசியில் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டான், போனான். ஆனால் நாய் வாலாட்டிக் கொண்டு காலின் பின்னாலேயே வந்தது. அதைக் கூப்பாடு போட்டு அழைக்கவேண்டியிருந்தது. அவன் தன் வழியே போகும் போது நாயின் நினைவு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவனுக்கு எப்போதும் மிருகங்களைப் பிடிக்கும். தோழமையான நாய் வாலாட்டுவது குறிப்பிடத் தகுந்ததுதான். அறிமுகத்தில் கைகுலுக்கும் நிலைமையைத் தாண்டிவிட்டான்.
அடுத்த வீடு ஒரு அழகான காட்டேஜ். ஜன்னல் வழியெ திரைச்சிலைகளில் இருந்த பூ வேலைப்பாடுகள் தெரிந்தன; வீட்டுச் சுவர்களின் மேல் படர்ந்திருந்த வர்ஜீனியாக் கொடி அங்கங்கே சிவப்பாகத் தெரிந்தது. ஸ்டெப்பின், வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் கதவை அடைந்து தட்டினான். ஆனால் யாரும் வரவில்லை. அங்கே வெட்டப் படாத மரக்கிளைகள் குவிந்திருப்பதைக் கவனித்து ரொம்ப நேரம் சும்மா நின்றிருந்தான். கவனமாகச் சுற்றி வாசல் கதவை அடைந்தான். அப்போது கடந்து போன நாட்களின் மனநிலை ஞாபகம் வந்தது. யாருடைய வாசலுக்கும் செல்லப் பயப்படும் நிலை வரும் என்று ஜோஸப் ஸ்டெப்பின்ஸ்சுக்கு தெரிந்திருந்தால்.. மின்சார அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியாதபடி கதவினருகில் நின்றான். கதவிலிருந்த சங்கிலியின் நீளத்துக்குக் கதவு திறந்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் தலை தெரிந்தது. காட்டுக்குள்ளே அவனைப் பார்த்துப் பயந்து அலறிய பெண்களில் ஒருத்தி. அவனுக்குத் தெரியவில்லை. முன்போலவே பயத்தில் அவள் கண்கள் விரிந்தன வாயும் குவிந்தது. ஏதோ கத்திக் கொண்டே கதவை அவன் முகத்தில் தடாலெனச் சாத்தினாள். தொடர்ந்து கூக்குரல்கள் கேட்டன. இரண்டு வெளிறிப்போன அழகிய முகங்கள் திரைகள் போட்டிருந்த ஜன்னலின் ஓரத்திலிருந்து அவனைப் பார்த்தன. அவர்களுக்கு தான் பயங்கரமானவன் என்பதைப் புரிந்து கொண்டான். சட்டம் அவனை கைது செய்தபோது கூட அவ்வளவு அவமானத்தை உணர்ந்ததில்லை. அவ்வளவு கூனிக் குறுகினான். தலையே நிமிர்த்திக் கொண்டு அங்கிருந்து போனான். அவன் ஆத்மா அவமானப் படுத்தப்பட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. “அந்த இரண்டு பெண்களும் பயப்படுகிறார்கள்” தானே சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பயங்கரத்தில் அவன் முழங்கால்கள் நடுங்கின. கடினமான வாழ்வில் அவனைப் பற்றிய பயத்தைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. மீண்டும் காட்டிற்குச் சென்று ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்தான். வாழ்வைப் பற்றியோ, மரக்கட்டைகளைப் பற்றியோ கொஞ்சநேரம் யோசிக்காமல் இருந்தான். தன்னைப் பார்த்துப் பயந்த இரண்டு பெண்களை யோசித்தான். யாரையும் துன்புறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. அவன் அப்படி நினைப்பதாக குற்றம் சாட்டும் இந்த அனைவரின் மீதும் வினொதமான வெறுப்பு ஏற்பட்டது. அவன் வெறுப்புடன் சிரித்தான். மீண்டும் அவர்கள் வந்து அவனை அந்தச் செடிகளுக்குள் எட்டிப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான். புத்தியில்லாத அவர்கள் அவனைப் பார்த்து பயந்தோடுவதற்காகவே மிரட்டுவதுபோல் முன்னால் வருவான்.
கொஞ்சநேரம் கழித்து மனதிலுள்ளதையெல்லாம் தூர எறிந்துவிட்டு, தன் பிரச்சனையைப் பற்றி சிந்தித்தான். காட்டுக்குள் படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பக்காற்றில் தூங்கிப் போனான். இடியோசை தான் அவனை எழுப்பியது. ஒருமாதிரி இருட்டிவிட்டது. ‘இடியும் மழையும் புயலும்’ முனகினான். தன் புதிய உடைகளைப் பற்றி யோசித்தான் – என்ன துரதிருஷ்டம் அவற்றை நனைந்து விட்டால் -. எழுந்து சுற்றியிருந்த செடிகொடிகளுக்குள் புகுந்து வண்டிப் பாதைக்கு வந்தான். அப்போதுதான் அவன் வாழ்வின் திசையை அதிர்ஷ்ட்த்தை நோக்கிச் செலுத்திய படிக்கட்டைக் கண்டான். முத்துக்கள் பதித்த கைப்பிடி கொண்ட ஒரு சின்ன பட்டுத்துணியால் செய்த குடை.. அவனுடைய உடைகளுக்கு மோட்சம். பெருமகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டான். மழை துவங்காவிட்டாலும் அதைப் விரித்துத் தலைக்குமேல் வைத்துப் பார்த்தான். ஒரு கம்பி மட்டும் உடைந்திருந்தது. சரிபார்த்து விடலாம். வண்டிப்பாதையில் விரைந்தான். அவனுக்கே ஏனென்று புரியவில்லை. புயலிலிருந்து தப்பவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் அவனுக்கிருந்தது, நடந்தான். காட்டுப் பாதையில் போனால் என்ன பாதுகாப்புக் கிடைத்துவிடும். ஒருகுருட்டு நம்பிக்கைதான் அவனைத் தள்ளியிருக்க வேண்டும் என்று பின்னால் நினைத்துப் பார்த்தான்.
ரொம்ப தூரம் ஒன்றும் போகவில்லை, அரை மைல் இருக்கும், எதிர்பாராத்தைப் பார்த்தான். காலியாகத் தெரிந்த ஒரு சின்ன வீடு. மகிழ்ச்சியில் மெல்லக் கூவினான். கொஞ்சம் குழந்தைத் தனமும் வருத்தமும் அதில் கலந்திருந்தது. கதவைத் தள்ளித் திறந்து நுழைந்தான். அரைகுறையாய் கட்டப்பட்ட ஒரு அறையும் அதையொட்டி இன்னொரு அறையும். ஒரு வாசலும். வேறு எதுவும் இல்லை. கூரை இல்லை. டெண்ட் போட்டது போல் சாய்ப்பு பொட்டிருந்தது. அது ரொம்ப இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. தரை காய்ந்துபோய் தூசியாக இருந்தது. உடைந்த நாற்காலி ஒன்று இருந்தது. ஸ்டெப்பின்ஸ் அடுத்த அறை காலியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள எட்டிப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான். மனம் நிறைவாக உணர்ந்தான். தன்மீது ஒரு மரியாதை வந்தது. ஒரு ஏழை நத்தை தன் கூட்டைக் கண்டுகொண்டது. இருக்க அவனுக்கு இடமும் தங்கிக்கொள்ளக் கூரையும் கிடைத்துவிட்டது. அந்த இருண்ட இடம் உடனே வீடாகத் தகுதி உயர்ந்தது. பெருமழை பெய்தது. இடி விழுந்த்து. அந்த இடமெங்கும் கண்ணைக் கூசும் நீல ஒளியால் நிறைந்தது. ஸ்டெப்பின்ஸ் இந்த்த் தடவை புகையிலையை பைப்பில் தாராளமாக நிரப்பினான். நாற்காலியை சுவற்றி சாய்த்துக் கொண்டு புகைத்தான். தன்னிலை உணர்ந்து நிறைவோடு அங்கும்மிங்கும் பார்த்தான். உண்மையிலேயெ ரொம்பவும் சின்னதுதான். ஆனால் அவனுக்கு ரொம்ப வேண்டியது. குளிர்காயும் அடுப்பும் ரொம்பநாள் பயன்படுத்தாது விடப்பட்ட சமையல் அடுப்பும் பார்த்தவுடன் திருப்தியுடன் தலை ஆட்டிக் கொண்டான். .
புயல் அடித்து ஓயும் வரை உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தான். ரொம்ப மழை பெய்துவிட்டது. காற்றும் பலமாகத்தான் வீசி இருந்த்து. அந்தச் சின்னவீடு ரொம்பக் கச்சிதமாக இருந்தது. குளிர்ந்த வடமேற்குக் காற்று திறந்திருந்த கதவின் வழி வீசியது. காற்று சூழ்நிலையை மாற்றி விட்டது. சூடாக எரிக்கும் காற்று போய்விட்டது. இரவு குளிரும். ரொம்பவும் குளிரக் கூடும்.

ஸ்டெப்பின்ஸ் எழுந்து அடுப்பையும் அதன் குழாயையும் கூர்ந்து பார்த்தான். ரொம்ப நாளாக பயன்படாதவை ஆனால் நம்பிக் காரியத்தில் இறங்கலாம். வெளியே சென்று மரக்கட்டைகள் கிடந்த இடத்திலிருந்து நனையாமல் இருந்த விறகுக் கட்டைகளை எடுத்துவந்தான். தீயைப் கொளுத்தி அடுப்பைப் பற்றவைத்தான். அடுப்பு நன்றாக எரிந்தது பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தான். இன்னொரு பரிசும் வெளியே காத்திருந்தது. ஒரு சின்னக் காய்கறித்தோட்டம், அதில் உருளையும் மக்காச்சோளமும் இருந்தன. அந்த வீட்டில் யாரோ பலவருடங்கள் சும்மா குடி இருந்திருக்கவேண்டும். தோட்டமும் போட்டிருக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன்னால்தான் இறந்து போனான். அடுப்பு நாற்காலி சின்ன அறையில் ஓய்விடம் ஒன்றிரண்டு இரும்புப் பானைகள், இலுப்புச்சட்டிகள் தவிர மற்ற எல்லாம் போய்விட்டன. ஸ்டெப்பின்ஸ் மக்காச் சோளம் எடுத்து, தோண்டி உருளைகள் எடுத்து அடுப்பில் சமைக்க ஆரம்பித்தான். வேகமாக கிராமத்துக் கடைக்குச் சென்று பதப்பட்ட கறியும் அரைடஜன் முட்டையும் கால்கிலோ தேனீரும் உப்பும் வாங்கிவந்தான். திரும்பி வந்ததும் ரொம்ப வருடங்களாக மறந்து போன காட்சியைப் பார்த்தான். சிரித்துக் கொண்டிருந்தான். “வா., இது உனது மாளிகை” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். பெருமகிழ்ச்சியுடன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். வெறுப்பெற்றும் வீடற்ற வெளிகளிலிருந்து ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான்.

இயல்பாகவே குடும்ப உணர்வுள்ள மனிதன். அவனுடைய இளமைக் காலங்களை சிறையில் கழிக்காமல் வீட்டில் இருந்திருந்தால், அவனிடம் உள்ள நல்ல குணங்கள் வளர்ந்திருக்கும். அப்படி ஒன்றும் இப்போது காலம் கடந்துவிடவில்லை. முட்டையையும் கறியையும் சமைத்து, டீப் போட்டு, காய்கறியை வேகவைத்து உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து சிறு குச்சிகள் மீது நிற்கும் பழைய போர்டு மீது சாப்பாட்டைப் பரப்பி வைக்கும் போது ரொம்பவும் மகிழ்ந்தான். ஆத்மா வரை சென்ற ரசனையுடன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். வீட்டில் உட்கார்ந்து சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டான். சாப்பிடும் போது திரையில்லாத, கண்ணாடிகள் உடைந்த, இரண்டு ஜன்னல்களையும், அடிக்கடி பார்த்துக் கொண்டான். அவன் பயப்படவில்லை. அது முட்டாள்த்தனம். அவன் எந்த நாளும் கோழையாக இருந்ததில்லை. ஜன்னலை முடிவைக்க திரையோ எதுவோ தேவைப் பட்டது. இயற்கையின் பரந்த வெட்டவெளியிலிருந்து அல்லது எட்டிப் பார்க்கும் மனிதர்களிடமிருந்தும் மறைந்து கொள்ள வேண்டியிருந்தது. யாராவது வீட்டிலிருக்கு விளக்கொளியைப் பார்த்து சந்தேகப் படக்கூடும். ஒரு பழைய பாட்டிலுக்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்திருந்தான். இரவின் கறுப்பு வெறுமையில் முறைத்துக் கொண்டிருக்கும் ஜன்னலை மூட திரைகள் இருப்பதை விரும்பினாலும், இப்போது அவன் பெருமகிழ்ச்சியுடனிருந்தான்..
இரவுச் சாப்பாட்டை முடித்தபின் ஏக்கத்துடன் புகைபிடிக்கும் பைப்பைப் பார்த்தான். புகையிலை அருகிவிட்டது. அதை சேமித்து வைத்துக் கொள்ளும் தேவையை உணர்ந்து ஒரு நொடி தயங்கினான். பிறகு அந்தக் கவலையை மறந்தான். இவ்வளவு பெரிய வீடு கிடைத்தது அதிர்ஷ்டம் இன்னும் தொடரும். தொடரப் போகும் இன்பங்களின் வரிசையில் முதலாவது வீடு. பைப்பை நிரப்பி புகைத்தான். அடுத்த அறையில் இருந்த பழைய படுக்கையில் தூங்கப் போனான். கோடுகளைப் போல ஒளிரும் மரக்கிளைகளின் இடையே வெய்யில் அடிக்கும் வரை குழந்தையைப் போலத் தூங்கினான். பின்னால் எழுந்தான். வீட்டுக்கு அருகிலிருந்த நீரோடைக்குப் போனான். தண்ணீரை மேலே அடித்துக் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினான். மீதமிருந்த முட்டைகளையும், கறித்துண்டுகளையும் சமைத்தான். இரவில் வெகு அமைதியாக சாப்பிட்டது போல காலைச் சாப்பாட்டை முடித்தான். சரியாக நிற்காமல் கீழே இறங்கிப் போயிருக்கும் வாசல் நிலைப்படியில் உட்கார்ந்தான். மீண்டும் தனது முக்கிய பிரச்சனையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். புகைக்கவில்லை. அது தீரப்போகும் நிலையில் இருந்தது. அதனால் கவனமாக இருந்தான். வீடு கிடைத்துவிட்ட நினைப்பில் அவன் இல்லை. வீட்டுக்காரனைப் பற்றி நினைத்தான். அவனுக்கு வீடு வாடகைக்கு விடுவானா? வெகு விரைவிலேயே அந்த சந்தேகத்துக்கு விடை கிடைத்தது. வண்டிப் பாதையில் விழுந்த பெரிய மரக்கிளைகளில் நிழல் நீண்ட இருண்ட நிழலால் அசைவது போலிருந்ததும் அவனுக்குப் புரிந்து விட்டது. யாரோ மனிதனுடைய நிழல். நேராக உட்கார்ந்து கொண்டான். முதலில் எதற்கும் கவலைப்படாதவன் போல் முகபாவம் தெரிந்தது. பிறகு குழந்தை தனக்குப் பிடித்த ஒரு பொருளை வைத்துக் கொள்ள மன்றாடுவது போல முகம் மாறிவிட்டது. நிழல் முன்னால் வர வர, அவன் நெஞ்சின் படபடப்பு அதிகமானது. நிழல் மெதுவாக வந்தது. கிழவனுடையது போல. அவன் வயதானவந்தான். ஆனால் ரொம்ப குண்டு. ஒருபக்கம் சரியும் உடலின் ஒரு பக்கத்துக்கு தடியை ஊன்றி தன்னுடைய நிழலுக்குப் பின்னால் வந்தான். விவசாயி மாதிரி இருந்தான். அவன் வந்ததும் ஸ்டெப்பின்ஸ் எழுந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Wednesday, February 10, 2010

வன்முறையின் கொடும்பசி தீராது

சரத் பொன்சேகா கைதானதும், முன் எங்கோ இலங்கை வன்முறைகளைப் பற்றிப் படித்த கவிதையொன்று மனப்புகையாக ஞாபகம் வருகின்றது. புலிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய கவிதை அது. அப்போது அவர்கள் தமிழ் குழுக்களைக் கொலைசெய்யத் தொடங்கவில்லை. ‘நீ தூக்கி இருக்கும் துப்பாக்கியை எதிரியை நோக்கித் தூக்கி இருக்கிறாய். அதை எங்களை நோக்கித் திருப்ப மாட்டாய் என்று என்ன உத்திரவாதம்?’ என்ற தொனியில் இருந்தது கவிதை. எதிரியை நோக்கும் துப்பாக்கி நம்பக்கம் திரும்பிச் சுடும். அதிலும் இழப்பு நேரிடும் என்று வன்முறையின் உட்குணத்தை வெளிப்படுத்திய கவிதை அது. வன்முறையப் பழகிவிட்ட அதிகார மனம் அல்லது அரசு, அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதென்பது எளிதல்லை. எளிய தீர்வாகத் தெரிகிறது. வன்முறையை பயன் படுத்துபவனுக்கு எளிய தீர்வாகத் தெரியலாம். ஆனால் வன்முறை அரங்கேறும் சமூகத்தில் அது ஒரு பழக்கமாக, எளிய தீர்வாக எந்தப் பிரச்சனைக்கும் சொல்லப் படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியும், சரத் பொன்சேகாவும் அந்தச் சமூகம் முழுவதும் வன்முறையின் பசியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள அவர்கள் தீவிரமான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வெற்றியும், தோல்வியும், வன்முறையைப் பொறுத்தவரை, நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும். துப்பாக்கி எடுத்தவன் அதன் பசிக்கு இரையாவான். புலிகளை வன்முறையில் ஒழித்துவிட்டால் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்த்த சமூகத்துக்கு இது ஒரு பாடம். நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் வன்முறை மூலம் தீர்வு காண நினைப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

Thursday, February 04, 2010

மரங்களின் கதை

வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் பற்றிப் சமீபத்தில் படித்தேன். அரசமரம் தான் கதை சொல்லுகிறது. உடனடியாக ஞாபகம் வந்தது புளியமரத்தின் கதை. அடுத்து ஞாபகம் வந்தது சோ.தர்மனின் கூகை. இந்த வரிசையில் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் இலக்கியத்தில் மரத்தின் பரிணாம வளர்ச்சி மனதில் பட்டது.

குளத்தங்கரை அரசமரத்தில் பேசிய (அரச) மரம், புளிய மரத்தின் கதையின் மரம் பேசாத சாட்சியாக நிற்கிறது. தெருவிலும் ஊரிலும், நாட்டிலும் நடப்பதின் சாட்சியாக நிற்கிறது. கூகையில் வரும் மரம், கூகையின் தங்குமிடமாக, வாய்பேசாமலும், சாட்சியாக இராமலும் (இருந்தாலும் அது வெளியே தெரிவதில்லை) அமைதியாகிவிடுகிறது. கதைகளைப் பொறுத்தவரை வெளிப்படையாக துருத்திக் கொண்டு நின்ற மரம், இரண்டாவது கதையில் பேசாதிருந்து, மூன்றாவது கதையில் இருக்கும் இடம் தெரியாமல் ஆனால் ஒரு பின்புலமாக இருக்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் நான் நான் என்று தம்பட்டம் அடித்த மரம், இரண்டாவதில் சத்தம் குறைந்து, மூன்றாவதில் கதையுடன் இயைந்து மெனக்கெட்டுப் பார்த்தால் ஒழிய தெரியாததாகி விடுகிறது.

இந்த வரிசையில் பார்த்தால், அது சமூகத்தின் குரல் என்றே அதைச் சொல்லலாம்.

Friday, January 29, 2010

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் (இது டி.வி. பற்றிய பதிவல்ல)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய விமரிசனம் தேவையற்றது. அவை அவ்வளவு மோசம்.

நான் பேசப் போவது ‘நாங்களெல்லாம் பெரிய ஆட்களாக்கும்’ என்று பறையடித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் வலம் வரும் இலக்கியக்காரர்களைப் பற்றியது. ஒவ்வொருவரின் எழுத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை. தம்பட்டம் அடிப்பதையே தொழிலாக்க் கொண்டிருக்கும் எழுத்தர்களைப் (எழுத்தாளர்களைப் பற்றியதல்ல)
மனிதன் என்று பிறந்து விட்டால், அடக்கமுடைமை வேண்டும். உன்னதமான மனிதர்கள் எப்போதும் அடக்கத்துடனே வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் படைப்பவன் உன்னதமானவன். மனிதனின் உன்னதமான உணர்ச்சிகளை (அவை எவ்வளவு மோசமான உணர்ச்சிகளாக இருந்தபோதிலும் – மனிதன் கொள்வதனாலேயே உன்னதமாகிவிடுகின்றன) எழுத்தில் வடிப்பவர்கள். அதை மனிதன் முன் கண்ணாடியைப் போல் நீட்டிக் காட்டுபவர்கள். சாதாரண மனிதர்களிடம் நாம் எதிர்பார்க்கும் பண்புகளை, இப்படி உன்னதமான இலக்கியம் படைக்கிற, அல்லது படைப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்களிடம் எதிர்பார்க்கிறோம். தன்மானமும், சுயமரியாதையும், சுயஎள்ளலும் எளியமக்களின் வாழ்வுடன் தங்களை அடையாளம் காண்பதிலும் அவர்களின் உன்னதங்களை வெளிக்கொணர்வதும், கரிசனங்களை கவலைகளை உரைத்து, கீழ்மைகளை சுட்டிக்காட்டுவதும் அவன் பணி. இதையெல்லாம் பழங்கால பாணி என்று ஒதுக்கிவிடுதல் எளிது. ஆனால் உன்னத்துக்கு வழிகாட்டும் மனிதர்கள் உன்னதங்களை தங்களின் கொண்டிருக்க வேண்டும். உன்னதங்களுக்கான உணர்வும் உழைப்பும் இருக்க வேண்டும். ‘நான் படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று சொல்வதானால் அந்த உன்னத நோக்கம் வேண்டும்.

இப்போது நாம் பார்க்கின்ற எழுத்தாளர்கள் பலர் நான் எழுதியது தான் எழுத்து. நான் சொன்னது தான் கருத்து அதற்கு மேல் எதுவும் இல்லை என்கிற வகையில் தம்பட்டம் அடித்துத் திரிவதைப் பார்க்க முடிகிறது. தன்னம்பிக்கை என்பது வேறு. தன்னை யார் கீழ்மைப் படுத்தினாலும் தன்னிலை தவறாமல் இருப்பது. இழிவான விமரிசனங்களை ஒதுக்கிவிடுவது. மலிவான விளம்பரம் தேடும் வகையில், என்னை ஆங்கிலத்தில், பிரெஞ்சில் மொழிபெயர்த்து விட்டார்கள் ஆகவே நான்தான் தமிழ் இலக்கியத்தில் இன்று பெரியமனிதன். என்னை மலையாளத்தில் கொண்டாடுகிறார்கள் தமிழர்கள் பார்ப்பது கூட இல்லை. என்று புலம்புகிறார்கள். தங்களுக்குள் நான் பெரியவன் நீ பெரியவன் என்று அடித்துக் கொள்கிறார்கள். வாசகர்களிடம் ஏதோ தாங்கள் கடவுள் போலவும், தங்களிடம் தொடர்பு கொண்டால் அது வாசகர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம் என்று தோன்றும் வகையில் பேசி வருகிறார்கள். சிலர் தான் உலகம் சுற்றிப் பார்க்க சந்தாப் பிரிக்கிறார்கள். இலக்கிய சேவையை யாருக்கு எதற்காக வாசகன் செய்யவேண்டும்? அவன் புத்தகம் படித்தால் போதாதா? அதுக்கே வழியில்லை. (மீண்டும் ஞாபகம் வருகிறது ஐநூறு பிரதிகள்)
சிரிப்பு வரும் இவர்களில் வாசகர்கள் எத்தனை பேர் என்று அறிந்தால். தமிழில் ஒரு புத்தகம், 500 பிரதிகள் பதிப்பது பெரிய விஷயம். விற்குமா என்றால் சொல்ல முடியாது. அரசு நூலகங்களுக்கான ஆணையில் 600 பிரதி போனால் மிச்சம் விற்பது ஆயிரம் பிரதிகளுக்குள் அடங்கிவிடும். 74 சதவீதம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில், அதாவது குறைந்தது நாலு கோடிப்பேர் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 500 பிரதி என்பது எவ்வளவு கேவலமானது?. அதைப் பெருமையாகப் பேசுவதும் கேவலமானதே. நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு இது கேவலம்தான். ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் பெருமை பேசுவதென்பது கீழ்த்தரமானது. தமிழமக்கள் என்ன செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள் என்பது நான் கேட்கும் கேள்வி. ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டார்களா? நல்ல புத்தகங்களுக்காக அலைந்து திரிந்து, நல்ல எழுத்தாளர்களை, நேர்மையானவர்களை, உன்னதமானவர்களை மதித்தார்களா? எழுத்தாளனை மதிக்காத பதிப்பகத்தாரை ஒதுக்கினார்களா? அல்லது வெளிக்காட்டினார்களா? வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, டிவியிலும், வலைத்தளத்திலும் தங்கள் பெருமையையும், வலிமையையும் அடுத்த எழுத்தாளரின் சிறுமையையும் அறியாமையையும் பற்றிப் பேசி தெருச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா?

முந்தி எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் செய்தது போல மோதிக்கொண்டு தரந்தாழ்ந்தால், அதேமாதிரி ரசிகர்கள் தான் கைதட்டுவார்கள். அரைகுறை ஆங்கிலம் படித்துவிட்டுத் தமிழையே நன்றாக படிக்க எழுதப் பயிலாத ஒரு இஞ்ஜினீயர் கூட்டம் டாலர்களை வாங்கி அடையாளத்தைத் தொலைத்துவிட்டு தேட வந்திருக்கிறது. அது அவர்கள் குறையல்ல. ஆனால், அவர்களுக்குப் பாவலாக்காட்ட இந்த மாதிரி எழுத்தாளார்கள் தேவைப்படுகிறார்கள். இந்த இன் ஜினீயர் கூட்டம் இவர்களின் அரைவேக்காட்டுக் டவுண்லோடு நாவல்கள், கதைகளைப் படித்துவிட்டு ஏதோ தமிழ் இலக்கியம் படித்துவிட்டதாய்ப் பாவலாப் பண்ணுகிறது. இது எல்லாம் நாடகந்தான், ஐநூறு பிரதிகள் நாலைரைக்கோடி மக்கள். இது ஒன்றே போதும்.

ஒருவரை ஒருவர் மேடைகளில் தாக்கிக் கொண்டு, அரசியல் வாதிகளை விட மோசமாக வார்த்தையாடுபவர்கள் அதிலிருந்து வரும் அந்த விளம்பரத்துக்காகத்தான் குதிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியதின் நிலையும் விளம்பரதாரர் நிகழ்ச்சியாகவே மாறிப்போனதில் ஒன்றும் அதிசயம் இல்லை.அது தொற்று நோய். சினிமாவில் தொடங்கி, டிவியில் தொடர்ந்து, அரசியலில் உயர்ந்து, இலக்கியத்தில் நுழைந்து விஷமாய்ப் பரவிவரும் நோய். இந்த விவகாரங்களில் விமரிசனங்களுக்கான பொறுப்புணர்வோ, நிதானமோ, முதிர்ச்சியோ இருக்க வேண்டிய தேவையில்லை. மனம்போன போக்கில் போகலாம். தமிழ் வாசகர்களும் அப்படித் தான் போவார்கள். அவர்களின் ஹீரோக்கள் அப்படித்தானே போகிறார்கள்.

Thursday, January 21, 2010

கண்ணாடி பொம்மையின் எதிர் பிம்பம்

கண்ணாடி பொம்மைகள்( (Glass Managerie) என்ற டென்னிஸி வில்லியம்ஸின் நாடகத்தைப் படித்தபோது அது தன் வாழ்வின் எதிர் முனையாக இருப்பதாக அவன் எண்ணினான். தன்வாழ்விலும் அது நிகழ்ந்திருக்க்க் கூடும் என்றே நம்பினான்.

நாடகத்தில் டாம் முக்கிய பாத்திரம். டாம் நாடகத்தை தன்னுடைய நினைவுகளின் நாடகமாக, கடந்த காலத்தின் நினைவாக, அறிமுகம் செய்து தொடங்குகிறான். ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் செய்கிறான். நாடகத் தொடக்கத்தில் விங்ஃபில்ட் குடும்பம் இரவு உணவு கொள்வதை காட்டுகிறது. அமெண்டா உணவைச் சவைத்து உண்ணுமாறு டாமிடம் சொல்லுகிறாள். ரொம்பவும் எரிச்சலுற்று மேஜையை விட்டெழுந்து புகைபிடிக்கச் செல்கிறான் டாம். அமெண்டா தன்னை எவ்வாறு 17 நல்லவர்கள் (வரன்கள்) அழைத்த கதையைச் சொல்கிறாள். அடுத்தநாள், லாரா தன்னுடைய மேஜையில் அமர்ந்து டைப்ரைட்டர் (பழகும்) அட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அமண்டா கோபமாக வருகிறாள். லாராவிடம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் பற்றிக் கேட்டுவிட்டு லாரா வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்பதைத் தான் கண்டுபிடித்ததைச் சொல்கிறாள். வகுப்புகளுக்குத் தன்னால் செல்லமுடியவில்லை என்றும் தினமும் அந்த நேரத்தில் சும்மா ஒரு நடை சென்று வருவதாகவும் லாரா சொல்கிறாள்.

பின்னர் அமெண்டா லாராவுடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் போது அவளுக்குப் பிடித்த ஒரு பையனைப் பற்றிக் கேட்கிறாள். லாரா பள்ளியில் தன்னுடன் படித்த பையனை (அந்த வருடத்துப்) பள்ளி ஆல்பத்தில் காட்டுகிறாள்.

பிறகு டாமுக்கும் அமெண்டாவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. டாம் தினமும் ஏன் சினிமா பார்க்கச் செல்கிறான் என்று அமெண்டாவுக்குப் புரியவில்லை. குடும்பத்துக்காக தான் இப்படி வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்கிறான். கோபத்தில் ஏதோகொலைகாரனைப் பற்றிப் பேசிவிட்டு சினிமாவுக்குப் போகிறான். இரவில் வீட்டுக்கு வரும்போது குடித்திருக்கிறான் வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டான். லாரா வீட்டுக் கதவைத் திறக்கிறாள். அவளிடம் தான் பார்த்த சினிமாவைப் பற்றியும், மேஜிக் ஷோ பற்றியும் சொல்லி மேஜிக் ஷோவில் கிடைத்த கழுத்துப் பட்டையை அவளிடம் தருகிறான்.

அடுத்தநாள் அமெண்டா எப்போதும் போல் அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பத் தயார் செய்கிறாள். அவன் வெளியே செல்லும் முன் லாராவுக்காக யாராவது ஒரு பையனை அழைத்துவரும்படி கூறுகிறாள். ஜிம் கானர்’ ஐ அடுத்தநாள் இரவுச் சாப்பாட்டுக்கு அழைத்த்தாக அன்றிரவு டாம் அம்மாவிடம் சொல்கிறான். அடுத்தநாள் லாராவும் அமெண்டாவும் இரவு விருந்து தயாரிப்பதிலும், வீட்டை அலங்காரப் படுத்துவதிலும் நன்றாக உடுத்திக் கொள்வதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரவில், ஜிம்முடன் டாம் வருகிறான். விருந்து உண்டதும் மின்சாரம் தடைப்பட்டு விளக்குகள் அணைந்துவிடுகின்றன. அமெண்டா மெழுகுவர்த்தி எடுத்துவருகிறாள். லாரா ஜிம்முடன் தனியே அமர்கிறாள். கொஞ்சநேரம் பேசுகிறார்கள். ஜிம் லாராவை முத்தமிடுகிறான். ஆனால் அதற்காக வருத்தப்படுகிறான். தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவளிடம் சொல்கிறான். லாரா மிகவும் அதிர்ச்சி அடைகிறாள். அவனுக்கு ஒற்றைக் கொம்புள்ள சிறு கண்ணாடிக் குதிரைப் பொம்மையைப் பரிசு கொடுக்கிறாள். அது உடைந்தும் விடுகிறது. ஜிம் விடைபெறுகிறான். ஜிம்முக்கு நிச்சயமாகிவிட்ட்தை ஏன் டாம் சொல்லவில்லை என்று அமெண்ட்டாவுக்கு கோபம். டாம் தனக்குத் தெரியவே தெரியாது என்கிறான். டாமும் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். எங்காவது போய்விட.

ஜிம் வந்த இரவில் விளக்கணைவதும் கண்ணாடி பொம்மை உடைவதும் லாராவுக்கு எதிர்காலத்தில் நிகழ்வதை குறிப்பிடுகிறது. அவள் நொறுங்கிவிடுகிறாள். மனதாலும் உடலாலும். சினிமாவுக்கும் மேஜிக் ஷோவுக்கும் டாம் செல்வது தன் துயரங்களிலிருந்து தப்பவே. அதை லாராவுக்கும் தர விரும்புகிறான். தன்னால் அவர்களுக்காக பிடிக்காத வேலை செய்யமுடியாதென்று சொல்லுகிறான். அதற்காகவே வீட்டைவிட்டு வெளியேறுகிறான். ஒரு வேளை தன் கனவுகளைத் தொடர்ந்து செல்வதற்காக இருக்கலாம்.
லட்சியத்துக்காகவோ அல்லது குடும்பத்துக்கு உழைத்துச் சலித்த்தாலோ சிலர் வாழ்வில் நிகழக்கூடியது தான். இந்தியாவில் இப்படி நடப்பவர்கள் மிகவும் குறைவு. குடும்பத்துக்காக தன்னலத்தைத் தியாகம் செய்பவர்களே அதிகம். லட்சியத்துக்காக குடும்பத்தைச் தியாகம் செய்யத் தயங்காதவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தனர். அது தியாகங்களின் காலம்.

அவனுக்கும் சகோதரியும் அப்பாவும் அம்மாவும் உண்டு. லட்சியக்கனவைத் தொடர்ந்து சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் கண்ணாடி பொம்மைகள் போல் ஆகிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. கனவை மறந்து பிடிக்காத வேலைக்குச் சென்றதால் குடும்ப வருமானம் வந்து தடுமாற்றம் குறைந்தது. பெண்ணுக்கும் திருமணமானது.

டென்னிஸி வில்லியம்ஸ்ஸின் கதாநாயகன் செய்தது சரியா தப்பா என்று நாம் தீர்மானிக்க முடியாது. இதில் “அறம்” என்ற ஒன்று கிடையாது. டென்னிஸி வில்லியம்ஸ் குடும்பத்தைக் கவனித்திருந்தால் சாகாவரம் பெற்ற இந்த நாடகத்தைப் படைத்திருக்க முடியாது. அம்மாவின் இயலாமையும், சகோதரியின் மனநிலை பிறழ்ந்த நிலையின் அவலமும் கதாநாயகனின் இயலாமையும் கனவுகளுமே இந்த முரண்பாட்டுக்குக் காரணம். அது தீர வழி இல்லை.
காந்திஜி தன் குடும்பத்தை மட்டுமே கவனித்து இருந்தால், தலைவராகி இருக்க முடியாது. இதுதான் அவனுக்குப் புரிந்தது. லட்சியத்தைத் தொடர்ந்திருந்தால் சிகரங்களை ஒருவேளை தொட்டிருக்கலாம். தொடாமலும் இருக்கலாம். அதன் விலை என்ன என்பது இன்று கணிக்க முடியாத்தாகவே இருக்கிறது. அனைவரும் மீட்க இயலாத் துயரத்தில் வீழ்ந்திருக்கக் கூடும். அப்படித்தான் நடந்திருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான். லட்சிய தீபம் அணைந்து விட்டதா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறான். சிறு சுடர்போல் மனதில் ஒளிர்ந்து கொண்டிருப்பது போல்தான் தோன்றியது. என்றாவது காட்டுத் தீயாய் எரியுமா?

Tuesday, January 19, 2010

கடவுளும் கருணையும்

பக்தி இலக்கியங்களில் வன்முறை மிக இயல்பானதாக இழையோடுகிறது. எல்லையில்லாக் கருணையுள்ள கடவுள் எல்லையற்ற வன்முறையைக் கடைப் பிடிப்பது இந்துக்களாகிய நம்மில் யாருக்கும் முரணாகத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை என்பதுதான் புதிர்.

இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு யாரும் முயலவில்லை. அன்பே சிவமென்னும் சைவர்களோ எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதைப் பெருமையாக, ஆனால் கொஞ்சம் அடக்கிவாசித்து, தயக்கத்துடன் பேசுகிறார்கள். வன்முறை அந்தத் ‘திருவிளையாடலில்’ மட்டும் இருந்தால் விதி விலக்கென்று விட்டு விடலாம். ஆனால், பெரிய புராணம் முழுவதும் இந்த வன்முறை நிகழ்வுகள் பரவிக் கிடக்கின்றன. மற்றப் புராணங்களிலும் வன்முறை பரவிக் கிடைக்கிறது. காஞ்ச ஐலய்யா தன்னுடைய ‘Why I am not a Hindu’ புத்தகத்தில் சொன்னதைப் போல ஹிந்து தெய்வங்கள், குறிப்பாக பெருந்தெய்வங்கள் அழிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அவதாரமும் ஒரு அல்லது பல அரக்கர்களை அழிப்பதாகவே புராணங்கள் சொல்லுகின்றன.

பக்தி இயக்கம் ஒரு இயக்கமாக நடத்தப்பட்டிருக்கிறது. அதன் நோக்கம் என்ன? மக்களின் மனதிலும், சமூகத்திலும் ஏற்கனவே இடம்பிடித்த ஒரு மதத்தின் நம்பிக்கைகளை மாற்றி இன்னொரு மதத்தின் நம்பிக்கைகளைத் திணிப்பது மட்டும் அந்த இயக்கத்தின் குறிக்கோளாகவும் விளைவாகவும் இருக்க முடியும் என்பது எளிமையான, மேலோட்டமான முடிவாகவே இருக்கும். சிறுதெய்வங்களை வழிபட்டு வந்த, சிறுசிறுகுழுக்களாக அல்லது இனங்களாக பிரிந்து கிடந்த சமூகத்தில் பெரிய, மாபெரும் தெய்வங்களுக்கான தேவை இல்லாதிருந்தது. சிறு சிறு குழுக்கள் குறுநிலங்களாகவும், குறுநிலங்கள் அரசுகளாகவும், பேரரசுகளாகவும் மாறுகின்ற அதே நேரத்தில், தெய்வங்களின் பதவியும் உயர்வு பெறுகின்றது. தெய்வங்கள் கொண்டிருக்கும் சக்தியும் இதற்கேற்றாற்போல அதிகமாகிக் கொண்டே வருகிறது. நடுகற்களாக இருந்த தெய்வங்கள் மாபெரும் கோயில்களில்(தஞ்சைப் பெருவுடையார் கோவில்) குடியேறுகின்றனர். குறுநில மன்னர்களை வன்முறையால் அடக்கி சிற்றரசுகளும் சிற்றரசுகளை வன்முறையால் அடக்கிப் பேரரசுகளும் எழுந்ததைப் போலவே அதே காலகட்டங்களில் சிறு தெய்வங்கள் பின்சென்று பெருந்தெய்வங்கள் காட்சிக்கு வருகின்றனர். சிறு தெய்வங்களுக்கு இல்லாத சொத்துக்கள் பெருந்தெய்வங்களுக்கு கிடைக்கின்றன. சொத்துக்கள் பெரும்பாலும் நிலமாகவும் வரியாகவும் இருப்பதால், பக்தர் கூட்டம் என்பதும் அதன் ஆதிக்கம் என்பதும் சொத்தின் மீதான ஆதிக்கமாகவும், கலாச்சாரத்தின் மீதான ஆதிக்கமாகவும் வளருகின்றது. ஆதிக்க வளர்ச்சியின் அடிப்படை என்ன என்று நோக்கினால் வன்முறை என்ற பதில் தான் கிடைக்கும். உரிமைகளைப் பறிப்பதற்கும், மற்றவர்கள் கொண்டிருக்கும் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மீறுவதற்கும் வன்முறைதான் பெரும்பாலும் உதவுகிறது. இந்தப் பின்னணியில் பக்தர்கள் கூட்டம் என்பது, குறிப்பிட்ட இறைவன் மீதான பக்தியுடன் (அதாவது இறைவன் மீதுள்ள அன்பாக) மட்டும் நின்றுவிடாமல், அரசியல் சமூக, பொருளாதார உரிமைகளை தங்கள் நலத்துக் கென்று வென்றேடுக்கும் செயல்பாடாகிவிடுகிறது. தற்காலத்தில் அரசியல் கட்சிகள் இயங்கும் முறையும் இத்தகையதே. தங்கள் கட்சிக்காரருக்காக வாதிடும், போராடும், சண்டையிடும், இறக்கவும் தயங்காத மக்கள் இப்போதும் இருக்கிறார்கள். கொள்கை, குறிக்கோள் என்பதெல்லாம் வெறும் கோஷங்கள் என்பதை அறிந்தே கட்சிகள் செயல் படுகின்றன. கொள்கைகளும் கோஷங்களும் கட்சியின் பிரச்சாரத்துக்கும், கட்சியின் அரசியல் நடைமுறைகளை எழுத்தாக்கம் செய்யும் போது கவர்ச்சியாக ஒலிக்கவும், இருக்கவும் பயன்படுகின்றன. இதே போல பக்தி இயக்கமும், கொள்கையில் சமத்துவத்தைப் போதித்தாலும் நடைமுறையில் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சமத்துவம் அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதற்கான போராட்டங்கள் இன்றுவரை நடத்தப் படுவதற்கான தேவை இருந்திராது. எனவே, அஹிம்சையும், சமத்துவமும் நல்ல கோஷங்கள் என்பதை அக்கால சமூகம் தெரிந்து வைத்திருந்தது. அதற்கு அடியில் ஒளிந்திருந்தது அஹிம்சையும் சமத்துவமும் நல்ல, ஆனால் ஒருபோதும் நிறைவேற முடியாத மாபெருங்கனவு என்ற புரிதலும் அதைக் கனவாகவே வைத்துச் செயல்படுத்துவதில் உள்ள திறமையும். அதனால் வன்முறை தவிர்க்க முடியாத்தாகவே இருந்தது, இருந்துவருகிறது.

இன்றும் கடவுளின் பேரால் வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதற்கான நியாயத்தை பெரியபுராணம் வழங்குகிறது. இறைவனுக்காக தன் மகனை அறுத்துக் கறிவைத்துக் கொடுத்த பக்தனைக் காணும் போது, மதத்துக்காக இறைவன் பெயரால் இன்னொரு மதத்தவனைக் கொல்வது அவசியமான, குற்றமற்ற செயலாகிறது. தன்கண்ணையே பிடுங்கி இறைவனுக்கு வைத்த நாயன்மாரைச் சேவிக்கும் போது இறைவனின் மீதுள்ள அன்பைவிட வெறி பிரதானமாகி, தன் இறைவனுக்காக அடுத்தவனுடைய கண்ணைப் பிடுங்குவதும் நியாயமுள்ள செயலாகிறது. இனக்குழுவாழ்வின் எச்சமான தனது குழு வாழ்வதற்கான நியாயம் எல்லாவற்றையும் விட மேலான குறிக்கோளாகிறது. இது மிருகங்களின் உயிர்வாழும் முறையைவிட மிகவும் மேம்பட்ட்தென்று சொல்ல முடியாது. மதத்திலிருந்து வன்முறையை எடுத்துவிட்டால் மதம் ஒன்றும் இல்லாததாகி விடுகிறது. அதன் ஆதிக்கத்திற்கு வன்முறையும், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலும் மிகவும் அவசியமானவை. ஏனெனில், கடவுளை வழிபடாவிட்டால், அவர் சொன்னதைக் கேட்காவிட்டால், தண்டனை நிச்சயம். கடவுள் ஏன் இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறார்? தன்னைப் பூஜிக்கும், பக்தர்களுக்கு மட்டும் அருள் தரும், ஊழல்காரராக ஏன் இருக்கிறார்? எல்லா மனிதர்களையும் நன்றாக ஏன் அவர் நடத்துவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எப்போதும் விடையில்லை. கேள்விகள் சரியானவை. ஆனால் விடைதர அவரில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் தண்டிப்பதற்கும், அரக்கர்கள் என்று சிலரைச் சொல்லி அழிப்பதற்கும் அவர் வருவார். அரக்கர்கள் யாரென்பதையும் அவரே தீர்மானிப்பார். அவர் கொலைசெய்ய வரும்போது மனிதர்களின் ஆயுதங்களையே உபயோகிப்பார். இப்போதெனில் ஏ.கே. 47. பிறகு, அவரை அழிப்பதற்கு இன்னொரு கடவுளை நாம் உருவாக்க வேண்டியிருக்கும். இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களின் புராணம் எழுதப்படும். அது பக்தி இலக்கியம் என்ற பெயரில் பின்பு வரும் தலைமுறைகளுக்கு ஓதப்படும். இதுதான் அலகிலா விளையாட்டு. Ruleless game.

Friday, January 08, 2010

தமிழ் சினிமாத் துறையின் திருடர்களும் கொள்ளைக்காரர்களும்
தமிழ் சினிமாத் துறையினர் மீண்டும் திருட்டு டிவிடி பற்றிய பெரும் சர்ச்சை ஒன்றைக் கிளப்பி இருக்கின்றனர். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று பேசாமல் இருக்கலாம். ஆனால் பெரிய பெரிய கொள்கைகளைப் பற்றி கொள்ளைக்காரர்கள் பேசும் போது கேட்டால் கோபம் வந்து விடுகிறது.
ஜக்குபாய் என்ற படத்தின் திருட்டு டிவிடி வெளிவந்துவிட்டதாம். அதனால் திரைப்படத்துறைக்கு நட்டமாம். டைரக்டர் சொல்லுகிறார். இது கொலைக்குற்றம் என்று. இது கொலைக்குற்றம் என்று கூப்பாடு போடுகிறவர் என்னென்ன கொலைகளை செய்திருக்கிறார் என்று பார்ப்போமா? திருட்டு டிவிடி பார்த்தால் விற்பனையின் மூலம் வருவது கள்ளப்பணம். என்று கமலஹாசன் சொன்னாராம். கள்ளப்பணம் பற்றி எத்தனை கவலை அவருக்கு. கவலைப் படாதீர்கள் படம் நன்றாக ஓடும் என்றார் ரஜினி. எப்படி நிகழ்ந்த்து என்றும் அதைத் தடுக்க என்னென்ன செய்யலாமென்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சாதாரணப் பொதுமக்களின் வாழ்வில் தமிழ் சினிமாவின் பாதிப்பு என்ன? முன்னெல்லாம் பாமர ஜனங்கள் நடிகர் திலகமென்றும் மக்கள் திலகமென்றும் வழங்கிய திரைப்பட்த்துறையின் முடிசூடா மன்னர்களுக்கு அப்பாவித்தனமாக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். இப்போது நிலைமை அப்படியா? Age of innocence has passed. இப்போது யாரும் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலில் இறங்கச் சொல்கிறார்களா? அதற்கு காரணம் அதன் மூலம் அவர்கள் அடைய நினைக்கும், பொருளாதார, சமூக, ஆதாயம். நடிகர்களும் பணம் பெருக்கவே படம் எடுக்கிறார்கள். தங்களை சூபர் ஸ்டார் என்றும் உலக நாயகன் என்றும் அதென்றும் இதென்றும் கூறிக் கொள்வதும் கூற வைப்பதும் தங்கள் சம்பளத்தைப் பெருக்கும் ஆதாயத்துக்காகத்தான். சம்பளம் என்பதை கள்ளப்பணம் மூலமும், வெள்ளைப் பணம் மூலம் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கொடுப்பவர்களும் அப்படியே.
இந்தப்பணத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள். சிலர் சேவை நிறுவன்ங்களை ஆரம்பித்து, வரிச் சலுகை பெற்று, தங்கள் சம்பாத்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைக்க வழி செய்கிறார்கள். அரசியல் தலைவர்களில் வால் பிடித்து தங்களுக்கு வேண்டிய சலுகைகளை, ஏழை எளிய மக்களின் சேவைக்குப் போய்ச் சேரவேண்டிய பணத்தை பிடுங்கிக் கொள்ளுகிறார்கள்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாத கதைகள் காட்சிகள் காட்டி ஏழைகளையும் பாமர்ர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்துவிட்டு, ஏழைகளுக்கு இது தான் பிடிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஏழைகளின் வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் வாழ்வின் சமூகத்தின் நிஜத்தைப் புரிந்து கொள்ளும்படங்களை அல்லவா எடுக்க வேண்டும். ஏழைகளைப் பிச்சைக்கார்ர்களாகவே வைத்திருப்பதும், அவர்களுக்கு ஏதோ சேவை செய்து தாங்கள் பெரிய மனசு கொண்டவர்கள் என்று காட்டுவதும் தான் இவர்கள் செய்யும் சேவை.
ஒரு படத்துக்கு நாற்பது கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் தன்னுடன் நடித்தவருக்கும் தகுதியான அல்லது சரியான விகிதத்தில் சம்பளம் கிடைக்கப் பாடுபட வேண்டாமா? இதைச் செய்ய முடியாதவர்கள் சமூகத்துக்குச் சேவை செய்வதாகவும், சாமியார் போல வாழ்வதாகவும் நடிப்பது எவ்வளவு நகைப்புக்குரியது. உலகத்திலேயே பெரிய ஜோக் நடிகர்கள் கருப்புப்பணம் பற்றிப் பேசுவது. அதிலேயே மிதப்பவர்கள் அவர்கள்.
நீங்கள் இப்படிக் கோடிக் கோடியாக கொள்ளையடித்தால், அதை இன்னொருவன் கொள்ளையடிக்கக் கூடாது என்பது கொள்ளைக்காரர்களின் அறம். அதை அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதைக் கேட்டுவிட்டு நாமும் சும்மா இருப்போம்.
சில நேரங்களில் பரம்பரையைப் பற்றிப் பேச வேண்டியதாகி விடுகிறது. நாம் தரித்திரராக இருக்கும்போதோ, ஏதாவது குற்றம் செய்து மாட்டிக்கொண்டு விட்டாலோ பரம்பரை நமக்குக் கைகொடுக்கும்.

உதாரணமாக நாம் தேர்தலில் தோல்வியுற்று, ஈ காக்காய் கூட நமது வீட்டை எட்டிப் பார்க்கவில்லை என்றால் அந்த நேரம் நிலமை தெரியாமல் நம்மிடம் மாட்டிக் கொண்டுவிடும் ‘பேக்கு’களிடம் கதைவிட பரம்பரைக் கதைகள் உதவும். பத்துரூபாய் பிக் பாக்கெட் அடித்து போலிஸிடம் மாட்டி, அவர்கள் கம்பை எடுத்து விளாச ஆரம்பிக்கும் போது என் அப்பா அந்தக் காலத்து சபாநாயகராக்கும், இப்போதிருக்கும் மந்திரிக்கு தம்பி மகனுடைய மாமியாருடைய பாட்டியின் சகோதரனின் பேத்திக்கு மருமகனாக்கும் என்று சொன்னால், அடி கொஞ்சம் லேசாக விழ வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்புத்தான்.

எட்டாங்கிளாசின் நம் பையன் பெயிலாகி விட்டால் எப்படிச் சமாளிப்பது? ஐயா எங்கள் தாத்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வேண்டியவர். கொடுக்க வேண்டிய முப்பது லட்சத்தில் இரண்டு குறைந்ததாலும், முதல்வர் மகனுக்கு வேட்டியைத் தூக்கிப் பிடிக்க நின்று கொண்டிருந்த போது, இன்னொரு ஆளின் மனைவி முதல்வரின் மனைவியின் சேலைக்குப் பார்டர் தைத்துக் கொடுத்ததால் அவர் சிபாரிஸில் எங்கள் தாத்தாவின் வாய்ப்பு தட்டிப் போய்விட்டதென்றும் ஏதோ கிரகம் சரியில்லை அதனால் என் பையன் எட்டாங் கிளாஸே பாஸ் பண்ண முடியவில்லை என்றும் எல்லோருக்கும் கேட்க முனகுவது எளிது. அல்லது பக்கத்துவீட்டுக்காரி கண்போட்டு விட்டாள், என் சகலை செய்வினை வைத்துவிட்டான் என்று சொல்ல்லாம்.

வைக்கம் முகம்மது பஷீர் சொன்னதுபோல் “எங்கள் தாத்தாவுக்கு ஆனை இருந்தது” அல்லது டினொசார் இருந்தது என்று கதை சொல்லலாம். நம்ம நாட்டில் மேல்ஜாதி கீழ்ஜாதி இருப்பதால், நாங்கள் பெரிய முனிவரின், பிரம்ம ரிஷியின் வழித் தோன்றல்கள் என்றும், ரகுவம்சம், சந்திர வம்சம், சூரிய வம்சம் என்று பேர் வைத்துக் கொள்ளலாம். யாராவது கோத்திரம் கேட்கும் போது ஆகப் பெரியதாக எல்லோரும் கருதும் ஜாதியை கோத்திரத்தைச் சொல்லிவிட்டு கூட எங்கள் குலதெய்வம் திருப்பதி, மதுரை என்று சேர்த்துச் சொல்லிவிடலாம்.

பாழாப்போன பணம் வந்து எல்லாத்தையும் மாற்றிப் போட்டுவிட்டது. மேல்ஜாதிக்காரன் செருப்புக்கடை வைத்திருக்கிறான். கீழ்ஜாதிக்காரன் கோவில் கட்டி அதில் சம்பளம் கொடுத்து மேல்ஜாதிக்காரனை வேலைக்கு வைத்திருக்கிறான். பரம்பரை பற்றி யாராவது சொன்னால் கொஞ்சநேரம் கேட்டுவிட்டு “இந்தப் பய எப்பவும் இதே கதைதான் விடுகிறான்.அவன் கொடுக்கிற பிசினஸ், பணம் இரண்டுக்காகவும் கேட்க வேண்டியிருக்கிறது என்று அவன் போனபிறகு பக்கத்தில் இருப்பவரிடம் முழங்கலாம்.

ராஜபரம்பரை என்று ஒரு ரகம் உண்டு. இந்த ஊருக்கே ராஜாவாக இருந்தோம். இப்போது தெருவுக்கு வந்தாச்சு எனலாம். அல்லது ராஜ பரம்பரையாக வந்த சொத்தை அனுபவித்துக் கொண்டு மற்ற எல்லா விஷயத்திலும் இந்தக் காலத்து வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் என்னை ராஜா என்றுதான் மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்களும் உண்டு. ஏதோ காசு கிடைக்குதே என்று வாய் நிறைய “ராஜா” என்று கூப்பிட்டுவிட்டு அவர்களின் பிச்சைக்காரத்தனத்தை மனசுக்குள் திட்டுபவர்களும் உண்டு.

எல்லாம் சரித்திரம் பண்ணும் வேலை. சரித்திரம் என்ற ஒன்றே இல்லை என்றால் இப்படி பரம்பரை பிரச்சனை வருமா? அதனால்தானோ என்னவோ சீனாவில் கடைசி சக்கரவர்த்தியை விவசாயப்பண்ணைக்கு அனுப்பி வேலை செய்யச்சொன்னார் மாவோ. ஆனாலும் என்ன பரம்பரை போச்சா. இத்தாலிய டிரெக்டர் ஒருவர் அதைப் பற்றிப் படம் எடுத்து ராஜ பரம்பரை ஆளை என்ன பாடு படுத்துகிறார்கள் சீனாவில் என்று காட்டினார். கடைசி சக்கரவர்த்தியின் துயரம் தெரிந்த டைரக்டருக்கு, அவர்கீழ் அடிமையாக இருந்த லட்சக்கணக்கானவர்களில் வலி தெரியாது பாவம்.

இதுமாதிரி பெரிய பெரிய பரம்பரைகள் போக, சின்னச் சின்னக் குடும்பங்களிலும் பரம்பரைப் பேச்சு பெருமையாகவோ அல்லது மற்றவர்களைச் சிறுமைப்படுத்தவோ எழும். “அவனைப் பத்தித் தெரியாதா கஞ்சிக்கு லாட்டரி அடிச்ச பய. அவங்க அப்ப தினமும் நம்ம தாத்தா கால்ல விழுந்து எந்திருப்பவந்தான”. அப்புறம் அவமட்டும் எப்படி? அவ பெரிய சிங்காரியாச்சே. சிலுப்பிக்கிட்டுத் திரிஞ்சா. இப்பம்பாரு பெரிய பங்களா அந்த ----அவர் வைச்சிருந்தார்ல அவளை” என்று யாரையாவது காட்டுவார்கள். அவளுடைய மகன் கலெக்டராகிவிட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும்.

இந்தப் பேச்சினால் ஒரு டீக்குடிக்க வழியிருக்குமா என்றால் இருக்காது. அதுதான் பரம்பரைப் பெருமை. பாரம்பரியைத்தை காக்க வேண்டியது நம் கடமை. சிலரது நிகழ்கால துயரங்களைத்/ பெருமைச் சிதைவுகளைத் தாண்டிவர உதவும்.

Wednesday, January 06, 2010

இசைக்கூடம்

அந்த இசைக்கலைஞன் தெருவில் நின்று தன் கொட்டாங்கச்சி வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் பலநாட்கள் பட்டினி கிடந்தவன் போலிருந்தான். எண்ணை தேய்த்துப் பலநாட்கள் ஆகியிருக்க வேண்டும். நீண்ட தலைமுடி மிகமிக அழுக்காக இருந்தது. குளித்திருக்க வாய்ப்பே இல்லை. காலையில் அலுவலகம் செல்லும் போதுதான் பார்த்தேன். யாரோ பிச்சைக்காரன் போல் தெரிந்தான். வயலின் எனக்குப் பிடித்த ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா? என்று இழைந்து கேட்டுக் கொண்டிருந்தது. சினிமாப் பாடல்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவன் கொஞ்ச காலமாக கர்னாடக இசைப் பாடல்களை வாத்திய இசைகளைக் கேட்கத் தொடங்கியிருந்தேன். குறிப்பாக கர்னாடக சங்கீதத்தில் எதை ரசித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது வரும் சினிமாப் பாடல்களின் வரிகளும் எப்போதும் குத்தாட்டம் போடும் இசையும் தாளமும் காரணமாக இருக்கலாம். குத்தாட்டம் போடும் வயது தாண்டிப் பலகாலமாகிறது. அன்று முழுவதும் அந்த தெருவில் நின்ற இசைக்கலைஞன் இசைத்த பாடல்கள் மனதில் ரீங்கார மிட்டுக் கொண்டிருந்தன. அவ்வப்போது தோன்றியது அவன் எந்த வித்வானிடம் படித்திருக்கக் கூடும். அவன் கைகளில் பத்துப் பதினைந்து வயலின்கள் வைத்திருந்தான். செய்து விற்பவனாக இருக்கக்கூடும். இவனே செய்கிறானா? இப்படிப் பட்ட இசையை வாசிப்பவன் கொட்டாங்கச்சியின் நாரைப் பிடிங்கிக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை. இது எனது மத்திய வர்க்கப் பிரச்சனையாக இருக்கக் கூடும் என்றாலும், கைவினைத் தொழில் செய்பவனுக்கு இசைபோன்ற மனதில் கணக்கிட்டு ரசித்து வாசிக்கும் திறன் இருக்காது என்று அதிகபட்ச உறுதியாக நினைத்தேன். அப்ஸ்ட்ராக்ட்(abstract) கலை சிந்திப்பவர்- களுக்கே கைகூடும். சரி மீண்டும் தெருக்கலைஞனிடமே வருகிறேன்.
சாயந்தரம் அலுவலகம் விட்டு வரும்போது என் வீட்டுக்கு எதிரிலிருந்த தேநீர்க்கடையின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கைகளிலிருந்த வயலின்கள் குறைந்தது போல் தெரியவில்லை. ஆனால் நடு நடுவில் யாரோ அந்தக் கொட்டாங்கச்சி வயலினை இசைக்க முயன்று கொண்டிருந்தார்கள். கம்பியை அறுத்து எடுப்பதுபோல் கேட்ட ஒலி அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. முயற்சித்தவன் என்னைப் போல் இசைமேதையாக இருக்க வேண்டும். என் மனைவி கொடுத்த தேநீர்க் குவளையுடன் வராண்டாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன். எதிர்ப்புறம் மூன்றாவது வீட்டிலிருந்த பத்து வயதுச் சிறுவன் கையில் ஒரு கொட்டாங்கச்சி வயலின் இருந்தது.

என்னிடமிருந்த கணினியில் ஒரு இணைய தளத்தில் சென்று வீணை இசையைக் கேட்கலாம் என்று சிட்டிபாபுவின் இசையைக் கேட்க ஆரம்பித்தேன். தெளிவான இசை மனதுக்கு இதமாக இருந்தது. இரவின் மெல்லிய குளிரில் இசை ஜிவ்வென்று பதமான வெப்பம் தருவதாகவும் அதே நேரத்தில் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே தூங்கிப் போய்விட்டேன்.
அடுத்தநாள் லீவு எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எழப்போகிற டென்ஷன் ஒருகாரணம். மேலதிகாரி என்னைத் திட்டப் போகிறார் என்பது நிச்சயமாகிவிட்டது. தெரிந்து கொண்டே ஏன் நரகத்தில் இறங்கவேண்டும் என்று தோன்றியது. ஆனாலும், போகாமல் வீட்டில் இருந்துகொண்டே ஏற்படும் டென்ஷனைவிட அங்கு போனால் நலம் என்று அறிவு உரைத்தது. எம் தோழன் ஒருவனின் அறையில் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம் “பிரச்சனைகள் நம்மிடம் வரும்போதே பாதியில் சென்று அவற்றைச் சந்திக்காதே. அவை முழு தூரத்தையும் கடந்து வர விடு. அவை உன்னிடம் வரும் போது முற்றிலும் மாறிவிட்டிருக்கும்”. எப்படியோ அன்று சீக்கிரம் அலுவலகம் சென்றுவிட்டேன்.
அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக ஜன்னல் கதவுகளை வழக்கம் போலவே திறந்தேன். அங்கிருந்து ‘கொடியசைந்ததும்’ என்று கொட்டாங்கச்சி வயலின்காரன் இசைத்துக் கொண்டிருந்தான். எட்டிப் பார்த்தபோது எங்கள் அலுவலகத்தின் உதவியாளர்கள் சிலர் அவன் முன் நின்று புகை பிடித்துக் கொண்டும், வெற்றிலை போட்டுக் கொண்டும் இருந்தனர். கேட்டுக்கொண்டே நின்று விட்டேன். மனதுக்கு இதமாக இருந்தது.
இன்னும் சிலவருடங்கள் கடந்தன. அதற்குள் கர்னாடக இசையை நன்றாக அனுபவித்து மயங்கிக் கேட்கும் பக்குவம் வந்துவிட்டது. ஆனால் ராகம் தாளம் என்று குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. கேட்டால் சுகமாக இருப்பதை விட்டு அதை ஏன் உயிரியல் மாணவன் போல் அறுத்துப் பார்க்க வேண்டும். சுகமாம இருப்பதே சுகம். கேட்டுக் கேட்டு நான் சில நெளிவு சுளிவுகளைத் தெரிந்து வைத்திருந்தேன். கற்றுக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. ரொம்ப ஒன்றும் பெரிதாகத் தெரியாத ரசிகன். அவன் ஒரு இசையரங்கின் வாசலிலிருந்து தள்ளி நின்று ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான். அருகே ஒன்றிரண்டு பரட்டைத்தலைப் பையன்களும், கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் இருவரும் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே பெரிய வித்வானுடைய கச்சேரி கேட்கத்தான் நானும் என் நண்பரும் நுழைந்து கொண்டிருந்தோம். தனக்குத் தெரிந்த்தை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்து அவர் என்னை எப்படியாவது தன்னைப் போல் வல்லுனராக்கிவிட வேண்டும் என்று அந்நாட்களில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஏர்-கண்டிஷன் பொறுத்தப்பட்ட ஹாலில் எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. அருகிலிருந்த என் நண்பர் கச்சேரியின் நுணுக்கங்களை அவ்வப்போது விளக்கிக் கொண்டிருந்தார். சரியாக எதுவும் புரியாமல். தலை ஆட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வயலின் இசை மனதை மயக்குவதாக இருந்தது. பக்க வாத்தியம் மாலை, பாராட்டு, என்று முடித்து வரும் போது இரவு பத்தாகிவிட்டது. நண்பர் காரில் விட்டு விடுகிறேன் என்றார். நானும் ஏறிக் கொண்டேன்.
டிராபிக் சிக்னலில் நிற்கும் போது கொட்டாங்கச்சி வயலின் இசை கேட்டது. பலமுறை கேட்டுப் பழக்கமாகி விட்டது. கார் அங்குநின்ற ஒரு நிமிடத்தில் இனிமையாக ஒலித்தது. எங்கோ கேடமாதிரி இருக்கிறது என்றேன். அருகில் இருந்த நண்பர்தான் இசையரங்கிலும் இதே ராகம் இசைக்கப் பட்டது பிரமாதமாக இசைக்கப்பட்ட்து என்றார். இவன் இசை எப்படி என்றேன். “நன்றாகத்தான் வாசிக்கிறான்” ஒப்புக்குச் சொல்வது போலிருந்தது. ஆத்மார்த்தமாக இல்லை. அவனுக்கு இசையரங்கில் இசைக்க அனுமதி கிடைக்குமா? என்று நண்பரிடம் கேட்டேன். “இல்லை, கிடைக்காது. அதற்கு என்னென்னமோ தகுதிகள் வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி ரோட்டைப் பார்க்க ஆரம்பித்தார். பிச்சைக்காரனாக இருப்பது ஒரு தகுதி அல்ல என்பது புரிந்தது. அவருக்கு இசையை ரசிக்க சாய்ந்து கொள்ளும் நாற்காலியும் ஏர்-கண்டிஷனரும் தேவை. டிக்கெட்டிற்குச் செலவழிக்கக் காசும் தான். இசைதெரிந்தவராக இருப்பதும் காரணமாக இருக்க வேண்டும்.

Friday, December 18, 2009

அத்தியாயம் 7

சடையப்ப பிள்ளை எழுதிவைத்திருந்தது நாவலா கதையா சிறுகதையா என்றெல்லாம் ஒண்ணும் புரியவில்லை. அப்படியெல்லாம் ஒரு வரையறைக்குள் அவை வருகிற மாதிரித் தெரியவில்லை. நானும் ஆராய்ச்சி செய்யும் ஆளும் இல்லை. தினம் இருக்கிற வேலையைச் செய்வதற்கே நேரமில்லை. கஞ்சப் பிசினாறிட்ட ஒரு பைசாப் பேறாது. என்னால முடிந்தது இதைப் படிப்பதுதான். அதே எரிச்சலா இருக்கு. எல்லாப் பயலும் எழுதி என்னத்தக் கண்டான்? இதுல நடை, தீம், பிளாட் எல்லா ஒண்ணும் எனக்கு விளங்கல. நானும் எங்கம்மா சொன்னத கேட்ருக்கணும். எதாவது படிச்சு முன்னேறப் பாத்திருக்கணும். பெரிய எழுத்தாளனாகுணும்னு சென்னைக்கு வந்திட்டேன். பத்தி திருத்திரதில இருந்து, லைபர்ரி ஆர்டர் வாங்கிற வரைக்கும் செட்டியார் பெண்ட நிமித்திருவாரு. ஏதோ உழைக்கிற அளவுக்கு சம்பளம் இல்லைன்னாலும், தனியா இருந்து சமாளிக்க முடியிது. கவனத்தைச் சிதைக்கக்கூடாது. அவரு எழுந்திருக்கிறதுக்கு முன்ன படிச்சிறலாம். மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
அடுத்தநாள் காலை பிள்ளை மீண்டும் கேட்டார். எழுத்தாளர் ‘அ’ விடம் போவோமா?” போய் என்ன செய்வது? அவர் வெகு நிதானமாகச் சொன்னார் “இந்தக் கதைகள்”
எழுத்தாளர் ‘அ’ வீட்டுக்கு யாரும் போக முடியாது. போனால் பொண்டாட்டி விளக்கமாத்தை கொண்டு அடிப்பாள் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். இரண்டு பேரும் போன போது வீட்டில் எழுத்தாளர் ‘அ’ மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். புத்தகங்கள் ஒன்றிறண்டு இறைந்து கிடந்தன. வீசி எறிந்திருக்க வேண்டும். தமிழ் எழுத்தாளனின் தலைவிதி ‘மன்னார் அண்ட் கம்பெனி’ தங்கவேலு நிலையிலேயே தங்கிவிட்டது. தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என்று பறையடிக்கப் படுபவர்களின் நூல்கள் ஐநூறு விற்றால் ‘சுபர் ஹிட்’. சோறு தின்ன என்ன செய்வாள் பத்தினி. அதுவும் இந்தக் காலத்தில் வீடு ஏசி பிரிட்ஜ், கட்டில் கண்ணாடி என்று எழுத்தாளனுக்கும் வேண்டியிருக்கிறது. ரொம்ப நேர்த்தியா இல்லைன்னா ச.பிள்ளை சொன்னார் ‘நம்ம பாடு தேவலை. இதுமாதிரியாகல”
அ’ பனியன் போடாமலேயே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பினார். “டீக்குடுச்சிக்கிட்டே பேசுவோம்” அவர் பின்னால் இருவரும் போனார்கள். டீக்கடைக்கார்ர் வரவேற்றார். முகத்திலிருந்த சிரிப்பு “வாங்கடா, அ கிட்ட மாட்டிக்கிட்டீங்களா என்று கேட்பது போலிருந்தது. கடை ரொம்ப மோசமில்லை. நடுத்தர வர்க்கத்துக்கேற்றாற் போலிருந்தது.
“சார் நான் செட்டியார் பதிப்பகத்தில இருக்கிறேன்”
ஆமா தெரியுமே சொல்லுங்க”
இவங்க, எங்க ஊர்க்காரர். சிறுகதைகள், எழுதி வச்சிருக்கிறாரு. வெளியிடணும்னு நினைக்கிறாரு’
“தாராளமா வெளியிடுங்க” ‘அ’ விடம் எப்படிச் சொல்வதென்று புரியவில்லை.
“இல்லை உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது இருந்தா” பாம்பைத் தொட்டதுபோல் அலரினார் ‘அ’. பிறகு கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். வந்த ஆள் எப்படி என்று அளப்பது போல் பிள்ளையைப் பார்த்தார். பிள்ளையின் வெள்ளை வேட்டி, பட்டை எல்லாம் எந்த மார்டன் எழுத்தாளனுக்குப் பிடிக்கும? குறைந்த பட்சம் சட்டை பட்டனையாவது திறந்து, நெஞ்சைக்காட்டிக் கொண்டிருந்தால், ரசிகர்களின் நெஞ்சைத் திறந்து பார்க்க முடியும். மூணு டீக்குக் கொடுத்த காசு வீணாய்ப் போச்சே என்பது போல் முகத்தைச் சுழித்தார். ஊர் எந்த ஊர்? அது இது என்று கேட்டு, குறிப்பாக கதையைப் பற்றியும், பிள்ளையின் படிப்பு வாசனை பற்றியும் கேட்பதை தவிர்த்து மிச்சமிருந்த எல்லாக் கேள்விகளையும் கேட்டார். அரைமணி நேரம் பேசியும், ஒரு பாச்சாவும் பலிக்கவில்லை அவரிடம். கடைசியில், படிச்சுக் கருத்தாவது சொல்லுங்க என்று காகிதக் கட்டுக்களை எடுத்தார் பிள்ளை. ‘படிச்சு பாத்துட்டு கண்டிப்பாச் சொல்றேன் என்று உறுதிமொழி கொடுத்துக் கையை நீட்டினார். நான் தான் தடுத்தேன். “சார் அவர்ட்ட வேற பிரதிகள் கிடையாது. போட்டோக் காபி எடுத்திட்டு தர்றேன்..” என்று உண்மையும் பொய்யும் கலந்து சொல்ல வேண்டியதாயிற்று. வெளியே வந்ததும் பிள்ளை தவறாக நினைத்த்து விடக்கூடாதென்று சொன்னேன் “அவரு வாங்கி வச்சுக்கிட்டுப் படிக்கவும் மாட்டார் திரும்பக் கொடுக்கவும் மாட்டார். அவரு பொண்டாட்டி, வென்னி வைக்கத்தான் உதவும்” நல்ல வேளை நீங்க கொடுக்கல.” இப்படித்தான் எல்லா எழுத்தாளனும் இங்க மானங்கெட்டு வாழ்க்கையைத் தொடங்குதான் என்று இவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப் பட்டேன். ஆனால் முடியவில்லை. ரொம்ப வேண்டியவர். மனசைப் புண்படுத்தி விடக்கூடாது.
அடுத்தநாள் குண்டலகேசிப் பதிப்பகத்துக்குப் போனோம். கணக்குப் பிள்ளைபோல தெரிந்தவர், சார், வெளியூர் போயிருக்காரே, வர இரண்டு நாளாகும்” என்றார். “ஒண்ணும் இல்லை சிறுகதைத் தொகுப்பு ஒண்ணு வெளியிடணும்”
“ஓ அப்படியா? கொண்டு வந்திருக்கீங்களா?”
பிள்ளை முந்திக் கொண்டு “ஆமா” என்றார். “கொடுத்திட்டுப் போங்க பாக்கச் சொல்றேன்” மீண்டும் தடுத்தாட்கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். “இல்லை சார் வந்ததும் வர்றோம். அங்கே, புத்தகம் போடுவார்களா என்று எனக்கே நம்பிக்கையில்லை. நவீன இலக்கியத்துக்கென்றே ஆரம்பிக்கப் பட்ட பதிப்பகம். தொடை முலை, க(கா)ம்பு என்று தொடங்கினால் அது நவீன இலக்கியம் என்று வரவேற்பார்கள். செக்ஸைக் கடந்தால்தான் அதிலிருந்து விடுதலை. பிள்ளை பழம் பஞ்சாங்கம். ஆனாலும் வீட்டிற்குப் போகும் வழியில் இருந்ததால், பிள்ளையின் ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று ஒரு போக்குக் காட்டினேன். நானும் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்வதால் இந்தப் புத்தி வந்திருக்க வேண்டும். நம்ம ஊர்க்கார்ருக்கு ஏதோ உதவி செய்தோம் என்று இருக்கும் அல்லவா?
தனிப் பதிப்பகம் ஒன்று இருக்கிறது. அதில் எழுத்தாளரே காசு கொடுத்தால் பதிப்பித்துக் கொடுப்பார்கள். மேலதிகமாக ஜம்பம் வேறு. ஏதோ உலகத் தரத்தில் புத்தகங்களை வெளியிடுவதாக பாவனை. அங்கே ஐம்பதாயிரம் வரையாகும். பிள்ளையிடம் ஐம்பது தேறுமா என்பதே சந்தேகம். பிள்ளையிடம் சொன்னேன் “ அடப் பாவிகளா எழுதிட்டுக் காசுவேற கொடுக்கணுமா?” அவருடைய அதிர்ச்சி எனக்குப் புரிந்தது. தமிழ்நாட்டு வாசகர்களைப் பற்றி அவருக்குத் தெரியாது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்துப் படிக்கப் புத்த்கமும் கொடுத்து படிக்கச் சொன்னால் கூட படிக்கவும் வேண்டாம், ரூபாயும் வேண்டாம் என்று சொல்லும் ஞானிகள்.
“ஆமாங்க. தமிழ்நாட்ல் புத்தகம் படிக்கிறவங்க எத்தனை பேரு இருக்கான்?. வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகம் இருக்காங்க. எழுத்தாளருக்கே காசு கொடுக்கலைன்ன அவனும் என்னத்தப் புத்தகம் வாங்க முடியும். காலைல ஆபிஸ்ல கணக்கெழுதிட்டு, கூட்டிப் பெருக்கி விட்ட விடைகளைத் தூக்கத்தில் நாவல்ல எழுதறது இன்னொரு வகையான நவீனம். எல்லாம் இலக்கியந்தான். சவத்துக்குப் பொறந்த பயலுக. லைபரெரி ஆர்டர் கிடைக்குதுன்னு ஒண்ணுல இருந்து பத்தாம் வாய்ப்பாடுவரை எழுத்தில எழுதி கதைப் புத்தகம்னு வெளியிட்ட்ருவானுக” எனக்கும் இதுதான் சான்ஸ். இந்தப் பயலுகளை திட்ட இப்படி வாய்ப்புக் கொடுத்த பிள்ளையை மனசுக்குள் பாராட்டினேன்.
வீட்டில் சாப்பிட்டு விட்டுப் படுத்தபோது, மணி ஒன்பது தான் ஆகியிருந்தது. பிள்ளை அடுத்த அறையில் என் அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிகப் பிரபலமான ஒரு நாவலாசிரியரின் நாவலை எடுத்து வந்தார். அட்டை பளபளப்பில் மயங்கியிருக்க வேண்டும். அச்சு முறையும் அழகாக இருந்தது. “அதுல புத்தக வடிவுதான் அழகா இருக்கும். உள்ளடக்கம் சுத்த மோசம்”. என்றேன்
“ஓஹோ இப்படியெல்லாம் கூட இருக்கா?” புத்திசாலிகள்தான் புத்தகம் எழுத வருவாங்க அதுதான் வெளியிடுவாங்கன்னு நெனச்சிருந்தேனே”
“அந்தக்காலத்தில இந்து நேசன் இல்லையா? அது மாதிரித்தான்”
“இப்ப என்ன? எல்லாரும் இந்து நேசன் மாதிரி எழுதறானுக. உடலின் சுதந்திரம், உள்ளத்தின் சுதந்திரம்னு பேசிட்டு ஏதாவதொரு சாமியார்ட்ட அல்லது கோயில்ல சரணாகதி ஆகிரானுக. எழுதறத விட வாய் கிழியப் பேசுறாங்க. இதைப்பத்தி எவனும் நாவல் சிறுகதை எழுதக் காணோம். உலகத்தில நடக்கிற அநீதி எல்லாம் பேசுறவனுகளுக்குத் தங்களைப் பத்தி எழுத முடியல. வியாபாரம் கெட்டுடுமோன்னு பயம். சினிமாவில சினிமா இசையில எப்படி, இதாலி, பிரேஸில் அங்க இங்க போய்க்காப்பி அடிக்கிறாங்களோ அதே மாதிரி எழுத்தாளனுகளும் காபி அடிக்கிறானுக. என்ன இசையும் சினிமாவும் எல்லோரும் பாக்றதுனால தெரிஞ்சுபோய்ருது. இது தெரியறது கஷ்டம். ஆயிரம் பிரதி வித்ததும் தான் பெரிய எழுத்தாளன்னு ஊருக்கெல்லாம் டமாரம் அடிச்சித் தண்டோரா கொட்டி கூட பஜனை பாட பெரியகூட்ட்த்தைக் கூட்டி கொண்டாட ஆரம்பிச்சிரானுக. சொறிவது சுகம். அதை அனுபவிக்க அடுத்தவனையும் சொறிய வேண்டும்.
திராவிட இயக்கத்துக் கதைகள்ள கற்புப் படாத பாடு படும். கற்பழிஞ்சிட்டாள்ங்கிற வார்த்தையை வச்சே பல கதைகள் எழுதுனாங்க. பளபளன்னு காகித்தில தொடவே நல்லா இருக்குற மாதிரிப் புத்தகம் போட்டு நூலகங்கள்ல வாங்கச் சொல்லில் அரசு ஆணை போட வச்சிருவாங்க. பிறகென்ன “நான் முப்பது புத்தகம் எழுதினேன் அத்தனையும் பேரிலக்கியங்கள்’ அப்படின்னு கட்சிக்காரனுங்கள விட்டே சொல்ல வைக்க வேண்டியது. சடையப்ப பிள்ளையின் கணக்கில் ஒரு புத்தகங்கூட திராவிட இயக்கத்தில இருந்து நல்ல புத்தகம் வரலே. அம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் அரசியல் இயக்கத்திலிருந்து, பாரதிதாசனுக்கு அப்புறம் ஒண்ணுமேயில்ல. நல்ல புத்தகங்களைப் படிப்பாங்களான்னு அவருக்குச் சந்தேகம். திருக்குறள்ல சொல்லிருக்குன்னு நாலடியார்ல உள்ள செய்யுளச் சொல்லுவாங்க. புலியை விரட்டிய தாய்க்குலம்னும் புறநானுறுன்னும் ஏதேதோ சொல்லுவாங்க. புறநானூறுல அப்படி ஒருபாட்டே கிடையாது. ஏதோ அடிச்சு விடவேண்டியதுதான். புத்திசாலிகள் அறிவுஜீவிகளைப் பற்றி யெல்லாம் அவங்களுக்குக் கவலயில்ல.
இடதுசாரி எழுத்தாளர்கள் உணர்வுகளின், மனிதர்களின் இயல்பான இயக்கத்தைவிட கதையில் தத்துவங்களின் இயக்கமே அதிகமாக இருந்தது. படிக்கிறாங்களோ இல்லையோ படிச்சமாதிரிக் காட்டிக்கிறவங்களுக்கு மதிப்பு இருக்கும். படிக்கிறது நல்லது. அதை மறுக்க மாட்டாங்க. ஏக மனதா ஆதரிப்பாங்க. ஆனா தாங்க நினைக்கிற மாதிரி எல்லோரும் நினைக்கணும்னு எதிர்பாப்பாங்க. இப்ப எல்லாம் தேங்கிப் போச்சு. டாலர் சம்பாத்தியம் எல்லாத் தத்துவங்களையும் வெள்ளமா வந்து தள்ளிக்கிட்டுப் போயிருச்சு. நிறையப் பணம் புரள்ற காலத்தில சோஷலிஸம் வேகாது. ஒருவேளை தரித்திரகாலம் திரும்பி வந்தா சான்ஸ் கிடைக்கும். அப்பவும் இலக்கியம் படிப்பாங்களாங்கிறது சந்தேகந்தான். இப்படி ஆளுக்கொரு வீடு பிடிச்சிக்கிட்டு, தானும் புதுவீடு கட்டாமே, மத்தவனையும் இருக்கவிடாம இதுதான் தமிழ் எழுத்தாளனுக கதை.
சடையப்ப பிள்ளைக்கு இவன் சொல்லாமல் விட்டது என்ன என்று புரிந்தது. நீங்கள்ளாம் ஏன் எழுத வாரீங்க. இருக்கிற எழுத்தாளனுக்கே எழுதவும் முடியல. எழுதாம இருக்கவும் முடியல. புத்தகத்தை பதிப்பிக்க முடியல. பதிப்பிச்சா விக்க முடியல. ஒருவிஷயத்த நல்லா செய்வானுங்க. நல்ல உரத்த, கரகரத்த, குரலில் தன் பெருமைகளைப் பேச முடியும். முதலின் தமிழின் ஆதியை அப்புறம் அதன் வளமையை பேசிட்டு கடைசியில தன் பேரைப் போட்டுக்கிட்டு.. அடக்கமாப் பேசறமாதிரி அகங்காரமா பேசறதக் கலையாக்கி வச்சிருக்கானுக..
இவ்வளவு புரியாதவராக இருக்கிறாரே என்று வியப்பாக இருந்தது. பற்பசை விற்பதைப் போல புத்தகங்களையும் விற்கிறார்கள். இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம். கூப்பனைப் பூர்த்தி செய்தனுப்பினால் டெலிவிஷன் செட் இலவசம். புத்தகம் எழுதுவதைப் பற்றி யோசிப்பதைவிட டெலிவிஷன் விற்கப் போகலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை மேகங்கள் வானில் பஞ்சு பஞ்சாகப் பிரிவதைப் தன் கனவு கலைவதை சடையப்ப பிள்ளையும் புரிந்துகொண்டார். ஆனாலும் ஒரு எழுத்தாளனாகிவிடவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கண்ட கனவு மனதை விட்டு அகல மறுத்தது. அந்தக் கனவுடனேதான் அன்றும் தூக்கிப் போனார். அன்று இரவில் பெரிய பத்திரிக்கையின் ஆசிரியராக ஏகப்பட்ட வேலைகளுடன், கதாசிரியர்களிடம் பேசுவது படைப்புகளை எடிட் செய்வதுமாக தூங்கிய நேரம் கழிந்தது. விழித்த போது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. இட்லிக்கடையின் கனவுகள் சென்னையிலும் வதைத்தன. முன்னர் பகலில் மட்டும் அவ்வப்போது இருமலைப் போல் இருந்த நோய் இப்போது இரவிலும் தொடர்ந்து தீராத காய்ச்சல் ஆகிவிட்டது.